வில்லிப்புத்தூரார்! – 2 (Post.14,292)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,292

Date uploaded in Sydney, Australia – –12 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஞானமயம் ஒளிபரப்பில் 9-3-2025 அன்று ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

வில்லிப்புத்தூரார்! – 2

வில்லிப்புத்தூரார் வைணவராகப் பிறந்தாலும் சமயப் பொதுமைக் கருத்தைக் கொண்டவர்.

வில்லியும் சிவனும் என்ற தனது ஆய்வு நூலில் வில்லிப்புத்தூரார் 270 பாடல்களில் சிவனைப் பற்றிக் கூறுவதைத் தொகுத்துத் தந்துள்ளார் திரு ராய.சொக்கலிங்கம் அவர்கள். இவற்றில் 199 பாடல்கள் கவிக்கூற்றாக அமைபவை. 71 பாடல்களில் அர்ஜுனன் முதலிய பாத்திரங்கள் வாயிலாக சிவபிரானைக் குறிப்பிடுகிறார்.

எடுத்துக்காட்டிற்காக ஒரே ஒரு பாடலை மட்டும் இங்குக் காண்போம்:

கூற்றினை உதைத்த பாதமும், உடுத்த குஞ்சரத்து உரிவையும், அணிந்த

நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும், நிலா, வெயில், அனல் உமிழ் விழியும்,

ஆற்று அறல் பரந்த கொன்றைவார் சடையும், அல்லதை யாவையும் கருதான்:

மாற்றம் ஒன்று இன்றி நின்றனன், வரைபோல் வச்சுராயுதன் திரு மகனும்.

இந்திரன் மகனான அர்ஜுனன் சிவனைத் தொழுததை இப்படி வில்லிப்புத்தூரார் குறிப்பிடுகிறார்.

வில்லிப்புத்தூரார் வியாஸ பாரதத்தை முதல் நூலாகக் கொண்ட போதிலும் கூட பாத்திரப்படைப்பு, உவமைகள், அணி நயம், சந்த நயம், பொருள் நயம் ஆகியவற்றால் தனித்துவம் பெறுகிறார்.

அறுசீர் ஆசிரிய விருத்தங்களில் மட்டும் அவர் பத்து சந்த வேறுபாடுகளைக் காண்பிக்கிறார்.

சந்தத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இது:

மதித்துமதங்களேழினு மெய் வனப்புறு கொண்டல் மானுவன

கதித்து நெஉங்கை வீசியுடுகணத்தை முகந்து வாருவன

மிதித்துரகன்பருமணிகள் விழித்து வெகுண்டு வாவுவன

சொத்திருகண்களாலுமெரி கும்ப வாரணம்

இப்படி போர்க்களத்தில் யானைகள் போர் செய்யும் காட்சியை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் வில்லிப்புத்தூரார்.

ஒரு கவிதை என்பது சொற்களின் மூலமாக ஒரு காட்சியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

கவிதையின் ஓசை நயத்தால் அதைப் படிக்கும் போது செவிக்கு இன்பம் தர வேண்டும்.

கவிதை நம் மனக் கண் முன் வருவதால் கண்ணுக்கு இன்பம் தர வேண்டும்.

சிந்தையைக் கவர்தலால் ஐம்பொறிகளுக்கும் இன்பம் தருதல் வேண்டும்.

இந்த கவிதை இலக்கணத்தை நன்கு அறிந்த வில்லிப்புத்துரார் தனது படைப்பால் நம்மை பிரமிக்க வைக்கிறார்..

ஒரே பாடலில் பல உவமைகளை அடுக்குவது இவரது தனிச் சிறப்பு! வில்லியிடம் ஊறும் உவமைகளைப் படித்தால் கற்றனைத்தூறும் அறிவு சிறக்கும்!

மனிதப் பண்புகளைவிளக்குவதில் தனிச் சிறப்பைக் கொண்டதாக அமைகிறது வில்லி பாரதம்,

அத்தினாபுரம் சென்ற பாண்டவர் தனது பெரிய தாயார் ஆன காந்தாரியை வெறுப்பின்றி வணங்குகின்றனர்.

பீஷ்மர் தன் தந்தைக்காகப் பெரும் தியாகத்தைச் செய்து மணம் முடிக்காமல் இருக்கிறார்.

பாண்டவர் ஐவரில் மூத்தவரான தர்மரை இதர நால்வரும் வணங்கிப் போற்றுகின்றனர்.

அனைவரும் மாபெரும் அவதாரமான கிருஷ்ணரைப் போற்றித் துதிக்கின்றனர்.

பாரதப் போர் வராமல் தடுப்பது எப்படி என்பதை கண்ணபிரான் சகாதேவனைத் தனியாக அழைத்துச் என்று கேட்கிறான். அதற்கு சகாதேவன் பதில்  கூறும் இடம் மிகவும் அருமையான ஒரு இடம்!

நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கிப பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா

கோபாலா போரேறே கோவிந்தா நீயன்றி மாபாரதம் அகற்றமற்றார்கொல் வல்லார

என்று உன்னைத் தவிர வேறு யார் தான் போரை நிறுத்த முடியும் என்று ஆரம்பித்து போரை நிறுத்த ஒரு வழியையும் கூறுகிறான் இப்படி:

பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின்                                                காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி                                     நேராகக் கைப்பிடித்து நின்னையும் யான்  கட்டுவனேல்                       வாராமல் காக்கலாம் மா பாரதம் என்றான்

கர்ணனுக்கு நாட்டைத் தந்து விட வேண்டும். அதற்கு முன் அர்ஜுனனைக் கொல்ல வேண்டும். திரௌபதியின் குழலைக் களைய வேண்டும். உன்னைக் கட்டிப்போட வேண்டும். இப்படிச் செய்தால் போர் வராமல் காக்கலாம் என்றான் சகாதேவன்.

இதைக் கேட்ட கண்ணன் எங்கே என்னைக் கட்டு என்று கூறி பதினாறாயிரம் வடிவம் கொண்டான்.  ஆனால் சகாதேவன் மூலமாம் தோற்றம் உணர்ந்து எவ்வுலகும் தா ய அடி இணையினைக் கருத்தினால் பிணித்தான் அதாவது மூலத் தோற்றத்தை தியானித்து அவனது இரு பாதங்களைப் பிடித்தான் என்கிறார் வில்லிப்புத்தூரார்.          .700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் அருமையாகத் தந்துள்ளார்.

வில்லிப்புத்தூராரின் கிருஷ்ண பக்திக்கு ஈடு இணையில்லை; எடுத்துக் காட்டிற்கு ஒரு பாடலைப் பார்ப்போம்:

அருமறை முதல்வனை ஆழி மாயனைக்                                    கருமுகில் வண்ணனைக் கமலக்கண்னனைத்                                 திருமகள் தலைவனைத் தேவதேவனை                                        இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்

ஆக இப்படி வில்லி பாரதத்தின் பெருமையையும் வில்லிப்புத்துராரின் மாண்பையும் சொல்லிக் கொண்டே போகலாம். நமது நேரத்தில் சிறிது நேரத்தை அவ்வப்பொழுது இந்த வில்லி பாரதத்தைக் கற்பதில் கருத்தை ஊன்றிச் செலவிட்டால் நமது வாழ்வு சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

வில்லிப்புத்தூரார் புகழ் வாழ்க! கண்ணனை என்றும் தியானிப்போம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்.

–subham–

Leave a comment

Leave a comment