Research Article Written by London swaminathan
Date: 12 December 2016
Time uploaded in London:-11-26 am
Post No.3441
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உருகார், வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார்.
பாரதியின் பாட்டில் மகிழார், வேறு ஒரு பாட்டிலும் மகிழார்.
தெவிட்டாத இன்பம்தரும் பாரதி பாடல்!
பாரதி பாடல்களில் தேவார மூவரையோ, திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் சைவத் திருமுறைகளில் திருவாசகமே அவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டது என்பதற்குப் பல சான்றுகள் உள.
மாணிக்கவாசகர் என்னென்ன செய்தாரோ அதை இவரும் செய்துள்ளார்.
ஓம்காரம்
திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்
இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்
1.உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே (சிவபுராணம்)
2.உய்யுநெறிகாட்டுவித்திட்
டோங்காரதுட்பொருளை (அச்சோபதிகம்)
இனி பாரதியார், பாஞ்சாலி சபதம் நூலைத் துவக்கி முடிக்கும் முறையினைக் காண்போம்:
1.ஓமெனப் பெரியோர்கள்- என்றும்
ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்
தேய்ப்பதுவாய், நலம் வாய்ப்பதுவாய்
–பாஞ்சாலி சபதத்தின் துவக்கப்பாடல்
2.ஓமென்றுரைத்தனர் தேவர்- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்
–பாஞ்சாலி சபதத்தின் முடிவுப்பாடல்
xxxx
மாணிக்க வாசகர் குயில்பத்து பாடினார்
பாரதியார் குயில்பாட்டு பாடினார்.
xxxx
மாணிக்கவாசகர் அச்சோபதிகத்தில்
சாதல், காதல் என்று பாடுவது போலவே, பாரதியும் குயில்பாட்டில்
காதல் காதல் , காதல்
காதல் போயின் சாதல் என்று பாடுகிறார்.
ஆண்டவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் மாணிக்கவாசகர்.
பாரதமாதா மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் பாரதியார்.
xxx
திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:
அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன
—திருவாசகம்
பாரதியும் ,
நக்கபிரானருளால் இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்
தொக்கன அணடங்கள் வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்
இக்கணக்கு எவர் அறிவார் – புவி
எத்தனை உளதென்பது யார் அறிவார்
என்று பாடி வியக்கிறார்.
xxxx
திருத்தசாங்கம் பாடினார் மாணிக்கவாசகர்.
பாரதியும் திருத்தசாங்கம் பாடினார்
இருவரும் கிளியிடம் பேசுவதாகப் பாடியிருப்பதால் சொற்களிலும் அதிக ஒற்றுமை கானப்படுகிறது
xxxx
மாணிக்கவாசகர் போற்றித் திரு அகவல் பாடினார்.
பாரதியும் “போற்றி அகவல், கபிலர் அகவல்” முதலியன பாடினார்.
இவையெல்லாம் மேம்போக்கான ஒற்றுமைகள். இன்னும் சொல்லாராய்ச்சியில் இறங்கினால் எந்த அளவுக்கு மாணிக்கவாசகரும் அவர்தம் திருவாசகமும் பாரதி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறியலாம்.
–Subham–