
Jaipur City Gate

Post No. 8279
Date uploaded in London – 3 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அயோத்தி நகரில் 4 புதிய வாசல்கள்!!
அயோத்தி நகரம் பற்றி நமக்குத் தெரியாத புதிய தகவலை கம்பன் அளிக்கிறான் .
அங்கு 4 வாசல்கள் இருந்தன. இதிலிருந்து அந்த நகரம் , இப்போதுள்ள மதுரை நகரம் போல சதுர வடிவில் இருந்தது தெரிகிறது ; அங்கு 4 கோபுரங்கள் இருந்தனவாம். அவற்றின் உயரம் எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானதாம் ; இதை மறைமுகமாக செப்புகிறான் ; ஏனெனில் கம்பனுக்கு எவரெஸ்ட் சிகரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
வாமனாவதாரத்தின் போது மூன்றாவது அடி வைக்க இடமில்லாததால், விஷ்ணு தன்னுடைய காலை உயர்த்தி பிரபஞ்சசத்தையே அளந்தார் அல்லவா ? அதை விட உயரமாக இருந்தனவாம் . அது மட்டுமல்ல . இந்தப் பூவுலகை காத்து நிற்கும் திசையானைகள் போல அசையாது நின்றனவாம் அந்த வாசல்கள்.
இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?
அந்த நான்கு வாசல்களும் 4 வேதங்களை போல இருந்தனவாம். அதாவது ஒரு வாசல் ரிக் வேதம், இன்னொரு வாசல் யஜுர் வேதம், மற்றும் ஒரு வாசல் சாம வேதம்; நாலாவது வாசல் அதர்வண வேதம்..
இது என்னடா , பெரிய ‘கப்ஸா’ ஆக இருக்கிறது?
முதலில் சொன்ன யானை, ஓங்கி உலகளந்த உத்தமனின் கால்கள் ஆகியன கற்பனை செய்தால் கண்ணுக்குத் (concrete shapes) தெரியும். வேதங்கள் எழுதாத புஸ்தகங்கள் ஆயிற்றே ; அதுவும் மந்திரம் என்பது ஒலிகளின் தொகுப்புதானே (abstract) ; அதைப் போய் வாசல்களுக்கு ஒப்பிடலாமா ? என்று நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது . அதற்கும் கம்பன் ஒரே பாட்டில் பதில் சொல்லி விடுகிறான்.
வேதங்கள் நாலும் ஒழுக்க நெறியை கற்பிக்கின்றன. அதன் வழி செல்லுவோருக்கு நல்லொழுக்கம் இருப்பதால் வாழக்கையில் நல்ல பாதை (ஆறு) கிடைக்கிறது. அது போல அயோத்தி மா நகருக்குள் நுழைந்து விட்டால் நல்லொழுக்கம் தானாக வருமாம். ஒழுக்கம் நன்றாக இருந்தால் ஆரோக்கியம் இருக்கும். ஆரோக்கியம் இருந்தால் நல்ல சுகமாக 100 ஆண்டு வாழலாம் . இப்படி ஒரு நகரத்தின் வாசல் பற்றிச் சொல்லும்போது கூட 4 வேதங்களின் பெருமையையும் சொல்வதால்தான் தமிழர்கள் அவனை கவிச் சக்ரவர்த்தி என்று அழைக்கின்றனர்.
இதோ, பால காண்டத்தில் நகரப் படலத்தில் வரும் பாடல் –
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால்
ஓல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழங்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே


பொருள்
அந்நகரத்தின் கோபுர வாயில்கள் நான்கும் , நான்கு திசைகளில் நின்ற வெற்றியை உடைய திசை யானைகள் போல நிலையாக நின்றன ; திருமால் முன்பு திரிவிக்கிர மூர்த்தியாகி மேல் உலகத்தை எளிதாக அளந்த திருவடியினும் அக்கோபுர வாசல்கள் உயர்ந்து நின்றன.
அந்த நான்கு வாயில்களும், தன்னுள் புகும் உயிர்களை நல்வழியில் ஒழுகச் செய்வதால் , வளம் பொருந்திய உலகத்து உயிர்கள் யாவும் நீ தியிலிரு ந்து மாறுபடாத ஒழுக்கத்தோடு இருக்குமாறு நல்ல வழிகளைச் சொல்லுகின்ற நான்கு வேதங்களையும் ஒத்திருந்தன .
tags — அயோத்தி, 4 வாசல்கள்