ஞான மொழிகள்-97 (Post No.11,115)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,115

Date uploaded in London – 18 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சென்னையில் ஒரு கிளையில் நான் காசாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு நாள் வாடிக்கையாளர் ஒருவர் வந்து இரண்டாயிரம் ரூபாய்க்கான காசோலையை என் மூக்கருகே நீட்டினார். என்ன செய்வது, அவருக்கு கை நீளம். நான் அதை வாங்கி கணினியில் எல்லா விபரங்களையும் தட்டச்சு செய்து கையெழுத்தையும் சரிபார்த்துவிட்டு “எப்படி வேணும்” என்று கேட்டேன்.

“பணமாவே குடுத்துடுங்க..” என்றார்.

இந்த மாதிரி பதில்களுக்கு ஏற்கெனவே என்னுடலில் எதிர்ப்பு சக்தி அபரிதமாக இருந்ததால், நான் அசரவில்லை. “இல்ல… எந்த ரூபா நோட்டு எவ்வளவு வேணும்.?.”

அவர் உடனே “ஒரு நிமிஷம்.. என் வொய்ஃபை கேட்டு சொல்றேன்..” என்றபடி கைபேசியில் பேச ஆரம்பித்தார்.

அதற்குள் இன்னொரு வாடிக்கையாளர் அவசரமாக ஒரு ‘வித்ட்ராயல் ஸ்லிப்’ பை கண்ணாடிக் கூண்டுக்குள் நுழைத்தார். “ஒரு நிமிஷம் இருங்க.. அவரை முடிச்சுட்டு வரேன்..” என்றேன்

“ஆஸ்பத்திரிக்கு போகணும் சார்.. கீழே ஆம்புலன்ஸ் வெயிட்டிங்ல இருக்கு..” என்றார். வழக்கமாக ‘ஆட்டோ வெயிட் பண்ணுது’ ‘கால்டாக்ஸி காத்துண்டிருக்கு’ என்று வாடிக்கையாளர்கள் சொல்வது தான் வாடிக்கை. இந்த வசனம் எனக்குப் புதிதாக இருந்தது.

“என்ன சொல்றீங்க.. பேஷன்ட்டை கூட்டிட்டு போற வண்டி உங்களுக்காக பேஷன்ட்டா வெயிட் பண்ணுதா.. நம்பற மாதிரி இல்லியே.. “

“அதுல நோயாளி யாருமில்ல சார்.. நான் தான் அதோட டிரைவர்.. “ என்றாரே பார்க்கலாம்.

அதற்குள் முதல் வாடிக்கையாளர் தொலைபேசி உரையாடலை முடித்து விட்டு “ரெண்டாயிரம் ரூபா நோட்டுகளாவே குடுத்துடுங்க சார்..” என்றார்.

“நீங்க செக் போட்டதே 2000-த்துக்கு… ஒரேயொரு நோட்டுதான் தரமுடியும்.. அதென்ன ‘நோட்டுகளாவே’-ன்னு பன்மையில சொல்றீங்க..” என்று தன்மையாகக் கேட்டு விட்டு இரண்டாயிரம் ரூபாய்த் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தனுப்பினேன்.

பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வித்ட்ராயல் ஸ்லிப்பின் பின்புறம் அவரது கைபேசி எண்ணை எழுதச் சொல்லி விட்டு, கணிப்பொறியில் எல்லாச் சடங்குகளும் செய்து, அவருக்கான தொகையைக் கொடுத்தேன்.

மீண்டும் அந்த இரண்டாயிரம் ரூபாய்க்காரர் திரும்பி வந்து, “சார் எதுக்கும் நாலு ஐநுாறா குடுத்துடுங்க.. இந்த நோட்டு திடீர்னு செல்லாம போயிடும்கறாங்க..” என்றார். நான் சற்றும் உணர்ச்சிவசப்படாமல் அவர் கேட்டபடி மாற்றிக் கொடுத்தேன்.

பிறகு வேறொரு வாடிக்கையாளர் பணம் கட்ட வந்தார். அவர் கொடுத்ததை எல்லாம் பரிசோதித்து, எண்ணி முடித்து அவரது கணக்கில் வரவு வைத்து ரசீதை கொடுத்தனுப்பியதும் மறுபடியும் ‘இரண்டாயிரம்’ கஸ்டமர் கவுன்டரில் பிரசன்னமானார். “இப்ப என்ன..?” என்றேன்.

“சார்.. ஒரு ஐநுாறு ரூபாய்க்கு மட்டும் சில்லரை வாங்கிட்டு வரச்சொன்னாங்க என் வொய்ஃப்..”

“உங்களுக்கு எத்தனை மனைவி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அவ்வினா, வங்கியாளர் – வாடிக்கையாளர் உறவில் விரிசல் ஏற்படுத்துமென்று நினைத்து கேட்காமல் விட்டு விட்டேன். ஐந்து நுாறு ரூபாய்த் தாள்களை அவரிடம் நீட்டினேன். திருப்தியுடன் வாங்கிச் சென்றார்.

பிறகு எங்கள் கரன்ஸி செஸ்ட்டிலிருந்து ஆயுதப் பாதுகாப்போடு வந்த பணக்கட்டுகளை எண்ணி சரிபார்த்து இரும்புப் பெட்டியில் வைத்து பூட்டி, கணினியில் அதற்கான வேலைகளை முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால்.. மீண்டும் அவரே தான்.. ! கையில் நுாறு ரூபாய் நான் கண்களை மூடி பூமாதேவியை மனதிற்குள் தியானம் செய்ய ஆரம்பித்தேன். “சார்.. கோவிச்சுக்காதீங்க.. பஸ்ஸிலே போகணும்.. இந்த நோட்டை குடுத்தா கண்டக்டர் கன்னாபின்னான்னு திட்டுவாரு.. தயவுசெஞ்சு ஒரு அம்பது.. ஒரு இருவது.. ரெண்டு பத்து.. ரெண்டு அஞ்சு… சில்லரையா குடுங்களேன்..”

‘CUSTOMER IS ALWAYS RIGHT’ என்று சொன்ன மகானுபாவன் மட்டும் என் கையில் கிடைத்தால் அவனை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், ஐந்து ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் பணத்தாள்கள் புழக்கத்தில் இல்லாததால், அவர் இனி திரும்பி வர மாட்டார் என்று நம்பிக்கை பிறந்தது. நேயர் விருப்பப்படியே நுாறு ரூபாய்க்கு சில்லரை மாற்றிக் கொடுத்து விட்டு கேஷ் கவுன்டரை இழுத்து மூடி மதிய உணவுக்குச் சென்று விட்டேன்.

சாப்பிட்டு முடித்து பயந்தபடியே இருக்கைக்குத் திரும்பினேன். நல்லவேளையாக “அவர்” மறுபடியும் வரவில்லை. பிற்பகலில் ஒருசில பட்டுவாடாக்கள் மட்டுமே இருந்தன. நான்கு மணி சுமாருக்கு என்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் கூட்டி, கணினி காண்பித்த கையிருப்புத் தொகையோடு சரிபார்க்கத் தொடங்கினேன்.

சரியாக மூன்று அறுபதுக்கு, கையில் ரூபாய் நோட்டுகளுடன் பணம் கட்ட ஒருவர் கவுன்டரில் வந்து நின்றார். நிமிர்ந்து பார்த்தேன்.

‘விடாது கருப்பு’ மாதிரி ‘என்னை விடாத கஸ்டமர்’.. இரண்டாயிரம் ரூபாய் கிராக்கி.

“மன்னிச்சுக்கோங்க சார்… வீட்டுக்கு போகலாம்னு இவ்வளவு நேரமா பஸ் ஸ்டாப்ல நின்னேன்.. 27D வரவேயில்லை.. அதுக்குள்ள என் வொய்ஃப் போன் பண்ணி வேற ஒருத்தர்கிட்டேயிருந்து 2000 ரூபா கிடைச்சிடுத்து.. அதனால, அக்கவுன்ட்லருந்து எடுத்த தொகையை திருப்பி கட்டிடச் சொன்னாங்க.. கையில இருந்தா செலவாயிடுமாம்.. அதான்.. செலான் எழுதி கொண்டாந்துட்டேன்…” என்றார்.

எனக்கு ஈரேழு உலகங்களும் கண்முன்னே தெரிய ஆரம்பித்தன. மேகத்தில் மிதப்பது போலவும் இருந்தது.

காலையில் வந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தட்டுத் தடுமாறி போன் பண்ணி ஈனஸ்வரத்தில், “ஒரு எமர்ஜென்ஸி.. சீக்கிரம் வண்டியை எடுத்துட்டு வரமுடியுமா.. என்னை ஐசியூ-லே அட்மிட் பண்ணனும்..” என்றேன்.

படித்ததில் பிடித்தது.

xxxx

Tags- ஞான மொழிகள்-97

Leave a comment

Leave a comment