

Post No. 15,451
Date uploaded in Sydney, Australia – 24 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 30
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 30
தமிழ் ஓதிய குயில்?
தமிழ் ஓதிய குயிலோ மதில் ஆண்டலை ஆம் புறவம் கிளி
காடை இன் அணில் ஏர் அளி ஆம் … தமிழின் இனிமைக் குரலைக்
காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ,
காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ
என்னும்படி
குரல் வாய்ந்த அதி செம் தகு மா மிடறு ஒலியார் இதழ் ஆம்
சுளை தேன் கனியின் சுவை சேரும் … குரலை உடைய, மிக்க
செம்மையான, தக்கதான, சிறந்த கண்டத்து ஒலியை (புட்குரலை) உடைய விலைமாதர்களின் வாயிதழ் பலாச் சுளை, தேன், பழம் இவைகளின் சுவை சேர்ந்ததாகும்.
***
மொட்டைத் தலை நீண்ட சடை; சங்கரர் வள்ளளுவர் எதிரொலி

தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து …
தலையை மொட்டை அடித்தும், காவித் துணியை இடுப்பில் அணிந்தும்,
சடையை வளர்த்துப் புரிந்து புலி ஆடை … சடையை வளர்த்துக்
கொண்டும், புலியின் தோல் ஆடையை
சதிரொடு உவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து …
பெருமையாக மகிழ்ச்சியோடு அணிந்தும், சாமர்த்தியமாக புதுப்புது
கலைகளைக் கற்கத் தொடங்கியும்,
தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு கலையை மிகுத்திட்டு
அணிந்து … தவம் என்பதை அந்தச் சொல்லின் சப்தமளவே அறிந்தும் (சிறிதும் தவநிலை இல்லாமல்), விபூதியை உடல் முழுக்க மிகுத்துப் பூசியும்,
கரண வலைக்குள் புகுந்து … இந்திரியங்கள் விரித்த வலைக்குள்
வேண்டுமென்றே அகப்பட்டும்,
கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே … கதறி
வேதனைப்படும் நிலைக்கு உண்டான அழகுடனே
கனக(ம்) இயற்றித் திரிந்து துவளும் எனைச் சற்று அறிந்து …
(பொன் வேண்டி) இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து
சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து,
கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே … என் கவலையை
ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக.

வள்ளுவர் கூறுகிறார்:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)
பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
சங்கரரும் சாடுகிறார்
தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார்.
“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்
( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).
பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான். எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.

அக்ரே வன்ஹிஹி ப்ருஷ்டே பானுஹு
ராத்ரௌ சுபுக சமர்ப்பிதஜானுஹு
கரதலபிக்ஷஸ்தருதலவாசஹ
ததபி ந முஞ்சத்யாஷாபாஷஹ
துறவியாய் வெயிலில் குளிர்காய்ந்திருப்பார்;
உறங்கிட முடங்குவார் காட்டாந்தரையில் ;
கரமேந்தி உணவு; மரத்தடி வாழ்க்கை;
இருப்பினும் துறந்திலை பலவித வேட்கை.
***
பிரம்மா மீது கண்டனம்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் அதிக ஏச்சுப் பேச்சுக்கு ஆளாவது பிரம்மாதான் . பிரணவத்தின் பொருள் தெரியாததால் குட்டுப்பட்டார்; சிறைப்பாட்டார்; ஐந்து முகங்களில் ஒன்றினை இழந்து நான்முகன் ஆனார்; வள்ளுவனோ பிரம்மா அழியட்டும் என்று சபிக்கிறார். அருணகிரியும் விடவில்லை பிரம்மாவை !
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத
ராஜனுக்கும் அழியாதே … தாமரைப்பூவில் வீற்றிருக்கும் நீதி*
இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல்………………….
* நீதியற்ற வேதன் – தான் படைத்த திலோத்தமை மீது காதல் கொண்டு, அவளைப் பார்க்க அந்தத் திசையின் பக்கம் தனக்கு ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டான். ஆதலால் பிரமன் நீதி அற்றவன் ஆனான்.

பிரம்மா மீது வள்ளுவர் சாபம்!
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்- குறள் 1062
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
***
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகு!
ஆ ஆ ஆ ஆ ஆ சொற்கள் !
மாசு தோயா மாயா ஓயா நோயால் சோர்வாய் மாளக்
கடவேனோ … குற்றங்கள் தோய்ந்தும், ஒளி மழுங்கியும், முடிவில்லாத Mநோயினால் தளர்ச்சி உற்றும் இறந்துபடக் கடவேனோ?
ஞாலா மேலா வேதா போதா … பூமியில் மேம்பட்டு நிற்பவனே,
பிரமனுக்கு போதித்தவனே,
நாதா சோதிக் கிரியோனே … நாதனே, ஜோதி மலையாகிய
அருணாசலப் பிரானே,
ஞான ஆசார வான் ஆள் கோனே … ஞான மார்க்கத்தில்
முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே,
நானா வேதப் பொருளோனே … பல வகையான வேதங்களுக்கும்
உட் பொருளானவனே,
வேலா பாலா சீல ஆகாரா … வேலனே, பரமசிவ பாலனே,
பரிசுத்த வடிவனே,
வேளே வேடக் கொடி கோவே … செவ்வேளே, கொடி போன்ற
வேடப் பெண் வள்ளியின் மணவாளனே,
வீர ஆதாரா ஆறு ஆதாரா … வீரத்துக்கு ஆதாரமானவனே,
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே,
வீரா வீரப் பெருமாளே. … வீரனே, வீரமுள்ள பெருமாளே.
***
நான் கோமாளி, ஏமாளி, கபோதி, ஊதாரி, முழு முட்டாள்!

புலையனான மாவீனன் … கீழ்மகனாக மிகவும் இழிந்தவன்,
வினையிலேகு மாபாதன் … தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன்,
பொறையிலாத கோபீகன் … பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன்
முழுமூடன் புகழி லாத தாமீகன் … முழு முட்டாள், புகழில்லாத
வெறும் டாம்பீகன்,
அறிவிலாத காபோதி … அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக்
கபோதி,
பொறிகளோடி போய்வீழும் அதிசூதன் … ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன்,
நிலையிலாத கோமாளி … ஒரு நிலையில் நிற்காத கோணங்கி,
கொடையி லாத ஊதாரி … ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன்,
நெறியிலாத ஏமாளி … நல்லொழுக்கம் இல்லாத பேதை,
குலபாதன் … நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான்
நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல் … உன்
திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல்
நினையுமாறு நீமேவி யருள்வாயே … நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக.
***
நான் ஒரு முட்டாளுங்க நல்லாப் படிச்சவங்க நாலு பேரு என்ற திரைப்படப் பாடலில் நகைச் சுவை நடிகர் சந்திரபாபுவும் இதை எதிரொலிக்கிறார் :
நான் ஒரு முட்டாளுங்க!
நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க
கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
ஏ.ஏ.ஏ கைதே.. டாய்
கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாத என்னாங்க பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீசாங்க பேஜாரா பூட்டுதுங்க
நான் ஒரு முட்டாளுங்க
கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டுபோறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க
நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்சவாயன் என்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
திரைப்படம்: சகோதரி: இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: ஆர். சுதர்சனம் பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஆண்டு: 1959
***
சோமுகன் கதை
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக
சித்ர வ(ள்)ளி ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ்
பெருமாளே. … பிரமனுக்கு வேதத்தைத் தேடித் தந்த திருமாலின்*
மகளாகிய சிறுமி, (உன் மீது) மோகம் கொண்ட அழகிய வள்ளி
நாயகியின் ஆசை பூண்டு திருவண்ணாமலையில் மகிழ்ந்து
வீற்றிருக்கும் பெருமாளே.
* சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கிக் கடலுள் மறைந்தான். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடலுள் புகுந்து சோமுகனைக் கொன்று நூல்களை மீட்டார்.
***
கோடி நோய்கள் நீங்கி சிவஞான சித்தி கொடு
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி … வலிப்பு நோய்,
பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண்,
வறல்சூலை குட்டமொடு குளிர்தாகம் … உடல் இளைப்பு, வயிற்று
உளைவு, குஷ்டம், குளிர், தாகம்,
மலிநீரிழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு … மிக்க நீரிழிவு,
மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி,
களைவருநீர டைப்பினுடன் வெகுகோடி … அயர்ச்சிதரும்
மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான
சிலைநோயடைத்தவுடல் புவிமீதெடுத்துழல்கை … சீறி எழும்
நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல்
தெளியாவெ னக்குமினி முடியாதே … தெளிந்த அறிவு இல்லாத
எனக்கும் இனிமேல் முடியாது.
சிவமார்திருப்புகழை எனுநாவினிற்புகழை … மங்கலம் நிறைந்த
உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு
சிவஞான சித்திதனை யருள்வாயே … சிவஞான சித்தியை
தந்தருள்வாயாக.
—subham—
Tags- சங்கரர், வள்ளுவர், நான் ஒரு முட்டாளுங்க ,-PART 30 , பிரம்மா ,கோமாளி, ஏமாளி, அரிய செய்திகள், ஆ ஆ பாடல், மழித்தல் நீட்டல், பஜ கோவிந்தம், ஜடிலோ முண்டி, திருப்புகழ், அருணகிரிநாதர்