டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர் ! (Post No.14,275)

Painting of Diogenes in Sydney Art Gallery

Written by London Swaminathan

Post No. 14,275

Date uploaded in Sydney, Australia –  6 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிட்னி ஆர்ட் காலரியில் டயோஜெனிஸ் ஓவியம்!

ஆஸ்திரேலியாவில் சிட்னி ஆர்ட் காலரிக்குச் (Sydney Art Gallery) சென்றபோது என்னைக் கவர்ந்த ஓவியங்களில் ஒன்று கிரேக்க தத்துவ ஞானி டயோஜெனிஸ் ஓவியம் ஆகும்.

இந்த ஓவியத்தை வரைந்தவர் ஜான் வில்லியம் வாட்டர்ஹவுஸ் (1849-1917)) ஆவார். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில ஓவியர் . அவர் கிரேக்க நாட்டு விஷயங்களை ஓவியத்துக்கு எடுத்துக்கொண்டு அதில் நல்ல புகழையும் பெற்றார்; குறிப்பாக டயோஜெனிஸ்

ஓவியம் எல்லோரையும் கவர்ந்தது. அந்த கிரேக்க அறிஞர், சாலை ஓர தண்ணீர் குழாய்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வசித்தார்; பகல் நேரத்தில் விளக்கினைக் கையில் தூக்கிக் கொண்டு திரிவார்; யாரேனும் ஏன் என்று வினவினால் நல்ல மனிதனைத் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று விடை பகர்வார் .

Diogenes looking for Good People with a lantern in the Day Time

*****

டயோஜெனிஸ் (412-323 BCE)

டயோஜெனிஸ் (Diogenes)  , 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ மேதை. ஒரு டாக்டரும் வழக்கறிஞரும் அவரிடம் சென்று எங்களிடையே ஒரு வாக்குவாதம், சர்ச்சை! யாருக்கு முதல் மரியாதை? வரிசையில் யார் முதலில் செல்ல வேண்டும்? என்று வினவினார்கள்.

தத்துவ வித்தகர் சொன்னார்:

திருடன் (Thief) முதலில் போகட்டும்; அவன் பின்னால் மரணதண்டனையை நிறை வேற்றுபவன் (executioner) செல்லட்டும்!

உடனே வக்கீல் சந்தோஷத்துடன் முதலில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்தார் டாக்டர்!

****

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி

டயோஜெனிஸ் அலெக்ஸாண்டர் காலத்தில், 2350 ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்தவர். இப்பொது துருக்கியில் இருக்கும் சினோப் நகர் ஒரு காலத்தில் கிரேக்க காலனியாக இருந்தது. அங்கே பிறந்த டயோஜெனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகருக்குக் குடியேறினார். ஆண்டிஸ்தெனிஸ் என்ற குருவுடன் சேர்ந்து ‘’ஸினிக்’’ இயக்கத்தைத் துவக்கினார். ‘சினிக்’= எதிலும் குற்றம் காண்பவன், நன்மையில் நம்பிக்கையற்றவன்= என்ற ஆங்கிலச் சொல் இவர்கள் மூலம்தான் வந்தது.

 இந்த ‘சினிக்’ இயக்கத்தினர் இந்திய யோகிகள், சித்தர்கள், ஆண்டிப் பண்டாரங்கள் போல வாழ்க்கை நடத்துபவர்கள். டயோஜெனிஸ் ஒரு பெரிய உடைந்த ஜாடியில், தெருவோரமாக வாழ்ந்தார். மாமன்னன் அலெக்ஸாண்டர் அவரைப் பார்க்க வந்தான். “ஐயா, பெரியவரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?” என்று பணிவோடு கூறினான். டயோஜெனிஸோ, ‘சினிக்கல்’ ஆக பதில் தந்தார். 

Alexander meeting Diogenes

“ஐயா, மாமன்னரே, சற்றே விலகும், சூரிய வெளிச்சத்தை மறைக்காமல் விலகிப் போங்கள்” என்றார் டயோஜெனிஸ்.

அவர் பகல் நேரத்தில் தெருக்களில் போகும் போது கையில் லாந்தர் விளக்கை எடுத்துச் செல்வாராம். ‘’ஐயா ,உங்களுக்கு என்ன பைத்தியமா? பகலில் விளக்கு எடுத்துச் செல்கிறீர்களே?’’, என்று நகைப்போரிடம், ‘’நான் நேர்மையான ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்பார்.

****

விளக்குடன் போன குருடர்

இன்னொரு வயதான ஞானி கண் பார்வையற்றவர். அவர் இருட்டு நேரத்தில் போகும் போது ஒரு கையில் கைத்தடியும், மற்றொரு கையில் விளக்கும் கொண்டு செல்வார். எல்லோருக்கும் ஒரே புதிராக இருக்கும். இதைப் பார்த்த ஒரு இளைஞனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘’ஐயா, என்ன உங்களுக்கு பைத்தியமா? கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா? ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா?’’ என்றான்.

அந்தக் கிழவனார் அமைதியாக பதில் தந்தார், ‘’அன்பரே, எனக்கு கண் தெரியாது என்பது உண்மையே. உம்மைப் போன்ற பார்வையுடையவர்கள் என் மீது தடுக்கி விழக் கூடாது அல்லவா?’’ என்றார். தமிழ் நாட்டு மஹான் ஒருவர் இதே உதாரணத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு உண்மையை விளக்கினார். வேதங்கள், இந்து மத சடங்குகளுக்கு அர்த்தம் தெரியாவிடிலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்துவாருங்கள். நீங்கள் பொருள் அறியாத குருடர்களாக இருக்கலாம். எதிர் (காலத்தில்) வருவோருக்கு அது வெளிச்சம் போடும் என்று.

****

பட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் !

தமிழ் நாட்டில் பல மறைஞான சம்பந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் சிதம்பரத்தில் வாழ்ந்தார். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி போல கண்கட்டி வாழ்ந்தார். அவரது மடத்துக்கு ‘’கண்கட்டி மடம்’’ என்றே பெயர். நிறைய நூல்களை எழுதியவர். மெத்தப் படித்தவர். இருந்தும் மற்றவர்களின் தீய , நன்மையற்ற செயல்களைக் காணக்கூடாது என்று கருதியவர்.

மற்றொரு மறைஞான சம்பந்தரரின் சீடர் உமாபதி சிவாச்சார்யார்.சைவ சமய சந்தான குறவர் நால்வரில் ஒருவர். மாபெரும் அறிஞர். பல ஆதாரபூர்வ நூல்களை எழுதி சைவ சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். உமாபதி சிவம் , தினமும் கோவிலுக்குப் பல்லக்கில் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் பூஜையை முடித்துக்கொண்டு வருகையில், பிச்சைக்காரர் வடிவில் வந்த ஒரு ஞானி, உமாபதி சிவத்தின் பல்லக்கைப் பார்த்து, “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் அவருக்கு ஞானம் உதித்தது. உடனே பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அன்று முதல் கோவிலுக்கு வந்து போக அவர் பல்லக்கைப் பயன்படுத்தவே இல்லை.

–subham—

Tags– சிட்னி ஆர்ட் காலரி, டயோஜெனிஸ் ஓவியம், டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர்

Leave a comment

Leave a comment