
Post No. 8684
Date uploaded in London – – –15 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.14-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் காயத்ரி மந்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
காயத்ரி மந்திர மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா? – 1
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று நம் முன் இருக்கும் கேள்வி : காயத்ரி மந்திரத்தின் மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம்.
காயத்ரி மந்திரத்தின் மஹிமை சொல்லுக்கு அப்பாற்பட்டது.
மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படுவது காயத்ரி. வேத மாதா என்று அழைக்கப்படுவது காயத்ரி.
குடிமக்களின் அதிபதியாக எப்படி ஒரு ராஜா கருதப்படுகிறாரோ அதேபோல மந்திரங்களின் உச்சத் தலைமையிடத்தைப் பெறுவது மந்த்ர ராஜம் காயத்ரி.
காயத்ரி மந்திரம் என்ன தரும்?
‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’
தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.
ஓம் பூர்புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத் |
இது தான் காயத்ரி மந்திரம்.
இதன் அர்த்தத்தைப் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இப்படி நூற்றுக்கும் மேலான மொழி பெயர்ப்புகள் உண்டு.
இப்போது தமிழில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அளித்துள்ளதைப் பார்ப்போம்.

ஓம்
பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய
ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள
வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்
பர்கோ – தெய்வீகப் பேரொளி மீது
தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்
தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்
நஹ – நம்
தியோ – அறிவுக்கு
ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்
அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.
மஹாகவி பாரதியார் இதை ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம், அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என அற்புதமாக பாஞ்சாலி சபதத்தில் முதல் சருக்கமான துரியோதனன் சூழ்ச்சிச் சருக்க முடிவில் தமிழில் தருகிறார்.
காயத்ரி பரிவார் என்ற அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய காயத்ரி பற்றி ஏராளமான சுவையான சம்ப்வங்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளார். சுமார் 3000 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். 1911ஆம் ஆண்டு பிறந்த அவர் 1990ஆம் ஆண்டு காயத்ரி ஜயந்தி தினத்தன்று தாமாகவே தன் உடலை உகுத்தார். அவரது 108 புத்தகங்கள் – ஒவ்வொன்றும் A -4 அளவிலான 500 பக்கங்கள் கொண்டது காயத்ரி பற்றிய அபூர்வமான ஆற்றல்களைத் தருகிறது. ஹிந்தியில் உள்ள இந்தப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அன்பர்கள் இதை இணையதளத்திலிருந்து டவுன்லோட் – தரவிறக்கம் – செய்து கொள்ளலாம்.

காயத்ரி மந்திரத்தின் மஹிமையை விளக்கும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. வரலாற்று ஏட்டிலிருந்து ஒரு முக்கிய சம்பவத்தை எடுத்து இங்கு பார்ப்போம்.
நாதிர்ஷாவிற்கு டெல்லியின் மீது ஒரு கண். பேராசை கொண்ட அவன் பெரும்படையை ரகசியமாகத் திரட்டினான். எதற்காக இப்படிப்பட்ட பெரும்படை திரட்டப்பட்டது என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. திட்டமிட்ட நாளில் திடீர் தாக்குதலை அவன் டெல்லி மீது நடத்தினான். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் படை திடீர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதால் ஒரு சில மணி நேரங்களிலேயே டெல்லி வீழ்ந்து விடும் என்பது அவனது கணிப்பு. ஆனால் என்ன ஆச்சரியம். அப்போது டெல்லியை ஆண்ட முகம்மது ஷா நாதிர்ஷாவின் படையை எதிர் கொண்டதோடு அந்தப் படையை ஓட ஓட விரட்டினான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் படை வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஏமாற்றம் அடைந்த நாதிர் ஷா ஈரானுக்குத் திரும்பி விட்டான். எப்படி இப்படி முகம்மது ஷா தனது திடீர் படையெடுப்பைச் சமாளிக்க முடிந்தது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; புரியாத புதிராக இருந்தது.
முகம்மது ஷா நாதிர்ஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதில் நீங்கள் படை எடுத்து வருவீர்கள் என்பதை ஆறு மாதத்திற்கு முன்னாலேயே எங்கள் நாட்டில் உள்ள முனிவரான குரு சரணதாஸர் எனக்குக் கடிதம் மூலம் விளக்கி எழுதியதோடு தகுந்த முன்னேற்பாடுடன் இருக்குமாறு அறிவுரை கூறினார். அவரது கூற்றுப்படி நானும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து வெற்றி பெற்றேன். என்று எழுதியதோடு சரணதாஸர் தனக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து அனுப்பினான்.
நாதிர்ஷா பிரமித்தான். வியந்தான். ஆறு மாதத்திற்கு முன்னர் தனக்கே அந்த எண்ணம் எழவில்லையே என நினைத்தான் அவன். நேரடியாக சரணதாஸரை தரிசித்து வணங்கினான். அவரது ஆசியையும் பெற்றான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் மாவட்டத்தில் டெஹ்ரா என்ற கிராமத்தில் எளிய அந்தணர் குலத்தில் பிறந்தவர் சரணதாஸர். தாயார் குஞ்சு பாயும், தந்தை முரளீதரரும் அவரை தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தினர். காயத்ரியை உச்சரிக்க ஆரம்பித்தார் சரணதாஸர். ஒரு நாள் இரவு மஹரிஷி சுகர் அவரது கனவில் தோன்றி காயத்ரி உபாசனையை விளக்கினார். நர்மதை நதிக்கரையில் வெகு காலம் காயத்ரியை ஜெபித்த சரணதாஸர் அதில் சித்தி பெற்றார்; நேரடியாக முஸாபிர் நகரில் உள்ள சுக்ரதலம் என்ற கிராமத்திற்கு வந்தார். அங்கே பகவதி ரூபமாக காயத்ரி மாதா அவருக்கு தரிசனம் தந்தாள்.
சரணதாஸர் மனித குல நன்மைக்காக முகமது ஷாவை எச்சரிக்க, அதனால் மகிழ்ந்த முகம்மது ஷா பல கிராமங்களை அவருக்கு மானியமாக அளிக்க முன் வந்தான். ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்து பல கல்விச் சாலைகளை நிறுவுமாறு அறிவுரை கூறினார்.
இன்றும் கூட சுக்ரதலம் கிராமத்தில் வருடந்தோறும் அவர் நினைவாக காயத்ரி மஹோற்சவம் நடை பெற்று வருகிறது.
இன்னும் ஒரு சம்பவம். மஹா முனிவர் வித்யாரண்யர் வாழ்வில் நடந்தது இது. அவர் காயத்ரி தேவியை தரிசிக்க காயத்ரி மந்திரத்தை 24 மஹாபுரச்சரணம் உச்சரித்தார்.
ஒரு புரச்சரணம் என்பது ஒரு மந்திரத்தில் எத்தனை அக்ஷரங்கள் இருக்கிறதோ அத்தனை லக்ஷம் தடவை அதை ஜெபிப்பதாகும். காயத்ரி மந்திரத்தில் 24 அக்ஷரங்கள் இருப்பதால் அதை 24 லக்ஷம் முறை ஜெபிப்பது ஒரு புரச்சரணம் ஆகும். வித்யாரண்யர் 24 புரச்சரனம் உச்சரித்தார்.
தேவியின் தரிசனம் கிடைக்கவில்லை. அவர் சந்யாசியானார்.
திடீரென ஒரு நாள் காயத்ரி தேவி அவர் முன் பிரசன்னமானாள்.
ஹே, தேவியே, 24 மகாபுரச்சரணம் செய்து உன் தரிசனத்திற்காக ஏங்கிய போது தரிசனம் தராத நீ இன்று இப்படி தரிசனம் தந்தது எதனால் என்று வியப்புத் தாளாமல் அவர் கேட்டார்.
அதற்கு தேவி, “ முதலாவதாக 24 மஹாபுரச்சரணம் செய்து நீ 24 முன் ஜென்மங்களில் செய்த பாவம் அனைத்தையும் தீர்த்துக் கொண்டாய். ஆகவே என்னை தரிசிக்கும் தகுதியை நீ பெற்று விட்டாய். என்றாலும் என்னை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் உனக்கு இருந்தது. அனைத்து ஆசைகளையும் துறந்தவனே என்னை தரிசிக்க முடியும். அதையும் துறந்து நீ சந்யாசி ஆனாய். உனக்கு இதோ தரிசனம் தந்து விட்டேன்” என்று தேவி கூறி அருளினாள். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று தேவி கேட்க “உன் தரிசனமே கிடைத்து விட்டது! எனக்கு வேறு வரம் என்ன வேண்டும்?” என்றார் அவர். ரிக், யஜூர், சாம வேதங்களுக்கான உரையை அவர் எழுதினார். இன்னும் பல நூல்களையும் எழுதி அருளினார். அவரை அணுகிய ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருக்கு ஆசியை அளித்து பெரும் ஹிந்து சாம்ராஜ்யம் அமைய வழி கோலினார். விஜய நகர அரசை ஸ்தாபித்தார்.
please go to Facebook.com/gnanamayam
tags– காயத்ரி மந்திரம், மஹிமை
TO BE CONTINUED………………………………….