நாரத புராணம் விவரிக்கும் ஒன்பது பக்திகள்! (Post No. 14,274)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,274

Date uploaded in Sydney, Australia – –6 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நாரத புராணம் விவரிக்கும் ஒன்பது பக்திகள்! 

ச. நாகராஜன் 

நாரத புராணம் மஹா புராணங்களில் ஒன்றாக அறிஞர்களால் கூறப்படும் சிறந்த ஒரு புராணம்!

ப்ரஹன் நாரதீய புராணம் என்ற ஒரு நூலும் உள்ளது. ஆனால் இது சிறிய புராணம். இதில் 3600 செய்யுள்களே உள்ளன. இதில் உள்ள அத்தியாயங்கள் 38.

ஆனால் நாரத புராணத்தில் 25000 செய்யுள்கள் உள்ளதாக கூறப்பட்டாலும் நமக்கு இன்று கிடைத்திருப்பவை மொத்தம் 18550 செய்யுள்கள் மட்டுமே தான்!

 13144 செய்யுள்கள் பூர்வார்த்த என்று சொல்லப்படும் முதல் பாகத்திலும் 5406 செய்யுள்கள் உத்தரார்த்த என்று சொல்லப்படும் இரண்டாம் பாகத்திலும் உள்ளன.

எல்லா புராணங்களிலும் உள்ளது போல பல ஸ்ருதியும் இதில் உண்டு. அத்துடன் புராணம் முடிவடைகிறது. 

பொதுவாக நினைப்பது போல இதை நாரதர் இயற்றவில்லை.

நாரதரின் நான்கு சகோதரர்களான சன்கர், சனாதனர், சனத்குமாரர் மற்றும் சனந்தனர் ஆகிய நால்வருமே இதில் பேசிக் கொள்கின்றனர்.

நாரத புராணம் யோகம் பற்றி நன்கு விளக்குகிறது.

அஹிம்சை,  சத்தியம், அன்பு, தியாகம், ஆகிய நற்குணங்கள் யோகத்திற்கு அடிப்படையாகத் தேவை.

இதன் மூலம் பரா மற்று அபரா ஆகியவற்றை உணரலாம்.

இது அஷ்டாங்க யோகம் எனப்படும் எட்டு விதமான யோகத்தின் அடிப்படைகளையும் நன்கு விவரிக்கிறது.

பக்தியைப் பற்றி விவரிக்கும் இந்தப் புராணம் பக்தியை மூன்று விதமாகப் பிரிக்கிறது.

சத்வம், ரஜஸ், தாமஸம் ஆகிய  மூன்று வித பக்திகளில் தாமஸ பக்தி அதமம். ராஜஸ பக்தி மத்யமம். சத்வ பக்தி உத்தமம். இந்த மூன்று வகைகளையும் கீழ்க்கண்டபடி இந்தப் புராணம் பிரிக்கிறது.

1)அதம தாமஸ பக்தி : மற்றவர்களை அழிக்க விஷ்ணுவைத் துதிப்பது.

2) மத்யம தாமஸ பக்தி;  ஒழுக்கங்கெட்ட ஒரு பெண் தன் கணவனை நேசிப்பது போல விஷ்ணுவின் மீதான பக்தி

3) உத்தம தாமஸ பக்தி: மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பொறாமையுடன் பக்தி செலுத்துவது

4) அதம ராஜஸ பக்தி: பணம், தானியம், செழிப்பு ஆகியவற்றிற்காக விஷ்ணுவைத் துதிப்பது

5) மத்யம ராஜஸ பக்தி: பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு விஷ்ணுவைத் துதிப்பது

6) உத்தம ராஜஸ பக்தி: விஷ்ணுவின் லோகத்தில் இருக்கும் சாலோகதா முக்தியைப் பெற துதிப்பது

7) அதம சாத்வீக பக்தி: தனது பாவங்களைத் தொலைப்பதற்காக விஷ்ணுவைத் துதிப்பது

8) மத்யம சாத்வீக பக்தி: விஷ்ணுவின் இச்சைப் படி விஷ்ணுவுக்கு சேவை செய்து துதிப்பது

9)  உத்தம சாத்வீக பக்தி: விஷ்ணுவைச் சந்தோஷப்படுத்தும் ஆராதனையாகத் துதிப்பது

10) உத்தமோத்தம பக்தி: மிக மிக உயரிய நிலை பக்தி இது. தன்னையே விஷ்ணுவாக உணர்ந்து தன்னுள்ளேயே பிரபஞ்சம் இருப்பதை உணர்வது.

அடுத்த அத்தியாயத்தில் பக்தி வேறு விதமாக மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

1)       ச்ரத்தா பக்தி: தான் உட்பட அனைத்துப்  பிரபஞ்சமுமே விஷ்ணு என்பதை பக்தன் உணர்கிறான். விஷ்ணுவே அனைத்துக்கும் ஆதாரம். அவரை விதிப்படி துதிக்க வேண்டும். இது ச்ரத்தா பக்தி.

2)       சமதா பக்தி: விஷ்ணு எங்கும் நிறைந்திருப்பவர் அவரையன்றி வேறொன்றுமில்லை என்பதை பக்தன் உணர்வது சமதா பக்தி.

3)       சாந்தி பக்தி: பக்தன் தனக்கு என்ன நேர்ந்தாலும் நண்பர்களையும் எதிரிகளையும் சந்தோஷத்துடன் ஒரே விதமாகப் பாவிப்பது என்ற மனநிலையைக் கொண்டிருப்பது சாந்தி பக்தி.

ஆக நாரத புரானம் இப்படி விரிவாகவும் தெளிவாகவும் பக்தி நிலைகளை விவரிக்கிறது. 

இது தவிர நாரதர் இயற்றிய நாரத பக்தி சூத்ரம் அருமையான்  அருமையான ஒரு நூல். நாரதர்  பக்தியைப் பற்றி முற்றிலுமாக விவரிப்பதை இதில் படித்து உணரலாம்!

***

Leave a comment

Leave a comment