
Post No. 8456
Date uploaded in London – 5 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கோல்ட்ஸ்டக்கர் சொல்லும் அதிசய விஷயங்கள் – அ அ அ அ அ!!!!!!!! (Post No.8456)
கோல்டுஸ்டக்கர் யார் ?
இவர் (Theodor Goldstucker) மிகப்பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்.ஒரு ஜெர்மானிய (Jew) யூதர். அதே ஜெர்மனியில் பிறந்த மற்றோரு சம்ஸ்கிருத அறிஞரான மாக்ஸ் முல்லர் (Max Muller) செய்த தவறுகளை எல்லாம் அம்பலத்தில் கொண்டுவந்தவர். இருவரும் சம காலத்தவர். இருவரும் லண்டனில் வசித்தவர்கள் இன்னும் பல அற்புதங்களைச் சாதித்திருப்பார் கோல்ட்ஸ்டக்கர். ஆயினும் மாக்ஸ்முல்லருக்கு முன்னமே இறந்து விட்டார்.
மாக்ஸ்முல்லர் -1823 – 1900
கோல்ட்ஸ்டக்கர் – 1821- 1872
கோல்ட்ஸ்டக்கர் ஸமஸ்க்ருத மொழியில் டாக்டர் (Ph.D.) பட்டம் வாங்கியவர்.1850ம் ஆண்டு லண்டனுக்கு வந்தார். இருபது ஆண்டுக்கும் மேலாக லண்டன் யூனிவர்சிட்டி காலேஜில் (UCL, LONDON) வேலை பார்த்தார். பேராசிரியர் வில்சன் (Prof.Wilson) என்பவருக்கு சம்ஸ்கிருத அகராதி தயாரிப்பதில் உதவியாக நின்றார் . இருவரும் சேர்ந்து சம்ஸ்கிருத மொழியில் ‘அ ‘ என்னும் எழுத்து வரும் இடம் எல்லாவற்றுக்கும் பொருள் எழுதத் துவங்கினர் 480 பக்கங்கள் எழுதியும் “அ” முடியவில்லை. உப்பு பொம்மை கடல் ஆழத்தை அளக்க முடியுமா ? கடலில் சில அடி செல்வதற்குள் அது கரைந்தல்லவா போகும். எழுத்துக்களில் நான் “அ” என்று பகவத் கீதையில் கண்ணனும் எழுத்துக்களில் முதன்மை பெறுவது“அ” என்று திருவள்ளுவரும் சும்மாவா சொன்னார்கள். “அ” என்னும் எழுத்தே 480 பக்கம் எழுதியும் முடியவில்லையே என்று கருதி அகராதி முயற்சியைக் கைவிட்டனர். சம்ஸ்க்ருதம் அவ்வளவு வளமான மொழி!

உலகம் புகழும் பாணினி விட்ட 10,000 பிழைகள்!
எவரும் பார்க்காத நுணுக்கமான விஷயங்களைப் பார்ப்பவர் கோல்ட் . பாணினியின் காலத்தை கி.மு நாலாம் நூற்றாண்டு என்று சொன்ன அதே மூச்சில் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்) புஸ்தகத்தின் மீது நோட்ஸ் — வார்த்திகா என்னும் குறிப்பு — எழுதிய காத்யாயன வரருசியும் அதேகாலம் என்று சொன்ன மாக்ஸ்முல்லரை இவர் கிழி , கிழி என்று கிழித்துவிட்டார் .
கோல்ட் சொன்னார் :
“பாணினியின் 3993 சூத்திரங்களில் 1500-க்கும் மேலான சூத்திரங்களில் காத்யாயனர் குறிப்புகள்/வார்த்திகம் எழுதியுள்ளார். அவர் குறிப்பிடும் வேறுபாடுகள் 10,000-க்கும் மேல் இருக்கின்றன
இப்போது நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்போம். பாணினி போன்ற ஒருவர் 10,000 குறைகள், பிழைகள், புரியாத விஷயங்களுடன் ஒரு புஸ்தகம் எழுதியிருப்பாரானால் உலகம் ஏன் பாணினியைப் புகழ்கிறது ? இப்போது நாம் ஒரு புஸ்தகம் 4000 பக்கங்களுக்கு எழுதி அதில் 10,000 தவறுகள் இருந்தால் உலகம் நம்மை ஏசுமா , பேசுமா?
உண்மை என்னவென்றால் காத்யாயனர் மிகவும் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்ததால் இந்த வேறுபாடுகள் தோன்றின
பாணினிக்கு முன்னர் பல இலக்கண வித்தகர்கள் இருந்தனர். இலக்கணம் என்பதை ஒரு சில அறிஞர்கள் மட்டும் படிக்கவில்லை. எல்லோரும் குருகுலத்தில் படித்தனர்.

இதற்கு நான் 4 காரணங்களைச் சொல்லுவேன் :-
1.பாணினி காலத்தில் வழக்கில் இருந்த விதிகள் காத்யாயனர் காலத்தில் இல்லை. அந்த விதி தவறு என்று நினைக்கும் அளவுக்கு கால வேறுபாடு.
2. பாணியின் காலத்தில் இருந்த சொற்களுக்கு புதிய அர்த்தங்கள் தோன்றி விட்டன.
3. பாணியின் பல சொற்கள் வழக்கொழிந்து போய் ‘பத்தாம் பசலி’ சொற்கள் ஆயின .
4.பாணினி காலத்தில் இல்லாத புதிய இலக்கியங்கள் எழுந்தன.
இதே போல காத்யாயனர் காலத்துக்கும் பாணினி காலத்துக்கும் இடையே பல 100 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன ; ஆகையால் மாக்ஸ் முல்லர் சொல்லுவது போல பாணினியும், காத்யாயனரும் ஒரே காலத்தில் வாழவில்லை. மாக்ஸ்முல்லர் வாதத்தில் பசை இல்லை என்பதுமட்டுமல்ல. அவரே தான் இருவரும் ஒரே காலம் என்று சொன்னதை மறந்து, முன்னுக்குப் பின் முரணாகவும் எழுதி இருக்கிறார்.”
இவ்வாறு கோல்ட் எழுதி இருக்கிறார். முல்லருக்கு முன்னர் கோல்ட் இறந்தது நம் துரதிருஷ்டமே .

என் கருத்து :–
இதற்கு தமிழிலும் நிறைய உதாரணங்கள் உள . தொல்காப்பியருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த பவணந்தி முனிவர் புதிய விதிகளை இயற்றினார்.
நான் இப்போது ஒரு கடைக்குப் போய் “யாம் செப்புவது என்னவெனில் ……..” என்று பேசத் துவங்கினால் ஒரு மாதிரி எண்னைப் பார்ப்பார்கள். சங்க காலத்தில் “நான், நாங்கள்” (We) கிடையாது.
கழகம் என்றால் சங்க காலத்தில், திருவள்ளுவர் காலத்தில், (Casino)‘சூதாடும் இடம்’. இப்போது அதை சங்கம், கட்சி என்னும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம்.
தொல்காப்பியர் தரும் நீண்ட உவம உருபுப் பட்டிலில் காணப்படும் உருபுகள் சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் கூட இல்லை. தொல்காப்பியர் , அவருக்கும் முந்தைய ஆசிரியர்கள் சொன்னதை — அகஸ்தியர் சொன்னதை — அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பிச் சொன்னார் அவ்வளவுதான்.
பாணினிக்கு எழுத்தே தெரியாது என்று மாக்ஸ்முல்லர் எழுதியதை கோட்ஸ்டக்கர் எப்படி தகர்த்து எறிந்தார் என்று முந்தைய கட்டுரையில் எழுதிவிட்டேன். அசோகரின் பிராமி எழுத்து ஆப்கானித்தான் முதல் இலங்கையின் தென் கோடி கண்டி வரை இருப்பதிலிருந்து, பல்லாயிரம் சதுர மைல்களுக்கு எழுத்தறிவு இருந்ததை நாமே இன்று அறிய முடிகிறது.
வாழ்க கோல்ட்ஸ்டக்கர் திரு நாமம்.
கோல்ட்ஸ்டக்கர் ,அதிசய விஷயங்கள் , பாணினி, 10000 பிழைகள்