ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

peaceRainbow

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி—

இந்து மதத்தில் வேத மந்திரங்கள் அனைத்தும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் துவங்கி ஓம் சாந்தி என்ற வாழ்த்துடன் முடிவடையும். அந்த ஓம் சாந்தி என்ற சொல்லையும் மூன்று தடவை சொல்லி நிறைவு செய்வார்கள். அது மட்டுமின்றி “ லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து” என்ற மந்திரத்தையும் சொல்லி முடிப்பார்கள். உலகெங்கும் மக்கள் பேரின்பத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனை. சில மந்திரங்கள் இன்னும் குறிப்பாக இரண்டு கால் பிராணிகள், நாலு கால் பிராணிகள் அனைத்தும் நலமோடு வாழவேண்டும் என்றும் கூறும்.

உலகையே இன்பக் கேணியாக மாற்றும் வேதம் ஏன் இப்படி உலக அமைதிக்காக பிரார்த்திக்கிறது? அதுவும் மூன்று முறை சாந்திக்காக ஏன் பிரார்த்திக்கிறோம்? இதன் தாத்பர்யம் (கருத்து) என்ன?
எந்த மனிதனும் முதலில் தனக்கு அமைதி இருந்தால்தான் குடும்பத்தில் அமைதியை உண்டாக்கமுடியும். குடும்பத்தில் அமைதி இருந்தால்தான் நாட்டிலும் உலகிலும் அமைதியை உண்டாக்கமுடியும். மூன்று முறை சாந்தி (அமைதி) சொல்லுவது தனக்கும், குடும்பத்திற்கும் உலகிற்கும் அமைதி உண்டாகவேண்டும் என்று பிரார்த்திப்பதாகும்.

ஒரே மனிதனிலும் மனோ, வாக், காயம் (உள்ளம், சொல், உடல்) மூன்றும் அமைதியாக இருக்கவும் ஓம் சாந்தி, ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று சொல்லுவது அவசியமாகும்.

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ அவனது சுற்றுப் புறம் அமைதியாக இருக்கவேண்டும். அவனது குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும். இந்தக் கருத்து எல்லாம் வேத காலத்திலேயே இருந்ததைப் பார்க்கையில் அவர்களது அறிவு முதிர்ச்சி எந்த அளவுக்கு உயர்ந்திருந்தது என்பது தெரிகிறது.
ஏன் மூன்று முறை சொல்லுகிறார்கள்? இந்துக்கள் எதையும் உறுதி செய்ய மூன்று முறை செய்வது வழக்கம். கோவிலைச் சுற்றுவதில் இருந்து கோர்ட்டில் பெயர் சொல்லி அழைப்பது வரை எல்லாம் மூன்று முறை செய்கின்றனர். ஏலம் போடுவோர் கூட மூன்று முறை அழைத்துவிட்டு ஏலம் போடும் பொருளைக் கேட்டவருக்கே கொடுத்துவிடுவர்.

வேதத்தின் பல பகுதிகளில் சாந்தி பற்றிப் பேசினாலும் அதர்வ வேதத்தில் 19-ஆவது காண்டத்தில் இருக்கும் சாந்தி மந்திரம்தான் மிகவும் புகழ் பெற்றது. அதில் சில பகுதிகளை மட்டும் காண்போம்:

international day of peace 2012

வானம் (நமக்கு) அமைதி வழங்கட்டும்
பூமி அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
கடல் அலைகள் அமைதி வழங்கட்டும்
மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
கடந்தகாலமும் எதிர்காலமும் அமைதி வழங்கட்டும்
எல்லாப் பொருட்களும் அமைதி வழங்கட்டும்.
இதற்குப் பின், எல்லா கடவுளரும், வான மண்டலத்தில் வலம் வரும் எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் அமைதி நல்க பிரார்த்திக்கப்படுகிறது.
பூமி நமக்கு அமைதியை நல்கும்
காற்றுமண்டலமும் வானமும் நமக்கு அமைதியை நல்கும்
தண்ணீர் நமக்கு அமைதியை நல்கும்
தாவரங்கள் நமக்கு அமைதியை நல்கும்
எல்லாக் கடவுளரும் நமக்கு அமைதியை நல்கும்
எங்கும் அமைதி நிலவட்டும்
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
நலங்கள் பெருகட்டும்.

இப்படிப் பல பிராத்தனைகள் வருகின்றன. யஜூர் வேதத்திலும் த்யௌ சாந்தி: அந்தரிகஷம் சாந்தி:– என்ற மந்திரம் இதே பொருளைக் குறிக்கும்.

அந்தக் காலத்தில் இப்படி மந்திரம் சொல்லும் பார்ப்பனர்களுக்கு மன்னர்கள் பொன்னையும் பொருளையும் நிலத்தையும் கொடுத்து உதவினார்கள். ஆக்கபூர்வமான எண்ணங்களைப் பரப்ப அவர்களுக்கு இப்படி வாரி வழங்கப்பட்டது. உலகம் முழுதும் நலமுடன் வாழ அவர்கள் அல்லும் பகலும் பிரார்த்தித்தனர். எல்லோரும் இப்படி செய்யமுடியாதென்பதால் அவர்களுக்கு சமுதாயத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

why no peace

எப்போதும் ஆக்கபூர்வமான சொற்களைக் கேட்பதும் சொல்லுவதும் ஒருவருடைய நம்பிக்கையைப் பலமுறை பெருக்குகிறது. கஷ்ட காலங்களில் எதையும் தாங்கும் இதயத்தைக் கொடுக்கிறது. மனநோய் அருகில் வராமல் காக்கிறது. மோட்டார் வாஹனங்களில் உள்ள ‘ஷாக் அப்சார்பர்’ போல செயல்படுகிறது. எந்நிலையிலும் சம நிலை தவறாமல் வாழ்க்கை என்னும் வண்டி ஓட வகை செய்கிறது.
இந்துக்கள் எல்லா பூஜைகள், விழாக்கள், பண்டிகைகள், யாக யக்ஞங்கள் ஆகியவற்றை முடிக்கும்போது ‘காலே வர்ஷது பர்ஜன்ய:’ என்ற ஸ்லோகத்தையும், “ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்” என்ற ஸ்லோகத்தையும், சொல்லி நிறைவு செய்வர். வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,ஆழ்க தீயது எல்லாம், வையகமும் துயர் தீர்கவே என்பது இதன் பொருள்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Contact swami_48@yahoo.com
Pictures are used from other websites;thanks.

கருமமே கண்ணாயினார்!

kumaragurupara

16.சம்ஸ்கிருதச் செல்வம்

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத இலக்கியத்தில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்ற மாபெரும் கவிஞரான பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலை முன்பு பார்த்தோம்.(அத்தியாயம் 9). இன்னொரு பாடலை இப்போது பார்க்கலாம்.

ஒரு தீரனான மனிதன் கார்ய சித்தியைப் பெறுவது பற்றி அழகுற நீதி சதகத்தில் 73ஆம் பாடலில் கூறுகிறார் அவர். பாடல் இதோ:

க்வசித் ப்ருத்வீசய்ய: க்வசிதபி பர்யங்க ஸயக:
க்வசித் சாகாஹார: க்வசிதபிச ஸால்யோ தன ருசி: I
க்வசித் கந்தாதாரீ க்வசிதபிச திவ்யாம்பரதர:
மநஸ்வீ கார்யார்த்தி ந கணயதி துக்கம் ந ச சுகம் II

கார்யார்த்தி : கார்யசித்தி பெற விரும்பும் (ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பும்)
மநஸ்வீ : தீரனான ஒரு மனிதன்
துக்கம் : துக்கத்தையோ
சுகம் : சுகத்தையோ
ந கணயதி : பாராட்ட மாட்டான்
க்வசித் ப்ருத்வீசய்ய: : சில சந்தர்ப்பங்களில் வெறும் பூமியில் படுப்பான்
க்வசிதபி பர்யங்க ஸயக: : வேறு சந்தர்ப்பத்தில் உயர்ந்த கட்டிலிலும் படுப்பான்
க்வசித் சாகாஹார: : ஒரு சமயம் வெறும் காய் கிழங்குகளையே புசிப்பான்
க்வசித் ஸால்யோ தன ருசி: : இன்னொரு சமயம் உயர்ந்த சம்பா அரிசி சாதத்தைப் புசிப்பதில் ருசி கொள்வான்
க்வசித் கந்தாதாரீ : ஒரு சமயம் கந்தை ஆடையை அணிவான்
க்வசிதபிச திவ்யாம்பரதர: : இன்னொரு சமயமோ திவ்யமான ஆடையை அணிவான்

ஆக வெற்றியை விரும்பும் ஒரு மனிதன் சுக துக்கங்களைப் பொருட்படுத்தமாட்டான். இப்படி வெற்றி பெற இலக்கணம் வகுக்கிறார் பர்த்ருஹரி.

இந்தப் பாடலை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.

எடுத்த காரியத்திற்குத் தடைகள் செய்வோர் ஏராளம். அதை விட்டு விடுமாறு கூறுவதோடு அவமதிப்பைச் செய்வோரும் ஏராளம்.ஆனால் அதையெல்லாம் மீறி தனது உறுதியை விடாமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுபவனே உண்மையில் தீரன் ஆவான்.

புராணங்களில் புகழுடன் திகழும் துருவன், நசிகேதன், பகீரதன் என ஏராளமானோர் நமக்கு உத்வேகம் ஊட்டுகின்றனர்.
நல்ல காரியத்தை லட்சியமாகக் கொள்வோம்; அதை முடித்து வெற்றியும் பெறுவோம்!

நாகராஜன் எழுதிய 60 கட்டுரைகளும் லண்டன் சுவாமிநாதன் 600 (60+600=660) கட்டுரைகளும் இந்த பிளாக்கில் கிடைக்கும். படித்து மகிழ்க.

8.ஆலயத்தை விட்டு வெளியே போ!

ivory buddha2

ஜென் பிரிவு பற்றி எஸ்.நாகராஜன் எழுதும் தொடரில் எட்டாவது பகுதி.

ச.நாகராஜன்

குரு-சிஷ்ய பரம்பரையில் சோகோ கடைசியாக இருந்தார். முதல் குரு இமாகிடோ கோஸென் (1816-1892) அடுத்தது ஷாகு சோயென் (1859-1919), அடுத்து டெட்சுவோ சோகாட்ஸு.(870-1954), அடுத்து கோடோ ஜுய்கன் (1879-1965), அடுத்து ஒடா செஸொ (1901-1966) அவருக்கு அடுத்தபடியாக கடைசியில் சோகோ.

இந்த வரிசையை இன்னும் தொடர்ந்து வரலாற்று ரீதியாக பார்த்துக் கொண்டே போனால் அது முதலாவதாக இருந்த சாக்யமுனி புத்தரில் முடியும்.சாக்யமுனி புத்தரின் போதனைகளின் பெயர் இங்கா. அது பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானது. இந்த இங்கா முத்திரையை குருவிடம் முறையாகப் பெற்றவர்களே உள்ளொளி பெற்றதற்கான அங்கீகாரத்தை குருவிடம் பெற்றவர்களாவர். ஜென் பிரிவில் ரின்டாய் உட்பிரிவில் இப்படிப்பட்ட அதிகாரபூர்வமான குருமார்களை ரோஷி என்று அழைப்பர்.

முதல்குருவாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இமாகிடோ கோஸென் பிரம்மாண்டமான குரு. இவரது சிஷ்யராக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஷாகு சோயென் தான் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு ஜென் புத்தமதப் பிரிவை அறிமுகப்படுத்திய பெரிய மாஸ்டர்.

ஒரு நாள் காலை மிஸ் ஒகோமோடோ ரோஷியிடம் வந்து அமர்ந்தார். “ரோஷி! குருவில் யார் பெரியவர் கோஸெனா அல்லது அவர் சிஷ்யர் ஷாகு சோயெனா?” என்று அவர் கேட்டார்.எப்போதுமே விஷயங்களை ஜோக் அடிக்காமல் தீவிரமாகப் பேசும் ரோஷி, “கோஸென் தான் பெரியவர்” என்று பதிலிறுத்தார். பிறகு மிஸ் ஒகோமோடோ,” ஷாகு சோயென் பெரியவரா அல்லது அவர் சிஷ்யர் சோகாட்ஸுவா?” என்று கேட்டார்.

”மாஸ்டர் சோயென் தான் பெரியவர்!” என்றார் ரோஷி.இதைக் கேட்ட மிஸ் ஒகோமோடோ,” நீங்கள் சொல்வதைப் பார்த்தால் குரு-சிஷ்ய பரம்பரையில் ஒவ்வொரு சிஷ்யரும் சற்று கீழான தரத்தைக் கொண்டிருப்பது போல இருக்கிறதே! அப்படியானால் இந்த பரம்பரை கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து வருவது போல இருக்கிறதே!” என்றார்.

“சரி,இப்போது சொல்லுங்கள், உங்கள் குரு சோகாட்ஸு பெரியவரா அல்லது நீங்களா? என்று மெதுவாகக் கேட்டார் மிஸ் ஒகோமோடோ. மின்னல் போலப் பளீரென்று,” இருவரில் நான் தான் பெரியவன்” என்றார் ரோஷி. மிஸ் ஒகோமோடோவுக்கு இந்த பதிலைக் கேட்டு ஒரே சந்தோஷம்! உடனே மிஸ் ஒகோமோடோ மெதுவாக,” ரோஷி! இன்னும் ஒரு கேள்வி. நீங்கள் பெரியவரா அல்லது உங்களின் சிஷ்யரான செஸோ பெரியவரா?” என்று கேட்டார்.

அருகிலிருந்து இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சோகோவுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.வாய்விட்டு ஹா,ஹா என்று சிரித்தார். ரோஷியோ ஜென் உலகின் முடி சூடா மன்னராக பிரம்மாண்டமான நிலையில் குருவாக இருக்கிறார். ஆனால் செஸோவோ எந்த ஒரு அதிகார பதவியிலும் இல்லை. அவரைப் பெரிய மாஸ்டரான ரோஷியுடன் ஒப்பிடுவதா! சோகோவுக்கு சிரிப்பு தான் வந்தது. உண்மையில் உள்ளொளியின் அடிப்படையில் மனிதனைத் தரம் பிரிக்க வேண்டும் என்றே சோகோவுக்குத் தெரியவில்லை. சமூக அந்தஸ்தை வைத்தே மனிதனின் அந்தஸ்தை இனம் காண வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆகவே தான் அந்தச் சிரிப்பு!

ஆனால் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், ”அது இன்னும் தெரியவில்லை!” என்று பதில்சொன்னார் ரோஷி! சோகோவின் சிரிப்பு இதைக் கேட்டுச் சட்டென அடங்கியது.அவர் கண்களில் வெள்ளமென கண்ணீர் பொங்கியது.எப்படிப்பட்ட அற்புதமான குருவைத் தான் கொண்டிருக்கிறோம்!” “அவன் இன்னும் பல பேர் மத்தியில் பேசவே அருகதை அற்றவன்” என்று அவர் சொல்வதற்கு எத்தனை விநாடிகள் வேண்டும்!

அந்த அற்புத மனிதர் தன் சிஷ்யர்களின் மேம்பாட்டிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்தார். இன்னும் ஒன்று,ஐந்து அல்லது பத்து வருடங்களில் தன் சிஷ்யன் தன்னை வென்று பெரியவனாகி விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவே தான், ”அது இன்னும் தெரியவில்லை” என்ற பதிலை அவர் அளித்தார்! அப்படிப்பட்ட பெரிய மகான் சோகோவுக்கு குருவாக வாய்த்திருந்தது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ivory buddha

பயிற்சிக் காலத்தில் ஒரு சமயம் சோகோ தப்பு ஒன்றைச் செய்து விட்டார். உடனே ரோஷி சம்பிரதாய வழக்கப்படி சோகோவை டைஷுயின் ஆலயத்திலிருந்து உடனடியாக வெளியே செல்லுமாறு “ஆலயத்தை விட்டு வெளியே போ” என்ற கட்டளையைப் பிறப்பித்தார். மனம் வருந்திய சோகோ சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட போதும் அவர் மனம் இரங்கவில்லை. கெஞ்சிக் கெஞ்சி முழு உடலையும் கீழே கிடத்தி சோகோ நமஸ்காரம் செய்து மன்னிப்புக் கேட்ட போதும், ‘முடியாது’, என்ற பதிலையே ரோஷி சொல்லிக் கொண்டிருந்தார்.

கடைசியில் தன் தலையை மட்டும் தூக்கி அழுது வீங்கி இருந்த கண்களுடன் ரோஷியைப் பார்த்தார் சோகோ!
அவரது தீவிரமான பார்வையைக் கண்ட சோகோவுக்கு தொண்டை அடைந்த்தது.

இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த குரலை எழுப்பி,” என்ன நடந்தாலும் சரி,நீங்கள் என்ன சொன்னாலும் சரி,எப்படி என்னை வெளியேற்ற நீங்கள் முயன்றாலும் சரி, நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.போகவே மாட்டேன்.போகவே மாட்டேன்”என்றார் சோகோ.
அப்போது ரோஷியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி அவர் கன்னம் வழியே வழிந்தது. அதைப் பார்த்த சோகோவின் மெய் சிலிர்த்தது. சோகோ எப்பொழுதுமே ரோஷியின் சிஷ்யர் தான்! அவருக்கும் தன் சிஷ்யன் எப்படிப்பட்டவன் என்பது புரிந்துவிட்டது.

சோகோவுக்கும் ரோஷிக்கும் இருந்த குரு-சிஷ்ய அன்புப் பிணைப்பு வலுவாக இருந்தது. ஜென் பிரிவில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இருக்கும் அன்புப் பிணைப்பின் இடையில் ஒரு சிறு மயிரிழை கூட நுழைய முடியாது. அப்படி ஒரு பிணைப்பு இருக்கும்!!
முந்நூறு பவுண்டு உள்ள இரண்டு மல்யுத்த வீர்ர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டி உருண்டு புரண்டு அலாக்காகத் தூக்கி கீழே போடும் போது தாங்கள் சண்டையிடும் மல்யுத்த மேடை நிச்சயம் உடைந்து போகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தானே அவர்கள் சண்டை போடுகிறார்கள் அந்த அடிப்படையான நம்பிக்கை ஜென் பயிற்சிக்கு அவசியம்!

ஜென் பிரிவில் “நான்” என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.இந்த நான் என்ற எண்ணம் லேசில் அழியாது.’வெளியே போ’ என்ற அச்சுறுத்தல், திட்டல் இவற்றிற்கெல்லாம் பயந்தால் ஜென் பயிற்சி பூர்த்தி பெறாது!

ஒரு வருட காலம் ரோஷியின் கீழ் பயிற்சி பெற்ற சோகோவுக்கு ஒரு நாள் அந்தப் பயிற்சி முடிவுக்கு வந்தது.
ஒரு நாள் ரோஷி சோகோவை அன்புடன் தன் அருகில் அழைத்தார்.

சின்ன உண்மை
இன்று ஜப்பானில் ஜென் மடாலயங்கள் சுமார் 72 உள்ளன! சாதாரண சிறிய ஜென் ஆலயங்கள் சுமார் இருபதினாயிரம் உள்ளன. ஆனால் மடாலயங்களில் ஜென் குருமார்களுக்கான பயிற்சியில் இருப்போர் ஆயிரத்தை என்றுமே தாண்டியதில்லை!

-தொடரும்

கண்ணாடிக் கோவில்: உலக அதிசயம்

arulmigu-sri-rajakaliamman (1)

Hindu Wonder: Malaysian Glass Temple

இந்துமதம் ஒரு வண்ணக் கலவை; மிகவும் கவர்ச்சிகரமானது. நாள் தோறும், யுகம் தோறும் மாறக்கூடியது. பரந்த மனப்பான்மையும் ஜனநாயகமும் கொண்டது. எல்லா மதக் கொள்கைகளையும் உள்ளடக்கியது. ஆயிரம் தலை ஆதிசேஷன் போல பல்லாயிரம் தெய்வங்களைக் கொண்டது. பல்லாயிரம் பாடல்களைக் கொண்ட பல நூறு நூல்களை உடையது. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்கள் இருப்பதை ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆயினும் விந்தையிலும் விந்தை– அடிப்படைக் கொள்கைகளை மாற்றாதது!

ஆயிரம் ஆண்டுகளாக ஒரே கொள்கையில் பற்றுதல் உடையது. உருவங்கள் மாறலாம்; சாது சந்யாசிகள் மாறலாம். ஆயினும் கொள்கைகள் மாறாது: (1)கடவுள் ஒருவரே- அவரைப் பல உருவங்களில் வணங்கலாம் (2) நல்லது செய்தால் நல்லது நிகழும் (கர்ம வினைக் கொள்கை) (3) ஆத்மா அழியாதது, இறந்த பின்னர் மறுபிறப்பு உண்டு (4) இந்துக்களின் இறுதி லட்சியம்– ஜனன-மரணச் சுழலில் இருந்து விடுபடவேண்டும்.

arulmigu-sri-rajakaliamman

Malaysia’s Raja Kali Amman Temple: Architectural Wonder

இந்த அடிப்படைக் கொள்கைகளை ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு காலத்திலும் உதிக்கும் சாது சந்யாசிகள், சித்த புருஷர்கள், மஹா யோகிகள், ரிஷிகள், ஞானிகள் –அவர்களுக்கே உரித்தான பாணியில்—புதிய பாணியில்—வழங்குவார்கள். கடவுளைக் கல்லிலும் சமைப்பார்கள்—கண்ணாடியிலும் சமைப்பார்கள்; தங்கத்திலும் வடிப்பார்கள், மரகதம், ஸ்படிகத்திலும் செதுக்குவார்கள்.

omkareswaram temple
vilakku

Sri Narayana Guru’s Mirror and Lamp Temple

நாராயண குருவின் கண்ணாடிக் கோவில்

கேரளத்தில் அவதரித்த பெரியார்களில் ஒருவர் நாராயண குரு(1856-1928) அவர் பெரிய சமூக சீர்திருத்தவாதி, தத்துவ வித்தகர். ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கை ஒளி ஊட்டியவர். அவர் தோன்றாவிடில் ஈழவா எனப்படும் பின் தங்கிய வகுப்பு மக்கள் எல்லோரும் மதம் மாறி இருப்பார்கள். பல நூறு கோவில்களை புணருத்தாரணம் செய்ததோடு, பல புதிய கோவில்களையும் உருவாக்கியவர்.
நாராயண குரு செய்த பல புதிய கோவில்களில் கண்ணாடி , விளக்கு, ஓம் எழுதிய பித்தளைப் பட்டயம் ஆகியனவும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கலவம்கூடம் என்னும் இடத்தில் கண்ணாடியையும், முருகம்புழவில் ஓம் எழுதிய பித்தளைத் தகட்டையும்,சித்தம்பரத்தில் விளக்கையும், வைக்கம் அருகில் ஓம்காரேஸ்வரத்தில் கண்ணாடியையும் பிரதிஷ்டை செய்தார். இது ஒவ்வொன்றிலும் பெரிய தத்துவம் அடங்கி இருக்கிறது.

FD COVER

Indian Stam and First Day Cover for Sri Narayana Guru

சாக்ரடீஸும் ஸ்ரீ நாராயண குருவும்
கிரேக்க நாட்டில் டெல்பி என்னும் இடத்திலும் எகிப்து நாட்டில் லக்சார் என்னும் இடத்திலும் “உன்னையே நீ அறிவாய்” என்னும் தத்துவ வசனம் எழுதப்பட்டிருந்தது. இதை சாக்ரடீஸ் பிரபலப்படுத்தியதாக அவரது சீடர் பிளாட்டோ நமக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் இவர்களுக்கு எல்லாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நமது வேத, உபநிஷதங்களில் இந்தக் கருத்து கூறப்பட்டிருக்கிறது. “தத்வம் அசீ” (நீயே அது) “அஹம் பிரம்மாஸ்மி” ( நானே பிரம்மம்) என்ற வாசகங்கள் மிகவும் பிரபலமானவை. இதையே பாமர மக்களுக்கு விளங்க வைக்க ஒரு கண்ணாடியை முன்னர் வைத்து “நீயே உன்னை அறிவாய்” என்று சொல்லாமல் சொல்லிவைத்தார் ஸ்ரீ நாராயண குரு என்னும் மஹான். விளக்கு என்பது கல்வி அறிவையும் இறைவன் பற்றிய அறிவையும் எடுத்துக் காட்டும்.

“ஒரு ஜாதி,ஒரு மதம், ஒரு தெய்வம்” என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சங்கம் தோற்றுவிக்கக் காரணமானார். “ ஜாதியைக் கேட்காதே, சொல்லாதே, நினைக்காதே” என்றும் கற்பித்தார். காவி உடை அணியாதத் துறவியாகத் திகழ்ந்தார். எதையும் கண்டிக்காமல், கண்டனம் செய்யாமல் ஆக்கபூர்வமான சமுதாயக் கட்டுமானத்தில் கவனம் செலுத்தினார். நாம் வணங்கத்தக்க மாபெரும் புனிதர் அவர்.

coins

மலேசிய அதிசயம்– கண்ணாடிக் கோவில்
உலகில் கோவில்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டது இப்போது துவங்கியதல்ல. அழகர்கோவில், காஞ்சீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்பட நிறைய கோவில்களில் கண்ணாடி அறைகள் உண்டு. இங்கு சுவாமி எழுந்தருளும்போது நாம் உள்ளே சென்றால், கடவுளுடன் நாமும் பல நூறு இடங்களில் பிரதிபலிப்போம். கடவுள் திரு உருவைச் சுற்றி பல கோணங்களில் பல கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால் நம் உருவம் நூற்றுக்கணக்கில் தோன்றும். வட இந்தியாவில் ரிஷிகேஷ் போன்ற தலங்களில் தற்காலத்தில் கண்ணாடிச் சிற்பங்கள் செய்துவைத்துள்ளனர். ஆயினும் இவை எல்லாவற்றையும் விஞ்சும் ஒரு அரிய சாதனையை மலேசிய இந்துக்கள் செய்துவிட்டனர்.

ஜோஹுர் பாஹு என்னும் இடத்தில் உள்ள ராஜ காளி அம்மன் கோவில் உலகிலேயே பெரிய, முதலாவது கண்ணாடிக் கோவில் என்றால் அது மிகை ஆகாது. மூன்று லட்சம் வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஜெகஜ் ஜோதியாக இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவர்களை எல்லாம் நேபாள நாட்டில் இருந்த கொண்டுவரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராக்ஷ மணிகள் அலங்கரிக்கின்றன. ஆத்மலிங்க சந்நிதி நடு நாயகமாக ஜொலிக்கிறது. விளக்கு வெளிச்சத்தில் கண்ணைப் பறிக்கும் பிரகாசம் நம்மை மாயாஜால உலகில் கொண்டுபோய் நிறுத்திவிடும். இது அதிசயக்கத் தக்க ஒரு கட்டுமான விந்தை. மலேசியாவில் மாபெரும் சுற்றுலாக் கவர்ச்சி.

jesus christ

புத்தர், ஏசு, அன்னை தெரசா முதலிய பத்து பளிங்குச் சிலைகளும் பிரகாரத்தை அலங்கரிக்கின்றன. அத்தோடு பொற்சிலைகளும் உண்டு. இந்துக் கடவுளரின் உருவங்கள் எல்லாம் இங்கே ஒளிவீசுகின்றன.

கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள்
உலகில் கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தியாவில் இதை சுபம் தரும் சின்னம்மாகக் கருதுவர். தமிழ் புத்தாண்டை ஒட்டி வரும் மலையாளிகளின் “விஷு” புண்ய காலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் கண்ணாடியும் அடக்கம். நவராத்ரி மற்றும் சுமங்கலி, கன்யாப் பெண்கள் பூஜைகளில் குங்குமம், சிமிழ், சீப்பு ஆகியவற்றுடன் கண்ணடியையும் கொடுப்பர். இது ஆண்டாள் காலத்தில் இருந்து வரும் வழக்கம் என்பதை திருப்பாவை இருபதாம் பாடலில் அவரே கூறுகிறார் (உக்கமும் தட்டொளியும்).

கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்றும் அதில் முகம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் அச்சம் உண்டு. “கண்ணாடியில் படியும் மாசும், மூச்சுக் காற்றும் நீங்குவது போல” என்ற உவமை தமிழ், வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் பயிலப்படுகின்றன. ஆதிசங்கரர் (விவேக சூடாமணி 291), திருவள்ளுவர் (குறள்706), ஆண்டாள் (பாவை 20), புத்தரின் தம்மபதம், தொல்காப்பியம் ஆகியவற்றில் கண்ணாடி பிரதிபலிப்பு பற்றிய உவமைகள் உள்ளன.

buddha,theresa

மேலை நாடுகளில் கண்ணாடியை ஒரு தாயத்தாக பயன்படுத்தினர். இதற்குக் காரணம் பேய்களுக்கு கண்ணாடியில் முகம் தெரியாதென்ற நம்பிக்கையாகும். இறந்தவர்களின் ஆவியை கண்ணாடிகள் பிடித்துவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை காரணமாக பழங்காலத்தில் இறந்தவர்கள் இருக்கும் அறையில் கண்ணாடிகளைத் துணி போட்டு மூடிவைத்தனர். படுக்கைக்கு முன்னால் கண்ணாடி இருந்தால் தூக்கம் வராது என்ற வாஸ்து சாஸ்திரமும் உண்டு. கண்ணாடி பற்றி முஸ்லீம் கிறிஸ்தவ அறிஞர்களும் எழுதி வைத்துள்ளனர். விரிவஞ்சி இத்தோடு நிறுத்துகிறேன்.

(லண்டன் சுவாமிநாதன் எழுதிய 600 கட்டுரைகளையும், நாகராஜன் எழுதிய 50–க்கும் மேலான கட்டுரைகளையும் இந்த பிளாக்—கில் படிக்கலாம். கட்டுரைகளைப் பயன்படுத்துவோர் பிளாக் பெயரையோ கட்டுரையாளரின் பெயரையோ கட்டாயம் வெளியிடவேண்டும்).

0003.sree narayana guru

Sri Lankan Stamp for Sri Narayana Guru

மஹாத்மா : நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியம்!

My Life

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜயந்தி. அண்ணலை நினைவு கொண்டு உத்வேகம் பெறுவோம்

ச.நாகராஜன்

ஒரு கால் உள்ளே ஒரு கால் வெளியே!

மஹாத்மா காந்திஜியின் வாழ்க்கையை உற்றுக் கவனிப்போர் ஏராளமான அதிசயங்க:ளைக் காணலாம். சத்தியத்தின் அடிப்படையில் “சொல்வதைச் செய்; செய்வதைச் சொல்” என்பதை மெய்யாக்கியவர் மஹாத்மா.

அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் பொருள் பொதிந்த கணமாக இருப்பது மனித குலத்திற்கான சிறந்த படிப்பினையாக அமைகிறது.

பாரபட்சமற்ற நடுவு நிலைமைக்கு அந்த வாழ்க்கையில் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் காட்டலாம்.உதாரணத்திற்கு இரண்டு:

உப்பு சத்யாக்ரஹம் ஆரம்பிக்க இருந்த தருணத்தில் ஒரு நாள். நேரப்படி நடக்கும் சபர்மதி ஆசிரமத்தில் அனைத்துக் காரியங்களும் செவ்வனே நடந்து கொண்டிருந்தன. கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்ற ஆசிரமத்தில் பிரார்த்தனைக்கான மணி அடிக்கப்பட்டால் கதவுகள் மூடப்படும். ஒரு விநாடி தாமதமாக வந்தால் கூட உள்ளே செல்ல முடியாது. தனது வருகையை ஆசிரமத்தில் இருந்தோர் பதிவு செய்ய முடியாது. ஒரு நாள் பிரார்த்தனைக்கான மணி ஒலித்தது. மஹாத்மா கதவருகே விரைந்தார். ஒரு கால் உள்ளேயும் ஒரு கால் வெளியேயும் இருந்தது.கதவை மூடிக் கொண்டிருந்தவர் காந்திஜியை உள்ளே வர அனுமதித்தார்.

அன்று பிரார்த்தனை முடிந்தவுடன்,” இன்று நான் விதியை மீறி விட்டேன்.உடலின் பெரும் பகுதி உள்ளே இருந்தாலும் கூட எனது ஒரு கால் கதவுக்கு வெளியே இருந்தது .கதவருகே இருந்த காப்பாளர் என்னை உள்ளே அனுமதித்து சலுகை காட்டி இருக்கக் கூடாது. நானும் கூட வெளியே தான் இருந்திருக்க வேண்டும். என்றாலும் கூட எனக்காக நீங்கள் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்து விட்டேன். ஆனால் இப்படிப்பட்ட சலுகை ஒரு நோயாளி அல்லது அவரைக் கவனித்துக் கொண்டிருப்பவர் தவிர வேறு யாருக்கும் அளிக்கப்படக்கூடாது” என்றார்.

காந்திஜி தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எப்போதுமே கடைப்பிடித்ததில்லை. அன்றிலிருந்து பிரார்த்தனை திறந்த வெளி மைதானத்தில் நடக்க ஆரம்பித்தது.

greed

தர்மர் அளித்த நீதி

இந்த விஷயத்தை மஹாபாரத சம்பவம் ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பீமனுக்கும் புருஷாமிருகத்திற்கும் நடந்த ஓட்டப்பந்தயத்தில் புருஷாமிருகம் தன்னை ஓட்டத்தில் வென்று விட்டால் பீமனை விட்டு விடுவதாகக் கூறவே பீமன் பந்தயத்திற்கு இணங்கினான். பந்தயத்தில் பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியேயும் ஒரு கால் எல்லைக்கு உள்ளேயும் இருக்கவே புருஷாமிருகம் பீமனைத் தோற்றதாகக் கூறியது.பீமனோ வெளியே இருந்த ஒரு காலைக் காட்டித் தான் வென்றதாகக் கூறினான். இதற்கு நடுவராக இருந்த தர்மபுத்திரர் தீர்ப்பு சொல்ல வேண்டி இருந்தது. அவர் தீர்க்கமாக புருஷாமிருகமே வென்றதாக அறிவித்தார். தம்பிக்காக சலுகை காட்டவில்லை. இதனால் மனம் மகிழ்ந்த புருஷாமிருகம் பீமனை விடுவித்தது. நடுவுநிலைமைக்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை கூற விழைந்த குருபாததாசர் தனது குமரேச சதகத்தில் 61ஆம் பாடலில் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறுகிறார்.

வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்
வருமென்றும் நேசரென்றும்
வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன
வானென்றும் ஏழையென்றும்

இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்
எள்ளள வுரைத்திடாமல்
எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்
ஏற்கச்ச பாசமதமாம்

முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்
மொழிந்திடின் தர்மமதுகாண்
முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
முன்தருமர் சொன்னதலவோ?

மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட
வளர்ந்தருள் குழந்தைவடிவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.

இப்படி வியந்து “முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
முன் தருமர் சொன்னதலவோ?” என்று தர்மபுத்திரரின் நீதியை வியந்து குருபாததாசர் கூறுகிறார். இதே ‘ஒரு கால்வெளியே ஒரு கால் உள்ளே’ சம்பவத்தில் தன்னையே விதியை மீறியதாக அறிவித்துக் கொண்டார் மஹாத்மா!

நமது காலத்திலேயே வாழ்ந்த மஹாத்மா ஒவ்வொரு செயலிலும் பெரிய அறப்பண்புகளை “வாழ்ந்து” காட்டினார். எதிலும் நடுவு நிலைமை;எப்போதும் நடுவு நிலைமை தான் அவருக்கு!
eye for eye

படேலின் புகாரும் மஹாத்மாவின் தீர்ப்பும்

இன்னொரு சம்பவம்:
பெண்களுக்கான ஒரு கல்வி நிலையத்தில் மேலாளராக இருந்தவரைப் பற்றி அங்குள்ள மாணவிகளிடம் அவர் தவறாக நடப்பதாகப் புகார் மஹாத்மாவிடம் வந்தது. புகார் செய்தவர் வேறு யாருமில்லை, சர்தார் வல்லபாய் படேல் தான்.புகாருக்கு ஆளானவரோ பெரிய சேவை மனப்பான்மை கொண்டவர். எப்போதுமே இரு பக்க நியாயத்தையும் கேட்டுத் தான் தனது இறுதித் தீர்ப்பை வழங்குவார் மஹாத்மா.

மேலாளரோ தன் மேல் வேண்டுமென்றே புகார் கூறப்பட்டிருக்கிறது என்றும் சர்தார் அனைவரும் எப்போதும் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையே விரும்புபவர் என்றும் தனது ஆக்கபூர்வமான சுதந்திரமான செயல்பாட்டை அவரால் பொறுக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இரு தரப்பினருமே மஹாத்மாவையே விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இருக்கின்ற அரசியல் நிலைமையில் சேவாகிராமத்திலிருந்து இந்த விஷயத்திற்காக குஜராத் செல்லவும் மஹாத்மாவால் முடியவில்லை. அந்தக் கல்வி நிலைய மாணவிகளைத் தன் இருப்பிடத்திற்கு வரச் சொல்லி விசாரிக்கலாம் என்றாலோ அதற்காக ஆகும் பணச்செலவு ஏராளம் என்பதால் அதுவும் சரியல்ல. மஹாத்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக ஒருவரை குற்றம் சாட்டப்பட்டவர் பரிந்துரைத்தார். இறுதித் தீர்ப்பைத் தான் வழங்குவதாக மஹாத்மா தெரிவித்தார். ஆனால் விசாரணையைச் செய்ய இருப்பவர் ஹிந்து மஹாசபையின் உறுப்பினர் என்றும் அவர் காங்கிரசுக்கு எதிரானவர் என்றும் ஆட்சேபணை கூறப்பட்டது.

ஆனால், “மஹாத்மாவோ அவர் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரானாலும் சரி அப்பழுக்கற்ற ஒழுக்கம் உடையவர். சர்தார் படேல் துணிச்சல்காரர். அவரை விசாரணை அதிகாரியாக நியமிப்பதை ஏற்றுக்கொள்வார்” என்றார்.

சர்தாருக்குத் தந்தி அடிக்கப்பட்டது. அவர் விசாரணை செய்பவரின் பெயரை ஏற்றுக் கொண்டார். விசாரணை முடிந்தது. அனைத்துத் தகவல்களையும் அலசி ஆராய்ந்த மஹாத்மா தன் தீர்ப்பைக் கூறினார்.

அதில்,” மாணவிகள் மேலாளருக்கு எதிராகப் புகார் கூறினாலும் அவர்கள் அதை நேரில் தெரிவிக்க முடியாதென்றும் குறுக்கு விசாரணைக்கு உட்பட முடியாதென்றும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டிருப்பவரோ கத்தியவாடிலும் குஜராத்திலும் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை மாற்று மதத்திற்கு மாற்றும் முயற்சியை எதிர்த்துப் போராடி தனது சேவை மூலம் அவர்களைக் காப்பாற்றியவர். அவரைச் சரிபார்க்க முடியாத புகார்களின் அடிப்படையில் குற்றமிழைத்தவராக அறிவிக்க முடியாது என்று விசாரணைக் குழு கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன், குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தன் நிலையை விளக்க ஒரு சந்தர்ப்பம் அளித்தால் தான் நீதியை அளிக்க முடியும். ஆகவே இந்த கேஸை நான் தள்ளுபடி செய்கிறேன். என்றாலும் கூட மேலாளர் தன்னை ஆத்மசோதனை செய்து கொண்டு ஏதேனும் தவறு செய்திருந்தால் அதைச் சரி செய்வார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

சர்தார் வல்லபபாய் படேல் தனக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் அவருக்கு ஆதரவாக தீர்ப்பைக் காந்திஜி கூறவில்லை என்பது அவரது நேர்மை தவறாத நடுவு நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

இப்படி மஹாத்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்கள் அவர் ஏன் மஹாத்மா என்று போற்றப்பட்டார் என்பதைப் பறை சாற்றுகின்றன.

7 sins

நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியம்

நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் மஹாத்மா காந்திஜி.
அவரைப் போற்ற வேண்டுமெனில் அந்த அறப்பண்புகளை வாழ்ந்து காட்டும் முயற்சியை ஒவ்வொருவரும் எடுப்பதே சரியாக அவரைப் போற்றும் முறையாக அமையும்.

வாழ்க அவர் புகழ் என்று வாழ்த்துவதோடு நில்லாமல் வாழ்ந்து காட்ட முயல்வோமாக!

((குறிப்பு: இந்த இரு சம்பவங்களையும் ராமநாராயண் சௌதரி தனது Bapu as I saw Him என்ற ஆங்கில நூலில் விளக்கமாக எழுதியுள்ளார்.)
********************

7. எல்லோர் முன்னிலையிலும் பேசத் தகுதியற்றவன்!

The Jade Buddha for Universal Peace

This is Part-7 in the Series on Buddhism written by Santanam Nagarajan for nilacharal.

ச.நாகராஜன்

“மனிதர்களிலோ பொருள்களிலோ அவை அசலாக இருக்கும் போது குப்பை என்று எதுவும் இல்லை” என்பது புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை.

புத்தர் ஒரு முறை,” என்ன அற்புதம்!என்ன ஆச்சரியம்!! சுயபுரிதல் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஒரு வித குறையுமின்றி எவ்வளவு பரிபூரணமாக உள்ளன!! மாயையால் ஏற்பட்ட தளைகளினால் உண்மை காணப்படமுடியாமல் இருக்கிறது” என்று கூறினார். .

இந்த அடிப்படை உண்மையைத் தான் ரோஷி சோகோவுக்குக் கற்பித்திருக்கிறார். ஆனால் ‘மர மண்டையாக’ அப்போது இருந்த சோகோவுக்குத் தான் அது புரியவில்லை.

நாள் செல்லச் செல்ல நம்பிக்கை கொள்வது உள்ளார்ந்த மனதுடன் ஒருவரை முணுமுணுப்பின்றியும் மறுப்புச் சொல்லாமலும் ஏற்றுக் கொள்வது என்பதை சோகோ புரிந்து கொண்டார். ஆகவே குரு எதைச் சொன்னாலும் சரி, சரி, சரி என்று சொல்ல சோகோ கற்றுக் கொண்டார். ஒரே சமயத்தில் அவர் மூன்று வேலைகளைக் கொடுத்தாலும் சரி, இதுவரை செய்தே இராத புதிய வேலையை அவர் தந்தாலும் சரி,சோகோவின் பதில் சரி, செய்து விடுகிறேன் என்பதாக ஆனது. புதிய வேலை என்றால் அதை எப்படிச் செய்வது என்பதை தன் புத்தியால் ஆராய்ந்து தன் சாமர்த்தியம் முழுவதையும் உபயோகித்து அதைக் கற்றுச் செய்யலானார் சோகோ.

அவரிடம் சேர்ந்த முதல் நாளன்று மடாலயத்தின் தாழ்வாரத்தை துடைக்கச் சொன்னார் ரோஷி. உடனடியாகக் களத்தில் இறங்கிய சோகோ முழங்காலைத் தரையில் பதித்து துணியால் தரையைத் துடைக்கத் துவங்கினார்.

“முட்டாள்” என்று கத்தினார் ரோஷி. “இப்படி எத்தனை நாளில் இதைத் துடைப்பதாக உத்தேசம். இதை இப்படியா செய்வது.கொண்டா, நான் செய்து காட்டுகிறேன்” என்று கூறிய எழுபது வயதான ரோஷி சோகோவிடமிருந்து துணியை வாங்கி தரையில் கைகளைப் பதித்து மறுபுறம் துணியை சீராகப் பறக்கவிட்டு நாலாபுறமும் அதை வீசித் துடைக்கலானார். சோகோவின் தலை கவிழ்ந்தது.

சோகோ இது வரை என்ன செய்திருந்தார்? பள்ளி நாட்களில் தத்துவத்தையும் இதர பாடங்களையும் நண்பர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் படிக்க வேண்டியது. ஒழிந்த நேரமெல்லாம் அரட்டை,அரட்டை அரட்டைதான்!கவைக்கு உதவாத வெற்றுப் படிப்பு!
தரையைச் சுத்தம் செய்வது என்ற சாதாரண வேலையைக் கூடச் சரியாகத் தன்னால் செய்ய முடியவில்லையே என்று வெட்கப்பட்டார் சோகோ.

Jade-Buddha-Temple-5

பின்னாட்களில் பெரிய ஜென் மாஸ்டராக ஆன போது சோகோ தன்னிடம் ‘ஜஜென்’ எனப்படும் தியானத்தைக் கற்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் வரும் போது அவர்களுக்குத் தரும் முதல் வேலை ‘வெந்நீர் போடுங்கள்’ என்பது தான்.’வெந்நீர் போட முதலில் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்பார் சோகோ.
மாணவர்கள் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்பார்கள்.
“இல்லை,இல்லை” என்பார் சோகோ!

“முதலில் அண்டாவில் நீரை நிரப்ப வேண்டும்” என்பார்கள் அவர்கள்.
“முதலில் அண்டாவைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அளவு பார்த்து நீரை விட வேண்டும்.அப்புறம் அண்டாவை மூடி போட்டு மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும். பின்னரே அடுப்பை மூட்ட வேண்டும்” என்று விளக்குவார் சோகோ.

சற்று நேரம் கழித்து அவர்கள் எப்படி வேலை பார்க்கிறார்கள் என்று சோகோ பார்க்கப் போனால் இரண்டு விறகும் பாதி எரிந்த பேப்பர்களும் அடுப்பில் இருக்கும்.
“இப்படி எரியவே கூடாது. சற்றுக் கிளற வேண்டும்”, என்று சொல்லித் தருவார் சோகோ.

“சின்னக் கரண்டி வேண்டுமே, கிளற” என்பார்கள் அவர்கள்.
‘அதை ஏன் கேட்கவில்லை’, என்பார் சோகோ.
கரண்டி வந்து கிளறினாலும் அடுப்பு சரியாக எரியாது.
அவர்களிடம் சோகோ,” தீ எப்படி எரிக்க உதவுகிறது” என்று கேட்பார்.
“அது ஒரு கெமிக்கல் ப்ராஸஸ்! ஒரு பொருளும் ஆக்ஸிஜனும் இணைய வேண்டும் அதற்கு என்பார்கள் அவர்கள்.
“ இவ்வளவு சாம்பல் உள்ளே இருக்கும் போது அந்த ப்ராஸஸ் நடை பெறுவது எப்படி?” என்று வினாவை எழுப்புவார் சோகோ.

அவசரம் அவசரமாக சாம்பலை அள்ளி வெளியில் கொட்டுவார்கள் மாணவர்கள்.. அத்தோடு சிம்னியில் உள்ள சாம்பலையும் எடுத்து காற்று உள்ளே புக வசதி செய்வார்கள் அவர்கள். பிறகு அடுப்பு நன்கு எரியும் அவர்களைப் பார்த்துச் சோகோ சிரிக்க முடியுமா என்ன? அவரும் ஆரம்பத்தில் அவர்களைப் போலத் தானே இருந்தார்!!

ஆரம்ப காலத்தில் மாஸ்டரை நம்பி அவருக்குக் கீழ்ப்படிவது போலக் காட்டிக் கொண்டாலும் சோகோ மனதிற்குள்ளாக அவரைக் கடுமையாக விமரிசிப்பது வழக்கம்.அவருக்கு டீ தரும் பணியாளிடம் அவர் கூறும் கடுமையான விமரிசனங்களைக் கேட்டாலேயே சோகோவிற்குப் பற்றிக் கொண்டு வரும்.

டைஷுயின் ஆலயமோ மிகச் சிறியது. அங்கு கஞ்சி தான் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து டீ ரோஷியின் அறைக்கு வரும்.அவர் டீயை அருந்திய பின்னர் மற்றவர்களுக்கும் டீ வழங்கப்படும். அப்போது ரோஷி அன்றைய தினத்திற்கான தனது திட்டத்தை விளக்குவார்.

சோகோ முதன்முதலாக டைஷுயின் ஆலயத்திற்கு வந்த போது அங்கு மிஸ் ஒகோமோடோ என்ற பெண்மணி அங்கு வசித்து வந்தார். அவர் ஒச்சனோமிஜு பெண்கள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். பெண்கள் கல்வியில் அவர் மிகுந்த அக்கறை காட்டியவர். அவர் நாற்பது வயதைத் தாண்டியவுடன் அவருக்கு புத்த மதத்தில் தீவிர ஈடுபாடு வந்தது. தனது ஆசிரியப் பணியை விட்டு விட்டு ரோஷியிடம் வந்து சேர்ந்தார். ரோஷி, சோகோ, மிஸ் ஒகோமோடோ ஆகிய மூவரும் மடாலயத்தில் வசித்து வந்தனர். எப்போதும் ரோஷி மிஸ் ஒகோமோடோவிடம் மட்டுமே பேசுவார். சோகோவை அவர் கண்டு கொள்வதே இல்லை. இதைப் பார்த்து பரிதாபப்பட்ட மிஸ் ஒகோமோடோ ஒரு நாள் பேச்சு வாக்கில்,”இதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டு சோகோவை உரையாடலில் இழுக்க முயன்றார்.

Buddhastatue

ஆனால் உடனே குறுக்கிட்ட ரோஷி, “வேண்டாம். வேண்டாம். அவனுக்கு இன்னும் எல்லோர் முன்பாகவும் பேசுவதற்குத் தகுதி வரவில்லை” என்றார்.

ரோஷியின் கருத்துப்படி ஒருவன் தன்னை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் எல்லோர் முன்னிலையிலும் பேசுவதற்குத் தகுதியானவன்.

ஜென் அகராதிப்படி “உன்னை நீ அறிவது” என்பது கென்ஷோ எனப்படும்.

அதாவது தனது இயற்கை நிலையை ஒருவன் உணர்ந்து அறிந்து அதைச் சரி பார்ப்பதே கென்ஷோ!
சோகோ கென்ஷோ நிலையை எய்தவில்லை. ஆகவே அவர் பேசுவதற்குத் தகுதி அற்றவர். என்ன செய்வது?

சின்ன உண்மை
இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரே ஜென் பிரிவை ஸ்தாபித்தவர் என கூறப்படுகிறது. அவர் ஒரு சுவரை நோக்கி ஒன்பது வருடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.பிறகு நடந்தது பெரும் வரலாறு ஆனது!

-தொடரும்

6. தோட்டத்தைப் பெருக்கு – முதல் பாடம்!

Person-raking-leaves-in-g-002

ச.நாகராஜன்

ஒரு நாள் க்யோடோவில் இருந்த டைஷுயின் ஆலயத்தில் இருந்த கோடோ ஜுய்கன் ரோஷி என்ற குருவை சோகோ சந்தித்தார். மையோஷிஞ்ஜி மடாலயத்திலும் டைடோகுஜி மடாலயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று வகித்து நடத்திய அவர் இப்போது ஓய்வு பெற்றிருந்தார்.கலைந்திருந்த படியாத தலைமுடி, அசிங்கமான உடை – இவற்றுடன் ரோஷி முன்னர் சென்று நின்றார் சோகோ.

அவர் கேட்ட முதல் கேள்வி : “ எதற்காக இங்கு வந்தாய்?”

தன் வாழ்வில் இது வரை நடந்ததை எல்லாம் விவரித்தார் சோகோ. இடையில் குறுக்கிடாமல் ஒரு மணி நேரம் சோகோ சொன்ன அனைத்தையும் மௌனமாகக் கேட்டார் ரோஷி. மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தார் சோகோ.

ரோஷி பிறகு தான் பேச ஆரம்பித்தார்:” நீ சொன்னதை எல்லாம் கேட்டேன்.உனக்கு யார் மீதும் எதன் மீதும் நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. ஆனால் குருவின் மீது நம்பிக்கை இல்லை என்றால் ஜென் பயிற்சிகளைக் கற்கவே முடியாது. என்னை நம்புவாயா? நம்பினால் நீ இருக்கும் நிலையில் அப்படியே உன்னை ஏற்றுக்கொள்கிறேன். நம்பவில்லை என்றால் எனது நேரமெல்லாம் வீண் தான், நீ இடத்தை விட்டுக் கிளம்பலாம்”

இன்றைய சமுதாயத்தில் ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிக்கும்போது பயிற்றுவிக்கும் ஆசான் மீது அவர் ஜென் மாஸ்டராக இருந்தாலும் சரி பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தாலும் சரி நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்,! ஆகவே ரோஷி அந்த அடிப்படை விஷயத்தை வலியுறுத்தினார். ஆனால் சோகோ எதற்கும் லாயக்கற்றவராக இருந்தார். வயதில் மூத்த அவரது வார்த்தைகளைக் கேட்டு சோகோவின் எண்ண ஓட்டம் அவரை மனதிற்குள் விமரிசிக்க ஆரம்பித்தது!

“இந்த முட்டாள் கிழவன் மையோஷிஞ்ஜி மடாலயத்திலும் டைடோகுஜி மடாலயத்திலும் தலைமைப் பொறுப்பை வகித்தவராக இருக்கலாம்! பெரிய இடங்களில் போலிகள் இருப்பது சகஜம் தானே! அவரை முழுவதுமாக நம்பும் படி என்னை எப்படிக் கேட்கலாம்?! இப்போது தான் அவரைப் பார்க்கிறேன். நம்ப வேண்டுமாமே! அப்படி நம்புவதாக இருந்தால் இங்கு வருவதற்கு முன்னர் எத்தனையோ பேரை இது வரை நம்பி இருக்கலாமே!”

ஆனால் இப்போது அது முக்கியமில்லை. பொய்யாக இருந்தாலும் கூட எதையாவது சமயத்திற்குத் தக்கபடி சொல்லித் தான் ஆகவேண்டும். ஆகவே சோகோ,” உங்களை முற்றிலும் நம்புகிறேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். “அப்படியானால் கூட வா” என்று சோகோவை அழைத்துச் சென்ற ரோஷி ஒரு விளக்குமாறை அவரிடம் தந்து, “போய் இந்த விளக்குமாறால் தோட்டத்தைப் பெருக்கு!” என்றார்.

அவரை நம்ப வைக்க எதையாவது செய்து தானே ஆக வேண்டும். சோகோ விளக்குமாறை இங்கும் அங்கும் ஓடவிட்டு உதிர்ந்து கிடந்த இலைகளை மலை போலக் குவித்தார்!

இதைப் பார்த்து அவர் பாராட்டுவார் என்று எண்ணிய சோகோ அவரிடம்,” இந்தக் குப்பையை எங்கே கொட்ட வேண்டும்” என்று கேட்டார். ரோஷி உடனடியாக, ”இலைகள் குப்பை இல்லை” என்றார்.
“ஆனால்”.. என்று இழுத்தார் சோகோ. இலைகள் குப்பை இல்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

leaves

ரோஷி, ”என்ன நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா? ஷெட்டுக்குப் போய் அங்கு கரிகளை அள்ள வைத்திருக்கும் காலியாக இருக்கும் சாக்குகளைக் கொண்டு வா” என்றார்.
சாக்குகள் வரும் வரைக்கும் ரோஷி மிக கவனமாக இலைகளை மட்டும் சேகரித்து கல் மண் ஆகியவற்றை அந்தக் குவியலிலிருந்து அகற்றினார்.

சாக்குகளை சோகோ தந்தவுடன் இலைகளை அவற்றில் கொட்டினார். ஒரு இலை கூட விடவில்லை. சாக்குகள் இலைகளால் மிக இறுக்கமாக நிரம்பின. “இவற்றைக் கொண்டு போய் ஷெட்டில் வை. வெந்நீர் போடும் போது தீயில் போட்டுக் கிளற இவை உதவும்” என்று சோகோவைப் பார்த்துச் சொன்னார் ரோஷி “அட அதுவும் சரிதான்,இலைகள் குப்பை இல்லை தான் அவற்றிற்கும் ஒரு உபயோகம் இருக்கிறது” என்று தன்னைத் தேற்றிக் கொண்ட சோகோ ஆனால் இலைகள் தவிர மற்றவை எல்லாம் குப்பை தான் ஆகவே தான் சொன்னதில் தவறில்லை என்று நினைத்தார். ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்த போது…. சின்னச் சின்ன கூழாங்கற்களை ரோஷி தனியாகப் பிரித்து வைத்திருந்தார்.

“இந்தா, இவற்றை கூரையின் மீது பரப்பு. மழைத்துளிகள் உள்ளே இருக்கும் கருங்கற்கள் மீது விழுவதால் அவை தேய்ந்து போகின்றன. இவற்றை ஓட்டைகளை அடைக்க நான் உபயோகிப்பது வழக்கம்” என்றார் ரோஷி.

அந்த அழகிய கூழாங்கற்களுக்கு அப்படி ஒரு உபயோகம் இருப்பது சரிதான் என்று சோகோ நினைத்தார். ஆனால் மீதி உள்ள களிமண் குப்பை தானே என்று அவர் தன்னை நியாயப்படுத்திக் கொண்டார். ஆனால் ரோஷியோ அவற்றைக் கையில் கவனமாக உருட்டி எடுத்துக் கொண்டார். அங்கு தோட்டத்தின் தரையில் பள்ளமாக இருந்த இடங்களில் அவற்றைப் போட்டு நிரப்பித் தன் காலால் மிதித்து அந்த இடங்களைக் கெட்டிப் படுத்தினார். தோட்டம் பள்ளம் இன்றி சமதரையைக் கொண்டு அழகாய் ஆனது.

“இப்போது உனக்குக் கொஞ்சம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று சோகோவைப் பார்த்துச் சொன்ன ரோஷி தொடர்ந்து கூறினார்:” “மனிதர்களிலோ பொருள்களிலோ அவை அசலாக இருக்கும் போது குப்பை என்று எதுவும் இல்லை” ரோஷியிடமிருந்து சோகோ தனது முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டார்.

சின்ன உண்மை
ஜென் பிரிவானது எந்த ஒரு புனித நூலையுமோ அல்லது உபதேசிக்கப்பட்ட எந்த ஒரு வார்த்தையையுமோ போதிப்பதில்லை. மாறாக, ஒருவனை மனதிற்குள் புகுந்து சென்று அவனது உண்மையான இயற்கை நிலையைப் பார்க்கத் தூண்டுகிறது. ஜென் வழிமுறையில் முக்கியமானது தியானமே!

தொடரும்

5. உலகப் போரின் போது அனைத்தையும் இழந்த துறவி சோகோ!

Soko-Morinaga

by ச.நாகராஜன்

மோரினாகா சோகோ (1925-1995) ஜென் பிரிவைச் சேர்ந்த துறவி. அவர் புத்த மடாலயத்தில் சேர்வதற்கு எத்தனை பாடு பட வேண்டியிருந்தது என்பதை அவரே விளக்கி எழுதியுள்ளார். அதன் சுருக்கத்தைப் பார்க்கலாம்.

மோரினாகா சோகோ ஜப்பான் நாட்டில் ஓட்ஸு என்ற இடத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தார். இரண்டாம் உலகப் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த தருணம்.டோயாமா உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் சோகோ. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற நிலை முதலில் இருந்தது. ஆனால் போர் உக்கிரமாக ஆக அனைவரும் போர் நடக்கும் முன்னணிப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது, அதற்கான அரசாங்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

விஞ்ஞானப் படிப்பு அல்லாத கலை,பொருளாதாரப் பாடங்களைப் படிப்போர் ராணுவத்தில் சேர வேண்டும் என்று உத்தரவு தெரிவித்தது. விஞ்ஞானம் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் இதர அறிவியல் துறைகளில் போருக்கு உதவக்கூடிய தேவையான அனைத்தையும் செய்யக்கூடும் என்பதால் அவர்களை போர்க்களத்திற்கு நேரடியாக அனுப்ப அரசாங்கம் முன்வரவில்லை.

எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டியவர்களே. இன்றோ இருபது வருடங்கள் கழித்தோ, ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும். சோகோவும் தனது உத்தரவை எதிர்பார்த்தவாறு காத்திருந்தார்.அவரது நண்பர்களோ விமானங்களில் ஏறி திரும்பி வர முடியாத ஒரு வழிப் பயணத்தை ஏற்றுக் கொண்டு பயணிக்கலாயினர். வெகு காலமாக மேலை நாடுகள் ஜப்பானைச் சுரண்டி வருவதாக ஜப்பானில் அனைவரும் நம்பி வந்தனர். ஆகவே அந்தச் சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டி மாபெரும் போர் தொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர்கள் நம்பினர்.

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. சோகோவின் நண்பர்களில் பலர் கொல்லப்பட்டனர். ஒரு வழியாக யுத்தம் கோரமான அணுகுண்டால் ஒரு முடிவுக்கு வந்தது.இப்போது ஜப்பானிய மக்கள் அவர்கள் தேவையற்ற தீங்கு பயக்கும் கோரமான ஒரு போரில் அனாவசியமாக ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டனர். நல்ல வேளையாக இந்த கோரத்தின் மரணப்பிடியிலிருந்து சோகோ தப்பித்து உயிரோடு இருந்தார்.அவரிடம் ஒரு சிறிய ரேடியோ இருந்தது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்தவர்களைப்பற்றிய போர்க் குற்ற விசாரணைகள் ஒலி பரப்பப்பட்டன. அதை அவர் கேட்டவண்ணம் இருந்தார். விசாரணையின் முடிவில் வழக்கமாக வரும் வார்த்தைகள் -“…. ஆகவே அவர் தூக்கிலிடப்பட வேண்டும்” என்பது தான்!

Novice to Master_1

அமெரிக்க நியூஸ் ரீல்கள் ஆங்காங்கே காண்பிக்கப்பட்டன.ஜெர்மானிய தளபதிகள் பொது மக்கள் கூடும் சதுக்கத்தில் பகிரங்கமாக தூக்கில் இடப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.இத்தாலிய சர்வாதிகாரியான முஸோலினியையும் அவர் காதலியையும் கழுத்தில் ஒரு கயிறால் கட்டி தெருத் தெருவாக மக்கள் இழுத்துச் செல்வதையும் ஆங்காங்கே குழுமி இருந்த மக்கள் கல்லால் அவர்களை அடித்தவாறு இருப்பதையும் சோகோ பார்த்தார்.

ஒரு வழியாக மாணவர்கள் ஒவ்வொருவராகப் பள்ளிக்குத் திரும்பினர்.ஆனால் சோகோவுக்கு ஒன்று மட்டும் புரியாத புதிராக இருந்தது. நன்மை எது தீமை எது அவற்றை எப்படி இனம்காண்பது என்பது தான் அவருக்குள் பிறந்த கேள்வி! மாணவர்கள் ஒருவருக்கொருவர் இதைப் பற்றியே விவாதித்துக்கொண்டிருந்தனர். போரின் முடிவில் ஜப்பானியரின் அறநெறிப் பண்புகள் மிகவும் தாழ்ந்திருந்தன.

போர் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சோகோ ஒரே அடியில் தனது தாயையும் தந்தையும் இழந்தார். ஏற்கனவே அவர் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். இதில் அவர் தன் மனைவியை – சோகோவின் தாயை- இழக்கவே அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சோகோவின் தாய் இறந்த மறுநாள் காலை அவர் கோமாவில் மயங்கி உணர்வற்று இருந்தார்.அப்படியே இறந்தும் போனார். இந்த நேரம் பார்த்துத் தான் சோகோவிற்கு போரில் உடனே சேருமாறு அரசாங்க ஆணை வந்திருந்தது. இரண்டு நாட்களில் சேர வேண்டும்! அதற்குள்ளாக தாயாருக்கும் தந்தைக்கும் உரிய அடக்க காரியங்களை அவர் கவனித்தாக வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக சோகோவின் குடும்பம் நிலங்களைக் கொண்டிருந்த குடும்பம். அந்த நிலங்களை விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தனர். சோகோவின் அப்பா அடிக்கடி சோகோவிடம் கூறுவது இது தான்:” நிலத்தைப் போல நிலையான சொத்து எதுவும் இல்லை. தீ அதை எரிக்காது. வெள்ளம் அதை அழிக்காது. திருடர்கள் அதைத் திருட முடியாது. ஆகவே நீ என்ன செய்தாலும் சரி, நிலத்தை மட்டும் விற்கவே விற்காதே!”

ஆனால் போர் முடிந்தவுடன் வந்த நிலச்சீர்திருத்தத் திட்டங்களினால் குடும்பத்தின் நிலம் முழுவதும் பறி போனது. உள்ளங்கையளவு நிலம் கூட மீதி இருக்கவில்லை. எது எப்போதும் சாசுவதமாக இருக்கும் என்று சோகோ நம்பினாரோ அது மாயையாகப் போனது.

morinaga book

போரின் பிறகு ஏற்பட்ட புனருத்தாரணக் கொள்கைகளின் படி வங்கிகளும் அதிரடிக் கொள்கை மாற்றத்திற்கு உள்ளாயின. தனது குழந்தைகளைப் பாதுகாக்க அவரது தந்தையார் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் மூலம் ஒரு யென் கூட அவருக்குக் கிடைக்கவில்லை! ஆனால் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளினால் வாழ்க்கைத் தரம் ஒன்றும் உயரவில்லை. விலைவாசி ஏறிக் கொண்டே போனது.இன்று ஒரு யென்னுக்குக் கிடைக்கும் ஒரு பொருள் மறு நாள் பத்து யென்னுக்குத் தான் கிடைக்கும்.அதற்குச் சில நாட்களுக்குப் பின் அது நூறு யென் ஆகி விடும்!. சோகோவோ மாணவர். இரண்டு கைகள் இருக்கின்றன ஆனால் எப்படிப் பிழைப்பது? நல்லவேளை கிரிமினல்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கும் தொழிலில் அவர் ஈடுபடவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்தது. ஆனால் மேலே படிக்க சோகோவுக்கு மனமில்லை.

யோசித்துப் பார்த்தார். வாழ்க்கையில் என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. வெறும் புத்தகப் படிப்பு. கொள்கைகள் பற்றிய வெற்று அறிவு! தன் மீதான சுயக் கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை!
விதியின் விசித்திரமான வழிகள் தான் இருக்கின்றனவே! ஒரு நாள் விசித்திரமான சூழ்நிலையில் பல ஜென் ஆலயங்களுக்கு அவர் செல்ல ஆரம்பித்தார்.

சின்ன உண்மை
ஜென் பிரிவு ஏழாம் நூற்றாண்டில் ஜப்பானில் பரவியது. ஜென் குருமார்கள் 16ஆம் நூற்றாண்டில் ராஜ தந்திரிகளாகவும் ராஜாங்க தூதுவர்களாகவும் பணியாற்றினர்.

தொடரும்

அதர்வண வேதத்தில் ஒரு அற்புதப் பாடல்!

bharatmata on lion

This article is posted already in English:The Oldest and the longest Patriotic song!

உலகின் மிக பழமையான நூல் வேதங்கள். நான்கு வேதங்களில்முதல் வேதமான ருக் வேதத்தில் துதிப் பாடல்களும், யஜூர் வேதத்தில் யாகம் தொடர்பான செய்முறைகளும், சாம வேதத்தில் இசைப் பாடல்களும், அதர்வண வேதத்தில் பயனுள்ள துதிப் பாடல்களும் இருக்கின்றன. இவைகளில் மிகவும் அற்புதமான பாடல் ‘பூமி சூக்தம்’ என்னும் தேசபக்திப் பாடலாகும். இந்தியாவின் இரண்டாவது தேசிய கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய ‘வந்தேமதரம்’ என்னும் பாடல் ஆகும். முஸ்லீம்கள் ‘வந்தேமாதரம்’ சொல்ல மறுத்ததால் ஆங்கிலேயரைப் புகழ்ந்து எழுதிய ‘ஜன கண மண’ தேசிய கீதம் ஆகியது. ஆயினும் ‘வந்தேமாதரம்’ பாடலில் உள்ள அழகு வேறு எதிலும் வராது. இதை பாரதி தனது தெள்ளு தமிழில் இரண்டு வகையாக மொழிபெயர்த்தார். பங்கிம் சந்திரருக்கும் பாரதிக்கும் ஊற்றுணர்ச்சி நல்கிய பாடல் அதர்வ வேதத்தில் உள்ள ‘பூமி சூக்தம்’ என்பதை இம்மூன்றையும் கற்றவர் எளிதில் உணர்வர்.

“இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை” என்றும் பின்னர் “நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்” என்றும் இரண்டு பாடல்களில் பாரதி ‘வந்தேமாதர’த்தை மொழி பெயர்த்தார்.

அதர்வ வேததின் 12ஆவது காண்டத்தில் உள்ள ‘பூமி சூக்தம்’ பூமியைக் குறிக்கும் இடங்களில் “ப்ருத்வீ” என்ற சம்ஸ்கிருத சொல்லைப் பயன்படுத்துகிறது. இது பூமியைக் குறிக்கும் சொல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சங்கத் தமிழ் பாடல்களில் உலகம் என்று சொல்லும் போதெல்லாம் அது அவர்கள் அறிந்த நிலப்பரப்பைக் குறிக்க வந்ததேயன்றி இன்று நாம் அறிந்த உலகப் பகுதி முழுவதையும் குறிக்க வந்தது இல்லை என்பதை நாம் அறிவோம். அதே போல பூமி என்று முனிவர்கள் ஆடிப் பாடி ஆனந்தக் கூத்து ஆடியதெல்லாம் பாரத பூமியைக் குறித்தே என்பதில் ஐயமில்லை.

முதலில் பூமி சூக்தத்தை மொழிபெயர்த்தோர் பூமி (எர்த்) என்றே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். ஆனால் நவீன கால மொழிபெயர்ப்பில் அதை தாய் நாடு(மதர்லாண்ட்) என்றே மொழி பெயத்துள்ளனர். நானும் அதுவே சரியென்று நினைக்கிறேன். இந்த அற்புதமான துதியில் 63 பாடல்கள் இருக்கின்றன. உலகிலேயே நீண்ட தேசப்பக்திப் பாடல் இதுதான் என்பது என் கருத்து.

பூமியை தாயே என்று அழைப்பதோடு அதிலுள்ள எல்லா இயற்கை வளங்களையும் முனிவர் பாடுகிறார். சத்தியத்தினாலும் ஒழுக்கத்தினாலும் இந்த உலகம் நிலை பெற்றுள்ளது என்றும் பாடுகிறார். மிக உயர்ந்த கருத்துக்களை இதில் காணமுடிகிறது இந்திரனா, விருத்திரனா என்ற பிரச்சினையில் உலகம் இந்திரனையே தேர்ந்தெடுத்தது என்று சொல்லி நன்மைக்கும் தீமைக்கும் நடந்த போராட்டம் பற்றியும் பாடல் பேசுகிறது. வேத கால மக்கள் மாடு மேய்க்கும் நாடோடிகள் அல்ல , உயர்ந்த சிந்தனை படைத்த நவ நாகரீக மக்கள் என்பதை இக்கவிதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

akhand_bharat 2

வேத காலத்தை யாராலும் உறுதியாகக் கணிக்க முடியவில்லை. இதை கி.மு.1200க்குக் கீழாக மட்டும் கொண்டு வரமுடியாது என்று மாக்ஸ்முல்லர் காட்டினார். திலகர், ஜாகோபி போன்ற அறிஞர்கள் கி.மு 6000 பழமையானது என்றும் எழுதினர். அதர்வண வேதம் கடைசி கால கட்டத்தில் எழுதப்பட்டதால் கி.மு1000 என்று கொள்வாரும் உண்டு.

இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கர்கள் எழுதக்கூடத் துவங்கவில்லை. தமிழர்களோ இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முதல் நூலான தொல்காப்பியத்தை எழுதினர். மோசஸ் அப்போதுதான் பத்து கட்டளகளை மட்டும் பேசியிருந்தார். அத்தகைய தொல் பழங்காலத்தில் அதர்வ வேத முனிவர்கள் நாகரீகத்தின் உச்ச கட்டத்துக்குப் போய் பூமியைப் பற்றிப் பாடியதைப் பார்க்கையில் வியப்பே மேலிடுகிறது. மனித குலத்துக்கு நன்மை வேண்டியதோடு நில்லாமல் பிராணிகளுக்கும் நலம் வேண்டிப் பாடினர் என்றால் அவர்களுடைய அறிவு முதிர்ச்சியைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தப் பாடலைப் படிக்கையில் இந்தியாவின் தேசீய கீதத்தை மாற்றி அதர்வ வேதப் பாடலின் சுருக்கத்தை வைக்கவேண்டும் என்ற எண்ணமே எல்லோருக்கும் மேலிடும்.

இதோ சில கீற்றுகளை மட்டும் படியுங்கள். முழுப் பாடலையும் மொழி பெயர்த்தால் அது மிக மிக நீண்ட கட்டுரையாக மாறிவிடும்:

சத்யம் (உண்மை), தானம், தவம், ஒழுங்கு, யாகம் ஆகியனதான் இந்த பூமியைத் தாங்கி நிற்கிறது.

குணப்படுத்தும் மூலிகைகள் நிறைந்தது இந்த நாடு (பூமி). மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது இது. ஆறுகளும், கடலும், தானியப் பயிர்களும் காணப்படும் இந்த நாடு நம்மை வளப்படுத்தட்டும்.

பிராணிகள் பெருகிய இந்த புவி, நமக்கு கால்நடைகளையும் பயிர்களையும் வழங்கட்டும். முன்னோர்கள் உழைத்த இந்த பூமி, அசுரர்களை தேவர்கள் வென்ற இந்த பூமி, பறவைகளும் குதிரை முதலான பிராணிகளும் வாழும் இந்த பூமி நமக்கு ஒளி ஊட்டட்டும்.

B_Id_366060_Air_force_show

இந்த பூமியில் புனித தீ உறைகிறது. நீருக்கடியில் அமிழ்ந்திருந்த இந்தப் புவியை முனிவர்கள் தம் ஆற்றலால் கொணர்ந்தனர். சத்தியத்தினால் கவரப்பட்டுள்ள இந்த பூமி நமக்கு ஒளியையும், பலத்தையும் அளிக்கட்டும்.

கண்களை இமைக்காத தேவர்கள் இதைக் காக்கின்றனர். அவர்கள் நமக்கு இனிமையை பொழியட்டும்.

நீர்வளம் சுரக்கும் இந்தப் புவி, பால் வளம் சுரக்கட்டும்.

அஸ்வினி தேவர்கள் அளந்த பூமி, விஷ்ணு (மூவடியால்) அளந்த பூமி,இந்திரன் தனது எதிரிகளை மாய்த்த பூமி– ஒரு தாய் தனது குழந்தைக்குப் பாலைச் சுரப்பது போல எங்களுக்கு பால் வளம் சுரக்கட்டும்.

(பூமியைத் தாய் என்றும், ‘பால் நினைந்தூட்டும் கருணைக் கடல் என்றும் முதல் முதலில் எழுதியோர் வேதகால முனிவர்கள் தான். பின்னர் இதை உலகம் முழுதும் சொல்லத் துவங்கியது. தாய்நாடு—motherland— போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் உருவாயின. Gaia கையா போன்ற சொற்கள் கிரேக்க மொழியில் தோன்றின).

ஓ, பூமியே, உனது மலைகளும், காடுகளும், பனி மூடிய சிகரங்களும் என்றும் இனிமை தரட்டும். கருப்பு, பழுப்பு, சிவப்பு போன்ற பல வண்ணக் கலவையான இந்த நாடு (பூமி) என்னை யாராலும் வெல்ல முடியாதவனாக ஆக்கட்டும்.என்னைத் தீய எண்ணத்துடன் தீண்ட முடியாதவன் ஆக்கட்டும். எங்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுவோரை, வெறுப்போரைத் தோற்கடி.

எல்லா பிராணிகளும் எங்களுக்கு நலம் பயக்கட்டும். தேனினும் இனிய சொற்களை எங்களுக்கு வழங்குவாயாக. தாவரங்களுக்கும் தாயானவளே. எங்கள் பாதங்கள் படும்போதெல்லாம் கருணை காட்டு.

நீ மிகப் பரந்தவள், பெரியவள்,வேகம் மிக்கவள்; இந்திரனால் பாதுகாக்கப்பட்டவள்; எங்களைத் தங்கம் போல ஜொலிக்கச் செய்; எங்களை யாரும் வெறுக்கவேண்டாம்.

13YT_TRICOLOUR_2_1549185g

தீயைப் போல அறிவு ஒளிரட்டும்; கூர்மையாகட்டும்.

யாகங்கள் நிறைந்த இந்த நிலம், எங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும்.

இந்தமண்ணின் வாசனை தாவரங்களிலும், தண்ணீரிலும் உளது. அப்சரஸ், கந்தர்வர்கள் ஆகியோரும் இதைப் பகிந்துகொள்வர். அந்த வாசனையால் என்னையும் சுகப்படுத்து.

உன்னை எங்கு தோண்டினாலும் அவை உடனே வளரட்டும் உன் இதயத்தை நாங்கள் சேதப்படுத்தமாட்டோம்.

(அந்தக் காலத்திலேயே புறச் சூழல் பாதுகாப்பு எண்ணம்– environmental awareness–தோன்றிய நாடு இது)

பூமித் தாயே! ஆறு பருவங்களும் உன்னை அலங்கரிக்கட்டும். எங்கள் மீது வற்றாது வளத்தைப் பொழிக.

புனித ரிஷிகள் வளர்த்த, வாழ்த்திய நாடு (பூமி) இது; சப்தரிஷிக்களும் யாகம் செய்த நாடு இது. நாங்கள் வேண்டும் செல்வங்கள் எல்லாவற்றையும் அருளுக.

ஆண்கள் ஆடிப் பாடிக் கூச்சல் போடும் இந்தப் பூமியில் போர் முரசம் ஒலிக்கையில் எதிரிகள் இல்லாத இடமாக ஆகட்டும்.

நகரங்களும், வளம் கொழிக்கும் வயல்களும், உழைக்கும் மனிதர்களும் உலவும் பூமி இது; எல்லா வளங்களும் உந்தன் வயிற்றில் உளது. எல்லா பக்கங்களிலும் எங்கள் மீது கருணையைப் பொழிக.

நான் வெற்றி உடையவன்; உயர்ந்தவன்.எனக்கு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி. எல்லா பக்கங்களிலும் வெற்றி. நான் பேசுவதெல்லாம் இனிமை. நான் பார்ப்பதெல்லாம் எனக்கு அனுகூலமாகின்றன. என்னை வெறுப்பவர்களை நான் வெல்வேன்.

இனிமை, கருணை, சாந்தி, பால், தேன் நிறைந்த பூமித் தாயே! ஆசிகளையும் பாலையும் பொழிவாயாக.

****

பாரதி பாடல்களில் எங்கெங்கெலாம் பாரத பூமி புகழப் படுகிறதோ அங்கெங்கெலாம் அதர்வ வேத செல்வாக்கைக் காணமுடிகிறது. சுருங்கச் சொன்னால் பாரதியே இந்த பூமி சூக்ததைத் தான் பல பாடல்களாக மொழி பெயர்த்தாரோ என்று நான் வியக்கிறேன். எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்ற அவரது வரிகள் அதர்வ வேதத்தில் உள்ளது!

poets of india scan 3

வேதங்களைப் படிப்போருக்கு ஆக்கபூர்வமான சிந்தனை வளரும். ஆயிரம் ‘டேல் கார்னிஜி, அந்தோனி ராபின்ஸ்’ புத்தகங்கள் படித்த பலன்கள் கிடைக்கும். மனச் சோர்வு என்பதே வாழ்வில் வராது. மன நோய்கள் அகலும். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்தபோதும், பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்தபோதும் ஊற்றுணர்ச்சி கொடுத்து வெற்றியைத் தேடித் தந்தது வேதங்களே; தமயந்திக்கும் சாவித்திரிக்கும் சீதைக்கும் திரவுபதிக்கும் தைரியத்தையும் வெற்றியையும் தேடித் தந்தது வேதங்களே. அவைகளைப் பாதுகாத்துப் பயன்பெறுவது நமது கடமை.

****

இந்த பிளாக்—கில் 600–க்கும் மேலான எனது கட்டுரைகள் உள்ளன. வேத காலம், சிந்து சமவெளி, இந்துமதம் பற்றியும் தமிழர்களின் சிறப்புகள் குறித்தும் கட்டுரைகளை எழுதியுள்ளேன். எனது சகோதரர் நாகராஜன் எழுதிய பல கட்டுரைகளும் இருக்கின்றன.படித்து மகிழ்க. நல்லோர் பலரையும் அறிமுகப் படுத்துக.

Contact swami_48@yahoo.com

4.புத்தம் சரணம் கச்சாமி!

Bamiyan-buddha-mulbek1

Buddhs in Ladakh,Kashmir

ச.நாகராஜன்

 

புத்தம் சரணம் கச்சாமி

   ஆரம்ப காலத்தில் புத்தர் ஒரு நிலையான இடத்திலும் தங்கவில்லை. நாடு முழுவதும் சுற்றியவாறே தன்னைச் சூழ்ந்து இருந்தோரிடம் அவர் உபதேசிக்கத் தொடங்கவே அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் அவருடன் அனைத்தையும் துறந்து சென்றனர். மரத்தடியில் படுக்கை, கிடைத்த இடத்தில் பிக்ஷை, இவற்றைக் கொண்டு அவர்கள் புத்தரின் போதனைகளை மனதில் கொண்டு அவற்றைப் பின்பற்றலாயினர்.

 

புத்தர் அனைவருமே புத்தராகலாம் என்றார். புத்தர் என்பது ஒரு நபரைக் குறிப்பதில்லை. புத்தத்வத்தைக் குறிப்பிடுகிறது. அந்த நிலையை அனைவரும் எய்தலாம் என்பதே புத்தரின் அருளுரை. புத்தரை ஆஸ்ரயமாக அண்டினோர் மூன்றை சரணடைந்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

புத்தம் சரணம் கச்சாமி!

புத்தரை சரணமாக அடைந்தனர்

தம்மம் சரணம் கச்சாமி

புத்தரின் போதனைகளான தர்ம நெறிகளைச் சரணமாக அடைந்தனர்.

சங்கம் சரணம் கச்சாமி

புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போரின் சங்கத்தைச் சரணமாக அடைந்தனர்.

 

நாளாக நாளாக துறவிகளாக விரும்புவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகப் பெருகியது. அப்போது உண்மையாக புத்த நெறியில் நடக்க விரும்புபவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கக் கடுமையான சட்ட திட்டங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவே அவை இயற்றப்பட்டன.

 

புத்தரின் மகத்தான இன்னொரு பணி பெண்களைப் பற்றியது.அவர்களும் இறை நிலையை அடைய முடியும் என்ற அவரது உபதேசம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக்ஷுணிகள் ஆக பெண்களும் முன் வந்தனர். கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்றனர்.

Bamiyan_Buddha

Picture of Buddha at bamiyan wich was destroyed by the Afgan terrorists.

ஒரு புத்த மடாலயத்தில் சேர்வது சுலபம் இல்லை என்ற நிலை உருவாகி அது இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்றோம், மடத்தினுள் நுழைந்தோம், புத்த துறவியாகி விட்டோம் என்று எவராலும் ஒரு நாளும் சொல்லி விட முடியாது- இன்றளவும் கூட.

 

குருகுல வித்யா

வேத காலத்தில் குருகுலங்கள் இருந்தன. சிஷ்யர்களை குரு நன்கு பரிசோதிப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்கள் அவருக்கு சிக்ஷ்ருஷை எனப்படும் பணிவிடைகளைச் செய்வர். குருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பர். வித்தையும் ஞானமும் அவர்களுக்குத் தானே வரும்!

மஹரிஷி ஆருணியின் வரலாறு

உதாரணத்திற்கு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே பார்க்கலாம்.

அயோத தௌம்யர் என்று ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு உபமன்யு,ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர். ஒரு நாள் அயோத தௌம்யர் தனது சிஷ்யரான ஆருணியை நோக்கி,”ஆருணி, நீ போய் கழனிக்கு வருகிற வாய்க்கால் உடைப்பை அடை” என்று கட்டளையிட்டார்.

ஆருணியும் தனது ஆசார்யரின் கட்டளையை சிரமேற்கொண்டு கழனியை நோக்கிச் சென்றார்.அங்கே அவரால் உடைப்பை சாதாரண வழிகளின் மூலம் அடைக்க முடியவில்லை. குருவின் கட்டளையைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆதங்கமும் ஆர்வமும் சிரத்தையும் அவரை உந்தவே என்ன செய்வது என்று யோசிக்கலானார். கடைசியில் அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது.

 

உடைப்பு இருந்த இடத்தில் தன் உடலை அடைத்து இப்படியே இருப்பேன் உடைப்பு அடைபட்டுப் போயிற்று என்று சொல்லி அப்படியே இருக்கலானார்.

 

இதனால் தண்ணீர் வெளியேறாமல் மடை அடைபட்டது.

நேரம் சென்றது. அயோத தௌம்யருக்கு ஆருணியின் நினைவு வரவே, ஆருணி எங்கே என்று தன் சிஷ்யர்களை நோக்கிக் கேட்டார். அவர்கள், “குருவே! நீங்கள் தான் அவரை கழனியில் வாய்க்கால் உடைப்பை நிறுத்தும்படி அனுப்பி இருக்கிறீர்கள்” என்று கூறினர்.

 

தௌம்யருக்கு ஆருணியை அனுப்பியது ஞாபகத்திற்கு வரவே, “வாருங்கள், ஆருணி இருக்கும் இடத்திற்குப் போவோம்” என்று சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு வாய்க்காலை நோக்கிச் சென்றார். அங்கே சென்றதும் தௌம்யர், ‘குழந்தாய்,ஆருணி! நீ எங்கே இருக்கிறாய்’? இங்கே வா!”என்று கூவினார்,

 

“இதோ இங்கே இருக்கிறேன்” என்று பதில் சொன்ன ஆருணி மடையிலிருந்து வெளியே வந்தார்.”இதோ இந்த வாய்க்கால் உடைப்பை அடைப்பதற்காக இங்கே இருந்தேன். வேறு எந்த உபாயமும் எனக்குத் தெரியாததால் இங்கேயே இதில் பிரவேசித்து உடைப்பை அடைத்தேன்” என்றார் ஆருணி.

 

நடந்ததைப் புரிந்து கொண்ட அயோத தௌம்யர் ஆருணியை நோக்கி, “ நீ இவ்வாறு எழுந்ததிலிருந்து மடை திறக்கப்பட்டபடியால் உனக்கு இனிமேல் பிளக்கிறவன் என்ற பொருள் உடைய உத்தாலகர் என்ற பெயர் உண்டாகக் கடவது! அந்தப் பெயர் குருவாகிய என்னுடைய அனுக்ரஹத்தைப் பறை சாற்றும் ஒரு அடையாளமாக இருக்கட்டும்” என்று  மனமகிழ்ந்து கூறினார். மேலும்,” நீ என்னுடைய கட்டளையை சிரமேற்கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறபடியால் சர்வ மங்களத்தையும் அடைவாய். எல்லா வேதங்களும் அனைத்து சாஸ்திரங்களும் உன்னிடம் பிரகாசித்து விளங்கும்” என்று ஆசீர்வதித்தார்.

 

ஆருணி தவத்திலும் ஞானத்திலும் சிறந்த பெரும் மஹரிஷியானார்.

 

இது போன்ற குரு அனுக்ரஹத்தால் உயர்ந்த சிஷ்யர்களை வேத, இதிஹாஸ, புராணங்களில் காணலாம்.

இதே குரு – சிஷ்ய உறவு புத்தமதத்திலும் வேரூன்ற ஆரம்பித்தது.

இன்றளவும் தொடர்கிறது.

உதாரணத்திற்கு இன்று புத்தமதத்தில் தலை சிறந்து விளங்கும் ஒருவரது வரலாற்றைப் பார்ப்போம்.

இது அவராலேயே தீர்க்கமாக எழுதப்பட்ட ஒன்று. ஆர்வத்தைத் தூண்டி விழிகளை வியப்பால் விரிய வைக்கும் ஒன்று!

 

 

சின்ன உண்மை

பௌத்தர்கள் கோவிலுக்குத் தங்களால் முடிந்த எந்த நேரத்திலும் போகலாம். பௌர்ணமியில் சென்று வழிபடுவதைச் சிறப்பாகக் கொள்கின்றனர்.

 

இது புத்த மதம் தொடர்பான கட்டுரைகளில் நாலாவது கட்டுரை. ஏற்கனவே 3 பகுதிகள் வெளியாகின. நிலாசாரல்.காம்– இல் வெளியானது.

தொடரும்