நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்-52 (Post No.12,899)

Neendoor  Subrahmanya Swami on elephant.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,899

Date uploaded in London – –   9 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 52

கோவில் எண்கள் –93, 94, 95,96, 97

93.நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோட்டயம் மாவட்டத்தில் பசுமையான வயல்வெளி சூழ்ந்த இடம் நீண்டூர் ஆகும். ஏத்தமானூரிலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கிறது. இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் புகழ் பெற்றது; பழமையானது

தாரகாசுரனுடன் போரிட்ட தேவ சேனாபதியாக முருகன் இங்கு காட்சி தருகிறார். தாரகாசுரனை வதம்செய்யும் பாணியில் முருகனின் வேல் கீழ் நோக்கி இருக்கும். ஏனைய சுப்ரமண்ய சுவாமி கோவில்களில் வேல் நிமிர்ந்த நிலையில் இருக்கிறது .

மே மாதத்தில் வருடாந்திர விழா நடக்கும். இது தவிர தைப்பூச நாளும் கொண்டாடப்படும் .தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, நாகர் சந்நிதிகளும் கோவிலில் இருக்கின்றன.ஒட்டனரங்கமாலா சமர்ப்பணம் என்ற மிகப் பழமையான சிறப்பு வழிபாடு இந்தக் கோவிலின் தனித்துவத்தைக் காட்டும். வேறு எங்கும் இந்த சடங்கு இல்லை .

கேரள பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் நல்ல மர வேலைகளைக் காணலாம்.

XXXX

94. குட்டியணி குளங்கரை பகவதி கோவில்

Neendoor Kuttiyanikulangara Devi temple, also known as Neendoor Kavu,

நீண்டூர் காவு என்று அழைக்கப்படும் இந்த பகவதி கோவில் கைப்புழா என்னும் இடத்தில் அமைந்துள்ளது

வருடாந்திர விழாவை நீண்டூர் பூரம் என்று அழைப்பார்கள். ஏத்தமானூரிலிருந்து 7 கிமீ.

இங்கு பிப்ரவரி மாதத்தில் 3 நாள் உற்சவம் நடக்கும் . நவம்பர்- டிசம்பரில் 41 நாள் களமெழுத்துப்பாட்டு  விழா நடக்கும் .

3 நாள் உற்சவத்தில் கதகளி, கோல்களி நடக்கும். மூன்றாவது நாளில்தான் கும்பம் துள்ளல் என்ற கரகாட்டம் நடக்கும். மேளதாள இசைக்கு ஏற்ப தலையில் குடங்களை வைத்துக்கொண்டு ஆடுவார்கள். அத் தோடு கருடன் தூக்கம், பூரம் துள்ளல் ஆகியனவும் நட க்கிறது .

கோவில் விழாவில் நடக்கும் ஓட்டந்துள்ளல் நிகழ்ச்சியும் ஏனைய இடங்களிலிருந்து மாறுபட்டது. அதற்கு நீண்டூர் பாணி  ஓட்டந்துள்ளல் என்ற பெயரும் உண்டு.

கடைசி நாளில் யானை ஊர்வலத்துடன் வேல களி நடத்துவார்கள் ; சிப்பாய் வேஷத்தில் வருவோர் பழங்கால யுத்த முறைகளை செய்து காட்டுவார்கள் .

xxxx

95.ஆதித்யபுரம் சூரியன் கோவில் ரவிமங்கலம்

கோட்டயம் மாவட்டத்தில் காடுதுருத்தி அருகில் இரவிமங்கலம் என்ற ஊரில் இருக்கிறது. ரவி என்றால் சூரியன் .

கேரளத்தில் சூரியனுக்கு உள்ள ஒரே கோவில் இது.

ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன.

 ‘ஸ்ரீகோவில்’ எனப்படும் கருவறையானது வட்ட வடிவில் உள்ளது. சூரிய பகவானின் சிலை,  தியான நிலையில் மேற்கு நோக்கி இருக்கும் . பின் வலது கையில் சக்ராயுதத்தை ஏந்தியும், பின் இடது கையில் சங்கு ஏந்தியும், முன் இரு கைகளானது தவ முத்திரையோடு உள்ளன.சாஸ்தா, யக்ஷி ஆகிய துணை தெய்வங்கள் உள்ளனர்.

விழாக்களில் காவடியாட்டமும் உண்டு.  மே மாதம் , டிசம்பர் மாதங்களில் விழாக்கள் நடக்கின்றன.

xxxx

96.கடுதுருத்தி மஹாதேவர் கோவில்

கோட்டயம் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் கடு துருத்தி சிவன் கோவில் இருக்கிறது .வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், ஏற்றுமானூர் மகாதேவர் கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் .

கரன்  என்ற அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்தபோது அவனிடம் சிவபெருமான் 3 லிங்கங்களைக் கொடுத்தார் . அவன் ஒரு லிங்கத்தை ஏத்த மானூரிலும், இரண்டாவது லிங்கத்தை வைக்கத்திலும் வைத்தான். வாயில் கடித்த நிலையில் கவ்வி வந்த கரன் மூன்றாவது லிங்கத்தை வைத்த இடம் கடித்து உருத்தி என்று அழைக்கப்படுகிறது .

மலைக்குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலய கருவறையில், மூன்று அங்குலம் அளவு கொண்ட மிகச் சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய இருக்கிறது.

மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளில், அருகிலுள்ள பாலிச்சிறை ஆற்றில் இறைவனுக்கு ‘ஆறாட்டு’ நடத்தி ஆண்டு விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாள், மாசி மகம், புரட்டாசி மாதம் முதல் நாள் கோவில் நிறுவப்பட்ட நாள் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

xxxxx

97.பனச்சிக்காடு சரஸ்வதி கோவில்

கோட்டயத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் சிங்கவனம் என்ற இடம் உள்ளது. அதன் அருகில் புகழ்பெற்ற பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் இருக்கிறது.

கல்வியில் நல்ல சிறப்புகளைப் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் நாடும் கோவில் இது. நவராத்ரி காலத்தில் வரும் சரஸ்வதி பூஜையும் அதையடுத்து விஜய தசமியன்று வரும் வித்யாரம்பம் நிகழ்சசியும் சிறுவர்களை கவர்ந்துஇழுக்கும் கோவில் இது .

கர்நாடகத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில், பரவூரில் உள்ள தட்சிண மூகாம்பிகை கோவில் போல இதுவும் சிறப்பு பெற்றது  துர்காஷ்டமி நாளன்று தேவிக்கு முன்னால் புஸ்தகங்களை அடுக்கிவைப்பார்கள் ; விஜய தசமி நாளில் கல்வியைத் துவங்குவார்கள் உற்சவ காலத்தில் பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசைக் கச்சேரிகளும் நடக்கும்.

ஆண்டுதோறும் குழந்தை வரம் வேண்டி கர்நாடக கொல்லூருக்குச் சென்று வந்த தாமோதர நம்பூதிரிக்கு இறைவியே தோன்றி இங்கு கோவில் அமைக்க வேண்டினார். நம்பூதிரியும் காட்டில் கிடைத்த சரஸ்வதி விக்கிரகத்தை வைத்து  கோவிலை எழுப்பினார்  ஆயினும் இப்போது இறைவியைக் காண முடியாதபடி செடி கொடிகள் முளைத்துவிட்டன .

தற்போது கிணறு போன்ற பள்ளத்தில் மறைந்திருக்கும் தேவியைப் பார்த்து வணங்க முடியாததால், பக்தர்களின் பார்வைக்காக இங்கு மேற்கு திசையைப் பார்த்தபடி கல் ஒன்றை நிறுவி , சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இந்த ஊரையும் பரவூர் போலவே தட்சிண மூகாம்பிகா கோவில் என்று சொல்லுவார்கள் .குழந்தை இல்லாதோர் இங்கு வந்து பாயஸப் பிரசாதத்தைச் சாப்பிட்டால் மகப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தக் கோவிலில் இருக்கும் வித்யா மண்டபத்திற்குச் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் குருவின் மடியில் தங்கள் குழந்தையை அமர வைக்கின்றனர். அவர் தங்க நாணயத்தினால் ஹரியின் பெயரை நாக்கில் எழுதுவார். பின்னர் அங்குள்ள தாம்பளத்திலுள்ள அரிசியில் ஹரி என்று குழந்தையை விரலினால் எழுத வைப்பார்கள்.. இதை வித்யாரம்பம் என்று அழைக்கிறார்கள்.

—subham—

Tags- பனச்சிக்காடு ,மூகாம்பிகை, சரஸ்வதி, கோவில், வித்யாரம்பம், கடுதுருத்தி மஹாதேவர், ஆதித்யபுரம் சூரியன் ரவிமங்கலம், நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி, குட்டியணி குளங்கரை பகவதி .

Leave a comment

Leave a comment