Post No. 15,438
Date uploaded in Sydney, Australia – 20 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 26
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 26

திருமாலை முருகன் அடக்கிய கதை !
சீறல் ஏனபதி* தனை கோலக்காலமாக அமர் செய்த
வடிவேலா … சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை*
கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே,
ஆவிச் சேல்கள் பூகம் மடல் இள பாளைத் தாறு கூறுபட …
குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம்
பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி,
உயர் ஆலைச் சோலை மேலை வயலியில் உறைவோனே …
உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை
வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே,
ஆசைத் தோகைமார்கள் இசை உடன் ஆடிப் பாடி நாடி வரு …
ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து
வணங்குகின்ற
திரு ஆனைக் காவில் மேவி அருளிய பெருமாளே. …
திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே.
* ஏனபதி = ஆதிவராகம். இரணியாக்ஷன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலின் கீழ் ஒளித்தான். பூமி தேவி முறையிட, திருமால் வராக ரூபம் எடுத்து, இரணியாக்ஷனைக் கொன்று பூமியை நிலை நிறுத்தினார். அரக்கன் ரத்தத்தைக் குடித்த வராகம் மதம் கொள்ள, சிவபெருமான் முருகனை அனுப்பினார். போரில் வராகத்தை முருகன் அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச் சிவனிடம் சேர்ப்பித்தார்.
***
வேதத்தின் ஆறங்கம் – ஷட் அங்கம்
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் … ஆய்ந்து அறிந்த வேதத்தின்
ஆறு அங்கங்களிலும்*** வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள்
அரிகரி கோவிந்த கேச வென்று … ஹரி ஹரி, கோவிந்தா, கேசவாஎன்று துதிசெய்து,
இருகழல்தொழு சீரங்க ராசன் நண்புறு மருகோனே … இரு
திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க மருமகனே,
வேதத்தின் ஆறு அங்கங்கள் பின்வருமாறு:
நிருத்தம், ஜோதிடம், சிக்ஷை, வியாகரணம், கற்பம், சந்தஸ்.
***
மதுரையின் பெருமை

மாடக் கூடற் பதி … நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள
ஞான வாழ்வைச் சேர … (துவாதசாந்த நிலையில்* கூடும்)
ஞானவாழ்வை அடையும்படி
தருவாயே … அருள் புரிவாயாக.
பாடற் காதற் புரிவோனே … தமிழிசையில் பாடினால் ஆசையோடு
கேட்பவனே,
பாலைத் தேனொத்து அருள்வோனே … பாலையும் தேனையும்
போல் இனிமையாக அருள்பவனே,
ஆடற் றோகைக்கு இனியோனே … நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே,
ஆனைக் காவிற் பெருமாளே. … திருவானைக்கா தலத்தின்
பெருமாளே.
* மதுரை ஜீவன்முக்தி தலம் மட்டுமின்றி துவாதசாந்தத் தலமுமாய் உள்ளது. துவாதசாந்தம் என்பது சிரசின் உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் யோக ஸ்தானம். இந்த ஞானம் மதுரையில் கிடைத்தற்கு உரியது.
திருவால வாய்க்கு இணையா ஒருதலமும் தெய்வ மணம் செய்ய பூத்த
மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத்
தீர்த்தத்தின் மருங்கின் ஞான
உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம்
தந்து உலவா வீடு
தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை
இது சாற்றின் மன்னோ.
253. அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம்
அமர்ந்தோர் சீவன்
முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா
ஞானம்
புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம்
தென் கூடல்
பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால்
பகர்வர் நல்லோர்.
—–திரு விளையாடல் புராணம்
மதுரைக்கு சிவ நகரம், கடம்பவனம், ஜீவன் முக்திபுரம், கன்னிபுரம், திருவாலவாய், பூலோக சிவலோகம் , சமஷ்டி விச்சாபுரம் கூடல், துவாதசாந்தத்தலம் / எண் 12 பெயர்கள் என்று பரஞ்சோதி முனிவர் திரு விளையாடல் புராணத்தில் சொல்லிக்கிறார் . இதில் சமஷ்டி விச்சாபுரம் , துவாதசாந்தத்தலம் / எண் 12 என்ற இரண்டு பெயர்கள் விநோதமானவை ; யாரும் சரியாக விளக்கவில்லை .
கன்னி புரம்– மீனாட்சி அம்மன் ஆண்டதால் ஏற்பட்ட பெயர்.
ஜீவன் முக்திபுரம்– மதுரையில் வாழும் எல்லோரும் மீனாட்சி சுந்தரேச்வரரை வணங்கினால் இப்பிறப்பிலேயே வீடுபேற்றினை அடைவர் ;
பூலோக சிவலோகம்– வரகுண பாண்டியனுக்கு மதுரையிலேயே சிவலோகத்தைக் காட்டியதால் ஏற்பட்ட பெயர்.
கடம்பவனம் – தனபதியென்ற செட்டியார் கடம்பவன காட்டில் நடந்த அதிசய நிகழ்ச்சியை குல சேகரனுக்கு அறிவித்த பின்னர் கடம்ப வன காட்டில் எழுந்த நகரம் என்பதால் ஏற்பட்ட பெயர்.
ஆலவாய் – ஒரு பாம்பு மதுரையின் எல்லையைக் காட்ட வட்டமாக நின்றதால் ஏற்பட்ட பெயர்.
நான்மாடக்கூடல் – நான்கு மேகங்களை அழைத்து சிவபெருமான் மதுரைக்குப் பாதுகாப்பு கொடுத்ததால் ஏற்பட்ட பெயர்.
கூடல்– வைகை நதியும் கிருதமலா என்ற நதியும் கூடும் இடத்தில் அமைந்ததால் ஏற்பட்ட பெயர்.
மதுரை — மதுரை நகரை அமைக்கும்போது சிவன் மதுரமான அமுதத்துளிகளைச் சிந்தியதால் மதுரை ; மதுரமான சொல் உடைய இடம் அல்லது மருத நிலம் சூழ்ந்த நகரம் அல்லது கிருஷ்ணனின் மதுராபுரியுடன் தொடர்புடைய இடம்.
இப்போது சரியாக விளக்கப்படாத இரண்டு பெயர்களைக் காண்போம்
சமஷ்டி விச்சாபுரம் ,
சிவா ஞானம் முதலிய எல்லா ஞானங்களையும் தருவதால் சமட்டி விச்சாபுரம் என்பதற்கு முழுமையான சிவஞான பட்டணம் என்று பொருள். ஆன்மாக்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினையும் அருளுவதால் இப்பெயர் ஏற்பட்டது
லிங்க அமைப்பில் வியஷ்டி லிங்கம், சமஷ்டி லிங்கம் என்ற இருவகை உண்டு. இவற்றுள் சொக்கநாதர் சமஷ்டி லிங்கமாக இருப்பதால் இத்தலம் சமஷ்டி விச்சா புரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இங்கு தரிசித்தால் ஏனைய எல்லா வியஷ்டி லிங்கத் தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும்!
துவாதசாந்தத்தலம் / எண் 12
விராட் புருஷனுக்கு உச்சிமேல் 12 அங்குல முடியிலுள்ள இடமாக இருப்பதால் ஏற்பட்ட பெயர்.
த்வாதசாந்தம் என்றால் பன்னிரெண்டின் முடிவு அல்லது பன்னிரெண்டுக்கு அப்பாற்பட்டது என்று பொருள்; ஆறு ஆதாரம், மூன்று மண்டலம், மூன்று கிரந்தி ஆகிய 12-க்கும் அப்பால் இருப்பது சஹஸ்ரார கமலம்; இங்கு இருக்கும் சக்திக்கு மனோன்மணி என்று பெயர். இவள் சிவத்தோடு அபின்னையாய் இருப்பவள் ;இவளுக்கு இரண்டே கைகள். இது மதுரை மீனாட்சியின் உருவம் ஆதலால் எண் 12 வந்தது ; சுப்ரபேதாகமம், உத்தரகாம்ய ஆகமம் முதலிய நூல்களில் மேலும் வருணனைகள் உள்ளன; காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி ஆகிய உருவங்களிலிருந்து, மதுரை மீனாட்சி வேறுபட்டது என்பதை தரிசிப்போர் எளிதில் அறியலாம். கைகள் தொங்கவிட்ட நிலையில் இருக்கும்.
****
இராமாயண சம்பவங்கள்
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது
ஏது சொல் மனம் களித்திடல் ஆமோ துரோகித(ம்) … (தான்
சொன்ன சொல்லை) மறந்த சுக்ரீவன் என்னும் பெரிய இழிந்த
குரங்கரசன் வாசலில் நின்று, “உலுத்தனே நீ தெளிவு அடையாததற்கும் உணர்ச்சி பெறாததற்கும் என்ன காரணம்? மனம் களிப்புறுதல் நியாயமா? உன் செய்கை துரோகமாகும்.
முன்பு வாலி வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த
அதிச் சரம் ஓகோ கெடாது இனி வரும்படிக்கு உரையாய் பார்
பல ஆகவம் என்று பேசி … முன்பு வாலியை வதம் செய்த வீரம்
உள்ள ஸ்ரீராமன் நான் என்பதை உலகம் எல்லாம் அறியும். இந்த
அம்பை கெட்டுப் போக விடவேண்டாம். இனியேனும் தாமதிக்காதுவரும்படிப் போய்ச் சொல்லிப் பல பேர்களின் விளைவைப் பார்ப்பாயாக” என்று (இலக்குமணர் மூலமாகச் சுக்ரீவனுக்குச்) சொல்லி அனுப்ப,
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து
அதின் மேல் ஏறி ராவணன் அரண் குலைத்து எதிர் போராடு
நாரணன் மைந்தனான அநங்கன் மைத்துன வேளே … தரும
நெறி விளங்கும் அனுமானுடன் பெரிய கடலில் அணையைக் கட்டி அந்த அணையின் மீது போய் ராவணனுடைய கோட்டைகளை அழித்து எதிர்த்துப் போராடிய (ராமனாகிய) திருமாலின் மைந்தன் மன்மதனுக்கு மைத்துனனான* தலைவனே,
கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் நலம்
கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … மயில் மீது
விளங்கும், வயலூர் வேலாயுதப் பெருமாளே, சிறப்பும் நலமும் கொண்ட திருஆனைக்கா என்னும் பதியில் வாழ்வு கொண்டவனே, தேவர்கள்தம்பிரானே.
* திருமாலின் மகள் வள்ளி. மகன் மன்மதன். எனவே, வள்ளியின் கணவன் முருகனுக்கு மன்மதன் மைத்துனன்.
***
திருவானைக்கா மதில் கதை
ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த் திரு நீறு இட்டான்
மதிள் சுற்றிய … சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற,
உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள்* சுற்றிலும் உள்ள,
பொன் திரு ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு
பெருமாளே. … அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில்
எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே.
* திருவானைக்காவில் ஐந்து மதில்கள் உள்ளன. நான்காவது மதில், திருநீறிட்டான் மதில், மிகப் பெரியது. இதைக் கட்டும் போது சிவபெருமான் ஒரு சித்தாளாகக் கூலிக்கு வேலை செய்தார். கூலியாக திருநீற்றையே கொடுக்க, அந்தத் திருநீறு பொற்காசு ஆயிற்று என்பது புராண வரலாறு – திரு ஆனைக்கா புராணம்.
To be continued………………
Tags – திருவானைக்கா, ஐந்து மதில்கள், துவாதசாந்தத்தலம், மதுரையின் பெருமை, திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 26, திருமாலை, முருகன் அடக்கிய கதை !