Post No. 13.309
Date uploaded in London – —6 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
29-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 1
ச .நாகராஜன்
ஒரு பெண்ணினால் எதையும் சாதிக்க முடியும்; அதிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண பெண்மணி முன்னேறி உயர்ந்து விண்ணில் பறக்க முடியும் என்பதை நிரூபித்தவர் வாலண்டினா தெரஷ்கோவா என்ற ரஷ்ய பெண்மணி!
உலகப் பெண்களின் ஆதர்ச நாயகியாக கொண்டாடப்படும் இவருக்கு இப்போது வயது 87. இன்னும் அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு வாழும் இவரது வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை!
பிறப்பும் இளமையும்
ரஷியாவின் பிரசித்தி பெற்ற வோல்கா நதிக்கரையில் அமைந்துள்ள போல்ஷோவ் மஸ்லென்னிகோவோ என்ற கிராமத்தில் 6-3-1937 அன்று எளிய உழைக்கும் வர்க்க குடும்பத்தில பிறந்தார் வாலண்டினா தெரஷ்கோவா.
அவரது தந்தை விளாடிமிர் தெரஷ்கோவ் ஒரு விவசாயி. டிராக்டர் டிரைவராக பணி புரிந்தார். வாலண்டினாவிற்கு இரண்டு வயதாக இருக்கும் போதே அவர் ஃபின்னிஷ் விண்டர் போரில் சோவியத் படையின் சார்பாகப் போரிட்டு இறந்தார். தாயார் சின்னக் குழந்தையை தூக்கிக் கொண்டு யரோஸ்லவ் என்ற ஊருக்கு இடம் பெயர்ந்து ஒரு பஞ்சாலையில் வேலை பார்க்க ஆரம்பித்தார்.
எட்டு வயதில் பள்ளியில் சேர்ந்த வாலண்டினா 16 வயதில் படிப்பை முடித்தார். முதலில் ஒரு டயர் தொழிற்சாலையிலும் பின்னர் பஞ்சாலை ஒன்றிலும் வேலை பார்க்க ஆரம்பித்தார். தபால் மூலம் அவரது படிப்பு தொடர்ந்தது.
ஸ்கை டைவிங்
இயல்பாகவே அவருக்கு ஸ்கை- டைவிங்கில் ஆர்வம் ஏற்பட்டது. 22-ம் வயதில் 21-5-̀1959-ல் தனது முதல் பயிற்சியாக வானத்திலிருந்து குதித்தார். பாராசூட்டிலிருந்து குதிப்பது அவருக்கு எளிதில் கை வந்த கலையாக ஆனது.
அத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினராகவும் அவர் 1962-ல் சேர்ந்தார்.
விண்வெளியில் பறந்த யூரி ககாரின்
1961-ல் யூரி ககாரின் விண்வெளியில் பறந்து உலகையே பரபரப்புக்குள்ளாக்கினார்.
இந்தப் பரபரப்பை மேலும் அதிகமாக்க ரஷியா விரும்பியது. ஒரு பெண்மணியை விண்வெளியில் பறக்க வைத்தால் என்ன என்ற யோசனை ரஷிய உயர்மட்ட அதிகாரிகளிடம் தோன்றவே அதை நிறைவேற்ற தகுந்த ஒரு பெண்மணியை அவர்கள் தேடலாயினர்.
பெண்மணிக்கு வாய்ப்பு
80000 பெண்மணிகள் விண்ணில் பறக்க விரும்பி விண்ணப்பம் செய்தனர். 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும், 70 கிலோ எடைக்குள்ளாக இருக்க வேண்டும், உயரம் 170 செண்டிமீட்டரைத் தாண்டக் கூடாது, விண்ணில் பறக்கும் திறன் இருக்க வேண்டும் – ஆகிய இவை அடிப்படைத் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.
ஏராளமான கடுமையான பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்குத் தரப்பட்டது. அதில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் இறுதிச் சுற்றுக்குத் தயாராயினர்.
வாலண்டினா 126 முறை பாராசூட்டிலிருந்து குதித்து நல்ல திறமையைப் பெற்றிருந்ததால் அவர் இந்த ஐவரில் ஒருவராக இருந்தார். சோவியல் விமானப்படையில் சேர்க்கப்பட்டு பயிற்சியும் அவருக்குத் தரப்பட்டது.
எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார்
இவருடன் போட்டியிட்ட ஐவரில் சோலோவ்யெவா என்பவர் 700 முறை பாராசூட்டிலிருந்து குதித்திருக்கிறார். பாராசூட் ஜம்பிங்கில் மாஸ்டர் என்ற பெயர் எடுத்திருக்கிறார். ஆனால் இவரையும் மீறி வாலண்டினா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அவரது குடும்பப் பின்னணி அவருக்கு உதவி செய்தது. சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்மணியாக அவர் இருந்ததால் ரஷிய அதிபரான குருஷேவ் அவரைத் தேர்ந்தெடுத்தார். மக்களின் பெண்மணியாக அவர் திகழ்வார் என்று அவர் நம்பினார். ஆகவே அவரே விண்வெளிப் பெண்மணியாக அறிவிக்கப்பட்டார்.
அத்துடன் மட்டுமின்றி மற்ற பெண்மணிகள் விண்ணிலிருந்து வந்த பின்னர் அவர்கள் விண்வெளித் துறையில் மட்டுமே ஈடுபடுத்த வல்லவராக இருப்பார்கள். ஆனால் வாலண்டினாவோ நல்ல மன உறுதி வாய்ந்தவர், ஒவ்வொருவரிடமும் பழகும் போதும் மிக நல்ல பெயரை எடுக்கிறார், நாட்டின் பெருமையை உயர்த்த வல்ல பேச்சுத் திறனுடன் சமுதாயத்தில் நன்கு பழகக் கூடியவர். ஆகவே சமூகத்தில் சிறப்புடன் பணியாற்ற முடியும். இப்படிப்பட்ட காரணங்களை அவரது கமாண்டர் நிகோலய் கமானின் தனது குறிப்பேட்டில் பதிவு செய்தார். ஆகவே இவையும் அவருக்குச் சாதகமாக அமைந்தது.
விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி
1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் வோஸ்டாக் 6 என்ற விண்கலத்தில் விண்ணில் பறந்தார் வாலண்டினா. 48 முறை அவர் பூமியைச் சுற்றினார். மூன்று நாட்கள் அவர் விண்வெளியில் இருந்தார். விண்வெளியில் தனியாகப் பறந்த பெண்மணி என்ற பெயரையும் பெருமையையும் அவர் பெற்றார். 26-ம் வயதிலேயே விண்வெளி வீராங்கனை ஆனதால் விண்ணில் பறந்ததிலேயே இளமையானவர் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது.
அவருக்குப் பின்னால் 19 வருடங்கள் கழிந்த பின்னரே, 1982-ல் தான் ஸ்வெட்லான ஸவிட்ஸ்கயா என்ற ரஷிய பெண்மணி அடுத்ததாக விண்ணில் பறந்தார்.
பல அபாயங்கள்
விண்ணில் இருந்த போது அவர் நெடுநேரம் மௌனமாகவே இருந்தார். நிர்ணயிக்கப்பட்டிருந்த அனைத்து சோதனைகளையும் அவரால் முடிக்க முடியவில்லை. களைப்பினால் ஒரு சமயம் அவர் விண்கலத்தில் தூங்கி விட்டார். பூமியிலிருந்து வரும் தகவல்களுக்குச் சில சமயம் அவர் பதில் சொல்லவே இல்லை. ஒரு வழியாக அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பினர்.
ஆனால் ஏராளமான அபாயங்களுக்கு ஈடு கொடுத்து அவர் விண்ணிலிருந்து மீண்டார்.
சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் தான், ஒரு பேட்டியில் நடந்தது என்ன என்பதை அவர் குறிப்பிட்டார்.
வோஸ்டாக் – 6 என்ற அவரது விண்கலம் தவறான கோ- ஆர்டினேட்டுகளை கணினியில் கொண்டிருந்தது. அதைக் கண்டுபிடித்து, சரி செய்து பூமியில் இறங்கும் தருணம் வந்த போது விண்கலம் நேர் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. இதைப் பார்த்து திடுக்கிட்ட வாலண்டினா உடனடியாக கணினி இயக்கத்தை நிறுத்தி விட்டு நேரடியாக தானாகவே விண்கல இயக்கத்தை சரியான ஓடு பாதையில் ஓடும்படி சரி செய்தார்.
பூமிக்கு வந்து இறங்கியதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளிலிருந்து சிறிது விலகினார். அவரது மீட்புக் குழு அவரிடம் வந்து சேரும் முன்னர், விண்ணில் சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்த உருளைக்கிழங்கினால் ஆன பசைபோன்ற உணவின் ஒரு பகுதியை அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு விநியோகித்து ஆனந்தித்தார்.
இதைக் கேள்விப்பட்ட உயர் அதிகாரியான கோரொலெவ், “ஐயோ! போதும், போதும் இன்னொரு பெண்மணியை எனது ஆயுள் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பமாட்டேன்” என்று ஜோக் அடித்தார்.
*****













