
Written by S NAGARAJAN
Date: 25 November 2016
Time uploaded in London: 5-53 AM
Post No.3386
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 18
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 77..
உபாசகர் காவ் சில வருடங்களுக்கு முன் கொடுத்த மரகத புத்தரை சீனாவுக்குக் கொண்டு செல்ல எண்ணம் வந்தது ஸு யுன்னுக்கு.
அதைக் கொண்டு வர தென் கடலுக்குச் செல்ல விருப்பம் கொண்டு பயணத்துக்கு அவர் ஆயத்தமானார்.
வழியில் உள்ள பழங்குடியினர் அனைவரும் புத்த மதத்தில் மிகவும் பற்றுள்ளவர்கள். ஆகவே அவர்கள் வாழ்ந்த இடங்களின் வழியே அவர் பயணப்பட்டு ரங்கூனை அடைந்தார்.
அவர் மாபெரும் தங்க பகோடாவுக்கு விஜயம் செய்தார். பின்னர் உபாசகர் காவுக்கு தன் வருகை பற்றித் தெரிவித்தார்.
அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணப்பட்டார்.
சிங்கப்பூரை அடைந்தவுடன் பயணிகளிடம் ஒரு போலீஸ் அதிகாரி வந்தார்.
“நமது நண்பரான ரிபப்ளிக் ஆஃப் சைனாவின் ப்ரஸிடெண்ட் தன் முடியாட்சியைத் திருப்பிக் கொண்டு வந்து விட்டார்.ஆகவே புரட்சியாளர்கள் அனைவரையும் கைது செய்கிறோம்.

கரை இறங்குமுன்னர் உள்நாட்டில் வசிக்கும் சீனர்கள் அனைவரையும் விசாரணை செய்த பின்னரே கரை இறங்க அனுமதிக்க முடியும்” என்றார் அவர்.
சில நூறு பேர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.
ஸு யுன்னும் அவரைச் சேர்ந்தவர்களும் மட்டும் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டனர்.
அவர்களை இடதுசாரி புரட்சியாளர்கள் என்று போலீஸ் சந்தேகப்பட்டது.
ஆகவே அனைவரும் கயிறால் கட்டப்பட்டனர். சரியான அடி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் நகர விடாமல் செய்யப்பட்டனர். நகர்ந்தால் மீண்டும் அடி!
உணவோ அல்லது தண்ணீரோ தரப்படவில்லை. காலை ஆறு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த சித்திரவதை தொடர்ந்தது.
சிங்கப்பூரை அடைந்த அகதிகளுள் ஒருவராக ஹாங் ஜெங் ஜியாங் என்ற் பெயர் கொண்ட ஸு யுன்னின் சீடரும் இருந்தார். கூடவே அவருடன் டாங் என்ற பெயர் கொண்ட நிறுவன மேலாளரும் இருந்தார்.
இருவரும் காவல் நிலையம் சென்று ஸு யுன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தந்து அவருக்கு தாங்கள் காரண்டி என்று கூறினர். 5000 டாலர் தொகையை பெய்ல் தொகையாக அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் தந்தனர்.
அனைவரது கை ரேகைகளும் எடுக்கப்பட்ட பின்னர் ஒருவழியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஜெங்-ஜியாங்கின் சரக்கு கிடங்கில் அனைவரும் சென்று தங்கினர்.
புது வருடம் பிறந்தது.
ஜெங்-ஜியாங்கும் அவரைச் சேர்ந்தவர்களும் மரகத புத்தர் எடுத்துச் செல்லப்பட உதவினர்.
ஒரு வழியாக மரகத புத்தர் யூனானுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
***********