தமிழுக்குப் புத்துயிர் தந்தவர்! (Post No.15,435)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,435

Date uploaded in London – 18 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

பிப்ரவரி 19: மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் : சிறப்புக் கட்டுரை!

தமிழுக்குப் புத்துயிர் தந்தவர்!

ச. நாகராஜன் 

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

    காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

    இறப்பின்றித் துலங்குவாயே!”

என்று மஹாகவி பாரதியாரால் இறப்பில்லாத அமர புகழை அடைந்தவர் என்று போற்றிப் புகழப்படும் உன்னத தமிழ் அறிஞர் – தமிழுக்குப் புத்துயிர் தந்தவர்- மஹாமஹோபாத்யாய உ.வே. சாமிநாத ஐயர் ஆவார்.

19-2-1855 அன்று கும்பகோணம் அருகில் உள்ள சூரியமூலை என்ற குக்கிராமத்தில் அந்தணர் குடும்பத்தில் பிறந்து உத்தமதானபுரத்தில் வளர்ந்து மாயவரத்தில் மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிட, தமிழ்நூல்களைப் பாடம் கேட்டுப் பயின்று தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் தமிழ் நூல்களைத் தேடிச் சென்று பெற்று, ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து திருத்தமுறப் பழம் பெரும் நூல்களைப் பதிப்பித்து தமிழுக்கெனவே வாழ்ந்து 28-4-1942 அன்று இறைவனடி சேர்ந்தவர் தமிழ்த் தாத்தா திரு உவே. சாமிநாத ஐயர்.

வேங்கடராமன் என்பது இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர். 1871ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் மாயவரத்தில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்க ஆரம்பித்தார்.

அவரது தோட்டத்தில் துளிர் விடும் தளிர்களை நன்கு பார்த்து ஆராய்ந்து மகாவித்துவான் அவற்றைப் பார்க்க ஆசையுடன் தோட்டத்திற்கு வரும் போது அவற்றைக் காட்டி அவரது தனிப்பெரும் அன்பைப் பெற்றவர். வேங்கடராமனின் தணியா தமிழ் தாகத்தைப் பார்த்து வியந்த மகா வித்துவான் அவருக்கு சாமிநாதன் என்ற பெயரைச் சூட்டினார்.

எங்கெல்லாம் தமிழ் ஓலைச் சுவடிகள் உள்ளனவோ அங்கெல்லாம் அயராது அலைந்து ஓடி அவற்றைப் பெற்று ஆராய ஆரம்பித்தார் சாமிநாத ஐயர். தன் வாழ்நாளில்  90க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் பதிப்பித்தார். இவரது ஆவணமாக சுமார் 3000க்கும் மேற்பட்ட அளவில் இவரது கடிதங்களும், இவர் சேகரித்த ஓலைச் சுவடிகளும் உள்ளன!.

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, சூளாமணி, பத்துப்பாட்டு என்று எந்த ஒரு நூலை எடுத்தாலும் இன்று நாம் படிக்கிறோம் என்றால் அது இவரது அரிய முயற்சியால் தான்.

இவரது என் சரித்திரம் என்ற நூல் அந்தக் காலத்தில் தமிழ் அறிஞர்கள் பாடம் சொல்லும் முறையையும், திருவாவடுதுறை உள்ளிட்ட சைவ மடங்கள் தமிழ் அறிஞர்களை ஆதரித்த விதத்தையும் விவரிக்கிறது.

மாட்டு வண்டியில் தமிழ்ச் செய்யுள்களை மகா வித்துவான் புனைந்தது, மிக விரைவாக கவி புனைந்து ஓலை சுவடி எழுதியவரின் ஆணவத்தை அடக்கியது, காவிரி நதியில் ஊற்று பெருகப் பெருக பாடல்களையும் பெருக வைத்து வெள்ளமெனத் தந்தது போன்ற இவரது குருவின் அரிய ஆற்றலை இவர் சொல்லும் திறமே தனி தான்.

நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும்,, நல்லுரைக் கோவை,  நினைவு மஞ்சரி உள்ளிட்ட இவரது நூல்கள் படிக்கப் படிக்க தெவிட்டாதவை.

நீண்ட வரலாற்றையும், சுவையான சம்பவங்களையும் கொண்ட இவரது வாழ்க்கை பற்றிய நூல் தமிழர் ஒவ்வொருவரும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.     

பாரதியாரை விட வேறு யாரால் தான் இவரைச் சரியாகக் கணிக்க முடியும்?!

கும்ப முனி எனத் தோன்றும் சாமிநா

   தப்புலவன் குறைவில் சீர்த்தி

பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்

   பேருவகை படிக்கின்றீரே! என்ற வார்த்தைகளால்

அகத்தியரின் மறு அவதாரம் என பாரதியார் கூறுவது பொருத்தம் தானே!

அவர் நினவைப் போற்றுவோம். தமிழை வளர்ப்போம்!

தமிழ் வாழ்க! தமிழ்த் தாத்தா வாழ்க!!

**

Leave a comment

Leave a comment