ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்! (Post No.13,551)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.551

Date uploaded in London – 17 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்! 

ச. நாகராஜன் 

பதினைந்து வருட வாழ்வு!

மனிதராய்ப் பிறந்தோரின் சராசரி ஆயுள் எண்பது வருடங்கள் என்று இந்த அறிவியல் யுகம் நிர்னயித்து விட்டது. இதில் முதல் பத்து வருடங்கள் பால பருவத்திலும், கடைசி பத்து வருடங்கள் உடல் தளர்ந்த முதுமைப் பருவத்திலும் கழிந்து விட,, மீதி இருப்பது அறுபது வருடங்கள்.

இதில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பகுதி வேலை மற்றும் படிப்பிலும் போய் விட, மீதி இருப்பது இருபது வருடங்கள். இதில் உணவு உண்ணுதல், மற்றும் உணவு தயாரித்தல், பயணம், டிரைவிங் என்று ஒரு ஐந்து வருடங்கள் கழிந்தது போக மீதி இருப்பது பதினைந்து வருடங்கள் தாம்.

 வாழ்வதற்காக உள்ள வருடங்கள் பதினைந்து வருடங்களே! இதில் ஆனந்தமாக வாழ்கிறோமா என்பது தான் கேள்வி.

 மன்னர் ஷவன் ஷி கேட்கும் கேள்வி

க்விங் என்ற சீன வம்ச அரசரான ஷவன் ஷி சக்ரவர்த்தி (கி.பி. 1638- 1697) ஒரு பாடலை எழுதியுள்ளார்:-

 “எதற்காக என்று தெரியாமல் பூமிக்கு மனிதர்கள் வருகிறார்கள்! எங்கு போகப் போகிறோம் என்று தெரியாமல் மனிதர்கள் பூமியை விட்டுப் போகிறார்கள்! இங்கு  வருவதற்கு முன்னர் நான் யார்? இங்கிருந்து போன பின் நான் யார்?”

 இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாததால் சக்ரவர்த்தி ஷவன் ஷி அரசைத் துறந்து விட்டு சந்நியாசி ஆனார்.

 உண்மை ஆனந்தத்தைத் தேடி ஆன்ம மார்க்கத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க, உண்மையில் வாழ்கின்ற பதினைந்து வருடங்களில் ‘மனித ஆனந்தத்துடனாவது’ வாழ்கிறோமா? ஆனந்தமாக வாழ வழிகள் உண்டா? உண்டு! அவற்றில் சில வழிகளைப் பார்க்கலாம்:

 உள்ளங்கைகளைத் தேய்த்தல் 

உடனடி ஆனந்தத்தை வரவழைக்கை ஒரு சுலபமான வழி, உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று ஏழு முறைகள் வேகமாகத் தேய்ப்பது தான்! வேகமாகத் தேய்த்து அதில் வரும் ஆனந்தம் உடலெங்கும் பரவுவதை உணரலாம். இப்படி ஏழு முறை தேய்ப்பதை ஏழு முறை செய்தால் உற்சாகமான ஆனந்தம் ஆரம்பமாகும். ‘டல்லாக’ உணரும் தருணங்களிலும் உள்ளங்கைகளைத் தேய்த்து ஆனந்தம் ஆரம்பமாக வைத்து நம் நேரத்தை மகிழ்ச்சி நேரமாக மாற்றிக் கொள்ளலாம்!

கிடைமட்ட எட்டு எண்ணை மனதில் இருத்தல்

அடுத்து எல்லையற்ற தன்மையைக் குறிக்கும் அடையாளமான கிடைமட்டமாக உள்ள எட்டு எண்ணை ((8 ஐ கிடைமட்டமாக்கினால் வருவது ∞ ) கண்களை மூடி மனதில் இருத்துங்கள். இதில் உள்ள இரண்டு பூஜ்யங்கள் இடது பக்க மூளையையும், வலது பக்க மூளையையும் இணைக்கும் பாலமாக அமையும். இரண்டு பூஜ்யங்களும் இணையும் இடமானது கார்பஸ் கலோஸம் என்ற மூளையின் பகுதியைக் குறிக்கும். அந்த இணையும் புள்ளியே ஆனந்த சக்தி ஆரம்பமாகும் இடம். அதையே ஆனந்தத்தின் ஊற்றாக எண்ணுங்கள். இந்த இரண்டு பூஜ்யங்களின் வழியே ஆனந்த சக்தியை ஓட்டமாக ஓட வைத்து அதை மனதில் அனுபவியுங்கள். எவ்வளவு நேரம் ஆனந்த சக்தியை ஓட்ட விரும்புகிறீர்களோ, அவ்வளவு நேரம் ஓட விடுங்கள். அபரிமிதமான ஆனந்தப் புத்துணர்ச்சி உடலெங்கும் அலை பாயும்.

 மினி மெடிடேஷன்

 கண்களை மூடி ஒரு மினி மெடிடேஷன் செய்வது அடுத்த டெக்னிக்!

 கண்களை மூடி முகத்தை நிமிர்த்தி வையுங்கள். கண்களைக் கீழே தாழ விடுங்கள்.  பத்து வினாடிகள் கழித்து கண்களை மேலே பார்க்கச் செய்யுங்கள். பத்து வினாடிகள் புருவ மத்தியைப் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி உணர்வை உணருங்கள். உடல் முழுவதும் மின்காந்த அலைகள் பாயும். 

தீப தியானம் 

ஶ்ரீ சத்ய சாயிபாபா கூறியுள்ள தீப தியான முறையும் சிறப்பான ஒன்று.

ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அதன் மூலம் உங்களிடமிருந்து ஆரம்பித்து உங்கள் உறவினர், நண்பர்கள், சமுதாய மக்கள் என்று அனைவரையும் ஒவ்வொருவராக நினைத்து, அவர்கள் கையில் உள்ள தீபத்தை உங்கள் தீபத்தால் ஒளி ஏற்ற வைப்பதாக நினைத்து, அவர்கள் கையில் உள்ள தீபத்தை உங்கள் தீபத்தால் ஒளி ஏற்ற வைப்பதாகக் கண்களை மூடி மனதில் தியானிப்பது தீப தியான முறை. உங்களிடமிருந்து ஆரம்பமாகும் ஆனந்தம் வெள்ளமாகப் பெருகி உலகெங்கும் பரவும்.

 ஆக இப்படி எளிய இனிய வழிகள் இருக்கும்போது ஆனந்தத்திற்கு ஏது குறை? குறை ஒன்றும் இல்லை சீர் கோவிந்தா!!

மஞ்சுளா ரமேஷ் ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2006, ஜூலை மாதம் வெளியான கட்டுரை

Leave a comment

1 Comment

  1. Ammunni Balasubramanian's avatar

    Ammunni Balasubramanian

     /  August 17, 2024

    No wonder these are hilarious.
    Sent from my iPad

Leave a comment