
Written by London Swaminathan
Post No. 15,570
Date uploaded in London – 3 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
64திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 64
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 64
***
எழுகரைநாடு எங்கே உள்ளது?
முருக ஷடாக்ஷர சரவண … முருகனே, ஆறெழுத்து அண்ணலே, சரவணபவனே,
கார்த்திகை முலைநுகர் பார்த்திப … கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் அருந்தி அருளிய அரசனே,
என்றுபாடி … என்றெல்லாம் பாடி,
மொழிகுழறாத் தொழுது … மொழிகள் குழறும்படி உன்னைத்
தொழுது,
அழுதழுது ஆட்பட … ஓயாமல் அழுது யான் உன்னால்
ஆட்கொள்ளப்பட,
முழுதும் அலாப்பொருள் … உலகப் பொருட்கள் யாவற்றையும்
கடந்த ஞானப் பொருளை
தந்திடாயோ … அடியேனுக்குத் தரமாட்டாயா?
பரகதி காட்டிய விரக … உபதேச* மூலமாக மோக்ஷ வீட்டைக்
காட்டிய சாமர்த்தியசாலியே,
சிலோச்சய … மலை அரசனே,
பரம பராக்ரம … மிக்க பராக்கிரமசாலியே,
சம்பராரி படவிழியாற்பொரு … மன்மதன் சாம்பலாய் அழிய
நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த
பசுபதி போற்றிய பகவதி … பசுபதி சிவபிரான் போற்றிய
பகவதியாகிய
பார்ப்பதி தந்தவாழ்வே … பார்வதி பெற்றளித்த பெருவாழ்வே,
இரைகடல் தீப்பட … அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும்,
நிசிசரர் கூப்பிட … அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும்,
எழுகிரி யார்ப்பெழ … கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு
மலைகளும் அதிர்ந்து ஆர்ப்பரிக்கவும்,
வென்றவேலா … வெற்றி கொண்ட வேலனே,
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய … தேவர்களின் உலகில்
யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே. … எழுகரைநாடு** என்ற தலத்தவர்
தம்பிரானே.
* அருணகிரிநாதரின் வாழ்க்கையில் முருகன் உபதேசித்து பரகதியைக் காட்டியது குறிப்பிடப்படுகிறது.
** எழுகரைநாடு இலங்கையில் உள்ள திருத்தலம். சிலர் இத்தலம் குடகு நாட்டில் உள்ளதாகவும் சொல்வர்.
***
ஞான முத்தமிழ் தேன்!
ஞான முத்தமிழ் தேனே நமோநம … ஞானப் பொருள் நிறைந்த
முத்தமிழ் வல்ல தேனே, போற்றி, போற்றி,
ஆரணற்கு அரியானே நமோநம … வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு
எட்டாத அருமையானவனே, போற்றி, போற்றி,
மன்றுள் ஆடும் தோதி தித்திமி தீதா நமோநம … அம்பலத்தில்
நடனம் செய்யும் தோதி தித்திமி தீதா என்று தாளங்களுடன்
கூத்தாடுபவனே, போற்றி, போற்றி,
வேத சித்திர ரூபா நமோநம … வேதங்களில் ஓதப்படும் அழகிய
வடிவம் உள்ளவனே, போற்றி, போற்றி,
சோபம் அற்றவர் சாமீ நமோநம … துக்க நிலையில் இல்லாதவர்
துதிக்கும் கடவுளே, போற்றி, போற்றி,
தன்ம ராச தூதனை துகை பாதா நமோநம … யம தர்மராஜன்
அனுப்பி வைத்த காலனை உதைத்த பாதங்களை உடையவனே,
போற்றி, போற்றி,
நாத சற் குரு நாதா நமோநம … நாதனே, சற்குரு நாதனே, போற்றி,
போற்றி,
ஜோதியில் ஜக ஜோதி மஹா தெவர் தம்பிரானே. … ஒளியில்
பேரொளியே, மகா தேவரான சிவபெருமானுக்கும் தனிப் பெரும்
தலைவனே.
***
விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை
வர அச்சுதநாதனார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்தம்
அது அருள்வாயே … (நீ ஞானசம்பந்தராய் வந்து), சிவ சாரூபம்
வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் பாலித்ததும்* எட்டாததுமான
மேலான பொருளை உபதேசித்து அருள்வாயாக.
நாகம் மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு …
பாம்புப் படுக்கை (ஆதிசேஷன்) மேல் துயிலும் திருமாலுக்கும், அயன்
எனப்படும் பிரமனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு
ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய நாத … ஒரு ஞான
உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கின நாதனே,
நாட்டம் உறாப் பல காலும் வேட்கையினால் புகல்
நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே … தமது கருத்தை
வைத்துப் பல பொழுதும் ஆசை கொண்டவராய் உன் திருப்புகழைச்
சொல்லிப் போற்றும் புலவர்களுக்கு திருவருள் பாலித்து, திருவடியை
அருள்கின்ற செல்வமே,
வேகம் மேற்கொள் அராப் புடை தோகை மேல் கொடு வேல்
கொடு … வேகத்தை மேற்கொண்ட பாம்பைத் துவைக்கும் மயிலின் மீது
ஏறி வேலாயுதத்தால்
வீர மாக் குலையா குலவரை சாய … வீரம் பொருந்திய மாமரமாக
நின்ற சூரனைஅழித்து, சிறப்புற்ற கிரெளஞ்ச மலை சாய்ந்து அழிய,
மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றி எனாத் தொழ …
விண்ணுலகத்தோர் பூமாரி பொழிந்து வேலாயுத மூர்த்தியே போற்றி எனக்
கூறி வணங்க,
வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே. … கடல் கலங்கி ஓலமிட,
வேலைச் செலுத்திய பெருமாளே.
* காஞ்சியில் திருமேற்றளி என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் – காஞ்சிப்புராணம்.
***
தேவியின் விநோதப் பெயர்கள்
ஆல கந்தரி மோடா மோடி … விஷம் பொருந்திய கழுத்தை
உடையவள், ஆடம்பரமுள்ள துர்க்கை,
குமாரி பிங்கலை நானா தேசி … மூப்பு இல்லாதவள்,
பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள்,
அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும் ஆன
சம்ப்ரமி … ஆசையற்றவள், சுமங்கலி, எல்லா உலகங்களையும் ஈன்று
காப்பவள், எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம்
உடையவள்,
மாதா மாதவி ஆதி அம்பிகை … துர்க்கைத் தாய், ஆதி நாயகி,
அம்பிகை,
ஞாதா ஆனவர் ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி …
எல்லாம் அறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன்
அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி,
கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி …
காலனை அழித்தவள், பரிசுத்த தேவதைகள் யாவரிலும் தூயவள்,
முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப்
பேசுபவள்,
காள கண்டி கபாலி மாலினி கலியாணி … கறுத்த நீல நிறக்
கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை
அணிந்தவள், நித்ய கல்யாணி,
காம தந்திர லீலா லோகினி … காம சாஸ்திரம் கூறும் லீலைகளை
உலகில் நடத்தி வைப்பவள்,
வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம சுந்தரி வாழ்வே … சக்தி
வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆராயப்படுபவள்,
அத்தகைய சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே,தேவர்கள் பெருமாளே. … தேவர்களின் பெருமாளே.
***
இதுவரை ஆயிரம் திருப்புகழ் பாடல்களை ஆராய்ந்து சுவையான விஷயங்களையும் கதைகளையும் அறிந்தோம்; மேலும் தொடர்வோம்.
–subham—
Tags-
திருப்புகழ்,அருணகிரிநாதர், ,அரிய செய்திகள் ,Part 63, விஷ்ணு, சிவலிங்கமாக, மாறிய கதை, எழுகரை நாடு, தேவியின் விநோதப் பெயர்கள்