இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் பற்றி நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும் பாடியது ஏன் ? (Post.15,597)

Written by London Swaminathan

Post No. 15,597

Date uploaded in London –9 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 70

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 70

***

ஐராவதம் யானைக்கு 4 தந்தங்கள்

கொம்பு நாலு உடைய வெண் கம்ப(ம்) மால் கிரி வரும்

கொண்டல் … தந்தங்கள் நான்கினைக் கொண்டதும்* வெண்ணிறமான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனன்,

புலோமசையள் சங்க்ரம பார கும்ப(ம்) மால் வரை பொருந்து

இந்த்ர பூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும்

வீரா … இந்திராணியுடைய மிக்கெழுந்தது போன்றதும், கனத்த குடம்

போன்றதும், மலை போன்றதுமான மார்பகங்களை அணையும் இந்திரன் பெற்று வளர்த்த, மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும், தேவயானையைத் திருமணம் செய்துகொண்ட வீரனே,

அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச

வானவர் உறும் சிறை மீள … கடலும், பெரிய கிரெளஞ்ச மலையும்,

மாமரமாய் நின்ற சூரனும் அன்று அஞ்சி நடுங்கவும், தேவர்கள்

அடைபட்டிருந்த சிறையினின்றும் வெளியேறவும்,

அங்க நான் மறை சொ(ல்)லும் பங்கயாசனம் இருந்து அம் கை

வேலு உற விடும் பெருமாளே. … அங்கங்களைக் கொண்ட நாலு

வேதங்களாலும் போற்றப்படுகின்ற பத்மாசனத்தில் வீற்றிருந்து, அழகிய கையில் ஏந்திய வேலாயுதத்தைப் பொருந்திச் செலுத்திய பெருமாளே.

ஐராவதம் என்னும் யானைக்கு நான்கு தந்தங்கள்.

***

வள்ளிமலையில் வளரும் தாவரங்கள்

தாதகீ சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன(ம்)

நீடு சாம வேதண்டம் … தாதகி, சண்பகம், கமுகு, சரக் கொன்றை,

நறுமணமுள்ள மந்தாரம், குருக்கத்தி, சந்தனம் இவைகள் நிறைந்து விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளி மலையில்,

வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம்

மேவும் … கொடிய கோபத்தை உடைய, வில்லை ஏந்திய, வேடர்கள் வம்சத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளி எங்களுக்கு உகந்தவளாய் பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்யும்

தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா … குற்றமே

இல்லாத வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் அழகிய குளிர்ந்த

திருவடிகள் படுகின்ற தலையை உடையவனே,

தண்டை அம் கழல் பேணி தேவி பாகம் பொருந்து ஆதி

நாதன் தொழும் தேசிகா உம்பர் தம் பெருமாளே. … பார்வதி

தேவியின் ஒரு பாகத்தில் பொருந்தி உள்ள பழம்பொருளான

சிவபெருமான் உனது தண்டையும் அழகிய கழலும் அணிந்த திருவடியை

விரும்பித் தொழுத குரு மூர்த்தியே, தேவர்களுடைய பெருமாளே.

தாதகி =ஆத்தி, ஆத்திமரம்வாசந்தி= குருக்கத்தி

***

மெளனம் என்னும் கூண்டு !

மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே … மெளனம் என்னும்

கூண்டில் இருப்பதால் சித்திக்கும் மன ஒடுக்கம் என்னும் சுக நிலையைத் தருவாயாக.

பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி

விதம் பெற ஆடல் பயில் பணா வனம் உகந்த குண மாசுண

கணம் … பரந்து செல்லும் ஆயிரக் கணக்கான கிளைகளாய் திசைகள் நோக்கும் இடமெல்லாம படர்ந்து செல்லும் கங்கை, வித விதமான ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம்,

பனி நிலா உமிழும் அம்புலி தாளி குரவு கூவிளம் அரும்பு

இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் … குளிர்ந்த

ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன், அருகம் புல், குராமலர், வில்வம், பூ அரும்புகள், கொன்றை, ஆத்தி (இவைகளைத் தமது) நீண்டு வளைந்துள்ள சடையில் அணிந்த சிவபெருமானின்

ஆகம் குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே

அமரர் தம் பெருமாளே. … உடலம் குழையும்படி அன்புடனே

தழுவிய பார்வதி நாயகி பெற்றருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே.

**

ஆயிரம் மா முகம் கங்கை ; அப்பர் பாடலை ஒப்பிடுவோம் ;

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

***

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே –பாடல் 909

***

முருகன் சேவிங்ஸ் டெபாசிட் Savings Deposit or Provident Fund

மக்களோடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில்

மீது ஏறி வருவோனே … மக்களும், விண்ணோர்களும், பல

திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து வர, களிப்பு மிகுந்த மயில் மீது ஏறி நகர்வலம் வருவோனே,

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ … சேமித்து வைத்த நிதியைப் போல விரும்பி தினந்தோறும் வந்து தொழும் அடியார்கள் வாழும்படி,

வைத்த படி மாறாத பெருமாளே. … அவர்கள் மேல் வைத்த கருணைத் திறம் நீங்காத பெருமாளே.

வைத்த மாநிதி/ பிராவிடண்ட் பண்ட்

நான் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையிலிருந்து :

நம்மாழ்வார் பாசுரங்களில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் சுவைப்போம்.

3410    வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி

கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன

பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே

சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே

    சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.

***

அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்

திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்- த்திலுள்ளது . இது மதுர கவி ஆழ்வார் பிறந்த திருத்தலம் . குபேரன் தன் செல்வத்தை வைத்த இடம் அல்லது இன்வெஸ்ட் INVEST – முதலீடு  செய்த இடமென்று சொல்லலாம்.

இந்தக் கட்டுரை இன்வெஸ்ட்மென்ட் – முதலீடு பற்றியது. வைத்த மாநிதி என்ற பெயர் மறக்க முடியாதது. நான் மதுரை தினமணிப் பத்திரிகையில் (1971-1986) சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியபோது ஒருநாள் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் (ANS) சப் எடிட்டர் உள்ள மேஜைகள் அருகே வந்து “ஏய், வைத்த மாநி என்றால் ஆங்கிலத்தில் என்ன தெரியுமா ? ப்ராவிடென்ட் பண்ட் PROVIDENT FUND ( PF) என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எங்கள் சப் எடிட்டர் குரூப்பில் ஒருவர் மட்டுமே அய்யங்கார் ;  ஏனையோர் அய்யர், பிள்ளை, கோனார் (யாதவர்) ஜாதிகளை சேர்ந்தோர். அன்று அந்த அய்யங்கார் ‘ட்யூட்டி’யில் இல்லை என்று எண்ணுகிறேன். ஆகையால் திரு ஏ என் எஸ் சொன்னதன் பொருளை பாராட்டவோ மேலே விவாதிக்கவோ யாரும் இல்லை; அவரும் அதைச் சொல்லிவிட்டு அவர் உடகார்ந்துள்ள இடத்துக்குச் சென்றுவிட்டார். இப்போது நம்மாழ்வார் பாசுரத்தைப் படிக்கும்போது அவர் சொன்னதன் ஆழ்ந்த பொருள் விளங்குகிறது!

  அவர் திருநெல்வேலி மாவட்ட ஆம்பூரைச் சேர்ந்தவர்;ஆகையால் அவருக்கு வைத்தமாநிதி திடீரென்று நினைவுக்கு வைத்தது போலும் .

இப்போது பிராவிடண்ட் பண்டு என்பதை ‘வருங்காலச் சேமிப்பு நிதி’ என்கிறார்கள். அதில் ஊழியர் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளியும் போட வேண்டும்;  முதலாளி கூடுதலாகவும் போட்டு தொழிலாளிக்கு உதவ முடியும். அதை ஒரு தொழிலாளி வீடு கட்டவோ, வீட்டில் நடக்கும் கல்யாணம் முதலியவற்றுக்கோ பாதியில் எடுத்துக்கொள்ளவும் வழி உண்டு. இதை கடவுள் பெயருக்கு வைத்து  எண்ணி எண்ணி வியப்படைகிறேன். நீங்கள் எந்தளவுக்கு பக்தி செலுத்துகிறீர்களோ அந்த அளவுக்குப் பெருமாளும் உங்கள் மீது முதலீடு செய்வார் அதாவது அருள் மழை பொழிவார்; எப்படி பி எப் -பில் முதலாளி கூடுதலாக உங்கள் பெயரில் பணம் போட முடியுமோ அது போல இறைவனும் உங்கள் பெயரில் அதிகம் அருள் மழை பொழிய- கருணை காட்ட -வாய்ப்பும் உண்டு. அதனால்தான்  மாணிக்க வாசகர் போன்ற மகான்கள் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று பாடினார்கள் போலும்!இன்னும் கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம்; தொழிலாளி சம்பளத்தில் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளி உங்கள் பி.எப் பில்  பணம் போட்டாக வேண்டும் இது போலத்தான் இறைவனும்! சத்தியம் என்னும் விதிக்கு கட்டுப்பட்டவர். ராவணன் ஆனாலும் பஸ்மாசுரன் ஆனாலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ற விகிதாசாரப்படி இறைவன் வரம் கொடுத்தே ஆக வேண்டும். எப்போது முதலாளி

 நாம் செலுத்தும் பங்கினை விட நமது பெயரில் கூடுதல் பணம் போடுவார்? அவர்கள் கம்பெனி மீது நமக்கு நல்ல எண்ணமும் நல்ல ஈடு பாடும் இருந்தால் மனம் மகிழ்ந்து கூடுதல் பணத்தை நமது அக்கவுண்டில் செலுத்துவார். அதே போல நாமும் இறைவனிடத்தில் அவரது கம்பெனி/ கோவிலில் அதிக ஈடுபாடு காட்டினால் முதலீடு பெருகும். இந்த முதலீட்டுக்கு வட்டியும் கிடைக்கும். அந்த வட்டி, குட்டியும் போடும் என்பதை நினைவிற்கொண்டு வைத்த மாநிதியை வணங்குவோம்.

வைத்த மாநிதி- ஆழ்ந்த பொருள் உள்ள நாமம் !

–subham—

Tags- இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் , நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும்,  அரிய செய்திகள் ,Part ௭௦, ஐராவதம் , 4 தந்தங்கள், வைத்த மாநிதி

Leave a comment

Leave a comment