ஏணியா, தோணியா? எது வேண்டும்?

ladderVocational-

thoni

கட்டுரையாளர்; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:928 தேதி 24 மார்ச் 2014.

சம்ஸ்கிருதத்தில் நியாயங்கள் என்று ஒரு பிரிவு உண்டு. தர்க்க சாஸ்திரத்தில் இடு பயன்படுத்தப்படும். அதாவது ஒன்றைக் கொண்டு ஒன்றை அனுமானிப்பது — இதற்குக் காரணம் இது என்று காட்டி புரிய வைப்பது. எடுத்துக் காட்டாக தமிழில் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”– என்ற பழமொழி அல்லது முது மொழி இருக்கிறது. இதை ‘ஸ்தாலி புலாக நியாயம்’ என்று வடமொழியில் கூறுவர். இது போல மற்கட (குரங்கு) நியாயம், மார்ஜர (பூனை) நியாயம் என்று ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன?

மற்கட நியாயம், மார்ஜர நியாயம்

இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.

பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.

குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.

பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.

சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.

white cat kitten

A macaque monkey, with an offspring clut

இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.

ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.

தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.

இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)

பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.

அப்பர், மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள் தங்களைப் பல முறை நாயேன் என்று கூறிக்கொள்ளுவர். அவர்கள் அவ்வளவு தாழ்ந்தவர்கள் அல்ல. நாயைப் போன்ற இழிகுணம் உள்ளவர்களும் கடைத்தேற முடியும் என்பதைக் காட்டவே – நம்பிக்கை ஊட்டவே — இப்படி அடிக்கடி பாடுகின்றனர். ஆக சிவன் என்னும் கடவுள் சாதாரண ஏணியோ, தோணியோ அல்ல. சம்சாகர சாகரத்தைக் கடக்க உதவும் ஏணி/தோணி!!

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என்.ராமசந்திரன் இதை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்:–

On His matted hair He fosters a goodly crescent
He is the ladder leading His devotees mad after Him
To moksha; unto me caught up in a male storm
Of the sea of misery. He is the ark that transports me
To the other shore; He, the wearer of swaying white kuzai
Is the pure lustre unto me. His serviteur; He is
The touchstone of the radiant golden coin; He is the Hara
That abides at cool Avaduthurai; I,the lowly cur,
Reached His feet and stand redeemed. (Thevaram 6-461)
Contact swami_48@yahoo.com

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி!

brahmanabad.

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 927 தேதி 24 மார்ச் 2014

இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் பற்றி தெற்கே வசிக்கும் மக்களுக்கு அதிகம் தெரியாது. காரணம் என்ன வென்றால் இது நடந்தது பாகிஸ்தானிலும் ஆப்கனிஸ்தானிலும். இந்த இரண்டு நாடுகளும் இப்போது முஸ்லீம் நாடுகளாக ஆகிவிட்டன. முஸ்லீம் நாடுகள் அவர்களுடைய பழைய வரலாற்றைப் பாராட்ட முடியாது. அது மத விரோதச் செயல் ஆகிவிடும். இரண்டாவது காரணம் பிராமணர்கள் ஆட்சி செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்லுவதால் அவர்களும் பெருமை பாராட்ட முடியாது. சங்கத் தமிழ் நூல்களும் அதற்குப் பின்வந்த திருக்குறள் முதலிய அற நூட்களும் பிராமணர்களை ‘அறு தொழிலோர்’ என்றே அழைக்கின்றன. இந்த 6 தொழில்களில் ஆளும் தொழில் கிடையாது.

சாஸ்திரம் ஒருபுறம் இருக்க, பிராமணர்கள் ஆட்சி புரிந்த செய்தியை கிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர்களும், 2700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற, உலகின் முதல் இலக்கண வித்தகரான பாணினியும் எழுதி வைத்துள்ளனர். இது தவிர பாகிஸ்தானையும் ஆப்கனிஸ்தானத்தையும் ஆண்ட பிராமண அரசர்கள் பற்றி அராபிய யாத்ரீகர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர். கி. மு. 700 க்கு முன் துவங்கிய பிராமணர் ஆட்சி, கி.பி.712ல் சிந்து மாகாணத்தில் அராபிய படைத்தளபதி முகமது பின் காசிம் நுழைந்தது வரை நீடித்தது. அதற்குப் பின் 1000 ஆண்டுகளுக்கு “அன்பிலா அந்நியர் ஆட்சி” (பாரதி பாடல் வரிகள்) இந்தியாவில் நடந்ததை நாம் அறிவோம். இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியை 1200 முதல் 1600 வரை ஆரிய சக்ரவர்த்திகள் என்னும் பிராமணர்கள் ஆண்டனர். இவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழ் பிராமணர்கள்.

ராமாயண காலத்தில் ராவணன் என்னும் பிராமணன் இலங்கையை ஆண்டான். ஆனால் அவன் 100 விழுக்காடு பிராமணன் இல்லை. தந்தை பிராமணன், தாய் ராக்ஷச வம்சம். தாய்க்கு யக்ஷர்களுடனும் தொடர்பு உண்டு. ஆக ராவணன் பாதிப் பிராமணன், பாதி ராக்ஷசன். ராமாயணத்தில் ஸ்ரீ இராம பிரானே, ஓரிடத்தில், ராவணனை, ஏ, மஹா பிராமணனே! என்று அழைப்பதாக வால்மீகி முனிவர் எழுதியுள்ளார். இப்படி அசுரக் கலப்புடன் பிறந்தவர்களை பிரம்ம-ராக்ஷச வம்சம் என்பர்.

Rajaraja Chola I Chola Ruler
Statue of Hindu King Raja Raja Choza

ராமனுக்குப் பிறகு கிருஷ்ணர் வந்தார். அவரது காலத்தில் துரோணர், கிருபர், அஸ்வத்தாமன் போன்ற வல்லமை வாய்ந்த பிராமண வீரர்கள் போரில் ஈடுபட்டதையும் ஆயுதப் பயிற்சி கொடுத்ததையும் அறிகிறோம். ஆயினும் அவர்கள் அரசு கட்டிலில் அமரவில்லை. போரில் முரசு கொட்டியதோடு நின்றுவிட்டனர்.

ஆயுதப் பயிற்சி பெற்றவுடன, கற்ற கல்விக்கு எவ்வளவு ‘பீஸ்’ (குரு தட்சிணை) என்று பாண்டவர்கள் கேட்டனர். துரோணர் சொன்னார்: “ எனக்கு பணம் எதுவும் வேண்டாம். என்னை சிறு வயதில் அவமானப் படுத்திய பஞ்சாப் (பாஞ்சால) மன்னன் துருபதனைக் கட்டி இழுத்துவா”. உலகப் புகழ்பெற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு இது கொசுவைப் பிடித்து வா என்று சொல்வது போல. ‘சென்றான், வென்றான்’, துருபதனைத் தேர்ச் சக்கரத்தில் கட்டி இழுத்துவந்தான். அப்போது துரோணர் பஞ்சாப் பகுதியில் பாதியை எடுத்துக் கொண்டு மீதியை துருபதனிடமே கொடுத்து விரட்டிவிட்டார். ஆனால் அவர் எடுத்துக்கொண்ட ராஜ்யத்தை அவர் ஆண்டதாகத் தெரியவில்லை.

பரசுராமர் (கோடாலி ராமன்) என்ற பிராமணருக்கு க்ஷத்ரியர்கள் மீது கோபம். ஆகையால் 21 க்ஷத்ரிய மன்னர்களை வெட்டி வீழ்த்தினார். ஆனால் அவரும் ஆண்டதாக நமது இதிஹாச புராணங்கள் சொல்லவில்லை. வடமேற்கு இந்தியாவில் மட்டும் ஆட்சி செய்தது புரியாத புதிராக இருக்கிறது!

சாணக்கியர் (கௌடில்யர்) எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பிராமணர் படைகளை விட மற்ற மூன்று வர்னத்தினர் கொண்ட படைகளைத்தான் அரசன் அமைக்கவேண்டும் என்பார். காரணம், எதிரிகள் தங்கள் காலில் விழுந்தால் உடனே பார்ப்பனர்கள் மன்னித்துவிடுவர்.. ஆகையால் அவர்கள் படைகளுக்கு லாயக்கு இல்லை (அர்த்த சாஸ்திரம் 9-2-21/24) என்பார்.

King Karikala

Statue of Hindu King Karikala

இது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் பிராமண அக்ரஹாரங்களும், பிராமண கிராமங்களும்தான் முதலில் முஸ்லீம் மயமாகின. மற்ற ஜாதியினர் அவர்களை உள்ளே விடமாட்டார்கள்.. மார்க்கோபோலோ என்ற இதாலிய யாத்ரீகனும் பிராமண ஜாதியை மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். எல்லோரும் சத்தியத்தின் உறைவிடமாகத் திகழ்ந்த பிராமணர்களை நடுவர்களாக வைத்துகொண்டு வியாபாரம் செய்தனர் என்று!! ( இது 800 வருஷத்துக்கு முந்திய பார்ப்பனர்களின் கதை!!! இப்போது யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்!!!)

இதற்குப் பின் வரலாற்று காலத்தில் இந்தியாவை ஆண்ட பிராமணர்கள் பற்றி நமக்கு ஏராளமான செய்திகள் கிடைக்கின்றன. சுங்க வம்சம், கண்வ வம்சம் சாதவாகனர்கள், கங்க வம்சம், வாகடர்கள் ஆகியோர் பிராமணர்கள். பல்லவர்கள், மற்றும் ‘தத்தா’ என்ற பெயர் உடைய பல அரசர்கள், பஞ்சாபின் மொஹியால்கள், வங்காள அரசர்கள் பலரும் பிராமணர்கள் தான். இவர்களை பிரம்ம கஷத்ரியர்கள் என்பர். அதாவது 50% பிராமணர், 50% க்ஷத்ரியர்!!

நமது காலத்தில் ஜவஹர்லால் நேரு குடும்பம் முதல் தேசாய், வாஜ்பாயீ, நரசிம்மராவ் வரை பல பிரதமர்களும் ஐந்து ஜனாதிபதிகளும் பிராமணர்கள்தான். ஆனால் நான் சொல்ல வந்த பிராமண ஆட்சி —வரலாறு அறியாத கால— பிராமணர் ஆட்சி!

அலெக்சாண்டர் வென்ற பிராமணன்

அலெக்ஸாண்டர் படை எடுத்த கி. மு. நான்காம் நூற்றாண்டில் பிராமண ராஜ்யத்தை அவர் வெற்றி கொண்டதாக கிரேக்க வரலாற்று ஆசிரியர் கூறுவர். சிந்து மாகாணத்தை சம்பூ என்ற பிராமணன் ஆண்டதாக சிந்தி வரலாறு கூறுகிறது. பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ ( எட்டு அத்தியாயம்) என்ற சம்ஸ்க்ருத நூலில் ‘’பிராமணக’’ என்ற நாட்டைக் குறிப்பிடுகிறார். பிராமண சாம்ராஜ்யங்கள் வெளியிட்ட நாணயங்களும் இப்போது கிடைக்கின்றன. பிராமணர்களை பிராக்மேன், பிரஹ்மன், பாஹ்மன் என்று பாரசீக ,கிரேக்க நூல்கள் குறிப்பிடும். யாராவது ஒருவர் இந்தத்துறையில் ஆய்வு செய்தால் சிந்து சமவெளியை ஆண்ட அரசர்கள் வரை கண்டுபிடித்து விடலாம்!!
shivaji_19178

Picture of great Hindu king Veera Shivaji

பாணினி கி.மு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக ஆர்.ஜி.பண்டார்கர், கோல்டுஸ்டக்கர் போன்ற அறிஞர்கள் கூறுவர். கௌடில்யர் என்ற பிராமணர் எழுதிய உலகின் முதல் பொருளியல் நூலான அர்த்த சாஸ்திரத்தில் அப்போது இருந்த நாடுகளின் பெயர்கள் வருகின்றன. அவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததை எல்லோரும் ஒப்புகொள்வர். அவர் குறிப்பிடும் வடமேற்குப் பகுதி தேசங்களுக்கும் பாணினி குறிப்பிடும் வடமேற்குப் பகுதி தேசங்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதால், பாணினிக்கு கி.மு.700 என்ற தேதியே சரி என்பது புலனாகும்.

சிந்து மாகாணத்தின் சோகக் கதை

சிந்து மாகாணத்தை ஆண்ட கடைசி இந்து மன்னன் ராஜா தகிர். அவர் ஒரு பிராமணர். மஹா வீரன். அராபிய முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்களும் அவர் இறுதி வரை போரிட்டதைப் புகழ்ந்துள்ளனர். ஆனால் பெண்களிடத்தில் பலவீனம் உடையவர். அவருக்கு முன்னால் அந்த இடத்தை 140 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த பௌத்தர்களையும் , ரஜபுதன வீரர்களையும் மட்டமாக நடத்தினார். எல்லா அடிப்படை உரிமைகளையும் பறித்தார். இதனால், முகமது பின் காசிம் ஆறு மாத காலம் முற்றுகையிட்டுத் திணறிய காலத்தில், கோட்டைக்குள்ளிருந்து ரகசிய தகவல்களை முஸ்லீம் படைகளுக்கு எழுதி அனுப்பினர். ராஜா தகிருக்கு உதவவும் மறுத்தனர். அதற்குப் பின் வெற்றி கண்ட இராக்கிய அராபிய தளபதி முகமது பின் காசிம் ஆயிரக் கணக்கான வீரர்களைப் பிடித்து தலைகளைச் சீவினார். ‘டன்’ கணக்கில் தங்கத்தை மூல்டான் (மூலஸ்தானம் சூரியன் கோவில்) கோவிலில் இருந்தும் அரண்மனையில் இருந்தும் இராக் நாட்டிற்கு அனுப்பிவைத்தார். ராஜா தகீரின் மகன் ஜசியாவும் மஹா வீரன். ஆனால் அவன் உதவி கேட்டு பல மன்னர்களுக்கு எழுதிய கடிதங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது.

brahminabad3

பிராமணாபாத் நகர இடிபாடுகள்

சிந்து மாகாணத்தில் இப்போது பிராமணாபாத் என்ற ஒரு ஊர் உண்டு இடிபாடுகள் நிறந்த ஊர். ஒரு காலத்தில் சிந்து மாகாண அரசர்களின் கோடைகாலத் தலைநகராகக் கொடி கட்டிப் பறந்த நகரம். பிரம்மண்டமான கோட்டை கொத்தளம் நிறைந்த இடம். அராபியர்கள் இதை தரை மட்டம் ஆக்கியதால் பின்னர் இந்நகரம் எழுந்திருக்கவே இல்லை! பக்கத்தில் அல் மன்சுரா என்ற இடத்தை பின்னர் உருவாக்கினர். ஆனால் மக்களுக்கு பிராமணாபாத் நினைவு நீங்கவே இல்லை. அதையும் பிராமணாபாத் என்று அழைக்கத்துவங்கிவிட்டனர். இந்த ஊரில் இருந்த அத்தனை செல்வத்தையும் அராபியப் படைகள் இராக் நாட்டிற்குக் கடத்திவிட்டதால் யாருக்கும் இதைப் பற்றி ஆர்வமே இல்லாமல் இன்னும் இடிபாடுகளுடன் காட்சி தருகிறது. சிந்து சம்வெளியைப் பற்றி முதலில் புத்தகம் எழுதிய ஒரு வங்காளி அறிஞர் சிந்து சமவெளி நாகரீகமே இதைச் சேர்ந்ததுதான் என்று எழுதினார். மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரங்கள் மிகவும் அதிக தொலைவு இல்லை. இப்பொழுதைய பாகிஸ்தானிய ஹைதராபாத் அருகில் பிராமணாபாத் இருக்கிறது.

(ஆகமதாபாத், அல்லாஹாபாத் என்று முடியும் நகரங்களில் உள்ள ‘பாத்’ என்பது பாரசீகச் சொல் என்று சொல்வர். அது பிழையே. ஜனபத என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து இது வந்தது என்பதை வடமொழி வல்லுனர்கள் அறிவர்).

பிராமணர்களுக்கு முன் சிந்து மாகாணத்தில் 140 ஆண்டுகளுக்கு புத்தமத ஆட்சி நடந்ததும் ஒரு புதிர்தான். அங்கு சித்தூர் (ராஜஸ்தான்) மன்னன் உதவியுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங் எழுதியப் பயணக் குறிப்புகளில், நாட்டின் வளத்தைப் புகழ்ந்துள்ளார். ஆனால் புத்தமதப் பிட்சுக்கள் பேராசைக் காரர்களாகவும் பெண் பித்தர்களாகவும் இருப்பதாக இகழ்ந்துள்ளார்.

சிந்து மாகணத்தில் எப்போது இப்படி பிராமண ஆட்சி துவங்கியது என்று தெரியவில்லை பாணினியின் எழுத்தைக் கொண்டு பார்கையில் கி.மு 700 வாக்கில் ‘’பிராமணக’’ தேசம் இருந்தது தெரிகிறது. புராண காலத்தில் சிந்துத்வீப அம்பரிஷனும், மஹா பாரத காலத்தில் ஜயத்ரதனும் சிந்து சமவெளியை ஆண்டது நமது நூலகளில் உள்ளது. ஒருவேளை சிந்து சமவெளி நாகரீகமே பிராமண-ஷத்ரிய நாகரீகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. அங்கே யாக குண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டதையும், முத்திரைகளில் காணப்படும் வடிகட்டி, சோம பானம் செய்யும் வடிகட்டிப் பாத்திரம்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் இனம் காணத் துவங்கிவிட்டனர். அது மட்டுமல்ல. அங்கே கிடைத்த யோகி முத்திரை பிராமண வேத விற்பன்னர்கள் அணியும் பூப்போட்ட சால்வையை அணிந்திருப்பதும் அவர் இடது தோளில் அதைப் போட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். இன்றும் வேதம் சொல்லும் பார்ப்பனர்களும் யாகம் செய்யும் பார்ப்பனர்களும் இதே மாதிரியில்தான் சால்வை அணிவர்.

Moovendar

Picture of three great Tamil kings. They were present together at the Rajasuuya Yagna performed by the Choza king. Avvaiyar praised their unity.

முகமது நபி இஸ்லாம் மதத்தை ஸ்தாபிப்பதற்கு முன்பே காபா கோவில் மெக்காவில் இருந்ததை உலகமே அறியும். அங்கு காபா கோவிலைச் சுற்றும் முஸ்லீம்களும் இப்படி வேத விற்பன்னர்கள் போல இடது தோளில் வெள்ளை வேஷ்டி, துண்டு அணிந்து சுற்றுவதையும் படத்தில் பார்த்திருப்பீர்கள். ஒரே வித்தியாசம். அவர்கள் வலமாகச் சுற்றுவதில்லை.

பணம் இருந்தால் வாழ்நாள் முழுவதையும் இந்த ஆராய்ச்சியில் செலவிட எனக்கும் ஆசைதான்!

Please read the following posts:
1.How Old is Indian Civilisation posted on 8th November 2011
2.BIGGEST BRAINWASH IN THE WORLD posted 13th September 2012
3.Megasthenes did not know Buddha 16 June 2013
4.Sanskrit Words in the Bible 14 July 2012 & August 2012
5. Elephants Lost, Cats Won: A sad story from Indian History 12/03/2014

இந்த ஆங்கிலக் கட்டுரைகள் தமிழிலும் உள்ளன

Contact swami_48@yahoo.com

காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!!

shiva kicking yama,singapore

Painting at Singapore temple (from twcenter.net)

காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!!

கட்டுரையாளர் ; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 925 தேதி: 23 March 2014.

ஞானிகளுக்கு மரணம் என்பது உடைகளை மாற்றுவது போல.

“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

என்கிறார் பட்டினத்தார்.”ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச” (2-27) என்று பகவான் கிருஷ்ணன் கூறியதன் விளக்கமே இது.

உலகில் எதையும் இரண்டாகப் பார்ப்பவர்களுக்குதான் பயம் என்பது உண்டு என்று ஞானிகள் பகர்வர். இதைப் படிப்பது எளிது. ஆனால் செயலில் கொண்டுவருவது எளிதல்ல. இந்து மதத்தின் எல்லா சடங்குகளும், ஒருவரை, இந்த திசையில் அழைத்துச் செல்லும்.

sculpture yama

Shiva kicking Yama to save Markandeya.

உலகிலேயே மிக வினோதமான பிரார்த்தனை இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது! எல்லோரும் தன்னலம், குடும்ப நலம், நாட்டு நலத்துக்குப் பிரார்த்திப்பர். ஆனால் இந்துக்கள் மட்டும் இந்த மூன்று நலத்தோடு வேறு ஒன்றையும் சேர்த்துக் கொள்வர். எந்தக் காலத்திலும் எனக்கு ஜன்ம, ம்ருத்யு (பிறப்பு,இறப்பு) வர்க்கூடாது என்று. இதை பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், ஆழ்வார் பாடல். தேவாரத் திருவாசகப் பாடல்கள் எல்லாவற்றிலும் காணலாம்.”இனி பிறவாமை வேண்டும், பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்”– என்று பிரார்த்திப்பதில் எல்லோரும் முன்னிற்பர்.

ஆகையால் ஞானிகளுக்கு எமதர்மனை எள்ளி நகையாடும் பக்குவம் வந்துவிடுகிறது. இதைப் படிக்கும் நமக்கும் மரண பயம் நீங்கி விடுகிறது. நான் லண்டனில் ஒரு மருத்துவ மனையில் பகுதி நேர மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்தேன். ஒரு விஷயத்தை வெள்ளைக்கார டாக்டர்கள் புரிந்துகொள்ள முடியாவே இல்லை.

yama kicked

பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒருவர் இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவார்கள் என்று தெரிந்தால் அதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுவர். ஆனால் மிகவும் பக்குவமாக, பீடிகை போட்டு, மெதுவாக, அழகாகச் சொல்லுவர். இப்படிப் பலருக்கு மரணச் செய்தி அறிவிக்கும் கட்டியங்காரனாக வேலை பார்ப்பது எனது வேலையின் ஒரு சிறு பகுதிதான். இப்படிப்பட்ட ஒரு கெட்ட செய்தியைக் கொடுத்தபிறகு அவர்கள் “தொச்சு” கொட்டிக்கொண்டு, அலட்சியமாக நான் “இப்பவே ரெடி, காடு வா என்கிறது, நாடு போ போ”– என்கிறது என்பர். இதை நான் அப்படியே மொழி பெயர்த்தால் வெளி நாட்டு டாக்டர்களுக்குப் புரியாது. கொஞ்சம் கலாசாரப் பின்னனி வசனங்களைப் பேசிவிட்டு விளக்குவேன். நோயாளிகளின் முகத்தில் பயங்கரமான அதிர்ச்சி (ஷாக்) வரும் என்று எதிர்பார்த்த டாக்டரின் முகத்தில் நான் ஷாக்கையும் வியப்பையும் ஒருங்கே காண்பேன்.

இதுதான் இந்து மதத்தின் மிகவும் வியப்பான பகுதி. வேதத்தில் உள்ள எல்லாப் பிரார்த்தனைகளும் நமக்கு ‘பாஸிட்டிவ்’ எண்ணங்களை உண்டாக்குவதோடு நமக்கு உள்ளே “ஷாக் அப்சார்பர்” களையும் பதித்துவிடும். ஆகையால் எந்தக் கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்ள முடிகிறது. இதை உலகம் முழுதும் நாம் பரப்பினால் தற்கொலைகள் குறைந்துவிடும். ‘சைக்கியாட்ரிஸ்ட்’, ‘சைகாலஜிஸ்ட்’ எல்லோருக்கும் வேலை மிக மிகக் குறைந்துவிடும்.

(‘சைக்கியாட்ரிஸ்ட்’ என்பவர் மன நோயை மருந்து மூலம் குணமாக்குபவர். ‘சைகாலஜிஸ்ட்’ என்பவர் மன நோயை ஆறுதல்–ஆலோசனை வழங்கல் மூலம் குணமாக்குபவர்.)
நமது ஞானிகளின் ஆவேசத்தைக் கீழ்கண்ட பாடல்களில் பாருங்கள்:

1.திருமூலர் என்ன சொல்கிறார்: ‘ஞான வாளால் எமனை வெட்டுவேன்!’
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே (Tirumanthiram)

எமன் வந்தால் ஞான வாளால் அவனை வெற்றி கொள்வேன். சிவன் வந்தாலோ தயக்கமின்றி அவரோடு போவேன். பிறவிப் பிணி தொடர்வதற்கான காரணங்களை முன்னரே துண்டித்து விட்டேன். இனி தவ வலிமை பெற்றவர்களுக்கு எதிராக யாராவது நிற்கமுடியுமா? எனக்கு எதிரி எவரும் இல்லை.(Tirumanthiram)

2.பாரதியின் வீரம்! ‘’உன்னைப் புல் போல மிதிப்பேன்!’’

‘’காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்’’ — என்பார் பாரதி.

அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? அதற்கு அவரே கூறும் பதில்:

“ஆன்ம ஒளிக்கடலில் மூழ்கித் திளைப்பவருக்கு
அச்சம் உண்டோடா? – மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா.”—(பாரதி பாடல்)

shiva killas yama

நம்மாழ்வார் திருவாய் மொழி
3.பாரதியாக்கு மிகவும் பிடித்த நம்மாழ்வாரும் நமன் எதிர்ப்பு அணியில் சேர்ந்து பாடுகிறார்:
பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்;
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை;
கலியும் கெடும்; கண்டுகொண்மின்;
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மையப் புகுந்து, இசை பாடி,
ஆடி, உழிதரக் கண்டோம் (திருவாய்மொழி)

3.அருணகிரிநாதர் பாடுவார்: ‘’முருகன் அருகில் இருக்க பயமா?’’

“நாள் என் செயும், வினைதான் என் செயும், எனை நாடிவந்த
கோள் என் செயும் , கொடுங்கூற்று என் செயும், குமரேசர் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்
தோளும்,கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
(39, கந்தர் அலங்காரம்)

4.அப்பர் சூளுரை: ‘’சிந்தையில் சிவன் இருந்தால் பயமேது?’’

நாமார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை –(6-961)

5.பட்டினத்தார் பாடுகிறார்: ‘’நமனை வெல்ல மந்திரம்!’’

நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள், நோக்கங்கள் நோக்குதற்கே (43,பொது)

கையில் கம்பு இருந்தால் நாய் பற்றிய பயம் போய்விடும். பிச்சை கேட்டுக் கொஞ்சம் உணவு கிடைத்தால் போதும். சோறு பற்றிய கவலையே இல்லை. நமச்சிவாய என்ற மந்திரத்தை சொல்லுவோருக்கு எம பயம் இல்லை. திரு நீறு அணிவோருக்கு பேய் பயமில்லை. பிறவிப் பிணிக்கு கடவுளின் அருள் இருந்தால் போதும். இந்தப் பிறவிப் பிணியைத்தான் வள்ளுவன் திருக்குறளின் முதல் அதிகாரத்திலேயே செப்பிவிட்டான். இதுதான் இந்துக்களின் தனிச் சிறப்பு.

நசிகேதன் என்ற சிறுவனும், சாவித்திரி என்ற பத்தினிப் பெண்ணும் எமனுடன் வாதாடி வெற்றி பெற்றனர். மார்க்கண்டேயன் என்ற 16 வயதுச் சிறுவன் சிவ பக்தியால் — என்றும் 16 வயது — என்ற வரம் பெற்றான் என்பதையும் இத்தருணத்தே நினைத்தால், மரண பயம் நீங்கி, அப்பர் சொல்வது போல ‘’இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்று நாமும் பாடி ஆடலாம்.

Please read my earlier post: முன்னர் எழுதிய கட்டுரையும் காண்க:
தமிழில் யமன்

contact swami_48@yahoo.com

ஜகத்குரு போப் தரிசனம்–அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவப் பயணம்-Part 2

கட்டுரை எண் 923 தேதி 22 மார்ச் 2014.

DSCF0671

Hercules Statue in the Vatican Museum. It was taken during my second trip to Rome in Italy in 2012.

அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவப் பயணம்-Part 2
ஜகத்குரு போப் தரிசனம்

மகாமேரு யாத்திரை என்ற புத்தகம் 1936ல் அரியநாயகிபுரம் அனந்தகிருஷ்ண சாஸ்திரிகளால் வெளியிடப்பட்டது. முதல் பகுதியில் சில சுவையான விஷயங்களைக் கண்டோம். இந்த இரண்டாவது பகுதியில் ரோமாபுரி பற்றி அவர் எழுதியதைக் கீழே படியுங்கள்:

1.உடனே அந்தக் கப்பலில் ஏறி மெடிட்டரேனியன் கடல் வழியாக வடமேற்கில் 1118 மைல் தூரத்தில் இருக்கிற இடாலி தேசத்திலுள்ள் நேபில்ஸ் பட்டணம் வந்து இறங்கினேன். நேபில்ஸ் நகரைப்பற்ரிய பழமொழி ஒன்று உண்டு. அஃதாவது ‘மரணமடையு முன் மனிதன் நேபில்ஸ் பட்டணம் பார்க்க வேண்டும்’ என்பதாம்.. அந்தப் பட்டணத்திலிருந்து 18 மைல் தூரத்தில் வஸூவியஸ் என்ற எரிமலை ஒன்று இருக்கிறது.அந்த மலையில் எரிகிற அக்னியைப் பார்க்கலாம். அங்கே மேற்பார்வைக்கென்று அமர்த்தப்பட்டிருக்கும் போலீஸ்காரன் உடன் வந்து தீ எரிகிறதைக் காண்பிக்கிறான்.

2.அந்த எரிமலைக்கு மேற்கே 25 மைல் தூரத்திலிருந்த பாம்ப்பே பட்டணமானது எரிமலைப் பிரவாகத்தினால் கி.பி.79 ஆம் ஆண்டில் அழிந்து இப்போது சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெட்டி எடுக்கப்பட்டது. அங்கே 176 தெருக்கள் இருந்திருக்கின்றன. பட்டணத்தின் நடுவில் சூரியன் கோவில் ஒன்று உண்டு. அதற்கு ஜூபிடர் ஆலயம் என்று பெயர். ஜூபிடர் என்பது வேதத்தில் ‘தியௌப் பிதா’ என்ற சொல்லின் சிதைவாம். நம் ஆரியர்களுடைய புராதனமான நாகரீகத்தை கிரேக்கர் பின்பற்றினர். கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தவுடன் இந்த வைதீகப் பூஜைச் சடங்குகள் எல்லாம் மெள்ள மெள்ள மாறிவிட்டன. பாம்ப்பே கோயிலை நீங்கள் பார்த்தால் இதை மலையாளத்திலுள்ள ஒரு கோயிலென்று சொல்லுவீர்கள்.

3.பரதகண்டத்துக் கணித சாஸ்திர வித்வான்கள் அநேகர் ரோமாபுரிக்குப் போய்ச் சில காலம் அங்கே வசித்திருக்கிறர்கள். அவர்களில் சிலர், அந்த தேசத்து வித்வான்களைத் தங்கள் குருவாகக் கொண்டாடி, தக்கள் எழுதிய சம்ஸ்கிருத கிரந்தங்களில் ரோமகாசாரியர்களுக்கு நமஸ்காரம் சொல்லியிருக்கிறார்கள். சுமார் 1500 வருஷங்களுக்கு முன் வராகமிகிரர் என்பார் தாம் எழுதிய பிரகத் ஜாதகத்தில் 12 ராசிகளில் பாதிக்கு மேல் ரோம் பாஷைப் பெயரைக் கொடுத்துவிட்டார். மேஷத்துக்கு ‘க்ரிய’ என்றும், ரிஷபத்துக்கு ‘தாவுரி’ என்றும், ஸிம்ஹத்துக்கு ‘லேய’ என்றும் இம்மாதிரி பெரும்பாலான பெயர்களைக் கணித சாஸ்திரத்திலும் ஜோதிஷ சாஸ்திரத்திலும் நாம் காணலாம்.

DSCF0640
St Peter’s Basilica inside.

4. ஒன்பதாம் நூற்றாண்டில் வந்த பட்டோத்பலர் என்பவரும் தம் வியாக்கியான புஸ்தகங்களில் ‘இது ரோமகாசாரியர் அபிப்பிராயம்’, இது ‘ரோமக சித்தாந்தம்’ என்று அடிக்கடி எழுதியிருக்கிறார்.

5.ரோமாபுரி ஒரு அழகான பட்டணம். கிறிஸ்துவின் முக்கிய சிஷ்ய பரம்பரை மடாதிபதியினுடைய மூலஸ்தானமும் இதுவே. கிறிஸ்துவின் பிரதம சிஷ்யர் பெயர் ஸெயின் ட் பீடர். அவர் கையில் மோக்ஷ வாசற் கதவின் சாவியை குரு கொடுத்துவிட்டுப் போனதாக கிறிஸ்தவர்களிடையே ஒரு செய்தி வழங்கி வருகிறது. ஆகையால் ஸெயின் ட் பீடர் கோயிலிலும், அதை யடுத்திருக்கிற மடத்திலும் பரம்பரையாக வருகிற கிறிஸ்தவ குருக்கள் உடுத்துக்கொள்ளுகிற ஆடைகளிலும் தங்கத் திறவுகோலின் அடையாளம் இருப்பதை இப்பொழுதும் பார்க்கலாம். ஸெயின் ட் பீடர் கோயிலானது, பூலோகத்தில் உள்ள விலையுயர்ந்த உத்தமமான கட்டடங்களில் ஒன்றாகும்.

6.ஸ்ரீ கிறிஸ்து மஹாமுனிவரின் உருவச்சிலையும் அவரது 12 சிஷ்யர்களின் உருவச்சிலைகளும் உயர்ந்த வெள்ளைக் கற்களால் அமைக்கப்பட்டு மேற்கூறிய கோயிலில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கோயிலின் மத்திய பாகத்தில் ஸ்ரீ கிறிஸ்துவின் உருவச்சிலையும் அவர் மாதா மேரியின் உருவச்சிலையும் சில இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுதும் அணையாத் தீபத்துடன் வெகு விமரிசையாக பூஜயும் நடந்துவருகிறது.

7.தங்க வர்ணத்தினால் சித்திரங்கள் சுவர்களிலேயும் மேல்பாகங்களிலேயும் எழுதப்பட்டிருத்தலால் கோவிலுக்குள் நுழையும்போது மகிழ்ச்சி யுண்டாகிறது. பக்தர்கள் எப்பொழுதும் வந்து நமஸ்காரம் செய்து தமது தலைகளை ஸ்ரீ கிறிஸ்துவின் கால் கட்டைவிரலில் தொட்டுவிட்டு ஜபஞ் செய்து போகிறார்கள். சில பிம்பங்களுக்குப் பூஜை செய்கிற சில குருக்கள் உட்கார்ந்துகொண்டு ஒரு நீளப் பிரம்பினால் பக்தர்கள் தலையில் ‘உன் பாபம் போயிற்று’ என்று தட்டுவார்கள். சில பக்தர்கள் தினந்தோறும் செய்த எந்த ரகஸிய பாபங்களையும் குருவின் முன் ஒப்பித்து ஞான ஸ்நானத்துடன் மன்னிப்பு பெறுவார்கள்.

DSCF0787

Parthenon in Rome where Romans enjoyed fights between man and lion.

8. ஸெயின் ட் பீடர் கோயிலிலுக்கு அருகிலிருப்பது ஸ்ரீகுருவின் மடம். அதற்கு ‘வெடிகன்’ என்று பெயர். இப்பொழுது அதன் தலைவராகிய ஜகத்குருவானவர் சுமார் 70 வயதுள்ளவர்; சிறந்த தபசி. இவர் மிகவும் கௌரவம் வாய்ந்தவர்.. உலக மக்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினராகிய கிறிஸ்தவர்களுக்கு இந்த மடாதிபதி பரம்பரைக் குருவாவார்; நிறைந்த ஸம்பத்துள்ளவர். ஆதலால் இவ்வுலகில் இவர் ஒரு முக்கிய ஸ்ரீமான் ஆவார். அவருடைய தரிசனம் எளிதில் கிடைப்பது இல்லை; தவிரவும் கிறிஸ்தவர்களே யன்றி அயலார் அவரைத் தரிசிப்பதாயினும் தூரத்திலிருந்து மண்டியிட்டுக் கும்பிடவேண்டுமென்பது வழக்கத்திலிருந்து வருகிறது.

9.மடாதிபதியான போப் குருவைத் தரிசிப்பது மிகவும் எளிதன்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் ஒரு காலம் குறிப்பிடப்படும்; அப்போது ஜனங்கள் கூட்டம்கூட்டமாக மடத்துக்குப் போய்க் காத்திருப்பார்கள். தூரத்திலிருந்தே அவருடைய தரிசனம் பெறலாம்; வித்துவான்களுக்கும் ஸம்பன்னர்களுக்கும் மாத்திரம் சமீபத்தில் தரிசனம். ராஜாக்களும் பிரஸித்தி வாய்ந்தவர்களும் அவரைத் தொடும் பாக்கியம் பெறுவார்கள்; அஃதாவது அவர் கையில் போட்டிருக்கிற குரு பரம்பரையாக வந்த மோதிரத்தை அவர்கள் முத்தமிடுவார்கள். ஆனால் எல்லோரும் மண்டியிட்டு நமஸ்காரம் செய்யவெண்டும். அதற்கு இஷ்டமில்லாத வர்களுக்கு போப்பின் தரிசனம் கிடைக்காது. தவிர, காணிக்கையும் உண்டு. இந்த காணிக்கையினால்தான் இம்மடமானது அபரிமிதமான ஸம்பத்துடன் கூடி விளங்குகிறது.

10. அவர்கள் மடத்துப் புஸ்தக சாலையில் இருந்தசில இந்திய ஏட்டுச் சுவடிகளுக்கு ஒரு ஜாப்தா (லிஸ்டு) இலவசமாகத் தயாரித்து நான் கொடுத்தபடியினாலும், ரோம் யூனிவர்ஸிடி மாணவர்களுக்கு உபந்நியாசம் செய்ய என்னைக் கேட்டபடியினாலும், யூனிவர்ஸிடி அத்யக்ஷர் (சான்ஸலர்) நேரே போப்பினிடத்தில் இருக்கிற கார்டினல் அவர்களுக்கு என் வருகையை எழுதினதினாலும் எனக்கு போப்பின் தரிசனத்துக்கு அனுமதி கிடைத்தது. தவிர நான் இந்தியாவிலிருந்து சென்ற சாஸ்திரியாகவும், வைதீகனாவும் இருந்ததனால் மேலே கூறிய நிபந்தனைகள் யாதும் இல்லாமல் எளிதில் ‘த்ரோம்ரூம்’ என்ற அறையில் சென்று அவரைத் திசித்தேன். அவரும் உபசாரத்துடன் என் கைகளைத் தொட்டு இழுத்துக்கொண்டு சுமார் 10 நிமிஷங்கள் பேசினார்

DSCF0641

Globe inside the basilica

11. இந்தியாவிருந்து வந்த ஒரு ஏழை வைதிகப் பிராமணனை அவர் அவ்விதம் உபசரித்ததானது எல்லோருக்கும் வியப்பை யளித்தது. அவருடன் சிறிது நேரம் சம்பாஷித்ததிலிருந்து அவர் ஒரு உத்தமர் என்று உணரலானேன். ஆயிரக்கனக்கான பக்தர்கள் கீழே தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தபடியால் விரைவில் விடைபெற்றுத் திரும்பிவிட்டேன். போப் குருவால் ஒரு இந்திய சாஸ்திரி சமமாக உபசரிக்கப்பட்டார் என்ற செய்தியை ராய்டர் தந்தி உத்தியோகஸ்தன் ஒருவன் ‘வெடிகன்’ ஆபீஸர் மூலமாகத் தெரிந்துகொண்டு எங்கும் பத்திரிக்கைகளுக்குத் தெரிவித்துவிட்டான்; அச்செய்தி ரோம் பத்திரிகைகளிலும் அன்று மாலையிலேயே வெளியாயிற்று. அதுமுதல் நான் வெளியே செல்லும் போதெல்லாம் ‘ இவர் கீழ்தேசத்து உபதேசகர்; போப்பின் உபசாரம் பெற்றவர்’, என்று ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். டிராம் உதலான இடங்களில் எண்ணைக் கண்டால் எழுந்து உபசாரம் செய்யலாயினார்.

தொடரும்……………………

(இது எல்லாம் 1936ஆம் ஆண்டில் எழுதப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்க வேண்டும். நான் கூட 2007, 2012 ம் ஆண்டுகளில் இரு முறை ரோம், வாட்டிகன் சென்று வந்துவிட்டேன். இப்போது இது எல்லாம் நமது இமய மலை மாதிரி புனிதத்வத்தை இழந்து சுற்றுலாத் தலங்களாக ஆகிவிட்டன!!!:– சுவாமி)
contact swami_48@yahoo.com

வீடு வரை உறவு, கடைசி வரை யாரோ?

indian falily

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 921 தேதி 21 மார்ச் 2014.

கவிஞர் கண்ணதாசன், இந்து மதக் கருத்துக்களில் ஊறித் திளைத்தவர். அவர் பிறந்த செட்டியார் ஜாதி, கோவில்களையும், கோவில்களைப் போற்றிய பெரியோர்களையும் இரண்டு கண்களாகக் கருதிப் பாதுகாத்த ஜாதி. தெய்வத் தமிழ் தழைத்தோங்க உடல், பொருள், ஆவியைக் கொடுத்த ஜாதி. பொருளை நாடிப் பிழைத்த ஜாதியானாலும் “செம் பொருளை” மறவாத ஜாதி. தர்ம ,அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்கு புருஷார்த்தங்களில் அர்தத்துக்கும் காமத்துக்கும் (பொருள் தேடல், இன்பம் நாடல்) வரையறையாக தர்மத்தையும் மோக்ஷத்தையும் (அறம், வீடு பேறு) வைத்துக் கொண்டு வாழ்ந்த ஜாதி. இது கண்ணதாசனின் ரத்தத்தில் ஓடியதால்— முதலில் வால்மீகி போல மற வாழ்க்கை நடத்தினாலும்– பின்னர் அற வாழ்வில் நுழைந்தார். அவருக்கு ஊற்றுணர்ச்சியாக விளங்கிய பெரியோர்கள் ஆதி சங்கரர், அப்பர்,, பட்டினத்தார் முதலியோர் என்பதை அவரது பாடலே காட்டும். இதோ ஒரு சான்று:

திரைப்படம்: பாதகாணிக்கை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?

பட்டினத்தார் சொன்னது:

பழந்தமிழ்நாட்டின் ‘பில் கேட்ஸ்’, ‘லெட்சுமி மித்தல்’ — பட்டினத்தார். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பணக்காரருக்கு “காதற்ற ஊசி” மூலம் ஞானம் பிறந்தது. புத்தர் போதி (அரச) மரத்துக்கடியில் பல்லாண்டு தவம் செய்து ஞானோதயம் பெற்றார். பட்டினத்தாருக்கோ ‘பட்’டெனப் பிறந்தது பட்டறிவு! இதோ அவரது பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

பொருள்: முன்னர் செய்த தவம் தினை அளவோ எள் அளவோ இருந்தாலும் போதும். அது கூடவே வந்து பரலோகத்தில் நல்ல கதி கிடைக்க சத்தியமாக உதவும்.

இன்னொரு பாடலிலும்
என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

பொருள்: என்னைப் பெற்ற தாயார் ,’மகனே, பிணமாப் போயிட்டியே’ – என்று அழுது, அத்தோடு நிறுத்திவிட்டாள். நான் கழுத்தில் பொன் தாலி மாட்டிய என் மனைவியோ, அழுது புலம்பி விட்டு, ‘சடலத்தைத் தூக்கிட்டுப் போங்க’ என்று சொல்லிவிட்டாள். என் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய என் மகன்கள், என் சடலத்தைச் சுற்றி வந்து பானையைப் ஓட்டு உடைத்துவிட்டுப் போய்விட்டாங்க. இறைவா உன்னைத் தவிர, வேறு யாரும் இல்லையப்பா!

இப்படிப் பட்டினத்தாரைப் பாட வைத்தவர் அப்பர் பெருமான். அவரும் குடும்பப் பற்றுகளை அறவே துறந்தவர்:

swasthi_family_img

அப்பர் எழுப்பும் கேள்விகள்

தந்தை யார்? தாய் யார்? உடன்பிறந்தார்,
தாரம், ஆர்? புத்திரர் ஆர் அதாம்தாம் ஆரே?
வந்த ஆறு எங்ங்அனே? போம் ஆறு ஏதோ?
மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ் வேண்டா!
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்;
திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திரு நாமம் “நமச்சிவாய”
என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே.
——918, ஆறாம் திருமுறை

பொருள்: எளிய தமிழ். பொருளே தேவை இல்லை. சிந்திக்கும் திறம் படைத்த அறிவாளிகளே, ஒன்று மட்டும் சொல்கிறேன். நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டு தினமும் படுக்கையில் இருந்து எழுந்திருங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைப்பதோடு சுவர்க்கமும் கிடைக்கும்.

family 2

ஆதிசங்கரர் பாடியது
அப்பர் இப்படிப் பாடுவதற்கு ஊற்றுணர்ச்சி தந்தவர் ஆதி சங்கரர்; அவரது பஜ கோவிந்தம் அற்புதமான ஒரு துதி. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பெரிய புத்தகம் எழுதும் அளவுக்கு ஆழமான கருத்துக்கள்! அவர் பாடுகிறார்:

காதே காந்தா, கஸ்தே புத்ர:
சம்சாரோ அயம் அதீவ விசித்ர:
கஸ்ய த்வம், க: குத ஆயாத-
ஸ்தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:
———பாடல் 8, பஜ கோவிந்தம்

பொருள்: மனைவி யார்? மகன் யார்? என்ன அதிசயமான உறவுகள் இவை!! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? சகோதரனே, இந்த உண்மையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்.

குடும்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, குடும்பப் பொறுப்புகளை எல்லாம் உதறிவிட்டு வெளியே வா என்று சொல்லவில்லை. இந்து மதம் ஒன்றுதான் உலகில் மனித வாழ்வை ,அழகாக ,நான்கு கூறு போட்டுக் கொடுத்திருக்கிறது. 1.பிரம்மசர்யம்: படிப்பு ஒன்றே உனக்கு லட்சியம் 2. க்ருஹஸ்த: கல்யாணம் செய்து இன்பத்தை அனுபவித்துக் குடும்பத்தை காப்பாற்று 3. வானப் பிரஸ்தம்: ஒரு கட்டத்தில் பற்றை எல்லாம் விட்டு விட்டு, தாமரை இலைத் தண்ணீர் போல இரு 4.சந்யாசம்: முற்றும் துற. பற்றுக, பற்றற்றான் பற்றை; (எதற்காக?) அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு (வள்ளுவன் குறள்)

(குறிப்பு: அப்பர் பெருமானுக்கு முன் வாழ்ந்தவர் ஆதி சங்கரர்– என்று போதுமான தமிழ் இலக்கியச் சான்றுகளோடு நான் எழுதிய கட்டுரை இதே பிளாக்—கில் உள்ளது. காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சொல்லுவது போல ஆதி சங்கரர், கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர். மேலே உள்ள அப்பர் பாடலையும் பஜ கோவிந்தத்தையும் ஒப்பிட்டால் இது மேலும் தெளிவாகும். குறிப்பாக, சொற்றொடர்களைக் கவனிக்கவும்)

கீதையிலேயே உள்ளது
ஆதி சங்கரருக்கும் அனைத்து சாது சந்யாசிகளுக்கும் இக் கருத்தை வழங்கியவர் கண்ண பிரான் ஆவார். பகவத் கீதையிலேயே இகருத்து உள்ளது:–

அஸக்திர் அனபிஷ்வங்க: புத்ர தார க்ருஹாதிஷு
நித்யம் ச ஸமச்சித்தத்வம் இஷ்டானிஷ்டோபபத்திஷு (13—9)

பொருள்: மக்கள், மனைவி, மனை முதலியவற்றில் பற்றின்மை, அபிமானமின்மை, இஷ்டமுள்ளதும் இஷ்டமில்லாததும் வாய்த்தபோதும் கூட மன அமைதி (சமச்சித்தம்)———– (ஞானம் என்று கூறப்படும்).

ஆக கண்ணன் முதல் கண்ணதாசன் வரை கூறுவது ஒன்றே!

Contac swami_48@yahoo.com

அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவப் பயணம்-Part 1

TromsoMap

Arrow Mark shows the location of Tromso, noorthern most town of Norway.

( We have already published about this trip as abridged by AK Chettiyar. I am giving the portions that we have not covered so far since I have got the full book with me: swami)

மகாமேரு யாத்திரை
கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 919 தேதி 20 மார்ச் 2014

திருநெல்வேலி ஜில்லா தாம்பிரபர்ணீதீரம், அரியநாயகிபுரம் ஆர். அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய ‘மகா மேரு யாத்திரை’ என்ற 1936 ஆம் ஆண்டுப் புத்தகம் பொள்ளாச்சியில் சாலை ஓரத்தில் பழைய புத்தகம் விற்பவரிடம் கிடைத்தது. எட்டு வருஷமாகப் படிக்காமல் பாலிதீன் பையில் போட்டு பாதுகாத்து வைத்த புத்தகத்தை இப்போதுதான் வாசித்தேன். இதோ சில சுவையான செய்திகளை மட்டும் தருகிறேன்.

அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதியது பின்வருமாறு:
1.நான் மகாமேரு யாத்திரை சென்று வந்தவுடன், யாத்திரையைக் குறித்து ஒரு சிறு புஸ்தகம் ‘மிட்நைட் ஸன் இந் தி லாண்டு ஆப் அவர் போர் பாதர்ஸ்’ என்ற பெயருடன் இங்கிலீஷில் பிரசுரம் செய்தேன். நீலகிரியில் ஸ்ரீ ராமகிருஷ்ணாச்சிரமத்தில் ஸ்வாமி சித்பவானந்தரவர்களைச் சந்தித்தேன். அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ் மாதப் பத்திரிகையில் எழுதினேன். பத்திரிகையைப் படித்தவர்கள் இன்னும் விவரமாக எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கேட்டனர்.

2.யாத்திரை செய்யமுடியாவிட்டாலும் யாத்திரா ஸ்தலங்களைப் படித்த அறிவுக்கும் ஒரு புண்ணியம் உண்டு என்று நம் சாஸ்திரங்கள் சொல்லுகிற படியினால் திராவிட தேசத்தில் வசிக்கிற நம் ஆரியர்கள் இந்தச் சிறு தமிழ் புஸ்தகத்தைப் படித்து மகாமேரு யாத்திரைப் பலனை அடையவேண்டுமென்பது என் விருப்பமாகும்—ஜய மஹாதேவ, —— ஆர்.ஏ.சாஸ்திரி, 9-12-1935

3.வேதத்தில் கூறியபடி பூமிமுழுதும் ஆரியர்களுடையது. பிறகு மனு முதலான ஸ்மிருதிகளின்படி தொடர்ச்சி பூமியாயுள்ள ஆசியாக் கண்டம் முழுவதும் ஆரியர் வாசஸ்தானமாக இருந்தது, இப்பொழுது நாம் வசிக்கும் பரத கண்டம் மாத்திரம் ஆரிய வாசஸ்தானமாக குறிக்கப்பட்டிருக்கிறது. எனினும் வட இந்தியாவில் இருக்கும் ஆரியர் தென் இந்தியாவில் வஸிப்பவரை த்ரவிடர்களென்றும் ஆரியர் ரத்தக் கலப்புள்ளவர்களென்றும் பழிப்பதுண்டு. இவைகள் எல்லாம் காலக்கிரமத்தில் வந்த அசூயை ஆகும். மேதாதிதி முதலான சில பெரியோர்களின் சட்டப்படி எந்த இடத்தில் ஆரியர் தங்கள் ஆசாரத்துடன் வஸிக்கிறார்களோ அந்த இடத்திற்கு ஆரியாவர்த்தம் என்றும். எந்தப் பூமியில் மிலேச்சாச்சாரமிருக்கிறதோ அந்த இடத்திற்கு மிலேச்சதேசமென்றும் பூமிக்குத் தனியே தோஷமில்லை யென்றும் அதில் வாஸம் செய்யும் நல்லவர், கெட்டவர்களால் பூமிக்குச் சுத்தம் அசுத்தம் ஏற்படுகிறதென்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.

4.முதிர்ந்த வயதில் வெகுகால சாத்தியமான ஒரு பெரிய யாத்திரையைச் செய்யவேண்டும். அதற்குப் பூ பிரஸ்தாரம்( பூமியைச் சுற்றுதல்: என்று பெயர். பூ பிரஸ்தாரம் என்றால் நம் பரதக்கண்ட மட்டுமன்று; பூமியையே சுற்றுதல் ஆகும். ரூ 3000ம் நான்கு மாத அவகாசமும் கிடைப்பின் பூப்பிரதக்ஷிணம் செய்யலாம். கூட ரூ 3000 இருந்தால் ஆகாயப் பிரதக்ஷிணமும் சிரமமின்றி செய்யமுடியும்.

sun midnight

Mid Night Sun

5.பூமி கோழிமுட்டை மாதிரி உருண்டையாக இருக்கிறதென்பது எல்லாருக்கும் தெரியுமே. வடக்குக் கடைசிக்கு மகாமேரு என்று பெயர். அந்த இடத்திற்கு காந்த முள் இழுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்களே. அவ்விடத்திற்குப் போகமுடியாது. ஆகாய விமானத்தையாவது கப்பலையாவது காந்த சக்தி சமீபத்தில் வரவிடுவதில்லை. அப்படிப்பட்ட இடம் சுமார் 150 மைல் சுற்றளவுள்ளது. இதிலிருந்து சுமார் 400 மைல் தெற்கேயுள்ள இடங்களுக்கு ஆர்டிக் இடங்கள் என்று பெயர். அதாவது 66 டிகிரி முதல் 80 டிகிரி வரை. இவ்விடத்திற்கு நம் பெரியோர் உத்தரகுரு வென்று பெயர் வைத்திருந்தார்கள்.

6.இவ்விடத்தில் மே 14உ முதல் ஆகஸ்டு 30உ வரை சூரியன் உதயாஸ்தமனமில்லாமல் எப்பொழுதும் விளங்குகிறான். அப்படியே தக்ஷிணாயனத்தில் ( நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ) சூரியனே காணப்படுவதில்லை

7. அந்தந்த ஸ்தானத்திற்குத் தகுந்தபடி நம் பூர்வீகர் மூன்று இரவு யாகம் முதல் நூறு இரவு சேர்ந்திருந்த காலம் வரை யாகஞ் செய்ததாக வேதங்களிற் சொல்லப்பட்டிருக்கிறது. சதராத்ரிக் கிரது செய்த இடத்தை நாம் இப்பொழுது ‘ட்றாம்சோ’ என்கிற இடமாகிய 72ஆவது டிக்ரியில் பார்க்கலாம். அவ்விடத்தில் சரியாக நூறு தினங்கள் ஒரே இரவாகச் சூரியனே இல்லாமல் இருக்கிறது. இதற்கு நேரே வடக்கில் மகாமேரு இருக்கிறது. அந்த இடத்திற்கு துருவஸ்தானமென்று பெயர்.
8.இந்த பூமியானது சமமாக ஆகாயத்தில் மிதக்கவில்லை. வட பக்கம் போகப் போகச் சிறிது உயர்ந்திருக்கிறது. ஆகையால் வடதிசைக்கு உத்தரம் என்று பெயர் வந்தது.( ‘உத்’ என்றால் ‘மேல்’ என்று பொருள்). தக்ஷிணம் கொஞ்சம் பள்ளமாகக் காணப்படுவதால் தென் மேருவை நரகம் என்றும், யமபட்டண மென்றும், பூமிக்குச் சிலகோடி மைலுக்குக் கீழே இருக்கிறதென்றும் சில புராணங்களிற் கூறப்பட்டிருக்கிறது. அப்படியே உத்தர மேருவை, தேவர்கள் வஸதிஸ்தானமென்றும் சூரியர் முதலானவர் புண்ணிய பூமியென்று பிரதஷிணம் செய்கிறார்களென்றும், ஸம்ஸாரத்தைத் தாண்ட இது காரணமாக இருப்பதினால் இந்த இடத்திற்கு உத்தரம் (தாண்டவைப்பது) என்றும் சொல்லப்படுகிறது.

9. இந்த ‘ட்றாம்சோ’ என்ற இடத்தில் மே மாதம் 14ஆம் தேதி இரவு 11-45க்கு மேற்குத் திசையில் சூரியன் உதித்து, நவம்பர் மாதத்தில் கிழக்கே அஸ்தமனமாகிறான். ஆகையால், முன் வேதத்தில் குறிப்பிட்ட வாக்கியமானது உண்மையாமன்றோ? வட தேசங்களில், ‘பாதி இரவு சூரியன்’ என்று சூரியனைச் சொல்வது வழக்கம். மே 14 ஆம் தேதி இரவு நான் அந்தப் பாதி இரவு சூரியன் உதிப்பதைப் பார்க்கலானேன். சுமார் 11 மணிக்கு நான் மேற்கே பார்த்துக் கொண்டிருக்கையில், மேல் கடலிலிருந்து ஒளிப் பிழம்பொன்று தோன்றுவது தெரிந்தது; உடனே கொஞ்சம் மேலே வந்து வடக்கே அது ஓடிவிட்டது.

10. அங்கு சூரியன் நம் தேசத்திற் போல ஆகாயத்தில் குறுக்கே போவதில்லை. ஆகாயத்தின் ஓரமாகவே செல்லுவான். ஆகையால் சாஸ்திரங்களில்’ ‘குயவன் பானை செய்கிற சக்கரம் போலச் சூரியன் சுற்றுகிறான்’ என்று வருணிக்கப்பட்டுள்ளது (குலால சக்கிர பிரமவத்: திலகர் எழுதிய ஆர்டிக் புஸ்தகம்). அப்படிச் சுற்றுவதனால் சூரியன் நிறம் சுவர்ணமயமாகவே யிருக்கும். நல்லவெண்மை நிறம் அன்று. ஆகையால் எப்பொழுதும் ‘மகாமேரு சூரியன்’ பொன் வர்ணமென்று வேதங்களில் புகழப்படுகிறான் (ஹிரண்மயன்). மேருப் பிரதேசத்தில் சூரியனுக்கு தாமிரம், அருணம், பப்ரு, சுமங்களம் என்ற நாலு வர்ணங்களுண்டென்று வர்ணிக்கப்படுகிறது (ருத்திராத்தியாயம்). ஏழுவர்ணம் சொல்லிய வேத வாக்கியங்களை, நம் தேசங்களில் சூரியனைக் கண்டு வர்ணித்ததாகக் கொள்ளவேண்டும். சூரியன் தங்க வர்ணம்; ஹிரண்மய மீசை; பொன் மயிர்; கால் முதல் தலைவரை ஸ்வர்ண தேஜஸ் என்று சொல்லிய வாக்கியங்கள் எல்லாம் மேருப் ப்ரதேச சூரியனைக் குறித்தவைகளாகும். இதை உத்தேசித்துத் தான் மகாமேரு ஸ்வர்ணபர்வதமென்று புராணங்களில் அலங்கரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதாரம்: மகாமேரு யாத்திரை (நடுநிசி சூரியன் நம் முன்னோர் வசித்த பூமியில்), ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரியினால் யாத்திரை செய்து எழுதப்பட்டது, ஜனவரி 1936.

tromso_1571126i

Northern Lights known as Aurora Borealis

என் குறிப்புகள் : 1935 ஆம் ஆண்டில் ஒரு திருநெல்வேலி பிராமணர் இப்படி நார்வே நாடு வரை போனது அதிசயம்தான். ஆசார அனுஷ்டானங்களையோ, நியம நிஷ்டைகளையோ விடாது போனது பற்றி அவர் கூறுவதை இரண்டாவது பகுதியில் தருகிறேன். இதைவிட அதிசயம், வேத கால ரிஷிகளுக்கு வட துருவம் பற்றி எப்படித் தெரிந்தது என்பதுதான். லோகமான்ய பால கங்காதர திலகரும் 1925 ஆம் ஆண்டிலேயே இது பற்றி எழுதி இருக்கிறார்.

இன்று நாள்ளிரவுச் சூரியனைப் பார்ப்பது சர்வ சாதாரணம். ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நார்வே ஸ்வீடன் நாடுகளில் குவிகின்றனர். உண்மையான வட துருவத்துக்கும் இந்தியர்கள் சென்று வந்துவிட்டனர். அனந்த கிருஷ்ண சாஸ்திரிகள் போனது நார்வேயின் வடகோடிப் பகுதிதான். அவரது சாதனை அங்கு சென்றுவிட்டு 1936ஆம் ஆண்டிலேயே தமிழில் புத்தகம் எழுதியது ஆகும்!!
தொடரும்………….

contact swami_48@yahoo.com

Pictures are taken from different sites;thanks.

சம்பந்தர் பார்த்த ‘கராத்தே’ அடி!

brick-breaking-factoid

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 917 Dated 19th March 2014.

சிவபெருமானின் தோற்றத்தையும் அருளையும் தேவார மூவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் வருணிப்பதை பாடல் தோறும் காணலாம். அத்தோடு சிவனடியார்களின் தோற்றம், குண நலன்களையும் காணலாம். இவை எல்லாம் சமய சம்பந்தம் உடையவை. ஆனால் இது தவிர இயற்கை வருணனை, சில கிராமீயக் காட்சிகள், உவமைகள் ஆகியன சமய சம்பந்தம் இல்லாதவை. அவைகளை ரசிப்பதற்காக தேவாரத்தை தனியாகப் படிக்கவேண்டும். இதோ சம்பந்தர் கண்ட ஒரு காட்சி:–

முடிகையி னாற்றொடு மோட்டுழவர்
முன்கைத் தருக்கைக் கரும்பின் கட்டிக்
கடி கையினால் எறி காட்டுப்பள்ளி
காதல்செய்தான் கரிதாய கண்டன்
பொடிஅணிமேனியினானையுள்கிப்
போதொடு நீர்சுமந்தேத்திமுன்னின்
றடிகையினாற்றொழ வல்லதொண்ட
ரருவினையைத்துரந்தாட் செய்வாரே (1-5-7)

Jaggery

திருக்காட்டுப்பள்ளி உழவர்கள் வலிமையுடையவர்கள்.வெல்லக் கட்டிகளை உடைக்க கத்தி, அரிவாள் என்று போக மாட்டார்கள். கையினால் ஒரே அடி.! வெல்லம் தூள் தூளாகி விடும். அது மட்டுமல்ல. அவர்கள் நாற்று பிடுங்கினால் அழகாக வேருக்குச் சேதம் இன்றி அவைகளை முடித்து வைப்பர். சிவனை வழிபட ஊரூராகச் சென்ற சம்பந்தர் அந்தந்த ஊருக்கே உரிய சிறப்புகளைப் பாராட்டத் தவறவில்லை. இதோ சம்பந்தர் கண்ட இன்னொரு காட்சி:

புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்ட ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட
முழவு அதிர மழை என்று அஞ்சிச்
சில மந்தி அலமந்து மரம் ஏறி
முகில் பார்க்கும் திருவையாறே (முதல் திருமுறை)

tree monkeys

திருவையாற்றில் சம்பந்தரை வரவேற்க ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளங்களுடன் கோவிலைச் சுற்றி அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மேளதாளத்துக்கு இசைய நடன மங்கையர் ஆடி வந்தனர். அந்த மேளத்தைக் கேட்டவுடன் வானத்தில் இடி இட்க்கிறது மழைவரப் போகிறது என்று அஞ்சி குரங்குகள் எல்லாம் மரத்தில் ஏறிக்கொண்டு வானத்தை உற்று நோக்கியதாம்!! சம்பந்தர் நமக்கு எத்தனை செய்திகளைத் தருகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன் இன்னிசை விருந்தும் நடன விருந்தும் இருந்தன. சிவனடியாரை வரவேற்க ஊரே அலங்கரிக்கப்பட்டது. குரங்குகள் மிருதங்கம் முதலியவற்றின் ஓஸையை இடி முழக்கம் என்று எண்ணி பயந்தன. நம் முன் ஒரு அழகிய சித்திரத்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்.

Galibore-Monkey-

இராவணனுடைய இலங்கை ஒரு குன்றின் உச்சியில் இருந்தது போன்ற பல சுவையான செய்திகளையும் தருகிறார். அவைகளைத் தனியே காண்போம்.

contact swami_48@yahoo.com

monkey fear

பாதுகையின் மஹிமை!

sangu chakra reka

Post No.916 dated 19th March 2014

ராமாயண வழிகாட்டி – அத்தியாயம் 20
ச.நாகராஜன்

உலகின் எந்த ஒரு இலக்கியத்திலும் இல்லாத ஒரு சம்பவத்தை ராமாயணம் எடுத்துக் கூறுகிறது. அண்ணனின் பாதுகையைத் தலையில் ஏந்தி எடுத்துச் சென்று அதற்குப் பட்டாபிஷேகம் செய்து அதை வைத்து நாடாளும் ஒரு அற்புதத் தம்பியை ராமாயணத்தில் மட்டுமே காண முடியும்.

பிதுர்வாக்ய பரிபாலனம் என்னும் பெரும் தர்மத்தை மேற்கொண்டு, “வனத்தில் 14 வருடம் வாசம் செய்வேன்.பின்பே அயோத்தி திரும்புவேன்” என்று உரைத்த ராமரிடம் அவரின் பாதுகையைத் தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறான் பரதன்.

அயோத்யா காண்டத்தில் நூற்றிப் பன்னிரண்டாவது ஸர்க்கம் உருக்கமான ஒரு காட்சியை நம் முன் காட்டுகிறது.

அதிரோஹார்ய பாதாப்யாம் பாதுகே ஹேமபூஷிதே I ஏதே ஹி சர்வலோகஸ்ய யோகக்ஷேமம் விதாஸ்யத: II
(நூற்றிப்பன்னிரண்டாவது ஸர்க்கம், 21வது ஸ்லோகம்)

ஆர்ய – ஸ்வாமியே! ஹேமபூஷிதே – பொன்னால் அலங்கரிக்கப்பெற்ற பாதுகே – பாதுகைகளில் பாதாப்யாம் – திருவடிகளால் அதிரோஹ – ஏறி அருள்வீராக! ஹி ஏதே – ஏனெனில் இவைகள் சர்வலோகஸ்ய – எல்லா உலகத்தின் யோகக்ஷேமம் – யோகக்ஷேமத்தை விதாஸ்யத: – வகிக்கப் போகின்றன

பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன் தானும் பதினான்கு வருடங்கள் ஜடையும் மரவுரியும் தரிக்கப் போவதாகவும் பழங்களையும் கிழங்குகளையுமே உணவாகக் கொண்டு இருக்கப் போவதாகவும் கூறுகிறான்
பதினான்காவது வருடம் முடிந்ததும் மறுதினத்தில் ராமரைக் காணாவிடில் ‘அக்னியில் புகுவேன்’ (ஹுதாஷனம் ப்ரவேக்ஷ்யாமி) என்றும் உறுதியாகக் கூறுகிறான். பாதுகைகள் அயோத்தியை ஆளும் அற்புதத்தைப் புரிந்து ராம பக்திக்கு இலக்கணமாகவும் திகழ்கிறான் பரதன்!
வைஷ்ணவ ஆசார்யரான வேதாந்த தேசிகன் (கி.பி.1269-1370) பாதுகா ஸஹஸ்ரம் என்ற அற்புதமான நூலை எழுதியுள்ளார்.

இந்த நூல் ஒரே இரவில் ஒரு ஜாமத்தில் இயற்றப்பட்டது. முதல் இரு ஜாமங்களில் யோகத்தில் ஆழ்ந்த வேதாந்த தேசிகர் மூன்றாம் ஜாமத்தில் 1008 அரிய ஸ்லோகங்களை யாத்து முடித்தார். பாதுகா ஸஹஸ்ரம் 32 பத்த்திகளைக் கொண்டுள்ளது. இதில் ப்ரஸ்தாவ பத்ததியில் இரண்டாவது ஸ்லோகத்தில் ஸ்ரீ ராம பாதுகையின் பெருமையை முதலில் உலகுக்குக் கொண்டு வந்த பரதனுக்கு என் முதல் நமஸ்காரம் என்று அருளியுள்ளார்.

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை பிரதம உதாஹரணாய பக்தி பாஜாம்I யத் உபக்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ:II

இந்த நூலில் அரிய சித்திர பந்தங்களைக் காண முடியும். கவிதையில் எத்தனை விதமான அரிய சுவைகள் உண்டோ அவை அனைத்தையும் தரும் இந்த அரிய பக்தி இலக்கியத்தை வைணவர்கள் தினசரி தங்கள் பாராயணத்தில் சொல்கின்றனர்.

வேதாந்த தேசிகனுக்கு முன்னோடியாக பாதுகையின் பிரபாவத்தை முதலில் கூறிய வால்மீகியின் ஸ்லோகங்கள் ஒப்பற்ற ஒரு தனி இடத்தைப் பிடிக்கின்றன!

Please read:
Why do Hindus worship Shoes? Posted here on 15th August 2012

Contact swami_48@yahoo.com

‘‘ஞானப் படகு’’ பற்றி தேவாரமும் கீதையும் தரும் தகவல்

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன், கட்டுரை எண் 914, தேதி 18-3-2014

boat-in-the-sea-hd-ya-381930

ஞான தீபம், ஞான வேள்வி, ஞானப் படகு, ஞான யோகம்: பகவத் கீதையில் சுவையான சொற்கள்

பகவத் கீதையில் பல சுவையான சொற்கள் இருக்கின்றன. ‘ஞானம்’ என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லின் அழகே அழகு. எப்படி ‘தர்மம்’ என்பதை, என்னதான் அழகாக மொழி பெயர்த்தாலும், அந்தச் சொல்லின் முழுப் பொருளையும் தர முடியாதோ, அதே போல ஞானம் என்ற சொல்லும் மொழி பெயர்ப்பின் வீச்சுக்குள் வராது. ஆகையால் தெய்வத் தமிழில் கவி பாடிய செஞ்சொற் செம்மல்கள் இந்த ஞானத்தை கூடிய மட்டிலும் அப்படியே பயன்படுத்துவர்.

பகவத் கீதையில் “ஞான” என்ற அடைமொழியுடன் வரும் சில இடங்களை மட்டும் காண்போம்:

ஞானப் ப்லவேன = ஞானப் படகு (4 -36)

எல்லாப் பாவிகளுக்கும் மேலான கொடும் பாவியாக நீ இருந்தாலும், எல்லா பாவங்களையும் ஞானப் படகு ஒன்றினாலேயே நீ நன்கு கடந்திடுவாய்.என்கிறார் கிருஷ்ணன்.
பாவ மன்னிப்பு இந்து மதத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. பிராமணர்கள் தினமும் முப்போது செய்யும் சந்தியாவந்தனத்தில் பாவ மன்னிப்பு மந்திரமும் (ஸூர்யஸ்ச……..) உண்டு.

அப்பர் தேவாரத்தில் பகவத் கீதைச் சொற்கள் ஏராளமாகப் பயிலப்படுகின்றன. மிகவும் குறிப்பிடத்தக்கது

ஞானப் பெருங்கடலுக்கு ஒரு கப்பல்!

நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன் காண்,
ஞானப் பெருங்கடலுக்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண், புண்ணியன் காண், புராணன்தான் காண்
புரிசடை மேல் புனல் ஏற்ற புனிதன் காண்
சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான் காண்,
தன்மைக்கண் தானே காண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண்; அவன் என் கண் உள்ளானே.
சிவனை ஞானக் கடலில் போகும் கப்பல் என்று அப்பர் வருணிக்கிறார். அதாவது ஞானத்திலேயே மிதப்பவர்.

He is Narayanan; He is Brahma
He is in the four Vedas;
He is the perfect one
Who is like a ship on the great ocean of wisdom – 78, 6th Tirumurai

ஞான தபஸ்= ஞான தவம் (4-10)

மனிதன் எப்படி தெய்வம் ஆகலாம் என்று கிருஷ்ணன் இதில் கூறுகிறார். ஆசையும் பயமும் கோபமும் இல்லாதவர்களுமமென் மயமானவர்களும் என்னைச் சரணடைந்தவர்களும் பலர் ஞானமாகிய தவத்தால் என் தன்மையை அடைந்திருக்கிறார்கள்.

இதற்கு அண்ணா அவர்கள் எழுதிய உரையில் பின்வரும் விளக்கம் தருகிறார்: நெருப்பில் இட்ட இரும்பு நெருப்பின் வெப்பத்தையும் ஒளியையும் பெற்று பிரகாசம் அடைவது போல ஜீவனும் ஈஸ்வரனைப் போல ஞானத்தையும் ஆனந்தத்தையும் எய்துகிறான்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் — என்று வள்ளுவனும் கூறுவது இதைத்தான்.

agni

ஞான தீபம்= ஞான விளக்கு (10–11)

பக்தர்களின் உள்ளத்தில் நிலைபெற்று என் அருளால் பிரகாசிக்கும் ஞான தீபத்தால் அஞ்ஞான இருளை நாசம் செய்கிறேன்
இதற்கு அண்ணா (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை) எழுதிய உரையில் சில பாடல்களை மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது:–

போதாந்தப் புண்ணியர்கள் போற்றி சய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – (தாயுமானவர்)

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா – நன்புருகு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் — (பூதத்தாழ்வார்)

ஞான அக்னி = ஞானத் தீ ( 4-19 )
எவனுடைய எல்லா கருமங்களும் ஆசையும், அதற்குக் காரணமான சங்கல்பமும் அறுபட்டு, ஞானத் தீயில் பொசுங்கிய வினைகளை உடைய அவனை பண்டிதன் என்று அறிவாளிகள் கூறுவர்.
fire wisdom

ஞான சக்ஷு = ஞானக் கண் (15 – 10)
ஞானக் கண் உடையவர்களே கடவுளைக் காண்கிறார்கள். மற்றவர்கள் காண்பதில்லை.

ஞான யக்ஞம் = ஞான வேள்வி ( 4-33, 9-15, 18-70 )

பொருள்களைக் கொண்டு செய்யும் வேள்விகளை விட ஞான வேள்வி சிறந்தது. எல்லா கர்மங்களும் ஞானத்தில் பூர்த்தி அடைகின்றது.
பகவத் கீதையைக் கேட்பதும் படிப்பதும் கூட ஞான வேள்வி என்று கிருஷ்ணனே கூறுகிறார்: — எவன் இந்த நம்முடைய புண்ணியம் வாய்ந்த சம்பாஷணையைப் பாராயணம் செய்கிறானோ அவன் ஞான வேள்வியால் என்னைப் பூஜித்ததாகக் கருதுகின்றேன்.

ஞான யோகம் (3 -3, 16 – 1)
பாபமற்றவனே! ஆதியில் இருவகையான நிஷ்டைகள் என்னால் கூறப்பட்டன. ஞான யோகத்தால் சாங்கியர்களுக்கும் கரும யோகத்தால் யோகியருக்கும்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் அண்மைக் கால கவிஞன் பாரதி வரை எல்லோரும் ஞானக் கண், ஞான வேள்வி, ஞான வாள் முதலிய சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

Aura3

“பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண்விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயை எல்லாம் ஞானம் எனும்
வாளாலே அறுத்துத் தள்ளி….. (பாரதியார் பாடல்)

திருமூலர், பல இடங்களில் ஞான என்ற சொல்லைப் பயன்படுத்துவதும் படித்து இன்புறத்தக்கது. இதோ திருமந்திரத்தில் ஞானம் வரும் சில இடங்கள்:

ஞானக் கொழுந்து (406), ஞானத் தலைவன் (878), ஞானக் கொம்பு (1033), ஞானப் பொருள் (1335), ஞானபூபதி, ஞானோதயம் (1403) ஞான நிர்வாணம் (1449), ஞான சமாதி (1605) ஞான வேடம் (1640), ஞான முத்திரை (1860), ஞானத் தறி (2000)

இது முழுப் பட்டியல் அல்ல. இடையில் கண்ட சில பாடல்களில் இருந்து மட்டும் எடுக்கப்பட்டவை. ஞான என்ற சொல்லில் துவங்கும் பாடல்களே 15க்கு மேல் உள.
sword,Manjushri-

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே (Tirumanthiram)

எமன் வந்தால் ஞான வாளால் அவனை வெற்றி கொள்வேன். சிவன் வந்தாலோ தயக்கமின்றி அவரோடு போவேன். பிறவிப் பிணி தொடர்வதற்கான காரணங்களை முன்னரே துண்டித்து விட்டேன். இனி தவ வலிமை பெற்றவர்களுக்கு எதிராக யாராவது நிற்கமுடியுமா? எனக்கு எதிரி எவரும் இல்லை.(Tirumanthiram)

ஞான சம்பந்தன்

பெயரிலேயே ஞானத்தைத் தாங்கிய பெருமை 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞான சம்பந்தரையே சாரும். அதற்குப் பின் இதே பெயரில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றினர். குறிப்பாக மகாராஷ்டிரத்தில் தோன்றிய ஞான தேவ் ஒருவர்.

தேவரத்தில் பல இடங்களில் ஞான சொற்களைக் காணலாம். அண்ணாமலையாரைப் போற்றிப் பாடிய துதியில் ஞானப் பிழம்பாய் நிற்கும் சிவனை ‘ஞானத் திரள்’ என்று சம்பந்தர் பாடுகிறார்.
‘ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்… தேவாரம்

aura

இவ்வாறு நூற்றுக் கணக்கான இடங்களில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் நம்மை ஞானக் கடலில் நம்மை மூழ்கடிக்கின்றனர்!!
Contact swami_48@yahoo.com
************

chakras

Pictures are taken from various sites;thanks.

உஷார்! கடவுள் கையில் நோட்டுப் புத்தகம்: 3 பேர் பார்த்துவிட்டனர்!

angel

By London Swaminathan
Post No. 912 Dated 17th March 2014

சிறுவயதில் ஏதேனும் தப்புத் தண்டா செய்தால் அப்பா, அம்மா எச்சரிப்பார்கள்: “எனக்குத் தெரியாமல் எல்லாம் செய்துவிடலாம், ஆனால் யம தர்மனின் கணக்குப் பிள்ளை சித்திர குப்தன் ,எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கிறான். அவன் நோட்டுப் புத்தகத்தில் எழுதிவிடுவான். நாம் இறந்த பின் புண்ணிய ,பாவம் ‘அக்கவுண்ட்’களைப் பார்த்து அதற்குத் தக, நம்மை நரகத்துக்கோ, சொர்க்கத்துக்கோ அழைத்துச் செல்வான் என்று. அப்போதெல்லாம் மனதுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்போம். சும்மா, நம்மை பயமுறுத்த இப்படிச் சொல்லுகிறார்கள் என்று.

இப்போது மூன்று புலவர்கள் நோட்டுப் புத்தகம் வைத்திருக்கும் கடவுளைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். அதிலும் ஒருவர் கிறிஸ்தவர்!. இப்படி மூவர் சொல்லும் போது அதை உதாசசீனப்படுத்தலாமா? உங்கள் காதிலும் இந்தச் செய்தியைப் போடுவது என் கடமை.

அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், பழைய தமிழ் நாட்டின் ‘பில் கேட்ஸ்’ பட்டினத்தாரரும் லண்டன் சவுத்கேட்டில் வாழ்ந்த ஆங்கிலப் புலவன் ஜேம்ஸ் ஹென்றி லெய் ஹண்ட்டும் James Henry Leigh Hunt (1784- 1859) என்ன பாடினார்கள்?

இதோ லெய் ஹண்ட் கவிதை:–
Abou Ben Adhem (May his tribe increase!)
“Awoke one night from a deep dream of peace,
And saw, within the moonlight in his room,
Making it rich, and like a lily in bloom,
An Angel writing in a book of gold:—
Exceeding peace had made Ben Adhem bold,
And to the Presence in the room he said
“What writest thou?”—The vision raised its head,
And with a look made of all sweet accord,
Answered “The names of those who love the Lord.”
“And is mine one?” said Abou. “Nay, not so,”
Replied the Angel. Abou spoke more low,
But clearly still, and said “I pray thee, then,
Write me as one that loves his fellow men.”

The Angel wrote, and vanished. The next night
It came again with a great wakening light,
And showed the names whom love of God had blessed,
And lo! Ben Adhem’s name led all the rest”.

angel2

இதன் பொருள் என்ன?

அபூ பென் ஆடம் ஒரு நாள் சுகமாகத் தூங்கினார். நல்ல கனவு கண்டார். பின்னர் எழுந்தார்.அழகான நிலவொளியில் ஒரு தேவதை ஒரு புத்தகத்தில் தங்க நிற மையில் ஏதோ எழுதுவதைக் கண்டார். அம்மையே! என்ன எழுதுகிறீர்கள்? என்று துணிச்சலுடன் கேட்டார். அங்கிருந்த அற்புதமான ஒரு அமைதி, அவருக்கு அவ்வளவு தைரியத்தைத் தந்தது. அந்த தேவதை சொன்னாள்’” கடவுளிடம் அன்பு (பக்தி) செலுத்துவோரின் பெயர்களை எல்லாம் எழுதுகிறேன்”. “அப்பொழுது என் பெயர் இருக்கிறதா? என்றார். தேவதையோ, ‘இல்லை, இல்லவே இல்லை’ என்று சொல்லிவிட்டது. “சரி, அது போகட்டும், என்னுடன் வாழும் மக்கள் மீது அன்பு செலுத்துபவன் என்றாவது எழுதிக்கொள்ளேன்” என்று கெஞ்சலாகக் கேட்டார். தேவதையோ ஏதோ எழுதிக்கொண்டு பறந்தோடிப் போய்விட்டாள். மறுநாள் முன்னைவிடப் பிரகாசமான ஒளியில் தேவதையைக் கண்டார். அந்த தேவதை பழைய நோட்டுப் புத்தகத்தைக் காட்டினாள். இது அன்பே உருவமான இறைவனின் ஆசி பெற்றோர் பட்டியல் என்று சொன்னாள். என்ன ஆச்சர்யம்!! பென் ஆடத்தின் பெயர் முதல் பெயராக ஜொலித்தது!!!
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!

பட்டினத்தார்
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் பெரியார் பட்டினத்தார். பணம், காசை எல்லாம் துறந்துவிட்டு கருணாநிதியை, தயாநிதியைத் கலாநிதியைத் (கருணையும் தயையும் உடைய, கலைகளுக்கெல்லாம் உறைவிடமான ஆண்டவன்) தேடிச் சென்றார். அவர் பாடிய பல பாடல்களில் ஒன்று கோயில் நான்மணி மாலை. அதில்:–

“தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லை மன்றினும் நடம்
ஆடும் அம்பல வாண!——————–
நிந்தமர் பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன், நின்னருள்
ஆனை வைப்பில், காணொனா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்.”

——-பட்டினத்தாரின் கோயில் நான்மணி மாலை

என்று பாடினார்.” இறைவா, நீ வைத்திருக்கும் கோடு போட்ட நோட்டுப் புத்தகம் இருக்கிறதே, என் பெயரையும் எழுதிக்கொள் என்கிறார். அதாவது உன் அருள் எனக்கும் கிடைக்கட்டும் என்பது அவர்தம் விண்ணப்பம். மிக ஆச்சர்யமான ஒற்றுமை. இதைப் பார்த்துதான் அபூ பென் ஆடம் கவிதையை ஆங்கிலக் கவிஞன் லெய் ஹண்ட் எழுதினானோ என்று எண்ணத் தோன்றுகிறது!!

இவருக்கு 300 வருஷத்துகு முன்னால் வாழ்ந்த அப்பர் பெருமான் ஒரு நோட்டுப் புத்தகம் பற்றிப் பாடினார். அது கொஞ்சம் வித்தியாசமானது. அதில் நல்லவர் கெட்டவர் பெயர் எல்லாம் இருக்குமாம். எதற்காக? கெட்டவர் என்றால் எமனிடம் அனுப்பி, “ஏய், இது உன் வட்டாரம், நன்றாகக் கவனித்துக் கொள்”—என்று விட்டுவிடத் தான்!

442px-Hindu_hell

(இந்தப் படம் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது. நரகத்தின் தோற்றம்)

அப்பர் தேவாரம்

“தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” (அப்பர், 5ஆம் திருமுறை)

சிவ பெருமானே! உன் மீது எல்லையிலா அனபு கொண்டு அழுது, தொழுது, பாடிப் பரவுகின்றவர்களையும், பொழுதை எல்லாம் வீண் அடிக்கும், உன்னைக் கண்டு கொள்ளாத சோம்பேறிகளையும் எழுதி கணக்கு வைத்துக் கொள்பவன் நீ! என்று பாடுகிறார். இந்த ஊரின் பெயர் திருஇன்னம்பர். அங்குள்ள இறைவனின் பெயர் எழுத்தறி நாதர்!!
காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்று.

ஆக, இவர்கள் எல்லாம் சொல்ல வந்தது என்ன? நாம்முடைய ஒவ்வொரு செயலையும் ஆண்டவன் கண்காணிப்பதோடு அதைக் கணக்கும் வைத்து பலாபலன்களைத் தருவான் என்பதுதான்.

angel4

சித்திரகுப்தன் பற்றிய புராணச் செய்தியும் உண்மையே! சித்திரம்= படம், குப்த = ரகசியம். அதாவது ரகசியப் படம். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் அலைகளாக மிதக்கும். தற்காலத்திய சூப்பர் கம்யூட்டர்கள் ஒரே நொடியில் கோடிக்கணக்கான கணக்குகளைப் போடுவது போல, சித்திரகுப்தனும் (அதாவது நாம் உருவாக்கிய எண்ண பிம்பங்கள்) நம் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு நமக்குச் சொர்க்கமா நரகமா என்பதைத் தீர்மானிக்கின்றன. இது சித்திர குப்தன் (ரகசியப் படம்) என்பதற்கு ஒரு அறிஞர் கொடுத்த விளக்கம்.

You are What You Think யூ ஆர் வாட் யூ திங்க்= மனம் போல மாங்கல்யம்= நீ என்ன நினைக்கிறாயோ அதுதான் உன்னை ஆக்குவதும் அழிப்பதும்—என்பது ஆன்றோர் வாக்கு.
angel3

Contact swami_48@yahoo.com