
Post No. 12,330
Date uploaded in London – 26 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் ஆடி மாத அம்மன் கோவில்கள் வரிசையில் 22-7-23 அன்று பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை
பெண்களுக்கு சுக பிரசவம்
கர்ப்பரட்சாம்பிகையின் கருணை
(பகுதி 1)
ச.நாகராஜன்
விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு
அமுத நீழல் அகலாததோர் செல்வமாம்
கமுதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
திரு ஞானசம்பந்தர் திருவடி போற்றி.
பாடலின் பொருள் : கங்கையைத் தாங்கிய சடைமுடி உடைய சிவபிரானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே, உங்களது பணியானது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்து அருள்கின்ற இறைவன் அமுதம் போன்று இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவது தலம்
அம்பிகையை வணங்க அனைவரும் விரும்பி ஏற்கும் புண்யத் தல யாத்திரையில் முக்கியமானது பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதலாவதான திருக்கருகாவூர் தலமாகும்.
இது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திற்குத் தென்மேற்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் முல்லைவனேஸ்வரர் (கர்ப்பபுரீஸ்வரர் என்ற பெய்ரும் உண்டு)
இறைவி கர்ப்ப ரக்ஷாம்பிகை (கர்ப்பரட்சகி, கருகாத்த நாயகி, கரும்பனையாளம்மை என்ற பெயர்களும் உண்டு)
தலவிருட்சம் முல்லைக் கொடி
தீர்த்தம் பாற்குளம். இந்தக் குளம் காமதேனுவால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தலம் பஞ்ச ஆரண்ய தலங்கள் எனப்படும் திருக்கருகாவூர், அவளிவநல்லூர், ஹரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் ஆகிய ஐந்து தலங்களில் முதலாவது தலமாக அமைகிறது. இந்த ஐந்து தலங்களும் காவிரிக்குத் தென்கரையில் அமைந்துள்ளன.
பஞ்ச ஆரண்ய தல யாத்திரை மேற்கொண்டு ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் ஏராளமானோர் தரிசித்து வந்திருக்கின்றனர். ஒரு நாள் யாத்திரையை இந்தத் தலத்திலிருந்து அனைவரும் உஷத் காலத்தில் ஆரம்பிப்பது மரபாக இருக்கிறது. அருகருகே உள்ள இந்தத் தலங்களை காலையில் ஆரம்பித்து இரவுக்குள் கால்நடையாகவே சென்று தரிசித்து வந்தனர். இப்போது வசதிக்குத் தக அவரவர்கள் வாகனத்தில் சென்று யாத்திரையை திருப்திகரமாக முடிக்கின்றனர்.
யாத்திரையை கீழ்க்கண்ட வரிசையில் அந்தந்தக் கால பூஜையில் கலந்து கொண்டு முடிப்பது மரபாகும்.
திருக்கருகாவூர் – முல்லை வனம் – உஷத் கால பூஜை
அவளிவநல்லூர் – பாதிரி வனம் – காலை பூஜை
ஹரித்துவார மங்கலம் – வன்னி வனம் – உச்சிகால பூஜை
ஆலங்குடி – பூளை வனம் – சாயங்கால பூஜை
திருக்கொள்ளம்புதூர் – வில்வ வனம் – அர்த்தஜாம பூஜை.
புராண வரலாறு
மிக புராதன தலமாகிய இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. குறிப்பிடத் தகுந்த ஒன்று இத்தலத்தின் மஹிமையை விளக்கும் ஒன்று.
நித்துருவர் என்ற ஒரு முனிவர் வேதிகை என்ற தன் மனைவியுடன் இத்தலத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த சமயம் ஊர்த்வபாதர் என்ற ஒரு முனிவர் இவரது ஆசிரமத்திற்கு வந்தார். உள்ளே வேதிகை கர்ப்பமாயிருந்த காரணத்தினால் தளர்ச்சியால் வருந்திக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை கேட்டு ஊர்த்வபாதர் குரல் எழுப்பினார். அயர்ச்சியினால் வேதிகை வர சற்று தாமதமானது. அதனால் கோபமுற்ற அந்த முனிவர் அவரை நோய் பிடிக்குமாறு சாபம் இட அதனால் வேதிகையின் கரு கலைந்து ஊனமுற்றது.
உடனே வேதிகை இந்தத் தலத்து அம்பிகையையும் இறைவனையும் வேண்ட, முல்லைவனேஸ்வரரின் கட்டளைப்படி காமதேனு தன் பாலைச் சுரந்து வேதிகைக்கு அளித்தது. அதனால் அவளது கரு காப்பாற்றப்பட்டது. இதனால் மனம் மகிழ்ந்த நித்துருவர் இந்தத் தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த வித ஒரு தீங்கும் வராமல் பிரசவம் எளிதில் நடைபெறுமாறும் இந்தத் தலத்தின் அம்பிகையை வேண்டும் பெண்டிர் அனைவருக்கும் சகல வித நன்மைகளும் உண்டாக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அதிலிருந்து இன்று வரை இந்த அம்பிகையை வேண்டும் கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடை நீங்கி நல்ல கணவன் கிடைப்பதும் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது.
– தொடரும்