
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7696
Date uploaded in London – – 15 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
அமெரிக்காவில் மஹாத்மா காந்திக்கு இணையாகக் கருதப்படுபவரும், வெள் ளையரின், கறுப்பரின் சம உரிமைக்குப் போராடியவரும், அமெரிக்க சுதந்திர போர் வீரரும், அமெரிக்க ஜனாதிபதியுமான ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln) வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தில் கை எழுத்து இடுவதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது:-
1863 ஜனவரி 1-ம் தேதியன்று அமெரிக்காவின் அடிமை ஒழிப்பு (Emancipation Proclamation) கறுப்பர் விமோசனம்) பிரகடனம் ஒழிப்பு வெளியானது. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்து வாங்குவதற்காக அதன் பிரதியை லிங்கனின் காரியரிசி (Secretary Seward) ஸீவார்ட் எடுத்து வந்தார். லிங்கனின் மேஜை மீது பிரகடனத்தை வைத்தார். லிங்கன் அதை ஒரு பார்வை பார்த்தார். மெதுவாக பேனாவை எடுத்தார். அதை மைக் கூட்டில் (Ink pot) தோய்த்தார் .கையெழுத்து இடவேண்டிய இடத்துக்கு பேனா சென்றது. திடீரென்று கையைப் பின்னுக்கு கொண்டு சென்று ஒரு உதறு உதறிவிட்டு பேனாவைக் கீழே போட்டார். பின்னர் மீண்டும் பேனாவை எடுத்தார். முன்னர் செய்த எல்லாவற்றையும் செய்து பேனாவை உதறிவிட்டார்.
இதையெல்லாம் காரியதரிசி வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது செயலாளரின் முகத்தைப் பார்த்து லிங்கன் செப்பியது இதுதான்:-

“இன்று காலை ஒன்பது மணி முதல் என் கைகள் நடுங்கிக் கொண்டே இருக்கின்றன. வலது கை மரமரத்துப் (paralyzed) போய்விட்டது. என்னுடைய பெயர் ஒரு காலத்தில் வரலாற்றில் இடம்பெறப் போவதாக வைத்துக் கொள்வோம். அது இந்த பிரகடனம் மூலம்தான் இருக்கும். ஏனெனில் என் ஆத்மா (வாழ் நாளின் லட்சியம்) முழுதும் இதில்தான் இருக்கிறது .இந்த மாபெரும் அறிவிப்பில் நான் கையெழுத்து இடுகையில் என் கைகள் நடுங்கினால் , வருங்காலத்தில் இதை பார்ப்போர் நடுக்கமான தருணத்தில் இட்ட கையெழுத்தைப் பார்த்து, அட ஆப்ரஹாம் லிங்கன் மிக்க தயக்கத்தோடுதான் கையெழுத்துப் போட்டார் என்று சொல்லிவிடுவார்கள்”.
இதற்குப் பின்னர் அவர் உறுதியாகக் கை எழுத்திட்டது எல்லாம் வரலாறு ஆகிவிட்டது. கறுப்பர்களை அமெரிக்க வெள்ளையர்கள், மிருகங்களை வேட்டை ஆடுவது போல ஆப்பிரிக்காவில் இருந்தும் மேற்கிந்தியத் தீவுகளிலும் பிடித்து வந்து, தெரு நாய்களை விட கேவலமாக நடத்தினர். இந்தக் கால கட்டத்தில் அமெரிக்க சுதந்திரப் போர் வெடித்தது. அமெரிக்காவே இரண்டு கடசியாகப் பிரிந்து உள்நாட்டு யுத்தம் (Civil War) நடந்தது. அப்போது ஆப்ரஹாம் லிங்கன் ஜனாதிபதியாக இருந்தார். மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டது. இந்தப் பிரகடனமானது அமெரிக்க ஐக்கிய நாட்டில் சேராத கலகம் செய்யும் மாநிலங்களில் (Rebellious States) உள்ள எல்லாக் கறுப்பின மக்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்று அறிவித்தது. இது அமெரிக்கா முழுதும் வாழ்ந்த கறுப்பின அடிமைகளுக்கு விடுதலை தராவிடினும் ஒரு பெரிய புதிய சிந்தனையைத் தூண்டிவிட்டது. பல லட்சக் கணக்கான கறுப்பின மக்கள் ராணுவத்தில் சேர்ந்து முழு அமெரிக்காவை உருவாக்கினர்.
ஓர் தலைவன் என்பவன் எதை எதையெல்லாம் பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்கிறது , சிந்திக்க வேண்டி இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.
Xxxxxx

சுவிஸ் மீனும் ஹிட்லர் மீனும் !
சுவிட்ஸர்லாந்து நாட்டுக்கும் ஹிட்லர் (Hitler) ஆண்ட ஜெர்மனிக்கும் இடையே ஓடிய ஆற்றில் இருவர் மீன் பிடித்தனர். சுவிஸ் (Swiss) நாட்டவர் தனது நாட்டுக் கரையில் மீன்பிடித்தார் . எதிர்க்கரையில் ஜெர்மன் நாட்டு எல்லைக்குள் ஹிட்லரின் நாஜிக் (Nazi) கட்ஸிக்காரர் மீன்பிடித்தார் .
சுவிஸ்காரன் தூண்டிலில் மிகப்பெரியாய் மீன்கள் சிக்கின . எடுத்து, எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டே எதிர்க்கரை நாஜியை ஏளனப் பார்வை பார்த்தார் . அந்த நாஜிக்கு மிக அபூர்வமாகவே சிக்கின. அதுவும் கூட சின்ன மீன்கள்தான்.
அந்த நாஜி வியப்புடன் கேட்டார் ,
“ஏய் தூண்டிலில் , நீ என்னடா வைத்திருக்கிறாய்? உனக்கு மட்டும் இவ்வளவு மீன்கள் சிக்குது? உனக்கு இன்னிக்கு அதிருஷ்ட நாளோ?”
அதற்கு சுவிஸ்காரன் பதில் சொன்னான்,
“ஓ அதுவா? என் பக்கமுள்ள மீன்கள் வாயைத் திறக்க பயப்படுவதில்லை!”
(ஹிட்லர் ஆட்சியில் எவரும் வாயைத் திறந்து எதிர்ப் பேச்சு பேச முடியாது! )

Xxx
வெள்ளைக்காரன் கொடுத்த விடுதலை
வெள்ளைக்காரன் குடியேறிய இடங்களில் எல்லாம் அந்த நாடுகளின் பூர்விகக்குடிகள் மீது செய்த அட்டூழியங்களுக்கு அளவேயில்லை அவர்களை மிருகங்கள் போல பிடித்து வந்து , விலங்கிட்டு வேலை வாங்கினர். பிரிட்டிஷ்காரர்கள் மேற்கிந்தியத் தீவுகளில் இப்படி அட்டூழியம் செய்தனர். மக்கள் சக்தி ஒன்று கூடவே , பெரும்பாலுமுள்ள பூர்வ குடிகளை அடக்கி ஆள முடியாது என்று தெரிந்தது . ரத்தக் களரியைத் தடுப்பதற்காக தாங்களே விடுதலை அறிவித்தனர். அதுவும் கொஞ்சம் கொஞ்ச்ம் ஆக .
தென் ஆப்பிரிக்காவில் இருந்த அடிமைத்தனம் நம் கண்கள் முன்னே நெல்சன் மண்டேலா மூலம் விடுதலை ஆனதைக் கண்டோம் . அது நடக்கும் நாள் வரை பிரிட்டிஷாரும் அதற்கு ‘ஜே’ போட்டு வந்ததை நாம் பத்திரிகைகளில் படித்தோம் .

இதோ மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒரு அரிய காட்சி !
பிரிட்டிஷ் பார்லிமெண்ட் 1836 ஆகஸ்ட் 1-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளில் (West Indies) அடிமைத் தனம் (abolition of slavery) கைவிடப்படும் என்று சட்டம் போட்டது. ஆயினும் கறுப்பர்கள் இன்னும் ஓராண்டுக்கு அடிமை விலங்காக இருக்க வேண்டும் .1837-ல்தான் அவர்கள் சுதந்திரப் பறவைகள் என்றும் அறிவித்தனர். ஆண்டாண்டுக் காலமாக அடிமைத் தனத்தில் உழன்ற கறுப்பின மக்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தனர். 1837 ஜூலை 31-ம் தேதி வந்தது ; நாளை காலை முதல் நாம் விடுதலைப் பறவைகள் என்ற உணர்வு கொப்பளித்தது. ஆக அதைக் கொண்டாடுவதற்காக ஜமைக்காவில் (Jamaica) பல்லாயிரக்கணக்கான கறுப்பர்கள் ஒன்று கூடினர் . எல்லோரும் வெள்ளை உடை தரித்தனர் . இரவு 11 மணிக்கு எல்லோரும் மண்டியிட்டு வானத்தை நோக்கிப் பிரார்த்தனை செய்தனர் ; இரவு 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க துவங்கின.
எல்லோரும் ஒரே குரலில் நாம் விடுதலை ஆகிவிட்டோம் ; நாம் சுதந்திர பறவைகள் என்று ஆனந்தக் கூத்தாடினர் . பாரதியார் பாடிய “ஆடுவோமே ; நாம் பள்ளுப் பாடுவோமே ; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே ; நாம் பள்ளுப் பாடுவோமே”– என்ற பாடலை உண்மையாக்கிய காட்சி இது.

TAGS — ஆப்ரகாம் , லிங்கன், ஆப்ரஹாம் ,சுவிஸ் , நாஜி , கறுப்பர், அடிமை, விடுதலை
–Subham–