தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி! (Post No.11,912)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,912

Date uploaded in London –   18 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!

ச.நாகராஜன்

ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிருங்கேரி மடத்தின் பெருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. அதன் பீடாதிபதிகளாகத் திகழ்ந்த மகான்களின் பெருமை சொல்லுக்கும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டது.

ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் 34-வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகளின் மஹிமைகள் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை.

இவரைப் பற்றி சிருங்கேரி மடத்தைச் சார்ந்த பக்தர்கள் மூன்று பாகங்களாக ஶ்ரீ குருகிருபா விலாஸம் என்ற தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.

பல ஆச்சரியகரமான சம்பவங்களை அற்புதமாக பல அறிஞர்கள் தருவதை இவற்றில் காணலாம்.

அவற்றில் ஒன்று இது.

பாரத நாட்டின் முதல் ராஷ்டிரபதியாகப் பதவி ஏற்றவர் பாபு ராஜேந்திர பிரசாத்.

நன்கு கற்றவர். நமது பண்பாட்டை மதிப்பவர். தேச விடுதலைக்காக உழைத்தவர். அனைத்தையும் அதற்கென தியாகம் செய்தவர்.

1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிருங்கேரிக்கு அவர் தரிசனத்திற்காக வந்தார்.

அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவர் வருகைக்கு முதல் நாள் அன்று  மடத்தில் இருந்த வெள்ளிப் பல்லக்கு வெளியே எடுக்கப்பட்டது. அது சுத்தம் செய்யப்பட்டு தயாராக்கப்பட்டது.

ஆம், அதில் தான் பாரத ராஷ்டிரபதியை அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல மடத்தின் நிர்வாக அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.

அப்போது ஶ்ரீ ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக சந்திரமௌலி தொட்டி என்ற கட்டிடத்தில் தங்கி இருந்தார்.

அங்கு இரு கூடங்களை இணைக்கும் பாதை வழியே அன்று அவர் நடந்து வந்தார்.

சுவரில் இருந்த சாளரத்தின் வழியே அவர் வெளியே பார்த்த போது வெள்ளிப்பல்லக்கு வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுவதை அவர் பார்த்தார்.

அந்த சாளரத்தின் வழியாகவே அவரது அந்தரங்க காரியதரிசியான ஶ்ரீ

S.G.நரஸிம்மய்யாவுடன் பேசத் தொடங்கினார்.

எதற்காக வெள்ளிப் பல்லக்கு சுத்தம் செய்யப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிந்து கொண்ட அவர் ராஜேந்திர பிரசாத்தைப் பற்றிக் கேட்கலானார்.

அவரது பெருமைகள் விரிவாகச் சொல்லப்பட்டன.

இதைக் கேட்ட ஆசார்யர் உடனே, “அப்படிப்பட்ட உயர்ந்த மனிதர் அவர் எனில் அவரைத் தங்கப் பல்லக்கிலேயே அழைத்து வரலாமே” என்றார்.

ஆசார்யாளின் ஆணைக்கு இணங்க, உடனே தங்கப் பல்லக்கு வெளியில் எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.

சிருங்கேரியின் பிரதான நுழைவு வாயிலில் ஒரு அலங்காரப் பந்தல்!

 ராஷ்டிரபதி காரில் வந்து இறங்கினார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை பிரமாதமாக அளிக்கப்பட்டது. உள்ளூர் பிரமுகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பின்னர் தங்கப் பல்லக்கு அவரிடம் காண்பிக்கப்பட்டது.

“இதில் நீங்கள் ஏறி அமர வேண்டும். ஊர்வலமாகச் செல்லலாம்” என்று அவரிடம் சொல்லப்பட்ட போது அவர் சற்றுத் தயங்கினார்.

“அதில் யார் அமர்ந்து செல்வது வழக்கம்?” என்று கேட்டார் அவர்.

சிருங்கேரி மடத்தின் மடாதிபதிகள்  மட்டுமே அதில் ஏறி அமர்ந்து செல்வது வழக்கம் என்று பதில் வந்தது.

“ஆஹா! விஷயம் அப்படி இருக்கும் போது என்னைப் போய் அதில் ஏறி அமரச் சொல்கிறீர்களே” என்ற அவர் அதில் ஏற மறுத்து விட்டார்.

“இல்லை, இல்லை, ஜகத்குரு அவர்களே இதைச் சொல்லி இருக்கிறார்” என்று சொல்லப்பட்ட போதும் பாபு ராஜேந்திரபிரசாத் திட்டவட்டமாக அதை மறுத்து விட்டார்.

தன் உள்ளங்கைகளை பல்லக்கின் மேல் வைத்துத் தொட்டுக் கும்பிட்டார்.

“பல்லக்கு முன்னே போகட்டும். நாம் பின்னால் போவோம்” என்று மென்மையாகச் சொன்ன அவர் தனது காருக்குச் சென்று அதில் ஏறிக் கொண்டார்.

அவர் தங்குமிடமாக சந்திரமௌலி தொட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு வந்த அவர்,  “இங்கு யார் தங்குவது வழக்கம்?” என்று கேட்டார்.

சாதுர்மாஸ்ய காலமாக இருப்பதால் ஶ்ரீ சிருங்கேரி பீடாதிபதி மஹா ஸ்வாமிகள் அங்கு வந்து தங்கி இருப்பதையும் அவர் அதே கட்டிடத்தில் உள்ள  பின் அறையில் இருப்பதாகவும் சொல்லப்பட்ட போது அவர் திடுக்கிட்டார்.

“என்ன இது, இப்படிப்பட்ட புனிதமான கட்டிடத்தில் நான் எப்படி சாப்பிடுவது? தூங்குவது?’ என்று அவர் கேட்டார்.

அவர் அங்கு தங்குவதே ஜகத்குருவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று அவர் சமாதானம் செய்யப்பட்ட பின்னரேயே அவர் அங்கு தங்கினார்.

இரு முறை இரு ஜகத்குருக்களும் தரிசனம் தர, அம்பாளுக்கு ஒரு விசேஷ அர்ச்சனை செய்யப்பட அந்த நாள் வேகமாகக் கழிந்தது.

எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்த ராஷ்டிரபதி, “மஹா புருஷர்கள் இருக்கும் இந்த இடத்திற்கு நான் முன்பே வந்திருக்க வேண்டும்” என்று கூறி பிரியா விடை பெற்றார்.

இந்த சம்பவத்திற்கு ஒரு மாத காலமே கழிந்த நிலையில்  1954ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி அதிகாலையில் ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் 34-வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் ஜல சமாதி அடைந்தார்.

சமகாலத்தில் வாழ்ந்து வழிகாட்டி தரிசனம் தந்து, அருளுரைகள் தந்த மகான்களுள் முக்கியமானவர் ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள்!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

***

ஆதாரம், நன்றி ஶ்ரீ குரு கிருபா விலாஸம் மூன்றாம் பாகம்.

கிடைக்குமிடம் ஶ்ரீ சந்திரசேகர பாரதீ ப்ரஹ்ம வித்யா டிரஸ்ட் 5, பிருந்தாவன் தெரு,  மைலாப்பூர், சென்னை – 4

Leave a comment

Leave a comment