
Post No. 15,490
Date uploaded in Kumbakonam, India – 12 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கும்பகோணத்தில் அத்திவரதர்– ஐந்து லட்சம் பேர் தரிசனம்
கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்; பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை ஐந்து லட்சம் பேர் தரிசனம் தரிசனம் செய்தனர். 10-ம் தேதி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.இந்தச் சிலையை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை சவுராஷ்டிரா தர்மபரிபாலன கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.
****
கும்பகோணம் ஆதிவராகர் கோயில் ஒரு பழமையான வைணவத் தலம். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது ;மூலவர் சாளக்கிராம மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்புஜவல்லி தாயார் மற்றும் வராகதீர்த்தம் இத்தலத்தின் சிறப்பு.
மூலவர்: ஆதிவராகப் பெருமாள்.
பூமியைப் பாதாள உலகிற்குள் இருந்து மீட்ட ஆதிவராகர், மகாமகம் நிகழ்வதற்கு முன்பே தோன்றியவர் என்பதால் இவரை ‘ஆதிவராகர்’ என அழைக்கின்றனர். இங்கு வழிபடுவது ஞானம், அறிவு மற்றும் செல்வத்தை அளிக்கும் .
திருவிழாக்கள்: மாசிமகம், ஆவணி பவித்ரோத்ஸவம், நவராத்திரி மற்றும் கருட சேவை சிறப்பாக நடைபெறும்.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை நைவேத்தியமாகப் படைக்கும் வழக்கம் இக்கோயிலில் உள்ளது. கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
உலகில் முதலில் தோன்றிய இடம் ‘வராகபுரி’ என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர்;. மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக ‘வராக சாளக்கிராமம்’ உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.
வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.
கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்
தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக் கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.
ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்தக் கோவிலுக்கு நான் மார்ச் மாதம் பத்தாம் தேதி (2026) சென்றேன்.
–subham—
Tags- கோரைக்கிழங்கு பிரசாதம், கும்பகோணம், அத்தி வரதர், ஆதிவராஹருர், கோயில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை