விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை! (Post No.15,570)

Written by London Swaminathan

Post No. 15,570

Date uploaded in London – 3 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

64திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 64

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 64

***

எழுகரைநாடு எங்கே உள்ளது?

முருக ஷடாக்ஷர சரவண … முருகனே, ஆறெழுத்து அண்ணலே, சரவணபவனே,

கார்த்திகை முலைநுகர் பார்த்திப … கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் அருந்தி அருளிய அரசனே,

என்றுபாடி … என்றெல்லாம் பாடி,

மொழிகுழறாத் தொழுது … மொழிகள் குழறும்படி உன்னைத்

தொழுது,

அழுதழுது ஆட்பட … ஓயாமல் அழுது யான் உன்னால்

ஆட்கொள்ளப்பட,

முழுதும் அலாப்பொருள் … உலகப் பொருட்கள் யாவற்றையும்

கடந்த ஞானப் பொருளை

தந்திடாயோ … அடியேனுக்குத் தரமாட்டாயா?

பரகதி காட்டிய விரக … உபதேச* மூலமாக மோக்ஷ வீட்டைக்

காட்டிய சாமர்த்தியசாலியே,

சிலோச்சய … மலை அரசனே,

பரம பராக்ரம … மிக்க பராக்கிரமசாலியே,

சம்பராரி படவிழியாற்பொரு … மன்மதன் சாம்பலாய் அழிய

நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த

பசுபதி போற்றிய பகவதி … பசுபதி சிவபிரான் போற்றிய

பகவதியாகிய

பார்ப்பதி தந்தவாழ்வே … பார்வதி பெற்றளித்த பெருவாழ்வே,

இரைகடல் தீப்பட … அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும்,

நிசிசரர் கூப்பிட … அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும்,

எழுகிரி யார்ப்பெழ … கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு

மலைகளும் அதிர்ந்து ஆர்ப்பரிக்கவும்,

வென்றவேலா … வெற்றி கொண்ட வேலனே,

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய … தேவர்களின் உலகில்

யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய

எழுகரை நாட்டவர் தம்பிரானே. … எழுகரைநாடு** என்ற தலத்தவர்

தம்பிரானே.

அருணகிரிநாதரின் வாழ்க்கையில் முருகன் உபதேசித்து பரகதியைக் காட்டியது குறிப்பிடப்படுகிறது.

** எழுகரைநாடு இலங்கையில் உள்ள திருத்தலம். சிலர் இத்தலம் குடகு நாட்டில் உள்ளதாகவும் சொல்வர்.

***

ஞான முத்தமிழ் தேன்!

ஞான முத்தமிழ் தேனே நமோநம … ஞானப் பொருள் நிறைந்த

முத்தமிழ் வல்ல தேனே, போற்றி, போற்றி,

ஆரணற்கு அரியானே நமோநம … வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு

எட்டாத அருமையானவனே, போற்றி, போற்றி,

மன்றுள் ஆடும் தோதி தித்திமி தீதா நமோநம … அம்பலத்தில்

நடனம் செய்யும் தோதி தித்திமி தீதா என்று தாளங்களுடன்

கூத்தாடுபவனே, போற்றி, போற்றி,

வேத சித்திர ரூபா நமோநம … வேதங்களில் ஓதப்படும் அழகிய

வடிவம் உள்ளவனே, போற்றி, போற்றி,

சோபம் அற்றவர் சாமீ நமோநம … துக்க நிலையில் இல்லாதவர்

துதிக்கும் கடவுளே, போற்றி, போற்றி,

தன்ம ராச தூதனை துகை பாதா நமோநம … யம தர்மராஜன்

அனுப்பி வைத்த காலனை உதைத்த பாதங்களை உடையவனே,

போற்றி, போற்றி,

நாத சற் குரு நாதா நமோநம … நாதனே, சற்குரு நாதனே, போற்றி,

போற்றி,

ஜோதியில் ஜக ஜோதி மஹா தெவர் தம்பிரானே. … ஒளியில்

பேரொளியே, மகா தேவரான சிவபெருமானுக்கும் தனிப் பெரும்

தலைவனே.

***

விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை

வர அச்சுதநாதனார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்தம்

அது அருள்வாயே … (நீ ஞானசம்பந்தராய் வந்து)சிவ சாரூபம்

வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் பாலித்ததும்* எட்டாததுமான

மேலான பொருளை உபதேசித்து அருள்வாயாக.

நாகம் மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு …

பாம்புப் படுக்கை (ஆதிசேஷன்) மேல் துயிலும் திருமாலுக்கும், அயன்

எனப்படும் பிரமனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு

ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய நாத … ஒரு ஞான

உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கின நாதனே,

நாட்டம் உறாப் பல காலும் வேட்கையினால் புகல்

நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே … தமது கருத்தை

வைத்துப் பல பொழுதும் ஆசை கொண்டவராய் உன் திருப்புகழைச்

சொல்லிப் போற்றும் புலவர்களுக்கு திருவருள் பாலித்து, திருவடியை

அருள்கின்ற செல்வமே,

வேகம் மேற்கொள் அராப் புடை தோகை மேல் கொடு வேல்

கொடு … வேகத்தை மேற்கொண்ட பாம்பைத் துவைக்கும் மயிலின் மீது

ஏறி வேலாயுதத்தால்

வீர மாக் குலையா குலவரை சாய … வீரம் பொருந்திய மாமரமாக

நின்ற சூரனைஅழித்து, சிறப்புற்ற கிரெளஞ்ச மலை சாய்ந்து அழிய,

மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றி எனாத் தொழ …

விண்ணுலகத்தோர் பூமாரி பொழிந்து வேலாயுத மூர்த்தியே போற்றி எனக்

கூறி வணங்க,

வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே. … கடல் கலங்கி ஓலமிட,

வேலைச் செலுத்திய பெருமாளே.

காஞ்சியில் திருமேற்றளி என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டிநீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் – காஞ்சிப்புராணம்.

***

தேவியின் விநோதப் பெயர்கள்

ஆல கந்தரி மோடா மோடி … விஷம் பொருந்திய கழுத்தை

உடையவள், ஆடம்பரமுள்ள துர்க்கை,

குமாரி பிங்கலை நானா தேசி … மூப்பு இல்லாதவள்,

பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள்,

அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும் ஆன

சம்ப்ரமி … ஆசையற்றவள், சுமங்கலி, எல்லா உலகங்களையும் ஈன்று

காப்பவள், எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம்

உடையவள்,

மாதா மாதவி ஆதி அம்பிகை … துர்க்கைத் தாய், ஆதி நாயகி,

அம்பிகை,

ஞாதா ஆனவர் ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி …

எல்லாம் அறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன்

அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி,

கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி …

காலனை அழித்தவள், பரிசுத்த தேவதைகள் யாவரிலும் தூயவள்,

முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப்

பேசுபவள்,

காள கண்டி கபாலி மாலினி கலியாணி … கறுத்த நீல நிறக்

கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை

அணிந்தவள், நித்ய கல்யாணி,

காம தந்திர லீலா லோகினி … காம சாஸ்திரம் கூறும் லீலைகளை

உலகில் நடத்தி வைப்பவள்,

வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம சுந்தரி வாழ்வே … சக்தி

வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆராயப்படுபவள்,

அத்தகைய சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே,தேவர்கள் பெருமாளே. … தேவர்களின் பெருமாளே.

***

இதுவரை ஆயிரம் திருப்புகழ் பாடல்களை  ஆராய்ந்து சுவையான விஷயங்களையும் கதைகளையும் அறிந்தோம்மேலும் தொடர்வோம்.

–subham—

Tags-

திருப்புகழ்,அருணகிரிநாதர், ,அரிய செய்திகள் ,Part 63, விஷ்ணு, சிவலிங்கமாக,  மாறிய கதை, எழுகரை நாடு, தேவியின் விநோதப் பெயர்கள்

Leave a comment

Leave a comment