Written by london swaminathan
Date: 9 May 2016
Post No. 2795
Time uploaded in London :– 8-56 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
இந்திய இலக்கியங்களில், இமயம் முதல் குமரி வரை, இழையோடும் கருத்து தானம் (ஈகை) என்பதாகும்.
புற நானூற்றிலும், பகவத் கீதையிலும், மஹாபாரதத்திலும் உள்ள பாடல்கள் இதை மெய்ப்பிக்கின்றன.
தானம்,தர்மம் என்ற இரண்டு சொற்களும் வடமொழி ஸ்லோகங்களில் சேர்ந்தே வரும். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதனான வள்ளுவனும் குறளில் பல இடங்களில் இந்த இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே கையாளுவான் (19, 295); கீதையிலும் (16-1) காணலாம்.
எவர்கள் தமக்காகவே சமைக்கின்றார்களோ அவர்கள் பாவிகள் என்பான் கண்ணன் (கீதை 3-13).
இந்திரர் அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்ண வேண்டும் என்கிறார் இளம்பெருவழுதி (பற நானூறு 182)
பழந்தமிழர்கள் சம்ஸ்கிருத நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதால் வரிக்கு வரி இந்திரர், அமிர்தம், அருந்ததி, தர்மார்த்த காமமோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்றெல்லாம் பாடுவர்.தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் பல இடங்களில் தர்ம, அர்த்த, காம (அறம், பொருள், இன்பம்) வருகிறது.
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”—
(புறம்134) என்று முடமோசி என்னும் பிராமணக் கவிஞர் ஆய் என்ற குறுநில மன்னனைப் பாடுகிறார். இது கிருஷ்ணன் பகவத் கீதையில் சொன்ன கருத்து (கீதை 2-42). “புறநானூற்றில் பகவத் கீதை” என்ற எனது இரண்டு பகுதிக் கட்டுரையில் விரிவாகச் சொல்லிவிட்டதால் மீண்டும் சொல்லவில்லை.
வையாவிக் கோப்பெரும் பேகனை, பரணர் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய பாடலிலும்
“எத்துனை ஆயினும் ஈத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே” (புறம். 141) என்று சொல்கிறார்.
மஹாபாரதத்தில்………
தர்மம் மீறப்படும் இரண்டு இடங்கள்:–
லப்தானாம் அபி வித்தானாம் போத்தவ்யௌ த்வ அதிக்ரமௌ
அபாத்ரே ப்ரதிபத்திஸ்ச பாத்ரே ச அப்ரதிபாதனம்
–மஹாபாரதம், சாந்திபர்வம், 26-31
அபாத்ரே ப்ரதிபத்தி = கொடுக்கக்கூடாதவர்களுக்கு தானம் கொடுத்தல்
பாத்ரே ச அப்ரதிபத்தி= ஏழைகளுக்கு தானம் செய்யாமலிருத்தல்
இரண்டும் தானம் தொடர்பான விதிகளை மீறுவதாகும்.
பாத்திரம் அறிந்து தானம் செய் – என்பது தமிழ்ப் பழமொழி.
வறியார்க்கொன்றீவதே ஈகை (குறள் 221) – என்பான் வள்ளுவனும்.வறியவர்க்கு அளிப்பதுதான் தானம்; மற்ற எல்லாம் பலனை எதிர்பார்த்துக் கொடுப்பதாகும் (குறியெதிர்ப்பை நீரதுரைத்து).
மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (குறள் 222) என்று இன்னொரு குறளில் கூறுவான்.
தர்மம் சர (தர்மம் செய்) என்று வேதம் (தைத்ரீயோபநிஷத்) சொல்கிறது. இதை அவ்வைப் பாட்டியும் “அறம் செய்ய விரும்பு” என்று ஆத்திச் சூடியில் பாடிவிட்டுப் போனாள். மஹாபாரதம், உபநிஷத், வேதம் ஆகியன தொல்காப்பியத்துக்கும், புறநானூற்றுக்கும் சில ஆயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன் தோன்றியவை. ஆயினும் இமயம் முதல் குமரி வரை ஒரே பண்பாடு, ஒரே சிந்தனை என்பதால் வடமொழி வாசகங்களைத் தமிழர்கள் மொழிபெயர்த்ததாகக் கருதத் தேவையில்லை. சிந்தனை ஒன்றென்றால், சொற்கள் ஏறுபடாதன்றோ!
–சுபம்–
You must be logged in to post a comment.