


WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 23 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 5-48 AM
Post No. 7127
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மார்வார் ராணியைக் காப்பாற்றிய மாவீரன் துர்காதாஸ் ரதௌவ்ரா!
ச.நாகராஜன்
ஜோத்பூர் மன்னன் யஷ்வந்த் சிம்ஹாவுக்கு ஒரு செய்தி வந்தது.
பெண் ஒட்டகங்களை மேய்த்துப் பாதுகாக்கும் காவலன் விவசாயி ஒருவரின் மகன் ஒரு பெண் ஒட்டகத்தைக் கொன்று விட்டான் என்று செய்தி அனுப்பி இருந்தான்.
மன்னன் உடனே தன் படைவீரர்களுக்கு அந்த விவசாயியைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டான்.
ஆசகரனா என்ற அந்த விவசாயி அவனது பையனுடன் அவைக்குக் கொண்டு வரப்பட்டான்.
மன்னன் கோபத்துடன் அவனை நோக்கி, “உன் பையன் ஒட்டகத்தைக் கொன்றது உண்மையா?” என்று கேட்டான்.
விவசாயி தன் பையனைச் சுட்டிக் காட்டி, “இதோ இருக்கிறான் என் பையன். அவன் தான் ஒட்டகத்தைக் கொன்றான்” என்றான்.
மன்னன் அந்தப் பையனை நோக்கி, “ஒட்டகத்தை நீ தான் கொன்றாயா?” என்று கேட்டான்.
“ஆம், மன்னவா! நான் தான் கொன்றேன். வயல்வெளியைப் பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அந்த ஒட்டகம் எனது வயலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதை மேய்ப்பவனிடம் அதை வயலுக்குள் விடாதே! என் சோளமெல்லாம் பாழாய்ப் போகும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒட்டகம் உள்ளே வந்து சோளக்கதிர்களை நாசம் செய்ய ஆரம்பித்தது. ஆகவே என் வயலைப் பாதுகாக்க ஒட்டகத்தைக் கொல்ல நேர்ந்தது” என்றான் அந்தச் சிறு பையன்.
மன்னனுக்கு அந்தச் சிறு பையனால் எப்படி ஒரு பெரிய ஒட்டகத்தைக் கொல்ல முடியும் என்று சந்தேகம் ஏற்பட்டது.
“எப்படி அந்த ஒட்டகத்தைக் கொன்றாய்” என்று கேட்டான் மன்னன்.
சுற்றும் முற்றும் பார்த்த பையன் தூரத்தில் இருந்த ஒரு ஒட்டகத்தைக் கண்டான்.
அதை அருகில் இழுத்து வந்து தன் வாளால் அதன் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டினான்.
“இப்படித்தான் வெட்டினேன்” என்றான் அந்தப் பையன்.
மன்னனுக்கு வியப்பு மேலிட்டது.
அவனைத் தன் படையில் உடனடியாகச் சேர்த்துக் கொண்டான்.
அந்தப் பையன் தான் உலகமே வியக்கும் வண்ணம் பின்னால் மாபெரும் வீரன் என்று புகழ் பெற்ற துர்காதாஸ்!
யஷ்வந்த் சிம்ஹாவின் ராணியையும் இளவரசன் அஜித் சிம்ஹாவையும் ஔரங்கசீப்பிடமிருந்து காப்பாற்றி விடுதலை செய்தவன் அவனே!
அந்த மாபெரும் வீரன் முகம்மதியர்களிடமிருந்து மார்வாரை விடுவித்தான்; வரலாற்றில் பெரும் புகழ் பெற்றான்!
****


