கோவிலில் மூலிகைத் தைலம்; அலை மோதும் பக்தர் கூட்டம்-50 (Post.12,893)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,893

Date uploaded in London – –   7 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 50

கோவில் எண்கள் –84,85,86,87

84.தகழி தர்ம சாஸ்தா கோவிலில் மூலிகை அதிசயம்

கடவுளே கனவில் சொன்ன மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கும் தைலம் மூட்டு வலிகளைப் போக்கும் அதிசயம் கேரளத்தில் நடக்கிறது. இந்த மூலிகை எண்ணெயை வழங்கும் ஐயப்பன் /கோவில் ஆலப்புழை வட்டாரத்தில் தகழி என்ற ஊரில் இருக்கிறது .ஆலப்புழா நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும், சம்பக்குளம் நகரில்இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது தகழி திருத்தலம்..

இங்கு வழங்கப்படும் ஆயுர்வேத எண்ணெய் , மூட்டு வலியோடு தோல் நோய்களையும் குணப்படுத்தும் .

இதுபற்றிய சுவையான கதையைக் கேட்போம்.

பரசுராமர் ஸ்தாபித்த கோவில் காலப்போக்கில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு புதை குழியில் சிக்கியது; பக்தர்களும் அதை மறந்தனர்; ஒரு காலத்தில் வில்வமங்கலத்து சுவாமிகள் அந்தப் பக்கம் வருகையில் தெய்வீக சக்தி வரும் இடத்தை நோக்கிச் சென்று பொதகுழி ஐயப்பனைக் கண்டார். அதை வழிபாட்டுக்கு நிறுவினார்.

சம்பகசேரி மன்னர் அந்தச் சிலை நிறுவப்பட்ட இடத்தில் ஒரு கோவிலைக் கட்டினார் .அது சிதிலம் அடைந்தது . திருவிதாங்கூர் மன்னர் இந்தப் பகுதியைக் கைப்பற்றியதால், சம்பகசேரி மன்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார்.

அதை வணங்கி வந்த ஆசான் என்ற  ஒரு பக்தருக்கு, கையில் காசு இருந்தால் மீண்டும் கோவில் கட்டலாமே என்று எண்ணி எண்ணி வருத்தப்பட்டார். அப்போது இறைவனே கனவில் தோன்றி அருகிலுள்ள ஓதர்மலையில் உள்ள மூலிகைகளைக் காட்டி அதைக்கொண்டு தைலம் தயாரிக்க கட்டளையிட்டார். அதை பக்தர்களுக்கு கொடுத்தால், தீராத நோய்கள் எல்லாம் தீரும்; பக்தர்களே முன்வந்து கோவிலை எழுப்புவர் என்று ஐயப்பன் சொன்னார். கனவில் கண்டது நினைவில் நிஜாமாகியது .இப்போதும் கூட மூலிகைகளைப் பறித்து முதல் நாள் இரவில் கர்பக் கிரகத்தில் வைத்து விடுகின்றனர் ; அதிலிருந்து மூலிகை எண்ணெய் எடுக்கின்றனர்.

இக்கோவிலில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் கிழக்கு நோக்கிய நிலையில், வலது காலை மடித்தும், இடதுகாலைத் தரையில் ஊன்றிய நிலையிலும் அமர்ந்திருக்கிறார். அவரது வலது கையில் சிறிய எண்ணெய்க் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார். கும்பம் (மாசி) மாதத்தில் எட்டு நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. 5, 6 ஆம் நாள் திருவிழாக்களில் பிரபல கதகளி கலைஞர்கள் ஆடுவர் .ஏழாவது நாள் பள்ளிவேட்டை நடக்கும்.

மண்டல பூஜை நாட்களான 41 நாட்களும் இத் திருக்கோவிலில் ‘களமெழுத்துப் பாட்டு’ நடைபெறுகிறது. தனுர் (மார்கழி) மாதம் முதல் நாளில் தொடங்கி 11 நாட்களுக்குக் கலபாபிஷேகம் எனும் விழா நடக்கும்.

xxxxx

85.திருவிழா ஸ்ரீ மஹாதேவர் கோவில் , கனிச்சு குளங்கரா

திருவிழா மகாதேவர் கோயில் (Thiruvizha Sree Mahadeva Temple) என்பது, , ஆலப்புழை மாவட்டம் திருவிழா என்ற ஊரில் இருக்கிறது . சேர்தலையிலிருந்து  7 கி.மீ. . இது நீலகண்டப் பெருமானான சிவபெருமான் வாழும் தலமாகப் போற்றப்படுவதால்  இறைவனை, காலகண்டன் என்று மலையாளத்தில் அழைக்கின்றார்கள் .

எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் கோவில் உள்ளது .

மூலிகைச் சாறு பிரசாதம்

இப்பகுதியைச் சுற்றி கிடைக்கும் அபூர்வ மூலிகைச்சாற்றை, பசும்பாலில் கலந்து பந்தீரடி பூசையில் இறைவனுக்கு வைத்து வழிபடுகிறார்கள். இது நோயுற்றவர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. நாள்தோறும் நண்பகலில் பால் பாயசத்தை இறைவனுக்குப் படைக்கிறார்கள். அப்போது அருகேயுள்ள கோயிலில் சிவனின் மகளாகக் கருதப்படும் கனிச்சு குளங்கரா தேவியை இங்கு எழுந்தருளச் செய்து, அவருக்கும் பால் பாயசம் படைத்து, பூசை செய்து, அதனை நோயுற்றவர்களுக்கும் தருவார்கள்.

கை விஷம் 

மற்றவர்கள் எதிரிகளுக்கு வைக்கும் விஷத்தைக் கை விஷம்  என்பார்கள். ஒரு பெண், ஆண்களை வசப்படுத்த வெற்றிலை கொடுத்தால் கூட போதும் என்று மலையாளிகள் அஞ்சுவார்கள் . அத்தகைய கைவிஷங்களை அகற்ற இந்தக் கோவிலின் மூலிகைச் சாறு  பிரசாதமாக கொடுக்கப்படுகிறது இந்த தெய்வீக பிரசாதம் பெற, மாநிலம் முழுதுமுள்ள பக்தர்கள் இங்கு படை எடுக்கிறார்கள் .

மார்ச் மாதத்தில், ஆறாட்டு விழா நடக்கிறது. தனுர்  மாதத்தில் (மார்கழி-நவம்பர்-டிசம்பர்) பத்து நாட்கள் திருவிழா நடைபெறும் .யானைகள் பவனி, கேரள நடனங்கள் , கச்சேரிகள் எல்லா நாட்களிலும் உண்டு.

xxxxx

86.கண்டியூர் மஹாதேவ கோவில்

ஹரிப்பாட் சுப்ரமண்ய சுவாமி கோவிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் தட்டம்பலம் என்னுமிடத்தில் அழகான சிவன் கோவில் இருக்கிறது . கருவறைக்கு வெளியே சுட்டம்பலம் இருக்கிறது . கருவறைக்கு வெளியேயுள்ள சுவர்களில் மரச் சிற்பங்கள் ஓவியங்களைக் காணலாம்.

கண்டியூருக்கு அருகே ,அச்சன்கோவில் ஆற்றங்கரையில் உள்ள மாவேலிக்கரை என்னும் இடத்தில் கோவில் அமைந்துள்ளது. கண்டியூர் ஒரு காலத்தில் ஓடநாடு ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது.

கோவிலின் வரலாற்றில் 3 கதைகள் சொல்லப்படுகின்றன

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 பெரிய சிவன் கோவில்களில் ஒன்று என்றும்  மார்கண்டேய முனிவரின் தந்தையான மிருகண்டு முனிவர், கங்கையில் நீராடும் போது கிராதமூர்த்தி வடிவத்தில் சிவபெருமானின் சிலையைப் பெற்று  கண்டியூரில் கோயிலை நிறுவினார் என்றும் . சிவபெருமான் பிரம்மாவின் தலையை வெட்டிய இடத்தில் கோயில் அமைத்தனர் என்றும் சொல்லுவார்கள் .

திருக் கண்டியூர் என்ற பெயரில்  தமிழ்நாட்டிலும் இதே கதையுடன் கோவில் இருக்கிறது.

XXXXXX

87. ஆலப்புழை தேவி கோவில்கள்

செங்கன்னூர் பகவதி கோவிலை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

மேலும் சில தேவி/ பகவதி, காத்தியாயனி கோவில்ல்கள் ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கின்றன

சேர்தலை காத்தியாயனி , ஆரூர் காத்தியாயனி , புது வரநாடு தேவி , வடக்கு அரியாட் கள்ளங்கல் புவனேஸ்வரி, கனிச்சிகுளங்கரா தேவி கோவில்கள் முக்கியமானவை  அங்கு நடைபெறும் திருவிழாக்கள் ஏராளமான பக்தர்களை கவர்கின்றன.

கனிச்சிகுளங்கரா  தேவி கோவிலில் 21 நாட்கள் விழா நடைபெறும் முக்கிய அம்சம் இரவில் நடக்கும் கருடன் தூக்கம் ஆகும்

ஆலப்புழையி லிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள வளவநாடு புத்தன் காவு பத்ரகாளி கோவிலில் 12 நாள் உற்சவம் நடக்கும் ;பத்தாம் நாள் விழாவில் 10 அல்லது 15 அடி உயரமுள்ள தலைக்கு கவசத்துடன் சூட்டு ப் பாதயணி  நடனம் நடைபெறும் .

ஆலப்புழை கிதங்கம்பரம்பு புவனேஸ்வரி கோவிலில் ராஜ கோபுரம் பல வன்னச் சிற்பங்களுடன் எல்லோரையும் வரவேற்கும்

எர்ணாகுளத்திலிருந்து 21 கி.மீ தொலைவிலுள்ள எற மல்லூர் காஞ்சிரத்துங்கள் பகவதி கோவிலில்  நட்டு தாளப் போலி ஊர்வலம் நடக்கும் தட்டி வரவு விழாவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் மரத்தடிகளை கோவிலுக்கு கொண்டு வருவார்கள்

இவ்வாறு ஒவ்வொரு தேவி கோவிலிலும் ஏதாவது ஒரு சிறப்பு அம் சம் இடம்பெறுகிறது .

–சுபம்—

Tags- கனிச்சிகுளங்கரா, சேர்தலை,  காத்தியாயனி, கண்டியூர் மஹாதேவ கோவில், கை விஷம்  , மூலிகைச் சாறு ,பிரசாதம் , திருவிழா ஸ்ரீ மஹாதேவர், தகழி தர்ம சாஸ்தா, மூலிகை அதிசயம்

Leave a comment

Leave a comment