HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 49; இந்து மத கலைச்சொல் அகராதி-49 (Post No.15, 599)

Written by London Swaminathan

Post No. 15,599

Date uploaded in London –9 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

KU words (Tamil Version )

குல தெய்வம்

ஒவ்வொரு குடும்பத்தினரும் பரம்பரை பரம்பரையாக வழிபடும் தெய்வம் ; பொதுவாக மூதாதையர் பிறந்த ஊரிலுள்ள தெய்வம் அந்தக் குடும்பத்தினரின் குலதெய்வமாக இருக்கும்; குடும்பத்தில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பெயரிலும் இதைக் காணலாம் . அந்தக் குடும்பத்தினர் உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது கல்யாணம் கார்த்திகை போன்றவைகளுக்கு முன்பாகவோ குலதெய்வத்தை வழிபடுவதற்கு வருவார்கள் ; சிறப்பான பூஜை  அபிஷேக ஆராதனைகளையும்  அப்போது செய்வார்கள்.

***

குமரிலபட்டர்

இந்து மத தத்துவங்களில் மீமாம்சகப் பிரிவு அறிஞர்களில் ஒருவர்; அவரை ஆதி சங்கரர்  , சந்திக்கச் சென்றபொழுது , அவர் உமிக்குவியலுக்கு தீ மூட்டி அதன் நடுவில் அமர்ந்து இறந்து கொண்டிருந்தார்;  புத்த மத குரு ஒருவரிடம் பொய் சொன்ன தவற்றுக்காக, பிராயசித்தமாகப் பிராணத் தியாகம் செய்த மாபெரும் இந்து அவர். தனது இறுதிக்காலம் வந்துவிட்டதால் மண்டனமிஸ்ரரைச் சந்தித்து அத்வைத தத்துவத்தை விவாதிக்கும்படியும் அனுப்பி வைத்தார் ; மீமாம்சகப் பிரிவு, வேதங்களின் கர்ம காண்டத்தில் நம்பிக்கை உடைய பிரிவு.

***

கும்பகர்ணன்

ராவணனின் சகோதரர்களில் ஒருவன்; உருவத்தில் மிகப்பெரியவன் ; ஒரு முனிவரின் சாபத்தால், ஒரு வருடத்தில் ஆறுமாதம் உறங்கு வதையே தொழிலாகக் கொண்டவன்; அவனை எழுப்புவதற்கு யானைகளும் பிரம்மாண்ட டமாரங்களும் தேவைப்பட்டன. சாப்பாட்டில் கடோத்கஜன் போல சாப்பிடுவான் ; இவனது வருணனை ராமாயணத்தில் வருகிறது ; இவனுடைய கதை மற்றும் வேதத்தில் வரும் , கட்டை விரல் அளவு மட்டுமேயுள்ள வாலகில்ய முனிவர்களின் கதை , விரலான் கதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆங்கிலத்தில் ஜோனதன் ஸ்விப்ட் என்பவர் கல்லிவர்ஸ் டிராவல்ஸ் கதையை எழுதினார் .

***

குமாரசம்பவம்

குமார சம்பவம், சம்ஸ்க்ருத மொழியி லுள்ள மஹா காவியங்களில் ஒன்று; இந்த நூலினை செய்யுள் வடிவில் உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் இயற்றினான். முருகப்பெருமானின் அவதாரத்தை எழுத வந்த காளிதாசன் இதை முடிக்கும் முன்பாகவே இறந்துவிட்டார்; இப்போதுள்ள காவியத்தில் முதல் எட்டு சர்க்கங்கள் மட்டுமே காளிதாசரின் படைப்பு ; பிற்காலத்தில் யாரோ ஒரு புலவர் ஒன்பது சர்க்கங்களை சேர்த்துவிட்டார் ; முதலிலுள்ள எட்டு சர்க்கங்களில் கூட, எட் டாவது சர்க்கத்தில் அதிகமாக காம   விஷயங்கள் இருப்பதால் பெரும்பாலோர் அதைக் கற்பிப்பதில்லை; முதலாவது சர்க்கத்தில் வரும் இமயமலை வருணனையை சங்கப்புலவர்கள் தமிழில் வடித்துள்ளனர் ; காளிதாசன் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த புலவர் ஆவார்.

***

கும்மி  –  கோலாட்டம்  பகுதியைக் காண்க  .

***

குறவஞ்சி

ஒரு குறத்தி, பெண்ணின் தாயாரிடமோ அல்லது  காதலியிடமோ வருங்கால கணவன் பற்றி குறி / ஜோதிடம் / ஆருடம் சொல்லும் சம்பவம் குறவஞ்சியில் இடம் பெறும்; இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று ; திரிகூட ராஜப்ப கவிராயர் இயற்றிய  திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் பாடல் நூல் மிகவும் சுவையானது; இதில் குற்றால மலையின் அழகு, மலையின் வளம் முதலியன பாடப்பட்டுள்ளது; நடன அரங்குகளில் ஆடுவோர் குற வஞ்சி நடனத்தைக் கடைசியில் சேர்ப்பது உண்டு ; இதில் வெறும்காதல் சுவை மட்டுமில்லாமல் பக்திக் சுவையும் இருக்கும். திரைப்படத்தில் குறவஞ்சி : 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த குறவஞ்சி திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. ஆர். ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

***

குசன் , லவன்

ராம பிரானின் இரண்டு புதல்வர்களை வடக்கில் குச லவன் என்றும் தெற்கில் லவ குசன் என்றும் சொல்லுவார்கள்  ; சீதா தேவி, வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் இருந்தபோது இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இருவரும் ராம பிரானைச் சந்தித்தபோது அவர் மகிழ்ச்சியுடன் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறார் லவ குசன் பெயரில் திரைப்படங்களும் பாடல்களும் வந்துள்ளன. பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலில் உண்மையான குசனை வனவிலங்கு விழுங்கியதாகவும் பின்னர் வால்மீகி  முனிவர் குச என்னும் புல்லைவைத்து உருவாக்கிய புதல்வனே குசன் என்றும் கற்பனைக்கதைகளைச் சேர்த்து மக்களைக் குழப்பியுள்ளனர்.

***

கும்பாபிஷேகம்/ குடமுழுக்கு

கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலைப்  புதுப்பித்து மீண்டும் மந்திர சக்தியை ஏற்றும் சடங்கு ஆகும். கட்டடங்கள் காலப்போக்கில் சிதிலமடைவதால் இந்துக்கள் இந்தச் சடங்கினைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர் .

இந்தச் சடங்கினை பேட்டரி ரீசார்ஜ்ஜிங்குடன் ஒப்பிடலாம் ; கட்டிடம் மட்டும் புதுப்பிதல்ல இது; உள்ளேயுள்ள விக்கிரகங்களுக்கும்  சக்தியை ஏற்றும் நிகழ்ச்சி இது

 கோவிலின் எல்லாப் பகுதிகளிலும் திருப்பணி செய்வார்கள்; தேவையானால் மூல விக்கிரகங்களை பாலாலயம் என்ற பெயரில் தனியாக வழிபாட்டுக்கு வைத்துவிட்டு 40 நாட்களுக்கு யாக சாலை பூஜைகளை முடித்துவிட்டு மந்திர உரு ஏற்றப்பட்ட புனித நீரை கோபுரத்தின் மீதுள்ள கலசங்களில் அபிஷேகம் செய்வார்கள்; இதைக் காண்பது புண்யம் என்பதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் கூடுவார்கள் . மடங்களுக்கும் இப்படிச் செய்வதுண்டு  மூலஸ்தானத்தில் விக்கிரகங்கள் அல்லது சிலைகளை வைக்கும் இடத்தில் அஷ்ட பந்தனம் என்னும் மருந்துக்கலவையை இட்டு தங்கம் மற்றும் இரத்தின கற்களால் அந்த இடத்தை நிரப்பி, சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்வார்கள் . அப்போதும் வேத மந்திரங்கள் உச்சரிக்கப்படும்; தமிழில் குடமுழுக்கு என்ற சொல்லைக்  கல்வெட்டுகள் உபயோகித்துள்ளன .

****

குசத்வீபம்

இந்துக்கள் அபாரமான பூகோள அறிவு படைத்தவர்கள்! ஓரிடத்தில் முக்கியமாகவுள்ள தாவரம் அல்லது பறவை அல்லது விலங்கினை வைத்து அந்த இடத்துக்குப் பெயரிட்டனர்.  ஆசிய ஆப்ரிக்க நிலப்பரப்பினை புராணங்கள் ஏழு கண்டங்களாகப் பிரித்தனர்; தமிழ் இந்துக்கள் குறிஞ்சி, முல்லை நெய்தல் ,மருதம், பாலை என்று பிரித்தனர்; புராணத்திலுள்ள ஏழு கண்டங்களில் ஒன்று குசத்வீபம்.  புராண புவியியலின்படி, இது குச புற்கள் (Kusha grass) அதிகமாகக் காணப்படும் பகுதியாகும்.

விஷ்ணு புராணத்தின்படி, வபுஷ்மான்/ஜ்யோதிஷ்மான் குசத்வீபத்தை ஆட்சி செய்தார்.

சப்தத்வீபங்கள்: இது ஜம்புத்வீபம், பிலக்ஷத்வீபம், சால்மலத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் ஆகியவற்றுடன் சேர்த்து ஏழாவது கண்டமாகக் கருதப்படுகிறது. இந்த இடங்கள் புராண ரீதியானவை மற்றும் பூமியின் தற்போதைய புவியியல் வரைபடத்துடன் நேரடியாக ஒப்பிட முடியாதவை. GEOGRAPHY OF THE PURANAS புராண பூகோளம் என்ற பெயரில் பல நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. எவரும் ஒரே பெயரைச் சொலவதில்லை! பாரத நாட்டுக்கு மட்டும் ஜம்புத்வீபம்/ நாவலந்தீவு  என்பது சங்க இலக்கியத்திலும் புராணங்களிலும் உள்ளது .

****

குண்டலினி

குண்டலினி என்பது மனித முதுகெலும்பின் அடிப்பகுதியில் (மூலாதார சக்கரம்) உறங்கும் நிலையில் இருக்கும் ஒரு சக்தி ஆகும்.  சரியான யோகப் பயிற்சிகள், தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி (வாசி யோகம்) மூலம், இந்த ஆற்றல் எழுப்பப்பட்டு முதுகுத்தண்டின் வழியாக மேலேறி, தலை உச்சியில் உள்ள சஹஸ்ரார சக்கரத்தை அடையும்போது ஞானம் ஏற்படும்.

திருப்புகழ், திருமந்திரம், விநாயகர் அகவல் , பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் முதலியவற்றில் குண்டலினி வருகிறது; தற்காலத்தில்  இது பற்றி எழுதுவோர் எவரும் அந்தச் சக்தியை அடைந்தவர் அல்ல; இந்த சக்தியை எழுப்புவோர் சில அற்புத சக்திகளைப் பெறுவதால் பாதியில் தவறான செயல்களைச் செய்து சிறைக்குப் போய்விடுகிறார்கள்  . மீதிப்பேர் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்; ஆகையால் இதை நல்ல குருநாதர் இல்லாமல் துவங்கக்கூடாது!

பாம்பு பற்றி இந்துமதத்தில், தல புராணங்களில் கதைகள் உள்ளன. நல்லதற்கும் பாம்பு; கெட்டதற்கும் பாம்பு உவமை வரும்; குண்டலினி சக்தியை எழுப்புவதைக் கூட பாம்பை சுருண்ட நிலையில் இருந்து எழுப்புவது என்ற உவமை மூலம் விளக்குவார்கள். அந்த பாம்பினை எழுப்பிவிட்டாலோ பத்து ‘பாபா’ அளவுக்கு அற்புதங்கள் செய்து காட்டலாம்.

மூலாதாரத்தில் தொடங்கி, சுழுமுனை நாடி வழியாக, மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா போன்ற சக்கரங்களைக் கடந்து சஹஸ்ராரத்தை அடைகிறது.

சஹஸ்ராரம் (Sahasrara) என்பது மனித உடலின் ஏழாவது மற்றும் மிக உயர்ந்த சக்கரமாகும், இது தலை உச்சியில் அமைந்துள்ளது (Crown Chakra). ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாகக் குறிக்கப்படும் இது, பிரபஞ்ச சக்தியுடன் ஆன்மா இணையும் இடம், பேரானந்தம், ஞானம் மற்றும் உச்சக்கட்ட ஆன்மீக உணர்தலை உணர்த்துகிறது.

குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும்.

to be continued………………………….

Tags—குல தேவதை, குண்டலினி, லவ குசன், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 49; இந்து மத கலைச்சொல் அகராதி-49, 

Leave a comment

Leave a comment