

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,381
Date uploaded in London – 31 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
1-2-2026 தைப்பூச நன்னாள் – சிறப்புக் கட்டுரை!
புண்ணியம், பாவம் என்பவை எவை? வள்ளலார் பிரான் அருளுரை!
ச. நாகராஜன்
வள்ளலார் இராமலிங்க அடிகளார் தோற்றம் 5-10-1823 ஜோதியுடன் கலந்த நாள் 30-1-1874
சமீப காலத்தில் வாழ்ந்து சன்மார்க்கத்தை நிறுவி ஏராளமான ரகசியங்களை உலகிற்கு அளித்தவர் வடலூர் ராமலிங்க அடிகளார் ஆவார்.
வள்ளலார் என்று அனைவராலும் போற்றப்படும் இவர் ஶ்ரீ முக வருடம் தை மாதம் 19ம் நாள் (31-1-1874) வெள்ளிக்கிழமை அன்று தன் அறையில் சென்று இறைவனுடன் ஜோதி மயமாகக் கலந்தார்.
அவரது பாடல்களையும் நூல்களையும் ஒவ்வொரு தமிழரும் படித்தல் வேண்டும்.
இங்கு அவரது உரைகளில் புண்ணியம் பாவம் பற்றிய விளக்கத்தைக் காணலாம்.
அருளை நாம் எப்படிப் பெறுவது?
புத்தி தத்துவத்தால் நன்மை, தீமையை விசாரிக்க வேண்டும்.
பெரியாரைத் துணை கொண்டு அவர் சொல்லும் திருப்பணியை இடையறாது செய்ய வேண்டும்.
நன்மை, தீமை என்பவை யாவை?
நன்மை தீமை என்பவை புண்ணிய பாவம் ஆகும்.
புண்ணியம் என்பது என்ன?
ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். இது புண்ணியம்.
பாவம் என்பது என்ன?
ஆரம்பத்தில் சுகமாயும் பின்னர் துக்கமாயும் இருக்கும். இது பாவம்.
புண்ணிய பாவங்கள் எப்படி நம்மை வந்து அடைகின்றன?
மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இவை அடைகின்றன.
மேலும் மனத்தினிடத்தில் நால் வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும் ஆக பன்னிரண்டு வகையாக இவை நம்மை வந்து அடையும்.
அவை யாவை?
அவையாவன:
மனத்தினால் – 1. பரதார கமனம் பண்ண நினைத்தல் 2. அன்னியருடைய சொத்தை கிரகிக்க நினைத்தல் 3. அன்னியருக்குத் தீங்கு செய்ய நினைத்தல் 4. முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமைப் படுதல்.
இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள் ஆகும்.
வாக்கினால்:- 1.பொய் சொல்லல் 2. கோள் சொல்லுதல் 3. புறம் கூறல் 4. வீணுக்கு அழுதல் இவை நான்கும் வாக்கினால் செய்யும் பாவங்கள் ஆகும்.
தேகத்தினால் :- 1. பிறர் மனைவியைத் தழுவுதல் 2. புசிக்கத் தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல் 3. அன்னியர்களை இம்சை செய்தல் 4.தீங்கு செய்வோரைத் தடுக்காமல் அவர்களுக்கு உதவி செய்தல்.
இவை நான்கும் தேகத்தினால் உண்டாகும் பாவங்கள் ஆகும்.
இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
திருவாசகம், திருமந்திரம் பற்றி வள்ளலார்
திருவாசகம் என்பது மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை. மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.
சாத்திரங்களில் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இது மொத்தம் எண்ணாயிரம்.
தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம்.
இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.
இது போன்ற அபூர்வமான ஆயிரக்கணக்கான தெய்வீக விஷயங்களை
வள்ளலார் பாடல்களிலும் நூல்களிலும் பார்க்கலாம்.
இவற்றை இணையதளத்தில் பெறலாம்.
சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்
வடலூர்
607303 என்ற விலாசத்திலிருந்து நூல்கள் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.


**