WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,422
Date uploaded in London – – 8 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தரான என்.ஜி.சந்தோர்கர் (நானா) ஒரு முறை பாபா
மசூதியில் இருக்கையில் அவர் கால்களை அமுக்கியவாறே ஸ்லோகம் ஒன்றை
முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சந்தோர்கர்
அவர் சங்கராசார்யரின் கீதை பாஷ்யத்தை நன்கு பயின்றவர். சம்ஸ்கிருத இலக்கணத்தைத்
தெரிந்து கொண்டு அதில் நல்ல புலமை பெற்றவர்.
பாபா அவரிடம் கேட்டார்: “நானா! என்ன முனகுகிறாய்?”
நானா: ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம்
பாபா: என்ன ஸ்லோகம்?
நானா: பகவத்கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம்
பாபா: தெளிவாகக் கேட்கும்படி உரக்கச் சொல்லு
நானா பகவத்கீதையில் நான்காம் அத்தியாயத்திலிருந்து 34ஆம் ஸ்லோகத்தை
உரக்கக் கூறினார்.
“தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்னேன ஸேவயா |
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சி||”
பாபா; நானா, இதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா?
நானா: புரிகிறது
பாபா; அப்படியானால் அதன் அர்த்தத்தைச் சொல்லு.
“சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, குருவைக் கேள்வி கேட்டு, அவருக்குச் சேவை புரிந்து
ஞானம் என்பதைக் கற்றுக் கொள்.பிறகு உண்மை அல்லது சத்வஸ்துவைப் பற்றித் தத்துவம்
அறிந்த ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள்” என்று நானா இவ்வாறு ஸ்லோகத்தின்
அர்த்தத்தைக் கூறினார்.
பாபா: நானா! பொதுவான அர்த்தத்தை நான் கேட்கவில்லை. இலக்கணவிதிகளின் படி எச்சம்,
வேற்றுமை,காலம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வார்த்தையாக விளக்கி அர்த்தத்தைக் கூறு,
பாபாவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணம் என்ன தெரியும் என்ற வியப்புடன் நானா அப்படியே
விரிவாக விளக்கினார்.
பாபா:ப்ரணிபாதம் என்றால் என்ன?
நானா:நமஸ்காரம் செய்வது!
பாபா: பாதம் என்றால் என்ன?
நானா:அதே அர்த்தம் தான்!
பாபா; பாதத்திற்கும் ப்ரணிபாதத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்றால் வியாஸர்
அனாவசியமாக தேவையற்று (‘ப்ரணி’ என்று) இரண்டு எழுத்துக்களைச் சேர்த்திருப்பாரா?
நானா: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை!
பாபா:சரி,ப்ரஸ்ன என்றால் என்ன?
நானா:கேள்வி கேட்பது
பாபா: பரிப்ரஸ்ன என்றால் என்ன?
நானா: அதே அர்த்தம் தான்!
பாபா: இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தான் தருகின்றன என்றால்
வியாஸருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது நீளமான வார்த்தையைப் போட?
நானா: எனக்கு என்னமோ இதற்கு மேல் என்ன அர்த்தம் இருக்கக்கூடும் என்று புரியவில்லை!
பாபா: சரி சேவா என்றால் என்ன?
நானா:சேவா என்றால் சேவை தான் இதோ கால் பிடிப்பதைப் போல!
பாபா:இதை விட வேறு ஒன்றும் இல்லையா?
நானா: இதற்கு மேல் இதில் என்ன அர்த்தம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை!
அந்த ஒரே ஸ்லோகத்தை மட்டுமே குறித்து பாபா தொடர்ந்து கேள்விகளைக் கேட்கலானார் –
ஞானமே ஒருவனது இயற்கை நிலை. அப்படிப்பட்ட இயற்கை நிலையான ஞானத்துடன்
இருக்கும் ஜீவனான அர்ஜுனனுக்கு ஞானம் காட்டப்படும் என்று இரண்டாம் அடியில்
ஏன் கிருஷ்ணர் சொல்ல வேண்டும்? என்று கேட்ட பாபா பின்னர் ஞானம் என்ற
வார்த்தைக்கு முன்னால் ஒரு அவக்ரஹத்தைச் (அதாவது ஒரு “அ” வைச்) சேர்க்கச்
சொன்னார்
சங்கராசார்யர் பாஷ்யத்தில் இது இல்லையே என்றார் நானா பாபாவோ இப்போது பொருள்
நன்றாகப் புரியும் பார் என்று விளக்கலானார்.அதிசயித்துப் போன சந்தோர்கர் ஒன்றும்
தெரியாது என்று நினைத்த பாபாவின் விளக்கதைக் கேட்க ஆரம்பித்தார்.
அருகிலிருந்தோர் அனைவரும் பாபா அருகில் குழுமி விட்டனர்.
**
to be continued…………………………
tags- ஷீர்டி சாயிபாபா! – 2