மே 2019 ஞான ஆலயம் மாத இதழில் எனது இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.அவற்றில்
ஒன்று இது:
அதிசயங்கள் பல கண்ட அற்புத
பூமி அயோத்தி!
ச.நாகராஜன்
அயோத்தி ராம ஜென்ம பூமி என்ற சிறப்பை மட்டும் கொண்டதல்ல; அவதாரத்தின்
அடிப்படையிலான ஏராளமான அற்புதங்களைக் கொண்ட பூமியுமாகும்.
ஒரே ஒரு அற்புதத்தை மட்டும் இங்கு பார்ப்போம்:
அப்துல் பர்கர் என்ற ஒரு முஸ்லீம் ஹவில்தார் ராம ஜென்ம பூமியில்
அவுட்போஸ்டில் இரவு நேரக் காவல் காத்து வந்தார்.
அவர் டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட் முன் ஒரு வாக்குமூலத்தைத் தானே
முன்வந்து தந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறிய அற்புத சம்பவம் இது:
1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி.
இரவு நேரக் காவல் பார்த்து வந்த அவர் அன்று இரவு 2 மணிக்கு ஒரு
பேரொளியை ஆலயத்தின் உள்ளே கண்டார். பொன்மயமான அந்த ஒளி ஒரு நான்கு அல்லது ஐந்து வயதுடைய
தங்க நிற பாலகன் ஒருவனிடமிருந்து வந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட பேரொளியை அவர்
தன் வாழ்க்கையில் கண்டதே இல்லை. ஒளி வெள்ளத்தில் மூழ்கி அவர் சமாதி நிலையை எய்தி விட்டார்.
தனக்கு உணர்வு வந்த போது ஆலயத்தின் பிரதான வாயிலின் பூட்டு உடைந்து கிடந்தது. ஏராளமானோர்
கோவிலின் வாயிலில் குழுமி இருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்து பக்தி பரவசத்துடன் ஆரத்தியை
எடுத்துக் கொண்டிருந்தனர்.
டவுன் போலீஸ் ஸ்டேஷனும்
ஒரு அதிகாரபூர்வமான பதிவைச் செய்திருந்தது. ஆறாயிரம் பேர் பூட்டை உடைத்து உள்ளே சென்று
பக்தி பரவசத்துடன் ராம விக்ரஹத்திற்கு ஆரத்தி எடுத்ததை அந்த ரிகார்டும் உறுதிப் படுத்தியது.
ஆக ராம ஜென்ம பூமியில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்த வழிபாடு
1949 வரை தொடர்ந்திருக்கிறது.
ராம ஜென்ம பூமி ராம ஜெனனத்தை மட்டும் கொண்ட பூமி அல்ல; அவனது
சரிதத்தை உலகியல் மொழியில் ராமசரித மானஸ் என்று துளஸிதாஸர் (1532 – 1623) இயற்றிய இடமும்
கூட அயோத்தி தான்!
துளஸிதாஸரின் வாழ்க்கை அற்புதமான சம்பவங்களைக் கொண்டது.
அவர் கர்ப்பத்தில் 12 மாதம் இருந்தது, பிறக்கும் போது 32 பற்களுடன்
பிறந்தது போன்ற ஏராளமான அதிசய விஷயங்களைப்
பொதுவாக அனைவரும் அறிவர். அவர் ராம பக்தராக மாறிய சம்பவமும் அதிசயமான ஒன்று தான்.
அவரது மனைவி மீது கொண்ட ஆசையால் அவர் மனைவி தனது பிறந்தகம் சென்ற
போது அவரைத் தொடர்ந்து பின்னால் சென்றார் துளஸிதாஸர்.
அதைப் பார்த்த அவர் மனைவி, “எனது இந்த சதை மீதும் எலும்பின்
மீதும் கொண்டிருக்கும் பற்றைப் போல ராமபிரானின் மீது கொண்டால் பிறப்பு இறப்பு பயம்
நீங்குமே” என்று சொல்ல கண நேரத்தில் உலக வாழ்க்கையைத் துறந்து மஹா ஞானியானார்
அவர்.
பாரத தேசமெங்கும் சுற்றி அலைந்து அனைத்து ஸ்தலங்களுக்கும் விஜயம்
செய்து பக்தி மேலிட நெகிழ்ந்தார்; உருகினார்.
பின்னர் வாரணாசிக்கு அவர் வந்த போது அயோத்திக்குச் செல்லுமாறு
இறைவனின் திருவருள் ஆணை பிறந்தது.
அயோத்தி சென்றார் அவர்.
அவர் துளஸி ராமாயணத்தை இயற்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று
உண்டு.
வால்மீகி ராமாயணத்தை இயற்றிய போது அதைப் படித்து அதற்கு தனது
கையெழுத்திட்டு அங்கீகாரம் தந்தார் ராமபிரான்.
ஹனுமானும் ராம சரிதத்தை எழுத ஆசைப்பட்டு கற்களில் தன் நகங்களால்
ராம சரிதத்தை எழுதினார்.
தனது ராமாயணத்தை ராமபிரானிடம் அவர் காண்பிக்க,
ராமபிரான், அதுவும் சரிதான் என்று கூறி விட்டு,, “ஆனால்ஏற்கனவே
வால்மீகி ராமாயணத்தில் கையெழுத்திட்டு விட்டதால் அதில் தன்னால் கையெழுத்திட முடியாது
என்றும் வால்மீகியிடம் சென்று அதைக் காண்பிக்குமாறும் அருளுரை பகர்ந்தார்.
ஹனுமான் வால்மீகியிடம் சென்றார்; தனது ஹனுமத் ராமாயணத்தைக் காட்டினார்.’அதைப் படித்து
வியந்த வால்மீகி தனது ராமாயணம் அதற்கு முன் நிற்காது என்ற முடிவில் ஹனுமனது ராமாயணத்தைக்
கடலில் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
வால்மீகி கூறியபடி தனது ராமாயணத்தைக் கடலில் போட்ட ஹனுமார் இனி
வரும் காலத்தில் தானே துளஸி என்ற பெயருடைய ஒரு பிராமணருக்கு உத்வேகம் ஊட்டி, தனது ராமாயணத்தை
எல்லா மக்களும் எளிதில் அறியும் மொழியில் இயற்றச் செய்யப் போவதாக அருளுரை பகர்ந்தார்.
அதன் படியே நடந்தது. அயோத்திக்குச் சென்ற துளஸிதாஸர் அங்கு ஒரு
ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார். அந்த இடம் அவருக்கு ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது. ஒரு
சாது அந்த இடத்தைப் பீடத்தால் அலங்கரித்து துளஸிதாஸர் அங்கு வருவதைத் தன் குரு முன்னதாகவே
கணித்துச் சொல்லி விட்டார் என்று கூறினார்.
1575ஆம் ஆண்டு ராம நவமி நாள். அறிஞர்களின் கூற்றுப்படி திரேதா
யுகத்தில் ராமர் பிறந்த நாளில் எந்த கிரக நிலைகள் இருந்தனவோ அதே கிரக சேர்க்கை அமைந்த
நாள் அது. ராமரைத் துதித்து தன் ராமசரிதமானஸ் காவியத்தைத்த் தொடங்கினார் துளஸிதாஸர்.
ஏழு காண்டங்களை எளிய மொழியில் பாடினார். மானஸ சரோவருக்கு ஏழுபடிகள்
வழியே செல்வதாக உள்ள கருத்துப்பட ராமசரித மானஸ் என்ற பெயரை தான் இயற்றிய ராமாயணத்திற்குச்
சூட்டினார்.
இரண்டு வருடம் ஏழு மாதம் 26 நாட்களில் அற்புதமான காவியம் முடிந்தது.
அது முடிந்த நாள், சீதா கல்யாணம் நடந்த அதே ஆண்டு விழா நாள்.
சரிதத்தைப் பூர்த்தி செய்த துளஸிதாஸர் வாரணாசி திரும்பினார்.
அங்கு அவரது காவியத்தின் பெருமை பரவியது. இது பொறுக்காத பண்டிதர்கள் சிலர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுவடிக் கட்டை எடுத்து வருமாறு இருவரை அனுப்பவே அவர்கள் ஆலயத்திற்கு இரவு நேரத்தில் சென்றனர்.
ஆனால் அங்கு இருவர் வில்லும் அம்புடனும் காவல் காத்து வருவதைப்
பார்த்து அதிசயித்த அவர்கள் மறுநாள் துளஸிதாஸரை வணங்கி மன்னிப்புக் கேட்டு நடந்ததைக்
கூறினர்.
அமிர்தமே நாணமடையும் படியான சுவையான சொற்கள் கொண்டது எனப் புகழப்படும்
காவியம் மக்களிடையே பரவி ராம பக்தியை வளர்த்தது.
சித்ரகூடத்தில் ராம தரிசனம் பெற்ற துளஸிதாஸர் சமாதி நிலையை எய்தினார்.
ஆக அயோத்தி ராம ஜென்ம பூமி என்ற சிறப்புடன் கோடிக் கணக்கான மக்கள்
அன்றாடம் பய பக்தியுடன் போற்றும் ராம சரித மானஸ் காவியம் பிறந்த இடமும் கூட என்பதனால்
அதன் சிறப்பு மேலும் கூடுகிறது.
12 நூல்களைப் படைத்த துளஸிதாஸர் சம்ஸ்கிருத பண்டிதரும் கூட.
ராமசரித மானஸ் காவியத்தில் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான விஷயம்
அதிசயமானது. வால்மீகியின் ராமாயணத்தில் ஒவ்வொரு ஆயிரமாவது ஸ்லோகத்திலும் ஒரு காயத்ரி
மந்திரத்தின் ஒரு எழுத்து தோன்றும். ராமசரித மானஸிலோ ஒவ்வொரு செய்யுளிலும் ச, த, ர,
ம வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து வரும்.சீதாராமன் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள்
இந்த ச, த, ர, ம வர்க்க எழுத்துக்கள். ஆக சீதை அல்லது ராமனை ஒவ்வொரு செய்யுளிலும் துதிக்கும்படியான
ஒரு அற்புத அமைப்பு துளஸி ராமாயணத்தில் உள்ளது. காவியத்தின் கதையையும் சொல்ல வேண்டும்,
சந்த சாஸ்திரத்தின் படியும் அமைக்க வேண்டும், சீதாராமன் என்ற சொல்லில் உள்ள வார்த்தைகளில்
ஏதேனுமொரு வார்த்தையைக் குறிக்கும் வர்க்க எழுத்தையும் தர வேண்டும் என்றால் அது மனித
யத்தனத்திற்கு அப்பாற்பட்ட இறை செயல் அல்லவா? ராமனே தனது ஜென்ம பூமியில் தன் நினைவை
மக்களுக்கு ஒவ்வொரு செய்யுளிலும் தரும் வரம் அல்லவா இது!
ஆக இப்படி ஆயிரக்கணக்கில் அற்புதங்கள் நிரம்பிய பூமி அயோத்யா.
அதில் ராமனை பிரதிஷ்டை செய்து காலம் காலமாகச் செய்து வந்த வழிபாட்டை வழக்கம் போல செய்ய
சீதாராமன் அருள் புரிவாராக!
பத்திராசுவன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு 500 மனைவிகள்.
அவர்களில் காந்திமதி என்பவள் பேரழகி. தன் கணவனின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவள். அவளை
அவன் பட்டமகிஷி ஆக்கினான். மன்னனின் இதர மனைவிகளும் காந்திமதி மீது மிக்க மரியாதையும்
மதிப்பும் கொண்டிருந்தனர்.
நல்ல முறையில் பத்திராசுவன் தனது நாட்டை ஆண்டு வருகையில் ஒரு
நாள் அகத்திய முனிவர் அவனது அரண்மனைக்கு வந்தார். பத்திராசுவன் பெரு மகிழ்ச்சி அடைந்து
அவரை உரிய முறையில் வரவேற்று உபசரித்தான்.
அகத்தியர் அவனை நோக்கி, “மன்னா! நான் இங்கு ஏழு நாட்கள் தங்க
விரும்புகிறேன்” என்று கூறினார்.
“தாங்கள் எத்தனை காலம் தங்க விரும்புகிறீர்களோ அத்தனை காலம்
இங்கு தங்கலாம்” என மன்னன் பதில் கூறினான்.
முதல் நாளில் அகத்தியர் கூறியது:
முதல் நாளன்று அகத்தியர் பத்திராசுவனின் மனைவியான காந்திமதியைப்
பார்த்து, “ஸாது, ஸாது, ஜெகந்நாத!” என்றார். அதாவது, “ஹே! லோக நாயகனே! நன்று , நன்று” என்பது இதன்
பொருளாகிறது.
இரண்டாம் நாளில் அகத்தியர் கூறியது :
இரண்டாம் நாளன்று அகத்தியர் ராஜ பத்னியான காந்திமதியை நோக்கி,
“இந்த உலகம் மோசம் போயிருக்கிறது. ஆ! என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்!” என்றார்.
மூன்றாம் நாளில் அகத்தியர் கூறியது :
மூன்றாவது நாளன்று அகத்தியர் பட்டமகிஷியை நோக்கி, “ஒரே தினத்தில்
செய்த பகவத் கைங்கரியத்தினால் சந்தோஷமடைந்து அரசன் ஆகும்படியான் பதவியை அளித்த மஹாவிஷ்ணுவின்
பெருமையை இந்த மூடர்கள் அறியவில்லையே! ஆ! கஷ்டம்! கஷ்டம்!!” என்றார்.
நான்காவது தினத்தில் அகத்தியர் கூறியது :
நான்காம் தினத்தன்று அகத்தியர் காந்திமதியைப் பார்த்துக் கை
கூப்பிக் கொண்டு, “ஓ! ஜெகந்நாதரே! நல்லது, நல்லது, ஓ, பிராமணர்களே, க்ஷத்ரியர்களே,
வைச்யர்களே, சூத்திரர்களே! பெண்களே! உங்களின் அனுஷ்டானங்கள் வெகு அழகாயிருக்கின்றன.
பத்ராசுவனே! நீ ஒருவன் நல்ல யோக்கியன்!
உயர்ந்த விரத சீலர்களான பிரகலாதரே, துருவரே! நீங்கள் பரம சாதுக்கள்” என்று கூறினார்.
பின்னர் அரசன் முன் ஆனந்தக் கூத்தாடினார்.
பத்திராசுவன் இதைப் பார்த்து வியப்படைந்தான்.
அகத்தியரிடம் தன் பத்னியுடன் வந்து கை கூப்பி வணங்கியவாறே,
“ஓ! மாமுனிவரே! தாங்கள் இப்படி சந்தொஷமடைந்து ஆனந்தக் கூத்தாடுவதன் காரணம் என்ன? எங்களுக்குச்
சொல்லுங்கள்” என்று பணிவுடன் வேண்டினான்.
அகத்தியர் மன்னனைப் பார்த்து, “ ஓ! மன்னா! நீ ஒன்றும் அறியாத
நிந்திக்கத் தக்க மூடனே! கஷ்டம், கஷ்டம், உன் பரிவாரங்களும் கூட மூடர்களே! உன்னுடைய
அரசவை புரோகிதர்களும் கூட மூடர்கள் தாம்! உங்களில் ஒருவர் கூட என் கருத்தை அறியவில்லை” என்றார்.
அரசன் அவரிடம், “ஐயனே! நீங்கள் கூறுவதை எங்களால் அறியவே முடியவில்லை;
விளக்கமாகக் கூறி அருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.
அகத்தியர் தான் கூறியதை நன்கு விளக்க ஆரம்பித்தார் இப்படி :
“ஓ மன்னா! உனது பத்தினியாகிய காந்திமதி முன் ஜென்மத்தில் ஒரு
வணிகனின் வீட்டில் வேலை பார்த்து வந்தாள். அப்போது அவளுடைய கணவனாக நீ இருந்தாய்; அதே
வணிகனிடம் நீயும் ஊழியம் செய்து வந்தாய். ஒரு நாள் அந்த வணிகன் ஐப்பசி மாத துவாதசி
விரதத்தை மஹாவிஷ்ணுவின் கோவிலில் அனுஷ்டித்தான்; பின்னர் உங்கள் இருவரையும் கோவிலில்
ஏற்றி வைத்த விளக்குகள் அணைந்து போகாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டான்.
பின்னர் வீட்டிற்குத் திரும்பினான்.
எஜமானின் கட்டளையை சிரமேற்கொண்ட நீங்கள் இருவரும் ஊக்கத்துடன்
இரவு முழுவதும் விழித்திருந்து காலை வரை தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி
அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருந்தீர்கள். அந்தப் புண்ணியத்தால் நீ ப்ரியவிருதனுடைய
வம்சத்தில் ஜெனிக்கும்படியாகவும் இந்த புண்ணியவதி உனக்கு பட்டமகிஷி ஆகும்படியாகவும்
உள்ள பாக்கியத்தை அடைந்தீர்கள்.
பிறர் சம்பந்தமான தீபங்களைப் பாதுகாத்துப் பிரகாசிக்கச் செய்த ஒரு செய்கையினாலேயே இவ்வித விசேஷ பலன்கள் கிடைக்கும் போது தனது சொந்தப் பணத்தினாலும் சேவையினாலும் தீபங்களைப் பிரகாசிக்கச் செய்யும் ஒருவனுடைய புண்ணியத்தை எப்படி அளவிட முடியும்?
இதனால் தான் நான் ஏன் இதை ஒருவரும் அறிய முடியாத மூடர்களாக இருக்கிறார்கள்
என்று கூத்தாடினேன்.
பிரகலாதர் அசுர குலத்தில் பிறந்தவர்; துருவரோ சிறு குழந்தை,
பட்டத்துக்கு உரியவர். என்ற போதிலும் அவர்கள் இருவரும் மிகுந்த பக்தியுடன் விஷ்ணுவை
ஆராதித்து ஒப்பற்ற உயர்ந்த பதவிகளை அடைந்தனர்.”
அகத்தியர் இவ்வாறு விரிவாகக் கூறி முடித்தார்.
இதைக் கேட்ட மன்னனும் அரசியும் ஆனந்தமடைந்தனர். அகத்தியரை வணங்கி
தங்களுக்கு பத்மநாப துவாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க உபதேசித்து அருள வேண்டுமென்று
பிரார்த்தித்தனர்.
அகத்தியரும் அந்த விரத முறையை அவர்களுக்கு உபதேசித்து அருளினார்.
பின்னர் அவர் புஷ்கர க்ஷேத்திரம் நோக்கிச் சென்றார்.
மன்னனும் அரசியும் அந்த விரதத்தை அனுஷ்டித்து நீண்ட காலம் அரசை
ஆண்டனர்; பின்னர் வைகுண்ட பதவியையும் அடைந்தன்ர்.
வராக புராணத்தில் வரும் சரித்திரம் இது.
இதனால் அகத்தியரின் மஹிமையும் அவரது ஆற்றலையும் தெரிந்து கொள்கிறோம்.
சிறிய புண்ணிய காரியம் கூட பெரிய நல்ல விளைவை வாழ்வில் ஏற்படுத்தும்.