விவேகானந்த அதிசயம்! – 2 (Post No.12,908)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,908

Date uploaded in London –  –   12 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

விவேகானந்த அதிசயம்! – 2 

ச.நாகராஜன் 

ஹிந்து யோகி!

சீனாவில் சுவாமிஜி தங்கி இருந்த போது ஒரு சீன மடாலயத்திற்குச் செல்ல விரும்பினார். ஆனால் அங்கோ எந்த ஒரு அன்னியருக்கும் நுழைய அனுமதி இல்லை. ஒரு நாள் சுவாமிஜி தன்னுடன் வந்த மொழிபெயர்ப்பாளரிடம் மடாலயத்திற்குள் நாமாக நுழைந்தால் என்ன நடக்கும் என்று கேட்டார். அடியும் உதையும் தான் கிடைக்கும் என்றார் மொழிபெயர்ப்பாளர். “என்ன, அடித்துக் கொன்று விடுவார்களோ, வாருங்கள் பார்ப்போமே’ என்று கூறிய சுவாமிஜி ஒரு பெரிய மடாலயத்திற்குள் நுழைந்தார். மொழிபெயர்ப்பாளரோ அப்படிச் செல்லக் கூடாது என்று தடுத்தார். ஆனால் சுவாமிஜி உள்ளே நுழைந்து விட்டார்.

அதைப் பார்த்த மடத்தில் இருந்த சிலர் தடிகளுடன் ஓடி வந்தனர். . வேர்த்து விறுவிறுத்துப் போன மொழிபெயர்ப்பாளர் அங்கிருந்து ஓட எத்தனித்தார். அவரைப் பிடித்த சுவாமிஜி இந்தியாவிலிருந்து வந்துள்ள யோகி என்பதை சீன மொழியில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லி விட்டுப் போங்கள் என்றார். மொழிபெயர்ப்பாளர் அதைச் சொல்லி விட்டு ஓடிப் போய் ஒரு ஒரத்தில் மறைந்து கொண்டு நின்றார்.

சுவாமிஜி அந்த வார்த்தைகளை உரக்கக் கூறியவாறே அந்த தடிக் கம்புகளுடன் வந்து கொண்டிருந்தவர்களை நோக்கி நடந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்! இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அவர்கள் தங்கள் கைத்தடிகளைக் கீழே போட்டு விட்டு அவர் முன்னால் விழுந்து வணங்கினர். அவர்கள் ஏதோ சொல்ல ஆரம்பித்ததைக் கண்ட மொழிபெயர்ப்பாளர் ஓடி வந்து அதைக் கேட்டார். பின்னர் சுவாமிஜியிடம் அவர், “இவர்கள் உங்கள் ஆற்றலையும் பாதுகாப்பையும் தீய சக்திகளை ஓட்டவும், பேய் பிசாசுகளை விரட்டவும் வேண்டுகின்றனர். ஆசி அளியுங்கள்” என்றார். சுவாமிஜியும் மனம் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்தார்.  தனது பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அதைப் பல துண்டுகளாக்கினார். ஒவ்வொரு துண்டுச் சீட்டிலும் ஓம் என்று வடமொழியில் எழுதி அதை ஒவ்வொருவரிடம் கொடுத்தார். கிடைத்தற்கரிய பொக்கிஷத்தைப் பெற்றது போல மகிழ்ந்த அவர்கள் அதைக் கண்ணில் ஒற்றி வைத்துக் கொண்டனர். சுவாமிஜியும் மடாலயத்தைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். அவருக்கு அங்கு உரிய மரியாதைகளை மடாலயத்தினர் செய்தனர்.

பிரம்ம யோனியை தரிசித்தவர்!

பஞ்சவடியில் தீவிர தியானத்தில் ஈடுபட்ட நரேந்திரர் (சுவாமி விவேகானந்தரின் பூர்வாசிரமப் பெயர்) பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டார்.

ஒரு நாள் அவர் தியானத்தில் ஈடுபட்டிருந்த போது முக்கோண வடிவமாக ஒரு பேரொளி பிரகாசிப்பதைக் கண்டார்.  அது உயிருள்ள உணர்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் கண்டார்.

இது பற்றி தனது குருவான ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் கூறினார் நரேந்திரன். உடனே அவர், “நீ பிரம்மயோனியைப் பார்த்திருக்கிறாய்! வில்வமரத்தடியில் சாதனைகள் செய்த போது நானும் அதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வினாடியும் அதிலிருந்து பிரம்மாண்டமான பேரண்டங்கள் தோன்றிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்” என்றார் அவர்.

யாரும் எளிதில் பார்க்க முடியாத பிரம்மயோனியை தரிசித்தவர் சுவாமி விவேகானந்தர்.

இது போன்ற ஏராளமான தெய்வீக தரிசனங்களை அவர் கண்டுள்ளார்!

அதிசயமான துறவி!

சுவாமிஜி  முற்றும் துறந்த ஒரு அதிசயமான துறவி. ஒருவரைப் பார்த்தவுடன் அவரது கடந்த காலம் நிகழ் காலம் வருங்காலத்தைப் படம் போல அவரால் பார்க்க முடிந்தது. சிறந்த தேச பக்தராக விளங்கிய அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தித்தார். ஆன்மீக வாழ்வில் அனைவரையும் ஈடுபடச் செய்ததோடு அவர்களை மிக மிக உயரத்திற்கு ஏற்ற வல்ல அருள்சக்தியைக் கொண்டவராக இருந்தார்.

மேலுலகில் ராமகிருஷ்ணர் அவரை, “வா, கீழே பூவுலகில் சில காலம் சென்று இருப்போம்” என்று கூறி அழைத்த போது மறுத்தார் அவர். பூவுலகில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மிகவும் குறுகிய காலம் இருக்கலாம்’என்று ராமகிருஷ்ணர் கூறியதைக் கேட்டு அவதாரம் எடுத்தார் விவேகானந்தர்.

ஆனால் பூவுலகில் மனிதர்கள் படும் பாட்டையும் துயரையும் கண்ட அவர், “இவர்களில் கடைசி மனிதன் விடுதலை பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் நான் வருவேன்” என்று மனம் கசிந்து கூறினார்.

“நான் மீண்டும் வருவேன்” என்ற அவரது உறுதி மொழி ஒரு நாளும் பொய்யாகப் போகாது.

அதிசய விவேகானந்தர் மீண்டும் நமது பூமிக்கு வருவது உறுதியே!

***

ஆதாரம் : சுவாமி ஆசுதோஷானந்தர் தொகுத்திருக்கும் சுவாமி

Leave a comment

Leave a comment