கோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்! (Post 4597)

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London- 6-49 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4597

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 8

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

ஏழாம் கட்டுரை எண் 4574 – வெளியான தேதி : 2-1-2018

 

கோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்!

ச.நாகராஜன்

 

 

 

இனி கோசம், ஆத்மா பற்றித் தெரிந்து கொள்வோம்

*

ஐயா, கோசம் என்றால் என்ன?

சொல்கிறேன்.

கத்திக்கு உறை இருப்பது போல,

மாம்பழத்திற்கு தோல் இருப்பது போல,

மனிதனை சட்டை மறைப்பது போல,

ஆத்மாவை, அன்னமய கோசம், பிராணமய கோசம்,  மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம். ஆனந்த மய கோசம் என்று ஐந்து கோசங்கள் மறைக்கிறது.

 

இந்த கோசங்களுக்கு ஆத்மா அன்னியன் என்பது எப்படி?

அக்கினியை அனுசரித்திருக்கும் புகைக்கு அந்த அக்கினியைத் தவிர வேறு இருப்பு இல்லை.

 

என்றாலும் கூட அந்தப் புகை அக்கினியை மறைக்கிறது.

அதே போல ஆத்மாவின் இருப்பையே இருப்பாகக் கொண்ட கோசங்கள் ஆத்மாவை மறைப்பதாக ஆரோபிக்கப்படுகின்றன.

ஆனால் மண்ணினிடத்தில் ஆரோபிக்கப்பட்ட ஒரு குடத்தினுடைய ரூபமும், பெயரும் பாதிக்கப்படும் போது  வாஸ்தவமாய் மண் மாத்திரம் எப்படி மிஞ்சுகிறதோ, அதே போல ஆத்மாவினிடத்தில் ஆரோபிக்கப்பட்ட  ஐந்து கோசங்களும் ஆத்ம ஞானத்தினால் பாதிக்கப்படுகிறது.

 

சச்சிதானந்த ஸ்வரூபமான ஆத்மா ஒருவனே மிஞ்சுகிறான்.

 

நல்லது, ஐயா, ஆத்மாவின் சச்சிதானந்த ரூபத்துவம் என்னும் ஸத் ரூபம், சித் ரூபம், ஆனந்த ரூபம்  ஆகியவற்றிற்கான லக்ஷணம் எது?

முக்காலத்திலும், ஒன்றினாலும் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டு ஒரே ரூபமாக இருப்பது தான் ஸத் லக்ஷணம்.

 

 

ஆத்மா சித் ரூபன் என்பதற்கு என்ன பிரமாணம்?

தனது இருப்பை வெளிக்காட்ட சூரியன் முதலான சாதனங்களை நாடாமல், தானே விளங்கிக் கொண்டும் தன்னிடத்தில் ஆரோபிக்கப்பட அனைத்து ஜட பதார்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டும் இருக்கின்றபடியால் சித் ரூபன் எனப்படுகிறான்.

 

 

இனி ஆனந்த ரூபத்துவம் எது?

நித்தியமாயும், நிருபாதிகமாயும், நிரசதியமாயும் இருக்கின்ற சுகம் எதுவோ அதுவே

ஆனந்த ரூபத்துவம்.

 

அதெப்படி ஐயா?

சுஷூப்தி ஆநந்தத்தில் சுக லக்ஷணம் இருப்பதனால் அந்த ஆனந்தமே “நான்” என்று அறிந்து கொள்ளத்தக்கது.

 

சுஷூப்தியில் துக்க நிவர்த்தி மட்டும் காணப்படுகிறதேயன்றி ஆனந்தத்துவத்தை அனுபவிப்பதைக் காணவில்லையே?

நல்ல தூக்கத்தில் இருந்த ஒரு மனிதன் எழுந்திருந்த பின்னர், “நான் சுகமாகத் தூங்கினேன்” என்று சொல்கிறான் இல்லையா, அப்படிச் சொல்வதால், ஆத்மாவுக்கு சுஷூப்தியில் சுகத்தின் இருப்பைச் சொல்கிறான்.

 

நிருபாதிக்கத்துவம் எது?

புஷ்பம், சந்தனம், பெண் ஆகியவை உபாதிகள்.இவற்றால் உண்டாகும் சுகம் ஔபாதிகம். சுஷூப்தியில் இந்த உபாதிகள் எதுவும் காணப்படுவதில்லை.

அப்படியிருந்தும் சுகமானது எல்லோராலும் அனுபவிக்கின்றபடியால் சுஷூப்தியில் நிருபாதிகத்வ ஆனந்தம் இருக்கிறது.

 

நிரதிசயத்துவமாவது எது?

மனுஷ்ய ஆனந்தம் முதல் ஹிரண்யகர்ப்ப ஆனந்தம் வரை பதினோரு ஆனந்தம் இருக்கிறது.

ஆகையால்  அவற்றிற்கு அதிசயத்துவம் உண்டு.

ஆனால் பிரம்மானந்தம் ஒன்றே எல்லையற்றதாயும், ஒப்புயர்வு அற்றதாயும் உள்ளபடியால் சுஷூப்தி ஆனந்தமாகிய பிரம்மானந்தமே நிரதிசயம் ஆகும்.

 

நித்தியத்துவமாவது எது?

ஜாக்ரத ஸ்வப்னங்களில் அநேக விஷயங்களில் அநேக ரூபமான  சுகத்தைத் தனித்தனியாக அனுபவிக்கலாம்.

ஆனால் சுஷூப்தி சுகம் மாத்திரம் ஒரே ரூபமுடையதாகவும் பூர்ணமாயும் இருக்கிறது.

 

சச்சிதானந்த ஸ்வரூபம் என்ற அனுபவம் எப்படி வரும்? அது எப்படிப்பட்டது?

வேதாந்த, சாஸ்திர தாத்பரிய நிச்சய ரூபமாகிய சிரவணத்தை (சிரவணம் = கேட்பது) குரு முகத்தால் கேட்டும்,

அதற்கு அனுசாரமாய் மனனமும்,

மனனனுக்கு அனுசாரமாய் நிதித்யாசனமும் செய்தால்,

பிறகு சச்சிதானனந்த பிரம்மமே “நான்” என்ற ஞானம் உண்டாகும்.

இதுவே பரோக்ஷ ஞானம்.

இந்த பரோக்ஷ ஞானத்தைப் பற்றிய காரியங்களைச் செய்யாதவனாகவும்,

 

 

நான் கர்த்தா என்றாதி அபிமானத்தை விட்டவனாகவும்,

பிரம்மமே நானாக இருக்கிறேன் என்ற அனுபவத்தையும், அது விஷயமான முயற்சியையும் கர்த்ருவத்தையும் விட்டவனாயும், சகலத்திலும் சுஷூப்தியில் இருப்பது போல பற்றற்ற சுபாவமாகிய தூஷணீம் அவஸ்தையில் நீரில் உப்பு கரைந்தால் எப்படியோ அப்படி பிரம்மத்தில் கலந்து போன அந்தக்கரணத்தை உடையவனாகியும், நிர்விசேஷ நிலையில் இருப்பவனுக்கு நிர்விசேஷ ஞானம் எதுவோ அது தானாகவே உண்டாகிறது.

 

இது தான் அபரோக்ஷானுபவம்.

இந்த அனுபவம் எப்போது உண்டாகிறதோ அப்போது அவன் சுவானுப ரூபன்.

அப்போது தான் ஆனந்த ரூபன்.

அந்த ஆனந்த வைபவத்தை அவனேஅறிவானன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.

அந்த ஆனந்தத்தை அறிவிக்க எந்த வேத, வேதாந்த சாஸ்திரங்களினாலும் முடியாது.

மனோ வாக்குகளினாலும் முடியாது.

இப்படி வாக்கு, மனதுக்கு எட்டாத அகண்டானந்த பிரம்ம சுவரூபானுபவத்தில் இருக்கின்றபடியால் தன்னுடைய ஆனந்தத்தைத் தானே அனுபவிக்க சக்தியை உடையவனாகிறான்.

 

ஆத்மாவின் அகண்டார்த்தத்தைச் சொல்லுங்களேன்.

தேக பரிச்சேதம்,

கால பரிச்சேதம்,

வஸ்து பரிச்சேதம்

என்கின்ற மூன்று பரிச்சேதங்கள் அற்றதாகிய அபரிச்சின்னார்த்தம் தான் ஆத்மாவின் அகண்டார்த்தம்.

 

ஐயா, மிக்க நன்றி, நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். என்றாலும் பரிச்சேதம் என்று சொன்னீர்களே அது பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்.

கேட்கலாமா?

தாராளமாகக் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

***

அடுத்த கட்டுரையுடன் இந்த அத்வைத ஸார விளக்கம் முடியும்.

 

Leave a comment

Leave a comment