

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,605
Date uploaded in London – 11 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பரபரப்பூட்டும் ஹார்முஸ் நீரிணை!
ச. நாகராஜன்
இன்று உலகத்தையே பரபரப்பாக்கும் ஒரு விஷயம் நாளுக்கு நாள் அனைத்து பொருள்களின் விலையும் ஏறிக் கொண்டே இருப்பதாகும்.
இதற்குக் காரணம் ஒரு சின்ன கடல் வழி என்றால் ஆச்சரியமாக இல்லை.
ஹார்முஸ் நீரிணை என்ற ஒரு சிறிய ஆழமில்லாத நீரிணை (ஜலசந்தி) தான் இதற்குக் காரணமாகும். இது ஈரானுக்கு வடக்கே உள்ளது. இதன் வழியே தான் ஒரு மைல் அகலமுள்ள இரண்டு கால்வாய்கள் வழியே ஒரு நாளைக்கு இரண்டு கோடி பீப்பாய் எரிபொருள் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. அப்பப்பா, இவ்வளவா என்றால், இது உண்மை தான். இதனால் தான் சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கிடைக்கிறது – அதாவது இந்த நாடுகளில் கார்களும் இதர வாகனங்களும் ஓடுகின்றன. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் ஆரம்பித்த போரால் ஈரான் இந்த ஹார்முஸ் நீரிணை வழியே எண்ணெயை ஏற்றிச் செல்ல தடை விதித்து விட்டது. இந்த நீரிணையின் ஒடுங்கிய பகுதி 21 மைல் அகலம் கொண்டது. ஆகவே இந்த குறுகிய வழியில் எண்ணெயை ஏற்றிக் கொண்டு செல்லும் கப்பல்கள் நிச்சயமாக இந்தத் தடையை மீற முடியாது.
ஈரானுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய தீவு தான் ஹார்முஸ்.
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் செல்லக் கூடாது என்று ஈரான் அறிவித்த உடனேயே உலகெங்கும் பெட்ரோல், டீஸல் விலை ஏறத் தொடங்கி விட்டது. ஒரு பேரல் (பீப்பாய்) 69 டாலராக இருந்தது, போரினால் 74 டாலர் ஆகி இப்போது 90 டாலருக்கு வந்து நிற்கிறது. இப்போது இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதன் விளைவாகத் தான் அனைத்துப் பொருள்களின் விலையும் ஏறுகிறது.
நீரிணையில் கடலுக்கு அடியே சுரங்க வெடிபொருளை வைத்தால் அதன் மீது மோதும் எண்ணெய் கப்பல்களின் கதி அதோகதி தான்.
இது தவிர சீறிப் பாய்ந்து வரும் ஈரானின் சிறிய படகுகள் கப்பலின் மீது வெடிகுண்டு வீசுவோம் அல்லது மோதுவோம் என்று சொல்லும் போது எந்த நாட்டிற்குத் தான் பெரிய கப்பலைக் கொண்டு போக தைரியம் வரும்? கப்பலைத் தாக்கும் ஏவுகணைகளை சுலபமாக ஈரானால் ஏவ முடியும்.ஆகாய மார்க்கமாக தற்கொலை ட்ரோன்கள் மோதினால் இன்னும் பெரிய அபாயம் அல்லவா உண்டாகும்!
கப்பலை வழி நடத்தச் செல்ல முன்னும் பின்னும் பாதுகாப்பு ராணுவக் கப்பல்கள் போகலாம்; ஆனால் அவ்வளவு கப்பல்கள் யாரிடமும் இல்லை!
இவற்றால் தான் ஈரானைக் கண்டு உலக நாடுகள் இன்று பயப்படுகின்றன.
இந்த பயத்தைப் போக்க வழி உண்டா? உண்டு, ஒரே ஒரு வழி இருக்கிறது.
அது போரை நிறுத்துவது தான்!
**