
Date: 13 DECEMBER 2017
Time uploaded in London- 8-14 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4487
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 10; இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை)
24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ; 21-11-17 – 4418 ; 4-12-17-4457ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
“உயர் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிக்க முயன்றாற் போல இராமாயணத்தைப் பருக விழைகிறேன்” – கம்பனின் தன்னடக்கம்!
ச.நாகராஜன்

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:
வேறு
பாடல் 75
மூவரும் மூவரின் முதல்வரு மிவரான்
தேவரு மிதனிசை செவிமடுத் திடுவர்;
மேவரு மரசரும் விபுதரும் மேலாம்
பாவரு புலவரும் பருகலும் வியப்போ?
குறிப்பு: கம்பன் அடிகளை வேற்றுமையின்றித் தரும் பொழுது அவற்றை “ “ போன்ற இரட்டைத் தலைப் புள்ளி (Quotation Marks) யுள்ளமைத்தும் சிறிது வேறுபாட்டோடு தரும் பொழுது ‘ ‘ போன்ற ஒற்றைத் தலைப்புள்ளியமைத்தும் இங்கு குறியீடு செய்யப்பட்டுள்ளது.

உவமைப் பகுதி
பாடல் 76
“ஓசை பெற்றுயர் பாற்கட லுற்றொரு
பூசை முற்றவும் நக்குபு புக்கெ”னப்
பேசலாய உவமையும் பேரெழில்
மூசத் தந்த கவித்திறம் முன்னுமின்
பாடல் 77
“ஈர நீர்ப்படிந் திந்நிலத் தேசில
கார்க ளென்ன வருங்கரு மேதி” யென்
றேரெ டுத்த இசைப்பு னிழைத்தனன்
ஊர டுத்தவோர் காட்சிக் கொருபடம்
பாடல் 78
‘கோல்பி டித்தகு ருடரொ ழுக்குபோல்
வால்பி டித்தொழு குங்கவி மாலை’யாம்
பால்ப டிந்தவு வமைஇ யற்கைமெய்ந்
நூல்ப டிந்தவ ரல்லர் நுவல்வரோ?
பாடல் 79
‘மீனொ ளித்தவான் முத்தினி டுபந்தர்
தானொ ளித்தெ’னச் சாற்றுங் கவிநயம்
தேன ளித்தசெ ழுஞ்சொலின் சீரிய
ரான ளித்திட்ட லன்றிமற் றாவதோ?
பாடல் 80
’அரக்கி வன்குடர்க் கொண்ட வனுமனைக்
குரக்கு வாலிற் குயிற்றிக் குழூசஞ்சிறார்
பறக்க விட்ட கதலி’ யெனப்பயன்
சிறக்கச் சொற்ற திறக்கத் தகுவதோ?
பாடல் 81
நிலம கள்முக மென்ன நிறுத்திடா
துலக வூழியு றையுள்வ ரைப்படி
பலக ணித்த வுருவகப் பந்திசெய்
புலவன் புந்தியோ ரந்தம் புணர்வதோ?
பாடல் 82
‘இடைந்து போனவி ளைஞர்தம் சிந்தைபோல்
மடந்தை மார்பின் மருவிள மஞ்ஞை”யென்
டந்தை யாளன் உரைத்த உவமைநூற்
றுகடைந்து நோக்கினுங் காணக் கிடைப்பதோ?

பாடல் 83
‘விண்ண வர்க்கு முனிசெயும் வேள்வியை
மண்ணைக் காத்துறை மன்னவன் மைந்தருங்
கண்ணைக் காக்குமி மையிற்காத் தா’ரென
எண்ணிக் கூறிய ஏற்றமுங் காண்பிரால்
பாடல் 84
‘எண்கின் கூட்டம் எறிந்தகி ரிக்குலம்
புண்ணி யம்பொருந் தாதமு யற்சிபோற்
சுண்ண நுண்பொடி யாகித் தொலைத்தெ’னத்
திண்ண றத்திறன் செப்பங் காண்பிரால்
பாடல் 85
திங்க ளைக்கரி தென்னத் திருத்திய
சங்க வெண்சுதை தாங்கிய மாளிகைத்
தங்கு வெண்மை தழைப்புறப் பாற்கடற்
பொங்க லைக்குவெங் காலும் பொருத்தினன்
பாடல் 86
‘இடும்பை யெத்தனை யும்படுத் தெய்தினுங்
குடும்பந் தாங்குங் குடிப்பிறந் தாரினே
துடும்பல் வேலைது ளங்கிய தில்’லென
நெடும்பு கழப்பெரி யார்நிலை கூறினன்
பாடல் 87
வஞ்சப் பூசையின் வாயின் மறுகுறும்
பஞ்ச ரக்கிளிப் பான்மை கதறலும்
தஞ்ச மாயதன் சேவற் பிடிபட
அஞ்சு மன்னத் தழுங்கலுந்’ தந்தனன்
பாடல் 88
கருத்த டக்கணக் காரிகை காதலர்
பொருந்த வெண்ணிப் புகுந்தக டைசிநாள்
வருந்து நீர்தசை யால்வரு மானெனப்
பெருந்த டையிற்பே துற்றதும் பேசினன்
பாடல் 89
‘வானும் மண்ணுநீர் வந்தம றுகுறும்
மீனெ னமுகில் மேற்றுவன் மின்னெனக்
கான வேழங்கை விட்டபிடி’ யெனக்
கோனி ழந்தகொ டியைக் குறித்தனன்
பாடல் 90
’முன்பி ழைக்கவ றுமையில் முற்றினோர்
பொன்பி ழைக்கப் பொதிந்தனர் போலெனா
வெம்பி யந்தியில் வீட்டை தாயினை
அன்பில் வந்தனை யான்கன்று போலெனா’
பாடல் 91
‘ஊதை தாக்க ஒசியுங் கொடியெனா
ஊதி மூட்டிடா ஊழியின் தீயெனா
ஓது மண்டத் துறையமை வாயெ’னா
ஏதெல்ல் லாம்பரி செண்ணி யடுக்கினன்!
கம்ப ராமாயண கௌஸ்துப மணி மாலை முற்றும்
***

இத்துடன் நான் படி எடுத்து வைத்துள்ள நூல் முடிவடைகிறது.
- இதற்கு மேலும் பல பாடல்கள் நூலில் இருந்திருக்கலாம்.
- மங்கிப் போன நோட்டு. தேதியைப் பார்த்த போது 18-6-1968 என்று இருக்கிறது.பழுப்பேறிய தாள்களை பூதக்கண்ணாடியின் உதவியோடு உற்று நோக்கி மேற்கண்ட பாடல்களைத் தந்துள்ளேன். பிழைகள் இருக்கக் கூடும். இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்த ஏதுவாக இருக்கும்.
***
கம்ப ரஸிகரின் காவிய ரஸனையைப் பற்றி இனியும் கூறத் தேவையில்லை.
கம்பனைக் கரைத்துக் குடித்து முக்கியப் பகுதிகளில் உள்ள உவமைகளில் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஓசை பெற்று உயர் பாற்கடலில் பூனை நக்குவது போல நான் புகுந்துள்ளேன்; இராமாயணத்தைச் சிறிது தந்துள்ளேன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் சிவராஜ பிள்ளை. எப்படிப்பட்ட மகாகவி என்ன ஒரு தன்னடக்கத்துடன் இப்படிக் கூறுகிறான். எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.
இதையடுத்துப் பல உவமைகளைக் கூறி வியந்து போகிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.
கம்பனைக் கற்க இது போல் ஒரு உத்வேகமூட்டும் நூல் இருந்தால் தானே கம்ப ராமாயணத்தின் அருமை, பெருமைகள் தெரியும்.
கம்பனின் ராமாயணம் ஒரு ‘வாழ் நாள் பாடம்’. அந்தக் காலத்தில் ‘பாடம்’ கேட்கும் பழக்கம் இருந்தது. இன்று அது மறைந்து விட்டது; பல அறிஞர்களின் துணையுடன், பல நூல்களின் துணையுடன் நாமே கற்க வேண்டியதாகி இருக்கிறது.
கற்கக் கற்க மணற் கேணி ஊற்றுப் போல கருத்துக்களும் இன்பமும் பொங்கி வரும்.
அன்பர்கள் அனைவரும் சிவராஜபிள்ளையைச் சிரமேல் வைத்துப் பாராட்டிக் கம்பனை இன்னும் நன்கு கற்கப் புகலாம்.
***

இதை முடிக்கின்ற போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. இருக்கின்ற ஒரு
பிரதியும் மங்கிப் பயனற்றுப் போய் விடுமோ என்ற பயம் நீங்கி விட்டது.எங்கேனும் இந்த நூலின் பிரதிகள் இருக்கலாம். கம்பன் கழகத்தினரோ, சிவராஜபிள்ளையின் சந்ததியினரோ,கம்ப ரஸிகர்களோ இதை மீண்டும் அச்சிட்டுத் தரலாம் அல்லது டிஜிடலாக் வலையில் உலாவ விடலாம்.
நன்றி, வணக்கம்!
*** இந்தக் கட்டுரைத் தொடர் இத்துடன் முற்றும்