
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 2 AUGUST 2019
British Summer Time uploaded in London – 8-59 am
Post No. 6715
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்துக் நிகழ்நிலையில் கேட்கலாம். 1-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட முதலாம் உரை இங்கு தரப்படுகிறது.
நீரின்றி அமையாது உலகு!
ச.நாகராஜன்
நமது முன்னோர்கள் நீரின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்தவர்கள்.
நீரின்றி அமையாது உலகு என்றும் சீரைத் தேடின் நீரைத் தேடு என்றும் கூறி அவர்கள், நீரின் அருமையைப் புலப்படுத்தினர்.
ஓடி வரும் காவிரி நீரை கடலில் வீணே கலக்க விடாமல் கற்களால் கல்லணை கட்டி நீரைத் தேக்கி பல்லாயிரம் பேர்களுக்கு வாழ்வாதாரமான நீரைக் கரிகால் சோழன் வழங்கினான்.
மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த அவனது பொறியியல் அறிவு நுட்பமும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கின்ற அவனது உயர்ந்த சிந்தனையும் நீரின் பெருமையைத் தான் அறிந்ததோடு மக்களையும் அறியச் செய்த அவனது பெரு நோக்கும் வியப்புக்குரியன.
தமிழில் தண்ணீரைச் சேமிக்கும் வைக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. ஆறு, நீர்வீழ்ச்சி, கேணி, குளம், குட்டை, ஊற்று, ஏரி, கிணறு, நீரோடை, ஓடை, வாய்க்கால் போன்ற பல சொற்கள் தண்ணீரை அழகுறச் சேமித்து வைக்கும் பழக்கம் தமிழகத்தில் நிலவி வந்ததையும் இவற்றில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதையும் புலப்படுத்துகிறது.
இந்த நீர்நிலைகளைப் பராமரிப்பதையும் கூட பண்டைய மக்கள் தங்களின் தலையாய பணியாகக் கருதினர்.
தூர் வாருதல் என்னும் பணி ஆங்காங்கே கிராமத்தில் ஆரம்பித்து நகர்ப்புரம் வரை பரவி இருந்தது.
தூர் என்ற சொல் குளம், கிணறு, ஏரி ஆகிய முக்கிய நீர்நிலைகளின் அடிப்பகுதியில் அவ்வப்பொழுது சேரும் கல், மண், சகதி போன்றவற்றின் திரள்வு அல்லது வண்டல், அடைப்பு, வேர், அடி மரம், கொள்கலன்களின் அடிப்பகுதி போன்ற பல அர்த்தங்களைக் குறிக்கிறது. வாருதல் என்பது அப்படிப்பட்ட அடைப்பை நீக்குதல், சகதி முதலியவற்றை வெளியேற்றல் என்பதைக் குறிக்கிறது.
இந்தப் பின்னணியில் இப்போது நாம் செய்ய வேண்டிய பணியை ஆழ்ந்து யோசித்தால் இன்றுள்ள தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் காலத்தில் அது எவ்வளவு முக்கியமானது என்பது புரிய வரும்.
ஆங்காங்குள்ள தன்னார்வத் தொண்டர்களும், இல்லத்தரசிகளும், பெரியோர்களும் தங்கள் தங்கள் அருகிலுள்ள நீர் நிலைகளைச் சுத்தமாகப் பாதுகாப்பதோடு தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டால் நீர்ப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
இன்றைய காலகட்டத்தில் இது அவசியமான பணி; அவசரமான பணியும் கூட!
****

R.Nanjappa (@Nanjundasarma)
/ August 2, 2019நீர் தெய்வாம்சம் பொருந்தியது என்பதை மனமார உணராவிட்டால் அதைச் சரியாகப் பயன்படுத்த வராது. “நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி” என்பது திருவாசகம்.
குளம், குட்டை, ஓடை, ஆறு ஆகியவற்றின் நீரை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதை முந்தைய தலைமுறை அறிந்திருந்தது. இன்றைய விஞ்ஞான யுகம் இந்த அறிவை இழந்துவிட்டது.
நதி நீர் வீணே ஓடி கடலில் கலக்கிறது என்பது இடைக்காலத்தில் எழுந்த கருத்து. ஓடும் நதி அதன் தடம் முழுதும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கிறது. அதைத் தடுப்பதால் அணை கட்டிய இடத்தில் நீர் மட்டம்/வளம் உயர்ந்தாலும், பிற இடங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். காவிரியில் மேட்டுர் அணை கட்டியதன் விளைவு. தஞ்சாவூர், திருச்சி ஜில்லாக்கள் வரண்டுவிட்டன, நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதியில் கடல் நீர் நிலத்தடியை ஊடுருவும் அபாயம் தோன்றிவிட்டது. [ கல்லணை நீரின் போக்கை முற்றிலும் தடுக்கவில்லை]
அணைகளால் ஏற்படும் தீய விளைவுகளை இன்றைய விஞ்ஞானிகள் அறிந்திருக்கின்றனர். படித்த மக்களிடையேயும் இதைப்பற்றிய விழிப்புணர்ச்சி தோன்றி வளர்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு அணைகளால் ஏற்படும் தீய விளைவுகளை அறிந்த அமெரிக்கர்கள் பல அணைகளை உடைத்து வருகிறார்கள்! பல அமெரிக்கப் பழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் நம்மவர்கள், இந்த நல்ல அம்சங்களைப் பார்ப்பதில்லை!
இன்று பல துறைகளிலும் ரசாயனப் பொருள்களின் ஆதிக்கம் பரவிவிட்டது. பற்பசை, விவசாயம், உணவுப் பொருள்கள்,துணிகளின் சாயம் என்று இவை அனைத்திலும் ஆயிரக்கணக்கான ரசாயனப் பொருள்கள் கலந்திருக்கின்றன. இவை அனைத்தும் இறுதியில் பூமியிலும் நீரிலும் தான் கலக்கின்றன. இந்த நிலையில் இன்று குளம், குட்டை, ஏரி முதலியவற்றில் நீரைச் சேகரித்தாலும் அது நேரடியாகத் துய்க்கப் பயன்படாது! ( துப்பாவதூஉம் இல்லை!)
தாகத்தைத் தீராத் தண்ணீர் பயனிலை என்று அதிவீரராம பாண்டியர் அன்றே பாடினார்!
காலனி ஆதிக்கக் காலத்திலும் தஞ்சாவூர் சீமையில் நீர் நிலைகள் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டன. அந்தந்தக் கிராம மக்களே ஒன்று கூடி பராமரிப்பும் பணியைச் செய்தனர். மேலும் உபரி நீர் வீணாகாமல் பல நீர் நிலைகளையும் இணைத்திருந்தனர். இதைப்பார்த்த காலனி அதிகாரிகள் வியந்து எழுதிவைத்திருக்கிறார்கள். Arthur Cotton and others. சுதந்திர இந்தியாவில் இதெல்லாம் அரசியல் வாதிகள் பணம் பண்ணும் விஷயமாகிவிட்டது.
இது மிகப்பெரிய பிரச்சினை. அரசியலோ, விஞ்ஞானமோ இதற்கு விடை காண முடியாது. நீர் ஐம்பெரும் பூதங்களில் ஒன்று, இது இறைவனின் படைப்பு, இதை மரியாதையாக நடத்தவேண்டும்/பயன்படுத்தவேண்டும் என்ற சமய/ஆன்மீக உணர்வு எழாவிட்டால், இப்பிரச்சினை தீராது.
விஞ்ஞானிகள் Cloud seeding செய்யலாம்- மேகம் இருந்தால். அவர்களால் மேகத்தை வரவழைக்க முடியாது!
Santhanam Nagarajan
/ August 3, 2019super sir! everybody should understand this; then only the future generation will survive
thanks for the input.