
Written by London Swaminathan
Date: 6 May 2018
Time uploaded in London – 6-58 am (British Summer Time)
Post No. 4982
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

திருச்சி அருகிலுள்ள கூத்தனூரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள். வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையைப் படித்து காஞ்சிபரமாசார்ய ஸ்வாமிகளிடம் தங்க நாணயம், பசு மாடு, சால்வை பெற்றவர். பெரிய அறிஞர்–மஹா பண்டிதர். அவரிடம் ஒருவர் , இறந்து போனவரின் ஜாதகத்தைக் கொடுத்து அவரைச் சோதித்த போது அவருக்கு ஷாக் அடித்தது போல உடம்பு தூக்கிவாரிப் போட்ட நிகழ்ச்சியை முன்னரே எழுதினேன்.
அவரை மதுரை டி.வி.எஸ். நிறுவனத்தார் உபந்யாசம் செய்வதற்காக ஆண்டுதோறும் அழைத்தார்கள். அப்பொழுது அந்தக் கம்பெனி அனுப்பும் காரில் நானும் அவருடன் சென்று நோட்ஸ் (NOTES) எடுத்து அதை தினமணி பத்திரிகைக்கு செய்தியாகத் தருவேன். அவர் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வேதத்தில் இருந்து மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார். இதனால், விஷயம் அறிந்தவர்கள், அவருடைய சொற்பொழிவைத் தவறாமல் கேட்பர். அவர் உபந்யாசத்தைத் துவங்கும்போது ‘உத்தமோத்தமர்களே” என்று துவங்குவார். என் அருகில் உடகார்ந்து இருப்பவர் உடனே காமெண்ட் (COMMENT) அடிப்பார். இங்கு இருப்பவர்களில் யார் உத்தமர்? என் உள்பட எவனும் உத்தமர் இல்லையே! என்பார். இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் ‘வெளுத்ததெல்லாம் பால்’ என்று எண்ணும் அளவுக்குக் குழந்தை மனம் படைத்தவர் சாஸ்திரிகள்.
என்னிடம் சொல்லுவார்: சாமிநாதா, நீ எங்கள் திருச்சி பஜாருக்கு வந்து பார்க்க வேண்டும். முனிவர்கள், சந்யாசிகளும் கூட மனம் தடுமாறிவிடும் அளவுக்கு பெண்கள் ஆடை அலங்காரம் இருக்கும் என்பார்.
நான் உடனே மாமா, எங்கள் மதுரையிலும் அப்படித்தான்.
நீங்கள் எங்கள் டவுன்ஹால் ரோடு (TOWN HALL ROAD) அல்லது, பணக்காரத் திருமணங்களுக்கு வந்து பாருங்கள்’ என்று சொல்லுவேன்.
இதை எழுதும்போது இன்னும் ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. தொல்பொருட் துறை அறிஞர், வரலாற்று ஆசிரியரான டாக்டர் இரா.நாகசாமியும் பேச்சு வாக்கில் சொன்னார்; ‘பெரிய ஞானிகளையும் நிலை தடுமாறச் செய்து மனத்தை மாயையில் ஈடுபடுத்தும் சர்வ வல்லமை துர்கா தேவிக்கு உண்டு’ என்று சொல்லி ‘ஞானினாம் அபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி’ என்ற துர்கா சப்தஸ்லோகீ வரிகளைக் கூறினார்
ॐ ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा।
बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति॥१॥
விஸ்வாமித்ரர், புத்தர் ஏசு முதலியோரையும் இறைவன் இப்படிச் சோதித்ததாக நாம் படித்து இருக்கிறோம்.

காஞ்சி பரமாசார்யார் வயதைச் சொன்ன சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்!!!!
காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளுக்கு (காஞ்சி சங்கராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி 1894-1994) இன்னும் எவ்வளவு ஆண்டுகள் உயிரோடு இருப்போம் என்று அறிய திடீரென ஆவல் ஏற்பட்டது. அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து 1994ல் சமாதி அடைந்ததை நாம் அறிவோம்.
ஒரு முறை அவர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகளை யாரும் இல்லாத போது அழைத்து, தன் கையில் அக்ஷதையைப் போடும்படி சொன்னாராம். சாஸ்திரிகளுக்கு ஒரே வியப்பு. ஆயினும் அவர் சொன்ன படியே செய்தார். அட்சதையைப் போட்டபின்னர் ஸ்வாமிகள் அதை எண்ணிப் பார்த்துவிட்டு ‘ஓஹோ, நான் இவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருப்பேன்’ என்றாராம். அது எத்தனை ஆண்டுகள் என்று சாஸ்த்ரிகள் சொல்ல மறுத்து விட்டார்.
மறைகளைக் காப்பவர்களே நான் மறையாளர் அல்லவா? (இரஹஸியம்= மறை) இறுதிவரை சாஸ்திரிகள் எங்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தும் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்!!!!
xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxx
R.Nanjappa (@Nanjundasarma)
/ May 6, 2018இங்கு சூக்ஷ்மம் அக்ஷதையில் இல்லை, பரமாசாரியாரின் ‘ஸங்கல்பத்தில்’ இருக்கிறது என்று தோன்றுகிறது,
இது போல் பூவை வைத்து சிலவற்றை முடிவுசெய்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு கை மல்லிப்பூவை (மொக்கு) எடுத்துப் போடச்சொல்வார்கள். அவற்றை இரண்டிரண்டாக எண்ணுவார்கள். இறுதியில், அது ஒற்றைப்படையாகவோ, இரட்டைப்படை யாகவோ இருக்கும். அல்லது, ஒரே மொக்கும் மிஞ்சலாம். இதை வைத்து பலன் சொல்வார்கள். ஆனால் எது எப்படி வந்தால் என்ன முடிவு என்பதை முதலிலேயே தீர்மானம் செய்து [ சங்கல்பித்துக்] கொள்வார்கள்.
ஒரு பூவையோ, மிருகத்தையோ சொல்லச் சொல்வார்கள், அதை வைத்து பலன் சொல்வார்கள். இங்கும் முன்பே சங்கல்பம் இருக்கும். அது மணமுள்ளதா, மணமற்றதா, பூஜைக்கு உகந்ததா இல்லையா அதன் நிறமென்ன, , மிருகமெனில் காட்டு விலங்கா, பழகியதா, மாமிச பக்ஷிணியா, சாக பக்ஷிணியா, எதற்கு என்ன பலன் என்பதை முதலிலேயே தீர்மானித்துக் கொள்வார்கள்.
இங்கு முன்பே பெரியவர் ஏதோ சங்கல்பம் செய்துகொண்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.