

Post No. 10,026
Date uploaded in London – 27 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஐரோப்பா கண்டத்தில் பெயர் தெரிந்த புலவர்களில் மிகவும் பழங்காலத்தவர் ஹோமரும் (Homer) ஹெசியாட்(Hesiod) என்னும் புலவரும் ஆவார்கள்; யார் முதலாமவர் என்பதில் கிரேக்கர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின்னர் இருவரும் சமகாலத்தவர் என்றும் அவர்களிடையே கவிதைப் போட்டி நடந்ததென்றும் கதைகள் உலவின. இவரது வாழ்க்கை பற்றியும்,வாழ்ந்த காலம் பற்றியும், எழுதிய நூல்கள் பற்றியும் உள்ள தகவல்கள் அனைத்தும் கேள்விக்குறியுடன் தொக்கி நிற்கின்றன.
XXX
எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயங்கள்:
இவர் கிரேக்க புராணத்திலுள்ள கடவுளரின் கதைகளை தொகுத்து கவிதை வடிவில் தந்தார்.
ஹோமர் காலத்தில் அல்லது அவரை அடுத்து வாழ்ந்திருக்கக் கூடும்.
வெறும் கதைகளாக இல்லாமல் அறநெறி போதனைகளுடன் கூடிய கவிதைகளை எழுதினார்.
இவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்களில் Theogony தேவ ஜனி (தேவர்களின் ஜனனம்) என்னும் நூல் முக்கியமானதாகும். இது தவிர ‘வேலையும் நாட்களும்’ WORKS AND DAYS என்ற நூலும் இவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இவர் பற்றி உலவும் கதைகள்
கிரேக்க நாகரீகம் உச்சகட்டத்தை எட்டுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது கிரேக்க நாகரீக காலத்திலேயே இவரைப் பழங்காலப் புலவராக கருதினர். அது மட்டுமல்ல அவரைப்போல எழுத வேண்டும் என்று ஆசை கொண்டனர் .
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா குறிப்பிடும் உசனஸ் என்ற புலவர் ரிக் வேத காலத்திலேயே புராண புருஷராகக் கருதப்பட்டார் . அவருடைய கவிதைகள் நமக்குக் கிடைக்காவிடினும் கிருஷ்ணர் தன்னைப் புலவர்களில் நான் உஷனஸ் கவி என்று சொல்லுவது போன்றது இது.
வேலையும் நாட்களும் என்ற அவரது நூலில் இருந்து கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டு இவரைப் பற்றி ஓரளவு அறிய முடிகிறது
ஹெசியாட்டின் தந்தை ஒரு சிறு பண்ணை வைத்திருந்தார். அது வறுமையில் வாடிய குடும்பம். தந்தை இறந்தவுடன் அவருக்கும் சகோதரர் பெர்ஸிஸ் PERSES என்பவருக்கும் இடையே பாகப் பிரிவினை தகராறு ஏற்பட்டது; ஹெசியாட்டின் பங்கையும் சகோதரர் பறித்துக் கொண்டார். இதனால் வெறுப்புற்ற ஹெசியாட் குடும்பத்திலிருந்து வெளியேறினார்.
வேலையும் நாட்களும் என்ற கவிதை நீண்ட, அழகான கவிதை . இதில் தான் செய்த பண்ணை வேலைகளை புலவர் எழுதியுள்ளார். விவசாய விஷயங்கள் அடங்கிய முதல் புஸ்தகம் இது. இவருடைய கவிதை மூலம் அக்கால கிரேக்கர்களின் வாழ்க்கை குறித்தும், மத நம்பிக்கைகள் குறித்தும் அறிய முடிகிறது ;எப்போது எப்படி பயிர் செய்ய வேண்டும் என்ற விவசாய தகவல்களுக்கு இடையே கடின உழைப்பின் பலாபலன்கள் குறித்த சிறப்புகளையும் போதிக்கிறார். அவ்வகையில் இது ஒரு ஒப்பற்ற நூல்.கடவுளர்க்கு கிரேக்க மக்கள் கொடுத்த மரியாதையையும் அறிய முடிகிறது. சகோதரர் பெர்ஸிஸ் மீதான வன்மத்தையும் கவிதையில் காணலாம்.
நாட்டைப் பிடுங்கிய துரியோதனனையும் , அவனுடன் சண்டை போட்ட பஞ்ச் பாண்டவரையும் நாம் நினைவு கூறலாம்.
தேவ கனி (தேவ ஜனி) என்ற நூலில் தேவர்களின் ஜனனம், அவருடைய வரலாறு, ஒரு கடவுளருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள தொடர்ப்பு ஆகியன காணக் கிடக்கின்றன .
ஹோமர் எழுதியதை இதிகாசம் என்றால் இவர் எழுதியதை புராணம் என்று சொல்லலாம்.
வாழ்ந்த காலம் – கி.மு .650-க்கும் 800க்கும் இடையே இருக்கலாம்.
எழுதிய நூல்கள்
தியோகநி THEOGONY (தேவ ஜனி )
வேலையும் நாட்களும் WORKS AND DAYS
இன்னும் சில நூல்களை இவர் எழுதியதாகச் சொல்லுவார்கள் ஆயினும் அவை உறுதி செய்யப்படவில்லை




–subham–
tags – கிரேக்க புலவர், ஹெசியாட், Hesiod,