காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம் (Post No.10,536)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,536
Date uploaded in London – – 7 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம் : டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் அருமையான நூல்!

ச.நாகராஜன்

சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா பார்வை ஆராய்ச்சி நிறுவனத்தில் கௌரவ பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் திரு சி.ராமகிருஷ்ணன் வழங்கும் நூல் : காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம்!

32 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய நூலை சென்னை வாச்சா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முதலில் விஸ்வாமித்ர மஹரிஷியின் பெருமையுடன் நூலைத் தொடங்குகிறார் நூலாசிரியர்.

காயத்ரி மஹா மந்திரத்தை உலகிற்கு- அதாவது விஸ்வத்திற்கு – அருளியிருப்பதால் அவர் பெயரே விஸ்வாமித்ரராக ஆகி விட்டது.

காயத்ரியைக் கண்டவர் விஸ்வாமித்ரரே என்று தைத்ரீய உபநிடதம் 4வது பிரஸ்னம் கூறுவதைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர் ‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி’ – தன்னைச் சொல்பவரைக் காப்பாற்றுவது காயத்ரி மந்திரம் என்ற விளக்கத்தைத் தருகிறார்.
காலையில் ஸ்ரீ காயத்ரியாகவும் நடுப்பகலில் ஸ்ரீ ஸாவித்ரியாகவும் மாலையில் ஸ்ரீ ஸரஸ்வதியாகவும் விளங்கும் தேவியின் தியான சுலோகங்கள் தமிழ் அர்த்தத்துடன் தரப்பட்டுள்ளன.

மொத்தம் 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மந்திரம், மந்திர தேவதை ஸவிதா, வ்யாஹ்ருதிகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் எளிய தமிழில் இனிதே விளக்கப்பட்டுள்ளன.
பூ;, புவ:, ஸுவ: ஆகிய மூன்று வ்யாஹ்ருதிகளுக்கு முன் ஜபிக்கப்படும் ஓம் என்னும் பிரணவம் குறித்து, வேத மேற்கோள்களுடன் விளக்கம் தரப்படுகிறது.
ஓம் என்ற சொல்லுக்கு வேதங்களின் ஜீவன் என்று பொருள். உயர்ந்த பிரம்மமே ஓம்.

இந்த மந்திரச் சொல்லின் அலைகள் ஆகாயத்தில் எப்போதும் இருப்பதை விஞ்ஞான விளக்கத்துடன் தருகிறார் நூலாசிரியர்.
ஓம் தன்னை அநுஸந்தானம் செய்பவரை பர ப்ரும்ம ஸ்வரூபமாகவே ஆக்கி விடும்.

எடுத்துக் காட்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ரமண மஹரிஷி, காஞ்சி மஹா பெரியவாள்!
அ, உ, ம என்ற ஓங்காரத்தில் அ என்பது உலக சிருஷ்டி உ காரம் உலகின் ஸ்திதி மகாரத்தால் உலகை ஒடுக்கும் பிரளயம் ஏற்படுகிறது போன்ற விளக்கங்கள் பல வேத ரகசியங்களைத் தருகின்றன.

காயத்ரியின் ஆவாஹண மந்திரம் ( ஆயாது வரதா தேவி), பின்னர் 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மஹா மந்திரம் ஆகியவை அர்த்தத்துடன் விளக்கப்படுகிறது.
நஹ என்ற காயத்ரி மந்திரச் சொல் கூட்டுப் பிரார்த்தனையைக் குறிப்பிடுகிறது.

காயத்ரியை எப்படி ஜபிக்க வேண்டும்? காலையில் நின்று கொண்டு ஜபித்தல் வேண்டும். நடுப்பகலில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ ஜபித்தல் வேண்டும். மாலையில் நின்று கொண்டு ஜபித்தல் வேண்டும்.

இதைத் தொடர்ந்து விவேகானந்தர் வேத கால முனிவரைத் தெய்வீகக் காட்சியாகக் கண்ட அனுபவமும் காஞ்சி மஹா பெரியவாளின் அருளுரையும் தரப்படுகிறது.

‘காயத்ரி மந்திரமாகிய இந்தத் தீப்பொறியை ஒரு நாளும் நம் பரம்பரையிலிருந்து அணைய விடக் கூடாது’ என்பது பரமாசார்யாளின் அறிவுரை; அன்புரை; அறவுரை.
அழகான அட்டைப் படத்தில் மனதைக் கவரும் காயத்ரி தேவியின் படங்களைக் கண்டு மகிழலாம்.

நேர்த்தியான தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை ஒரு முறை படித்தால் காயத்ரி ஜபிப்பவர்கள் அர்த்தம் புரிந்து ஜபிப்பபவர்கள் ஆவர்.

இதுவரை இந்த மந்திரத்தை ஜபிக்காதவர்கள் இனிமேல் ஜபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொள்வர்.
நூலாசிரியருக்கு நமது பாராட்டுகள்.
வெளியிட்ட வாச்சா பதிப்பகம், நல்ல ஒரு பணியைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நூலிற்கு விலை இல்லை என்பது ஒரு சிறப்பு அம்சம்.
ஆனால் மனமுவந்து நன்கொடையாக 20 ரூபாயை தாள் மற்றும் அச்சுச் செலவிற்காக வழங்கலாம்!

நூல் கிடைக்குமிடம் : Vacha Publication
B/2, Arihant Apartments, R.A.Road, Purasaiwalkamm Chennai – 600084
Email : brahmintoday@gmail.com ph 044 26411815 & 044 26432027

முதல் பதிப்பு : ஜனவரி 2017, இரண்டாம் பதிப்பு செப்டம்பர் 2019
நூல் பிரதிகள் இருக்கிறதா என்பதை மெய்ல்/போன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

tags-  காயத்ரி மந்திரம்


Leave a comment

3 Comments

  1. Anburaj Anburaj's avatar

    Anburaj Anburaj

     /  January 7, 2022

    உரூஏறத் திரு ஏறும் என்பது பழமொழி. இந்தக்கள் அனைவருக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினம் இரு வேளை மந்திர ஜெபம் செய்ய பழக்க வேண்டும்.அளவற்ற மங்களம் அனைவருக்கும் உண்டாகும்.

  2. Anburaj Anburaj's avatar

    Anburaj Anburaj

     /  January 7, 2022

    பத்மாசனத்தில் அல்லது சுகாசனத்தில் மந்திரங்கள் ஜெபிப்பதுதான் நல்லது. நின்று கொண்டு ஜெபிக்கும் போது . . . .மனம் ஒன்றும் போது ..கீழே விழுந்து விடலாம். இது என் சொந்த அனுபவம்.

  3. santhanam nagarajan's avatar

    santhanam nagarajan

     /  January 9, 2022

    thanks

Leave a comment