உலகை அழிக்கும் வடமுகாக்கினி பற்றி  அருணகிரிநாதர்!  Part 71 (Post No.15,601)

Written by London Swaminathan

Post No. 15,601

Date uploaded in London –10 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 71

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 71

உலகை அழிக்கும் வடவைத் தீ!

வடவாலும் வாராகர மேழுங் குடித்து … வடவாக்கினியையும்*,

நிலைத்த சமுத்திரங்கள் ஏழையும் குடித்து,

மாசூரொடு போரம் பறுத்து … பெரிய சூரனோடு செய்த போரிலே

அவன் செலுத்திய அம்புகளை அறுத்தெறிந்து,

வாணாசன மேலுந் துணித்த கதிர்வேலா … பாணங்கள் தங்கும்

இடமான வில்லையும் கூடவே வெட்டித் தள்ளிய ஒளி வேலனே,

வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து …

தேவலோகத்தை அரசாளும்படிக்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள்

என்று அழைத்து,

வானோர்பரிதாபந் தவிர்த்த பெருமாளே. … தேவர்களின்

பரிதபிக்கத்தக்க துக்கநிலையை நீக்கிய பெருமாளே.

பிரளய காலத்தில் உலகம் அழியுமுன் வடக்கிலுள்ள கடலுக்கடியிலிருந்து வரும் நெருப்பு அலையை ‘வடவாக்கினி’ என்பர்.

இதையே சம்க்ருதத்தில் படவா என்று சொல்லி, பெண்குதிரை வடிவிலுள்ள தீ என்றும் செப்புவர். விளக்கம் கீழே உள்ளது

அற்புதத்த திருப்புகழ் தேன்!

அற்புதத் திருப்புகழ் தேன் ஊற ஓதி … மிக அற்புதமாக

அமைந்துள்ள திருப்புகழ்ப் பாக்களை தேன் ஊறிய இனிமையுடன் பாடி,

எத்திசைப் புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் …

எல்லா திசைகளிலும் நான் எழுதி அனுப்பும் கடிதமோ பாடலோ

ராஜமரியாதையுடன் போற்றப்படத்தக்க மேன்மையை எனக்கு அருளிச் செய்ததும்,

இடர் ஆழி ஏறாத மா மலத்ரய குணத்ரய … துன்பக்

கடலினின்றும் கரை ஏற முடியாத பெரிய மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும்,

நானா விகார புற்புதம் பிறப்பு அற … பலவிதமான கலக்கங்கள்

(காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், டும்பு, அசூயை

எனப்பட்ட துர்க் குணங்கள்) கூடியதும், நீர்க்குமிழிபோல் தோன்றி

மறைவதுமான பிறப்பும் நீங்கும்படியாக

ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே … இன்பம்

தரும் வகையில் எனக்கு வரமாகத் தந்து அருளியதும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

மா நாகம் நாண் வலுப்புறத் துவக்கி … வாசுகி என்னும் பெரிய

பாம்பாகிய கயிற்றை பலமாகக் கட்டியுள்ள

ஒர் மா மேரு பூதரத் தனுப் பிடித்து … ஒப்பற்ற பெரிய மேரு

மலையாகிய வில்லைப் பிடித்து,

ஒரு மால் ஆய வாளியைத் தொடுத்து … சிறந்த திருமாலாகிய

அம்பைச் செலுத்தி,

துவார பாலகர் யார்?


அரக்கரில் ஒரு மூவர் மாளாது பாதகம் புரத்ரயத்தவர்

தூளாகவே … அங்கிருந்த அசுரர்களில்மூன்று பேர்* மட்டும் இறந்து போகாமல், பாபச் செயலில் ஈடுபட்டிருந்த திரிபுரத்து அசுரர்கள் பொடியாய் விழ,

நுதல் சிரித்த வித்தகர் வாழ்வே … முன்பு புன்முறுவல் செய்து

எரித்த, பேரறிஞராகிய சிவபெருமான் பெற்ற செல்வமே,

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்— சுந்தரர் தேவாரம்.

***

அருணகிரிநாதர் குறிப்பிடும்

வடமுகாக்கினி என்றால் என்ன ?

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. அவைகளில் மூன்று பாக்களில் எந்தெந்த ஐந்து விசயங்களை நினைவிற் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன. அவைகளில் ஜீரண சக்திக்கான ஐந்து பேர்கள் விநோதமாகவுள்ளன. அதில் ஒன்று சனிக் கிரகம். அட, ஜீரண சக்திக்கு அஷ்ட சூர்ணம் சாப்பிடு, த்ரிபலா சூர்ணம் சாப்பிடு என்று சொல்லாமல் கீழ்கண்ட ஐந்து பேரை நினை என்று சொல்லுகிறது அந்த செய்யுள்:

அகஸ்திம் கும்பகர்ணம் ச சனிம்  ச வடவானலம்

ஆஹாரபரிபாகார்த்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம்

அகஸ்தியர், கும்பகர்ணன், சனிவடவைத் தீ, பீமன் (வ்ருகோதரன்) ஆகிய ஐந்து பேரை நினைத்தால் ஜீரணம் எளிதாகும் என்கிறது இந்தப் பா!

அகஸ்தியர்: இல்வலன் என்ற அசுரன் எல்லோரையும் கொல்லப் பயன்படுத்தும் தந்திரத்தை அகஸ்தியரிடமும் பயன்படுத்த முயன்றபோது அவர் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வயிற்றைத் தடவவே, இல்வலனின் சகோதரனான வாதாபி ஜீர்ணமாகி விடுகிறான் என்பது புராணக் கதை. அகஸ்தியர் கடலைக் குடித்தார், அகஸ்தியர் கமண்டலத்திலிருந்து காவிரி வந்தது, அகஸ்தியர் விந்தியமலையை கர்வபங்கம் செய்தார், அகஸ்தியரை மக்கட் தொகைப் பெருக்கத்தால் சிவபெருமான் தெற்கே அனுப்பிவைத்தார் என்பன எல்லாம் விஞ்ஞான பூர்வ அல்லது வரலாற்று ரீதியிலான விஷயங்கள்- வெறும் புராணக் கதைகள் அல்ல என்பதை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்.

கும்பகர்ணன்:- ராவணனின் தம்பியான கும்பகர்ணன் ஆறு மாதம் சாப்பிட்டுவிட்டு ஆறுமாதம் நிம்மதியாகத் தூங்குவான். அவனுக்கு ஒரு உடற்  பிரச்சனையும் ஏற்படவில்லை. நல்ல ஜீரண சக்த்திக்கு நிம்மதியான உறக்கம் தேவை!

வடவைத்தீ: கடலுக்கடியில் சீறும் எரிமலைகளால் சுனாமி போன்ற ஆபத்துகளும்பெரும் தீயும் உண்டாகி பேரழிவை உண்டாக்குவதை நாம் அறிவோம். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் மர்மத் தீ உண்டானது பற்றியும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

கடலுக்கடியில் எப்போதும் இருக்கும் வடவாக்கினிக்கும் ஜீரண சக்திக்கும் என்ன தொடர்பு ? புரியவில்லையே என்று யோசித்துப் பார்த்தேன்; பின்னர் ஒரு முடிவுக்கு வந்தேன்; எப்படி பூமிக்கடியிலுள்ள தீஇந்த உலகினை  நிலைநிறுத்திகிறதோ அல்லது அழிக்கிறதோ அதே போல நமது அடிவயிற்றில் ஜடராக்கினி உள்ளது ; இதை நாலு விதமாக ஆயுர்வேதம் பிரிக்கிறது; இந்த ஜடராக்கினி நன்றாக இருந்தால் ஜீரணம் நன்றாக இருக்கும் .

உடலில் உள்ள நாலு அக்கினி / தீ

Jataragni is the primary “digestive fire” in Ayurveda, located in the abdomen and small intestine, responsible for breaking down food, absorbing nutrients, and metabolizing tissue. As the central metabolic force (or “fire of the belly”), its strength determines health or disease, requiring care for proper digestion.

Functions: It controls hunger, digestion, and assimilation, turning food into energy.

Health Impact: A strong jataragni ensures vitality and immunity, while a weak one (mandagni) leads to the accumulation of toxins.

Types: Ayurveda classifies digestion strength into four types based on the doshas: Samagni (balanced), Vishamagni (variable), Tikshanagni (sharp/intense), and Mandagni (slow).

சமாக்கினி  – சரி சமமமனது ;

விஷமாக்கினி – மாறுபடக் கூ டிய தீ ;

தீக்ஷனாக்கினி – தீவிரமானது;

மந்தாக்கினி – மந்தமானது ;

இவைகளில் மந்தமான மந்தாக்கினி அஜீரணத்தை உண்டாக்கும் என்கிறது ஆயுர்வேத சாஸ்திரம் ;

பூமிக்கடியில் — நடுப்பாகத்தில் பல்லாயிரக்கணக்கான டிகிரி வெப்பமுள்ள இரும்புக் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது அதன் விளைவு பற்றி இன்னும் விஞ்ஞானிகள்  கூட  அறியவில்லை ஏனெனில் பூமியின் நடுப்பாகத்தை அடைய 4000 மைல்கள் போக வேண்டும். மனிதன் இதுவரை தோண்டியதோ நூறு மைல் கூட இல்லை ! அதற்கு மேல் தோண்ட முடியவில்லை ஆக அங்குள்ள அக்கினிதான் பூமிக்கும் “ஜீரண சக்தியைத்” தருகிறதோ என்னவோ தெரியாது !

பீமன்/வ்ருகோதரன்: பீமனின் அசுரப் பசி உலகிற்கே தெரிந்ததுதான். பகாசுரனுக்காக பல வண்டிகளில்  வைக்கப்பட்டிருந்த உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டவன் அவன். ஒரு அஜீரணக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டதில்லை.

சனி: இந்தப் பட்டியலில் மிகவும் புரிந்துகொள்ள கடினமானது சனிக் கிரகம் தான். அதற்கும் ஜீரணத்துக்கும் என்ன தொடர்பு என்று வியப்போம். சனிக் கிரஹம், உடலுறுப்புகளில் பாதத்துக்கும் பெருங்குடலுக்கும் அதிபதி. உலோகங்களில் இரும்புக்கு அதிபதி. இரும்புச் சத்து ரத்தத்தில் குறைந்தால் எல்லா உறுப்புகளும் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும். ஹீமோக்ளோபின் என்ற இரத்தச் சிவப்பணுக்களுக்கு இரும்பு தேவை என்பதை எனது நண்பர் கல்யாண குருக்கள் சுட்டிக்காட்டினார். மேலும் சனிக் கிரஹமே ஆயுள்காரகன். ஒருவன் இறப்பதும், இருப்பதும் சனியின் வேலையே.ஆக சனிக்கும் ஜீரணத்துகுமுள்ள தொடர்பு சரியே!

வடமுகாக்கினி

.கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்

உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்

ஊழித் தீ அல்லது மடங்கல் என்று சங்கத் தமிழ் நூல்கள் கூறுவது வடமுகாக்னி என்னும் வடவைத் தீயைத்தான். இதைப் பற்றி பல புராணக் கதைகள் உண்டு.

இதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்

1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்)  கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.

2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.

பதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:

“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”

பல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.

இதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான். நெபுலா என்பது வானத்தில் தூசியும் வாயுவும் மிதக்கும் ஒரு இடமாகும். ஒரு நட்சத்திரம் பிறக்கும் இடம் இது. ஒரு நட்சத்திரம் இறந்த பின்னரும் இப்படி தூசி, வாயுவைக் கக்கும். திருவாதிரை, மிருகசீர்ஷம் விண்மீன்கள் உடைய ‘ஒரையன்’ தொகுதியில் குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ இருக்கிறது. இதை பைனாகுலர், டெலஸ்கோப்பு கொண்டு பார்க்கலாம். ஆனால் இதற்கும் குதிரை முகத் தீக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஊழித் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.

கபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர்.

வடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். ஆனால் இது வடவைத் தீ அல்ல.

ஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம். இது உலகை அழித்தது இல்லை என்பதால் இதையும் வடவை தீ இல்லை என்றே சொல்லவேண்டும். பின்னர் வேறு எதைத் தான் நம் முன்னோர்கள் வடவைத் தீ என்று சொன்னார்கள்? இதற்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.

—subham—

Tags- வடமுகாக்கினி ,அருணகிரிநாதர், அரிய செய்திகள், Part 71, துவார பாலகர் யார்? ஜீரண சக்தி, வடவைத் தீ, “குதிரை முகம்” கொண்ட தீ

Leave a comment

Leave a comment