
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,898
Date uploaded in London – – – 9 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 1
ச.நாகராஜன்
நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றிற்கும் காரணம் மனிதனின் கர்மமே என்று ஹிந்து மதம் திடமாகத் தெரிவிக்கிறது.
நம் மனதில் தோன்றும் ஏராளமான சந்தேகங்களுக்கு ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், சாஸ்திரங்கள் விளக்கமாக விடையைத் தருகின்றன.
சந்தேகங்கள் ஆயிரம்; விடைகளும் அப்படியே.
கர்மங்களின் ஸ்வரூபம் புலன்களுக்கு எட்டாத நுட்பம்.
இதைப் பற்றி யமன், கௌதமி, காலபுருஷன், வேடன், ஒரு பாம்பு ஆகியவற்றிற்கு இடையே நடந்த ஒரு உரையாடலை மஹாபாரதம் அநுசாஸன பர்வம் முதல் அத்தியாயத்தில் தெரிவிக்கிறது.
கௌதமி என்னும் ஒரு கிழவி இருந்தாள். காம, க்ரோதம் அற்ற நல்லவள் அவள்.
அவளது மகனை ஒரு பாம்பு கடிக்கவே அவன் இறந்து விட்டான்.
அர்ஜுனகன் என்னும் ஒரு வேடன் அந்தப் பாம்பைச் சுருக்கிட்டு கௌதமியிடம் கொண்டு வந்தான்.
“ஓ! பாக்யவதியே! உன் மகனைக் கொன்ற நீசமான பாம்பு இது தான். இதைத் தீயில் போடலாமா? துண்டு துண்டாக வெட்டலாமா?சீக்கிரம் சொல். குழந்தையைக் கொன்ற இதை நீண்ட காலம் உயிரோடு விட்டு வைக்கக் கூடாது” என்றான் வேடன்.
உடனே, கௌதமி, “வேடனே! இதை விட்டு விடு. புண்ணியத்தால் லேசாக இருக்கும் மனிதர்கள் நீரில் ஓடங்கள் மிதப்பது போல உலகில் மிதக்கின்றனர். பாவத்தினால் மிகுந்த கனமாய் இருப்பவர்கள் நீரில் விழுந்த ஆயுதம் போல அமிழ்ந்து போகின்றனர்.” என்றாள்.
வேடனோ, சாந்தியை விரும்புபவர்கள் தனக்கு நேர்ந்த காலத்தை விட்டுவிடுவார்கள். காரியத்தைக் கவனிப்பவர்கள், சமயம் வந்த போது அதைச் செய்து விடுவார்கள். ஆகவே இந்தப் பாம்பை நான் கொல்லப் போகிறேன்” என்றான்.
“வேடனே! இதனால் தர்மம் கெடும். இந்த சர்ப்பத்திற்கு அதிகாரி நான் இல்லை.கோபத்தை விடு. இந்த அரவத்தை விட்டு விடு” என்றாள் கௌதமி.
உடனே வேடன், “இதைக் கொல்வதினால் உண்டாகும் புண்ணியம் எனக்கு அழிவில்லாத லாபம் ஆகும். இந்த அயோக்கிய பாம்பை கொல்வதனால் எனகு புண்ணியம் உடனே கிடைக்கும்” என்றான்.
உரையாடல் தொடர்ந்தது.

கௌதமி கூறியதற்கெல்லாம் வேடன் மறுமொழி உரைத்தான். பாம்போ சுருக்கில் மாட்டி உயிரை இழந்து கொண்டிருந்தது.
அது ஒருவாறாக மெல்லப் பேசத் தொடங்கியது: “ அர்ஜுனகா! இதில் என் குற்றம் ஏதும் இல்லை. யமன் கட்டளை இட்டான். நான் கடித்தேன். பாவம் ஏதேனும் உண்டெங்கில் அது யமனுடையது” என்றது. உரையாடல் நீண்டு கொண்டே போனது.
அப்போது யமன் அங்கே வந்தான்.
“பாம்பே! நான் காலத்தினால் ஏவப்பட்டு உன்னை ஏவினேன். இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நானும் காரணமில்லை. நீயும் காரணமில்லை. காற்றானது பல இடங்களிலிருந்து மேகங்களை இழுத்துக் கொண்டு வரும் போது அவை எப்படி காற்றுக்கு உட்பட்டிருக்கின்றனவோ அது போலவே நான் காலத்தை அநுசரித்தே பிராணிகளிடம் செல்கிறேன்” என்றான் யமன்.
காலத்தின் வலிமையை யமன் வெகுவாக எடுத்துரைத்தான்.
“சூரியன், சந்திரன், விஷ்ணு, நீர், காற்று, இந்திரன், அக்னி, ஆகாயம், பூமி, மித்ரன் என்னும் தேவதை, மேகம், வசுக்கள், அதிதி தேவதை, நதிகள், கடல்கள், சக்தி, அசக்தி ஆகிய இவை எல்லாம் அடிக்கடி காலத்தினால் ஆக்கவும் அழிக்கவும் படுகின்றன. பாம்பே! இதை நீ அறிந்திருந்தும் என்னைக் குற்றவாளியாக நீ நினைப்பது எப்படி?” என்றான் யமன்.
இதைத் தொடர்ந்து நீண்ட வாக்குவாதம் ஏற்பட்டது. வேடன் பாம்பைச் சொல்ல பாம்பு யமனைச் சொல்ல யமன் காலத்தைச் சொல்ல காலபுருஷனே அங்கு நேரில் வந்து தோன்றினான்.
“ஓ! வேடனே! இந்தக் குழந்தை இறந்ததற்கு நானும் இந்த யமனும் இந்தப் பாம்பும் முதல் காரணங்கள் அல்லோம். நாங்கள் குற்றவாளிகளே அல்ல. இந்தக் குழந்தை செய்த கர்மமே எங்களை அவ்விதம் செய்யத் தூண்டிற்று. இவன் இறந்ததற்குக் காரணம் இவனது கர்மமே தான். நாங்கள் அனைவரும் கர்மத்திற்கு உட்பட்டவர்கள். இவ்வுலகில் கர்மம் ஒரு பாகஸ்தன். ஒவ்வொருவருக்கும் தன் தன் வினை சம்பந்தமே இலக்கணம். கர்மங்கள் எங்களை ஏவுவதற்குத் தகுந்தபடி தான் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏவுகிறோம். செய்பவன் மண்ணுருண்டையின் விரும்பியவற்றைச் செய்து கொள்வது போல மனிதன் கர்மங்களைச் செய்து அவற்றின் பலனைப் பெறுகிறான். நிழலும் வெயிலும் எப்போதும் இடைவிடாமல் சேர்ந்திருப்பது போல காரியமும் அதைச் செய்யும் கர்த்தாவும் முன்வினைகளால் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஆதலால் நான், யமன், பாம்பு, நீ , இந்த கௌதமி இன்னும் யாரும் இந்தக் குழந்தையின் மரணத்திற்குக் காரணமல்லோம்.” என்று இப்படி விளக்கமாக உரைத்தான் கால புருஷன்.
உடனே கௌதமி உலகமே கர்மத்தைக் காரணமாக உடையது என்பதை அறிந்து கொண்டாள்.
“இந்தப் பிள்ளை மரணமடையத்தக்க கர்மத்தை நானும் செய்திருக்கிறேன். பாம்பை விட்டு விடு, அர்ஜுனகா” என்றாள் கௌதமி.
வேடன் அர்ஜுனகன் பாம்பை உயிரோடு விட்டான். யமனும், காலபுருஷனும் அங்கிருந்து அகன்றனர்.
“மூவுலகங்களும் கர்மங்களைச் சார்ந்தது என்று அறிவாயாக” என்று இந்தக் கதையைக் கூறி தர்மருக்கு பீஷ்மர் ஆறுதல் அளித்தார்.
கர்ம ரகசியம் பிரம்மாண்டமானது. மிகவும் நுட்பமானது. எளிதில் அறிய முடியாதது. ரகசியமானது. இதை நமது நூல்கள் ஆங்காங்கே விளக்கமாகக் கூறுகின்றன.
அதை அறிந்து கொள்வதே ஒரு பாக்கியம் தான்! அதற்கும் ஒரு நல்ல கர்மத்தைச் செய்திருக்க வேண்டுமல்லவா!*** தொடரும்
Varna Rekha
/ January 10, 2024Well written…is there an English version to this article to share pls?
santhanam nagarajan
/ January 10, 2024thanks
i will present it in English. pl bear with me
nagarajan