ரோஜா மலரே ராஜகுமாரி ;   குல்கந்து, அத்தர் -Part 2 (Post No.12,906)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,906

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர்; புதுவகை உணவு, . பலவகை பாஷன்  ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.

ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை  நூர்ஜஹான் கண்டுபிடித்தார்.  துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே.

அத்தர் என்ற அராபிய சொல்லுக்கு மணக்கும் எண்ணெய் என்றே பொருள். ரோஜா மற்றும் அது போல வாசனை உடைய பெலார்கோனியம் Pelargonium ‘Attar of Roses’ தாவர பூக்களிலிருந்து இது செய்யப்படுகிறது  ஆயினும் ரோஜாவும், பெலார்கோனியமும் வெவ்வேறு குடும்ப தாவரங்கள். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் அத்தர் என்பர்.

வெளிர் மஞ்சள் நிறம் உடைய அத்தர் ரோஸா டமசேன , ரோஸா கல்லிகா முதலிய ரோஸெசி குடும்ப மலர்களிலிருந்து எடுக்கப்படுகிறது Rosa damascena and R. gallica and other species of the rose family Rosaceae

இதை பெர்ப்யூம் perfume  என்னும் வாசனைப் பூச்சுகளிலும், நறுமணம் தேவைப்படும் வெவ்வேறு பொருள்களிலும் பயன்படுத்துகிறார்கள் .

xxxxx

ரோஜா குல்கந்து உடலுக்கு நல்லது

ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சம நிலையை உண்டாக்கும் . இது செரிமானம் நடக்க மிகவும் உதவுகிறது . ரோஜா குல்கந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது., இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

குல்கந்து என்பது ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகுந்த ஆயுர்வேத மருந்து .

இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்து . அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கும், ஆண்மை பெருகவும்  சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

ரோஜா குல்கந்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

சிவந்த நிறத்தில் உள்ள ரோஜா  இதழ்களை நன்கு கழுவி சுத்தம் செய்து ஈரம் போன பிறகு நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

சேகரித்த இதழின் எடையை போல மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக்கொண்டு, இரண்டையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கவும்.

இடித்ததும் ஜாம் போன்ற தன்மையைப் பெரும். இந்த ஜாம் அளவிற்கு 3 மடங்கு சுத்தமான தேனைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரிவிதை, கசகசா சேர்க்கலாம்.

கடைகளிலும் ரோஜா குல்கந்தை விலைக்கு வாங்கலாம்.

xxxx

பன்னீர் உற்பத்தி Rose water

ரோஸ் வாட்டர் என்னும் பன்னீரை உணவுப்  பண்டங்களிலும்  சேர்த்து வாசனை சேர்க்கிறார்கள் .

ரோஸ்  ஆயில் செய்யும் பொழுது பன்னீரும் கிடைத்துவிடும். ரோஜா மலர் இதழ்களைக் கொதிக்கவைத்தது அதன் ஆவியைப் பிடித்து குளிரவைத்து பன்னீர் எடுக்கிறார்கள் . பன்னீருக்குப் பெயர்பெற்ற நாடு ஈரான். உலகின் பெரும்பகுதி பன்னீர் அங்குதான் உற்பத்தி ஆகிறது . இதற்காக ரோஜா மலர் அறுவடையின்போது பெரிய விழா நடக்கிறது.

–SUBHAM—

TAGS- பன்னீர், ரோஸ் ஆயில், குல்கந்து, நூர் ஜஹான், gulkand, rose water, Iran

மலையாள பழனி கோவில்- 54 (Post No.12,905)

picture of Thodupuza Sri Krishnan Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,905

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 54

கோவில் எண்கள் –101,102, 103, 104

இடுக்கி மாவட்ட கோவில்கள்

101. உரவப்பாறா கோயில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா அருகில் ஓல மட்டம்

என்னும் இடத்தில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது . இதை

மலையாள பழனி   என்று அழைப்பார்கள். இங்கு வனவாச காலத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்ததாகவும் அப்போது பீமன் உருவாக்கிய நீர் நிலையே உறவுப்பாறா என்றும் கதைகள் உள்ளன. மூன்று பெரிய பாறைகள் பீமன் பயன்படுத்திய அடுப்பு என்றும் , தண்ணீர் கிடைக்காததால் அவன் ஒரு பாறையை உராய்ந்து தண்ணீரை உண்டாக்கினான் என்றும் சொல்லுவர் .

பால சுப்ரமண்ய வடிவத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.

மகர மாதத்தில் ஆண்டு விழா நடக்கும். வைத்தீஸ்வரன் கோவில் போல உப்பு, மிளகு பிரசாதம் கிடைக்கும்.

XXXXX

102. மூணாறு முருகன் கார்த்திகை விழா


மூணாறு Munnar என்னும் இடம் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டி உள்ளது. இங்குள்ள முருகன் கோவில் கார்த்திகை விழாவால் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை  விழா  நாளில் கோவில் முழுதும் விளக்குகளை ஏற்றுவார்கள் . ஜெகஜ்ஜோதியாக காட்சிதரும்  அதற்கு முதல் நாளன்று பழங்குடி இன மக்கள் ஒன்று கூடி , அவர்கள் கடைப்பிடிக்கும் சம்பிரதாய சடங்குகளைச் செய்வார்கள்.

விழாக்காலத்தில் தூக்கம் என்னும் காவடிச் சடங்கு நடக்கும். விரதம் இருக்கும் ஒரு முருக பக்தர் மிக உயரத்திலிருந்து தொங்குவார் . அவர் இருக்கும் மேடை ஒரு வண்டி மீது இருக்கும். அதை கோவிலைச் சுற்றி வலமாக இழுத்து வருவார்கள்;p முருக பக்தர்கள் கோஷம் எழுப்பி இறைவனை வணங்குவது எல்லோரையும் பக்திப் பரவசத்தில் மூழ்கடித்துவிடும் .

XXXXX

103.கிருஷ்ணன் கோவில், தொடுபுழா

இடுக்கி மாவட்டத்தில் தொடு புழா என்னும் ஊரில் கிருஷ்ண பகவான், கையில் வெண்ணெய் வைத்திருக்கும் நவநீத கிருஷ்ணனாக தரிசனம் தருகிறார். மூவாற்றுப்புழாவின் உபநதியான தொடு புழா நதிக்கரையில் கோவில் அமைந்துள்ளது . ஒரு பிராமண பக்தர் இந்தக் கோவிலை மீனம் மாத சுவாதி நட்சத்திரத்தில் ஸ்தாபித்தார் ஆண்டுதோறும் அந்த மாதத்தில் பத்து நாள் விழா நடக்கும்.

முதல் நாளன்று பிரபல வித்வான்களின் இன்னிசை நிகழ்ச்சியும் 4,5,6 ஆவது நாள் உற்சவத்தில் சாக்கியர் கூத்தும், 5,5 ஆவது நாட்களில் கதகளி நடனமும் ஏற்பாடு செய்யப்படும்.

7,8,9 ஆவது நாட்கள் முக்கிய நாட்கள் ; அப்போது அலங்கரிக்கப்பட்ட 5 யானைகளின் பவனி மேளதாளத்துடன் வலம் வரும். உற்சவ பலி என்ற புனித விழா, ஒன்பதாம் நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வணங்க நடக்கிறது .

‘நிலாபதுதரா’ அல்லது புனித மேடை கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளது. திருவிழாவின் போது இறைவனின் சிலையானது கருவறையில் இருந்து வெளியே எடுத்துவரப்பட்ட இந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டு முழுமையாக அலங்கரிக்கப்பட்டு மீண்டும் கருவறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

XXXXX

104.காரிகோடு பகவதி கோவில்

தொடுபுழா அருகில் காரிகோடு பகவதி கோவில் இருக்கிறது ; இங்கு பத்ரகாளி வடிவத்தில் தேவியை வணங்குகிறார்கள் . சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோவில் . இங்கு சிலைக் கண்ணாடி மூலம் தேவியை வழிபடுகின்றனர் .

சிவன் மற்றும் பிள்ளையார் ஆகியோர் பிற பரிவார தெய்வங்களாக உள்ளனர். ஆண்டுதோறும்  திருவிழா, மலையாள மாதமான ‘கும்பம்’ அஸ்வதி மற்றும் பரணி நாட்களில் நடக்கிறது.

வடக்கம்கூர் மன்னர் தனது பிரார்த்தனையால் கொடுங்கல்லூர்  பகவதியை இங்கு அழைத்து வந்தார் என்று பக்தர்கள் கூறுகிறார்கள் .

–சுபம் —

TAGS- காரிகோடு பகவதி, தொடுபுழா கிருஷ்ணன் ,கோவில், உரவப்பாறா , சுப்பிரமணிய சுவாமி

விவேகானந்த அதிசயம்! – 1 (Post No.12,904)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,904

Date uploaded in London –  –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜனவரி 12 விவேகானந்தர் ஜெயந்தி தினம்! 

அதிசயம் அநேகம் கொண்ட சுவாமிஜியின் வாழ்வில் சில சம்பவங்கள்!

விவேகானந்த அதிசயம்! – 1 

ச.நாகராஜன்

 விவேகானந்த அதிசயம்! 

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த போது ஒரு முறை மிஸஸ் பாக்லே என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார்.

அந்த வீட்டில் வந்த விருந்தினர்களுள் ஒருவர் சுவாமிஜியை மிஸஸ் பாக்லேயின் கணவருடைய படிப்பறையில் வைத்துப் பூட்டி விட்டு, சாவியைத் தனது கையில் வைத்துக் கொண்டார். அது ஒரு பெரிய வீடு. அந்த வீட்டின் மறுபகுதியில் உள்ள விசாலமான அறை ஒன்றில் அனைவரும் கூடினர். சுவாமிஜி திடீரென்று அங்கே தோன்றினார்.

சாவியைத் தன் கையில் வைத்திருந்தவர் திகைத்து மலைத்தார்.

வேக வேகமாக ஓடிப் போய் தான் பூட்டிய அறையைத் திறந்தார்.

அங்கே முன்பு சுவாமிஜி எப்படி அமர்ந்திருந்தாரோ அதே போல அமர்ந்திருந்தார்.

அவரது இந்த அதீத ஆற்றலை அவர் எப்போதுமே காட்டியதில்லை.

ஓரிரு சமயங்களில் மட்டுமே காட்டி இருக்கிறார்.

கடவுளிடம் நகைச்சுவையாகப் பேசியவர்!

நியூயார்க்கிலிருந்து சுமார் 90 மைல் தூரத்தில் உள்ள ரிஜ்லிமேனர் என்ற வீட்டில் ஒரு முறை சுவாமிஜி தங்கி இருந்தார். அங்கே அவருடன் மிஸ் மெக்லவுட், அவரது சகோதரி பெற்றி, பெற்றியின் பதினாறு வயதான மகன் ஹாலிஸ்டர், பதினெட்டு வயதான அவனது தமக்கை ஆல்பெர்ட்டா ஆகியோர் தங்கி இருந்தனர்.

ஒரு நாள் சுவாமிஜி தன் அறைக்குள் இருந்த போது பெரிதாகச் சிரிப்புச் சத்தம் கேட்டது. இடையிடையே யாருடனோ பேசுவது போலவும் இருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின் கதவைத் திறந்து தன் அறையிலிருந்து வெளியே வந்த சுவாமிஜியிடம் ஹாலிஸ்டர், “சுவாமிஜி, நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று வியப்புடன் கேட்டான்.

ஏனெனில் அறையில் யாருமே இல்லை.

சுவாமிஜி பதிலாக, “யாருடனும் இல்லையே” என்றார்.

“இல்லையே, சிரிப்புச் சத்தம் கேட்டதே?” என்று சந்தேகத்துடன் மீண்டும் கேட்டான் ஹாலிஸ்டர்.

சின்ன இடைவெளிக்குப் பிறகு சுவாமிஜி கூறினார்:

“ஓ! அதுவா? இந்த கடவுள் இருக்கிறார் பார், அவர் மிகவும் வேடிக்கையானவர்!” என்றார்.

கடவுளுடன் நகைச்சுவையாக சுவாமிஜி பேசி சிரித்துக் கொண்டிருந்தார் என்பதை அவர் வாயாலேயே தெரிந்து கொண்ட ஹாலிஸ்டர் பிரமித்து நின்றான்.

இந்த விஷயம் அனைவருக்கும் பரவியது.

இது போல தனது ஆற்றலையும் தெய்வீக சக்தியையும் அவர் காட்டிய தருணங்கள் மிகச் சிலவே!

சுவாமிஜியின் நினைவாற்றல்

சுவாமிஜியின் நினைவாற்றல் அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஒன்று. ஒரு முறை பள்ளி ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க நரேந்திரன் (சுவாமி விவேகானந்தரின் இளமைப் பருவத்துப் பெயர்) ‘தூங்கிக் கொண்டிருப்பதைக்’ கண்டு பொறுக்காத அவர் அவனைக் கடிந்து கொண்டார்.

அவர் தன்னைத் திட்டி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த நரேன், ஆசிரியர் கூறிய அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் திருப்பிக் கூறினார். இதைக் கேட்ட ஆசிரியர் பிரமித்துப் போனார்.

இந்த அபாரமான தனது நினைவாற்றல் சக்தியை அவர் எப்போதாவது தான் வெளிப்படுத்துவார்.

ஒரு முறை ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் சில நாட்களைக் கழித்த சுவாமிஜி கீல் நகரம் சென்றார். அங்கு

கீல் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய பால் ட்யூஸனை (பிறப்பு 7-1-1845 மறைவு 6-7-1919) அவர் சந்தித்தார். அவர் இந்தியவியலில் பெரும் அறிஞரும் கூட.  பால் டியூஸன் இந்தியாவிற்குத் தான் வந்திருந்த போது தான் பெற்ற அனுபவங்களை சுவாமிஜியிடம் தெரிவித்து மகிழ்ந்தார். நல்ல நட்புறவு மலர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவினர்.

 அவரது வீட்டில் சுவாமிஜி சென்று தங்கினார். அப்போது ஒரு நாள் சுவாமிஜி தனது அறையில் ஒரு கவிதை நூலை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற பால் டியூஸன் ஏதோ பேச முற்பட்டார். ஆனால் சுவாமிஜி மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் இந்தச் சம்பவம் அவர் மனதை உறுத்தியது. சில நாட்கள் சென்ற பிறகு தனது மன ஆதங்கத்தைத் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜி உடனே புன்னகையுடன் தான் அன்று அந்தக் கவிதை நூலில் மிகவும் ஆழ்ந்திருந்ததாகவும் மற்ற எதையும் கவனிக்கவில்லை என்றும் கூறினார். இதை நம்ப மறுத்தாற் போல இருந்த பால் டியூஸனிடன அந்தக் கவிதை நூல் முழுவதையும் அப்படியே ஒப்புவித்தார் சுவாமிஜி. இதைக் கேட்டு பிரமித்துப் போன பால் டியூஸன், சுவாமிஜி எப்படிப்பட்ட பெரும் மகான் என்பதை உணர்ந்து கொண்டார். 

இறை அனுபவத்தை உடனே தர வல்லவர்

இறை அனுபவத்தை சிலருக்கு உடனே தந்தவர் சுவாமிஜி.

இதைப் பெற்ற பாக்கியவான்களில் ஒருவர் ஜெய்பூரில் படைத்தளபதியாக இருந்த சர்தார் ஹரிசிங்.

ஜெய்பூரில் சுவாமிஜி தங்கி இருந்த போது அவரால் கவரப்பட்டார் இந்தப் படைத் தளபதி. அவர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார் சுவாமிஜி.

 ஹரிசிங்கிற்கு வேதாந்தம் என்றால் பிடிக்கும். ஆனால் அவருக்கு உருவ வழிபாடு பிடிக்காது. உருவ வழிபாடு பற்றி சுவாமிஜி அவருக்கு விளக்கிக் கூறினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். ஒரு நாள் இருவரும் மாலை வேளையில் சாலையில் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு பஜனை ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. பஜனை ஊர்வலத்தினர் கண்ணபிரானின் திருவுருவத்தைத் தாங்கியவாறே பஜனைப் பாடல்களைப் பாடி வந்து கொண்டிருந்தனர். சுவாமிஜி ஹரிசிங்கைத் தொட்டு, “அதோ பாருங்கள். உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் கண்ணனைப் பாருங்கள்” என்றார்.

  அந்த ஸ்பரிசத்தால் உடனே அங்கு கண்ணன் உயிருடன் இருப்பதைக்  கண்ட ஹரிசிங் திகைத்து நின்று விட்டார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. சுய நினைவு வந்தவுடன் அவர், மணிக்கணக்காக நீங்கள் விளக்கிய பேருண்மையை விளங்கிக் கொள்ளாத என்னை ஒரு சின்னத் தொடுதல் மூலமாக விளங்கிக் கொள்ள வைத்து விட்டீர்கள் என்று கூறி அவரை அடி பணிந்து வணங்கினார்.

இப்படி அவரது ஸ்பரிசத்தால் மாறியவர்கள் பலர் உண்டு.

** தொடரும்

எறும்பு சட்னி சாப்பிடுங்கள் (Press Cutting)

compiled by London Swaminathan

Date – 10-1-2024 

சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு!

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாரம்பரிய உணவான எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு `வீவர்’ எறும்புகள் (Red Weaver Ants) ஏராளமாகக் காணப்படும். மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பு காணப்படுகிறது. Oecophylla smaragdina எனும் இந்த எறும்பு வகை, தான் வாழும் மரத்தின் இலைகளைக் கொண்டு நெய்து ஒரு வீட்டை அமைக்கிறது.

இந்த எறும்பு சட்னி ஒடிசா மக்களால் அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் உள்ள சத்துகள். அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க் Zinc, வைட்டமின் B-12, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம்/செப்பு மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids)  இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சிவப்பு எறும்புகளை அனைத்து இடங்களிலும் காண முடியும்.

மரங்களின் இலைகளில் கூடுகட்டி வாழும் இந்த எறும்புகளைப் பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது அம்மாநில மக்களின் வழக்கம்.

இந்த எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

இதன் மூலம் எறும்புச் சட்னியின் பயன்கள், சுவை குறித்து உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு மாநில அரசின் ஆதரவுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒடிசா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Press cutting)—subham—

tags- எறும்பு , ஒடிசா மாநிலம், சட்னி, செவ்வெறும்பு 

ரோஜா மலரே ராஜகுமாரி; லண்டன் காதலி கையில் பெங்களூரு ரோஜா!- 1 (Post.12,903)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,903

Date uploaded in London – –   10 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரோஜா மலரே ராஜகுமாரி

ரோஜா மலரே ராஜ குமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரிதானா, உறவும் முறை தானா

Roja Malare Raajakumari – Veerathirumagn by P.B.Sreenivas, P.Susheela –

எல்லோருக்கும் தெரிந்த இந்தப் பாட்டு வீரத்  திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது; இதே போல நிறைய பாட்டுக்கள் ரோஜா மலரைக் கொண்டாடியுள்ளன.

(இதன் விலை 15, 000 ரூபாய் ; உலகில் நீங்கள் சொல்லும் எந்த முகவரிக்கும் அனுப்பும் தொகை இது. )

பாரஸீக நாட்டில் பிறந்த ரோஜா செடி என்று உலகெங்கும் பரவிவிட்டது. நூற்றுக் கணக்கான புதிய ரகங்களும் வந்துவிட்டன!

ஏற்றுமதி நிறுவனங்கள் உலக ஏற்றுமதிப் பட்டியலைத் தயாரித்தன . அதில் 5025 ஏற்றுமதி பண்டங்கள் இருந்தன. அதில் ரோஜா மலர் 1058ஆவது இடத்தைப் பிடித்தது.

பணத்தின் மதிப்புப்படி பார்த்தால் நெதர்லாந்து என்னும் ஹாலந்து நாடுதான் ரோஜா ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது  அடுத்த இடம் ஈக்வடார் என்னும் தென் அமெரிக்க நாடு; அதைத் தொடர்ந்து கென்யா, கொலம்பியா,எத்தியோப்பியா நிற்கின்றன

In 2021 Roses were the world’s 1058th most traded product (out of 5,025). In 2021, the top exporters of Roses were Netherlands ($1.12B), Ecuador ($700M), Kenya ($630M), Colombia ($410M), and Ethiopia ($167M)..

வோல்சா என்னும் நிறுவனம் எல்லா இந்தியப் பொருட்களின்  ஏற்றுமதி  (Volza)  விவரங்களையும் சேகரிக்கிறது . இந்தியா ஏற்றுமதி செய்த ரோஜா மலரின் அளவு  363 000 கப்பல் ‘லோடு’ ஆகும்.

இந்திய ரோஜாக்களை அதிகம் வாங்கும் நாடுகள்- அமெரிக்கா, பிரிட்டன்,

ஜெர்மனி ,மலேசியா .

ரோஜா ஏற்றுமதியில் இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன

காதலர் தின ஏற்றுமதி

பிப்ரவரி 14ம் தேதி வரும் வாலண்டைன் டே (காதலர் தினம்), டிசம்பர் 25ம் தேதி வரும் கிறிஸ்துமஸ் தினம் ( Valentine’s Day and Christmas) ஆகிய இரண்டிலும் இந்திய ரோஜாக்களுக்கு மிகவும் கிராக்கி உண்டாகிறது. பிரிட்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கும் வைபவங்களுக்கு பெங்ளூரு , புனே நகர ரோஜாக்கள் விமானத்தில் பறந்து செல்கின்றன .

எல்லா வகைப் பூக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியாவின் ஏற்றுமதி வருமானம் –இந்திய ரூபாயில் 472 பில்லியன் ;

ஒரு பில்லியன் என்பது  100 கோடி ரூபாய்.

ரோஸ் எண்ணெய் ROSE OIL

உலகில்  பல்கேரியாவை ரோஜா நாடு LAND OF ROSES என்று அழைப்பார்கள்; பல நூற்றண்டுகளாக ரோஜா மலரைக் காதலிக்கும் நாடு BULGARIA பல்கேரியா ; உலகிலேயே அதிக ரோஸ் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அது.

ரோஜா மலரின் மணம், மனதில் நல்லுணர்வுகளை தட்டி எழுப்புகிறது. மலரின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ROSE OIL எண்ணெய் பெரும்பாலான பெர்ப்பியூம் PERFUME என்னும் வாசனைப் பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது .

ஆயினும் ரோஸ் எண்ணெய்யை நேரடியாகப் பயன்படுத்தாமல் வேறு எண்ணெய்களில் கலந்து வீரியத்தைக் குறைத்த (DILUTED )பின்னர்தான் பயன்படுத்த வேண்டும்.

சருமத்தில் பயன்படுத்தும் பல கிரீம்களில் இந்த எண்ணெய் இருக்கிறது .

பன்னீரும் ROSE WATER உடலுக்கு நல்ல புத்தெழுச்சியை  உண்டாக்கும். இந்துக்களின் திருமண ரிசெப்ஷன்களிலும் பூஜைகளிலும் பன்னீர் பயன்படுகிறது .

ரோஸ் வாட்டர் என்னும் பன்னீரை ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கிறார்கள். Rose water (made by distilling petals in water) i;இதைக் கண்டுபிடித்தவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாரசீக தத்துவ ஞானியும் விஞ்ஞானியுமான ஆவிசென்னா Avicenna ஆவார் ,

காயங்களை ஆற்றுவதற்கு ரோஜா எண்ணெய் பயன்படுகிறது . ஏனெனில் இதில் கிருமிகளைக் கொல்லும் , வீக்கத்தத்தைத் தணிக்கும் ரசாயனம் உள்ளது ; சொறி சிரங்குகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். நேரடியாகப் பயன்படுத்தாமல் பிற கலவைகளுடன் கலந்தே உபயோகிக்கவேண்டும்.

வயது ஆக ஆக , உடலின் செல்கள் பிரியும் வேகம் குறையும்; அதாவது புது செல்கள் உண்டாகாது. அப்படிப்பட்ட நிலையில் ரோஸ் ஆயில் கலவைகள் புது செல்களை உண்டாக்கவும், உலர்ந்த ரோமத்தை/ தோலை மிருதுவாக்கவும் உதவுகிறது .

அத்தர், ரோஜா குல்கந்து முதலியன பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

TO BE CONTINUED………………………..

—–SUBHAM—-

TAGS- ரோஜா, எண்ணெய், பன்னீர், மலர், ஏற்றுமதி,

கேரளத்தில் ஒரு திருக்கடவூர் கோவில்-53 (Post No.12,902)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,902

Date uploaded in London – –   10 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 53

கோவில் எண்கள் –98,99, 100

98.த்ரி கடவூர் மஹாதேவர் கோவில் Thrikkadavoor Sree Mahadeva Temple

தமிழ்நாட்டில் அபிராமி பட்டரின் அற்புதத்தால் பிரபலமான அபிராமி அம்மன் கோவில் திருக்கடவூரில் உள்ளது. கடவூர் என்றும் கடையூர் என்றும் கூறுவார்கள் . இதே போல கேரளத்திலும்  ஒரு திருக்கடவூர் சிவன் கோவில் இருக்கிறது கொல்லத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.

ஒன்பதாம் நாள் திருவிழாவில் பள்ளி வேட்டை நடக்கும்  அந்த நாளில் வண்ண மிகு குதிரை உருவங்களை  கோவிலிலுக்கு ஊர் வலமாகக்  கொண்டுவருவார்கள் கடைசி நாள் நடக்கும் ஆராட்டு உற்சவத்தில் யானை பவனி, நாட்டுப்புற நடனங்கள் இடம்பெறும்  கிராம மக்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற இவ்வாறு குதிரை  உருவங்களை  காணிக்கையாக கொண்டுவருகிறார்கள்.

இந்தக் கோவில் புராணமும் தமிழ்நாட்டு திருக்கடையூர் அபிராமி- அமிர்த கடேஸ்வரர் போல மார்க்கண்டேயன் கதையையே கூறுகிறது .

கோவிலில் ஐயப்பன் , கணபதி, பிரம்மா ராக்ஷஸ, யக்ஷினி நாகராஜா, நாகா யக்ஷி ஆகியோரும் வழிபடப்படுகின்றனர் ; கருவறையில் சிவ பெருமான் இருக்கிறார்

கும்பம் மாதம் நடக்கும் பத்து நாள் உற்சவத்தைக் காண ஏராளமான வெளிநாட்டினரும் வருகிறார்கள் எட்டு திசைகளைக்  குறிக்கும் வண்ணம் கோவில் சார்பில் எட்டு செயற்கை குதிரை உருவங்களும் நிற்கும் நெடும் குதிரா / எடுப்பு குதிரா என்ற சப்பரத்தை பக்தர்கள் நீர் வழியே எடுத்துச் செல்லுவார்கள்

இன்னும் ஒரு சிறப்பு அம்சம்  சூட்டுக் களி ; அதில் பக்தர்கள், தீவட்டிகளுடன் ஆடுவார்கள். அவைகளை தென்னை ஓலைகளைக்கொண்டு செய்கிறார்கள். இது உற்சவம் துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னரே நடக்கும் .

XXXXX

ஆனை வால் பிடிக்கும் உற்சவம்

99.உமையநெல்லூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

The rare ritual ‘Anaval pidi’ (pulling the tail of a tusker)  Umayanalloor Sree Balasubramanya Temple

கொல்லம் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள உமையநெல்லூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு உற்சவங்கள் நடக்கின்றன. மார்ச் மாதத்தில் எட்டு நாள் உற்சவம் நடக்கும். இதில் ஆறாவது நாளன்று ஆனை வால் பிடிக்கும் உற்சவம் என்ற சுவையான வைபவம் நடக்கிறது

காலையில் கோவில் யானையை , முருகன் சந்நிதிக்கு முன் நிறுத்துவார்கள்; அது இறைவனை வணங்கும். பின்னர் கோவிலை வலம் வந்து சந்நிதிக்கு முன்னர் நிற்கும். மாவுத்தன் கட்டளையிட்ட பின்னர், 300 அடிக்கு வாலையும் துதிக்கையையும் உயர்த்திக்கொண்டு பிளிறல் சப்த த்துடன் முன்னே பாயும். பக்தர்கள் அனைவரும் யானையின் வாலைப் பிடிக்க பின்னே ஓடுவார்கள். பின்னர் யானை ஓட்டம் நிறைவு பெறும் .

இந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழைய கோவில். புத்தர்கள் இந்தக்கோவிலை ஆக்ரமித்து இருந்தனர். ஆதி சங்கரர்  வந்து அதை மீண்டும் இந்துக்  கோவிலாக மாற்றினார். இப்போதும் கோவிலில் புத்தமத எச்ச சொச்சங்களைக் காணலாம் .

xxxxx

100. கருநாகபள்ளி  மஹாதேவர் கோவில் Padanayarkulangara Mahadeva Temple

படையனர் குலங்கரா சிவன் கோவில் பள்ளிக்கல் ஆற்றின் கரையில்  கரு நாகப்பள்ளில் இருக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக பழமை உடையது புத்தர்கள் கைப்பற்றி ஆக்ரமித்திருந்த இந்தக் கோவில் பின்னர் இந்துக்கள் வசம் வந்தது .

இந்தக் கோவிலில் 10 நாள் உற்சவம் நடக்கும். எல்லா நாட்களிலும் யானை பவனி நடைபெறும்.  கதகளி, அம்மன் குடம், குதிரை, மயிலாட்டம், காவடி ஆட்டம் முதலியன நடக்கும்.ஆராட்டு நாளில் நடக்கும் யானைகள் ஊர்வலம் , அருகிலுள்ள தேவி கோவில் வரைசென்று திரும்பி வரும்.

ஒரு காலத்தில் இது காயம்குள மன்னர்களின் தலை நகரமாக விளங்கியது. அதற்கு முன்னர் ஆய் குல மன்னர்கள் இப்பகுதியை ஆண்டனர்

சிவராத்திரி விழாவும் இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படும்

ஆய் வள்ளல்

இந்த இடம் சங்க கால ஆய் அண்டிரனுடன் தொடர்புடையது என்பதை  என்னுடைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன . நாகர் குல பழங்குடி மக்கள் பாம்புத்தோல் போல ஆடை நெய்வதில் சிறந்தவர்கள் . அவர்கள் ஆய் மன்னனுக்கு அளித்த கரு நாக வண்ண உடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்கு அளித்தான் ; இதனால் கடையெழு வள்ளல் களில் ஒருவனாகப் போற்றப்படுகிறான்

ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிழல்திகழ்

நீலநாகம் நல்கிய கலிங்கம்

ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர். இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரைப் பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.

இந்தத் தகவலானது இவன் யானைகள் அதிகமுள்ள கேரளத்தையும் தன் வசம் வைத்திருந்தான் என்பதையும், முதலில் சிவன் இருந்த இடத்தையே பெளத்தர்கள் கைப்பற்றினார்கள் என்பதையும், நாகா இன மக்கள் பாம்புத்தோல் போல மெல்லிய உடைகளை நெய்பவர்கள் அல்லது பாம்புகள் கழற்றும் பாம்புச் சட்டையைக் கொண்டு ஆடை செய்பவர்கள் என்பதையும் காட்டுகிறது .

—SUBHAM—

TAGS- பள்ளிவேட்டை குதிரை உருவங்கள், சூட்டுக் களி, உமையநெல்லூர் , பாலசுப்பிரமணிய சுவாமி, கோவில், ஆனை வால் பிடிக்கும் உற்சவம் , ஆய் அண்டிரன்

கர்ம ரகசியம்! – 2 (Post No.12,901)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,901

Date uploaded in London –  –   10 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கர்ம ரகசியம்! – 2

ச.நாகராஜன்

ஒருவன் செய்த கர்மம் ஒருபோதும் அவனை விடாது.

நல்வினை, தீவினைகளின் பயன் பற்றி தர்மர் பீஷ்மரிடம் கேட்க அதைப் பற்றி விரிவாக பீஷ்மர் எடுத்துரைக்கிறார்.

இதை மஹாபாரதத்தில் அநுசாஸனபர்வம் பத்தாம் அத்தியாயத்தில் காண்கிறோம்.

பீஷ்மர் கூறுகிறார்: “கன்றானது அநேக ஆயிரம் பசுக்களில் தன் தாயைத் தெரிந்து அடைவது போல, முன் செய்த கர்மம் செய்தவனைத் தொடர்கிறது. பூக்களும், கனிகளும் யாராலும் கட்டளையிடப்படாமலே, தம் தம் காலம் கடவாமல் உண்டாவது போல முன் செய்த கர்மமும் காலத்தில் வெளிப்படுகின்றது.”

இதே பர்வத்தில் 35வது அத்தியாயத்தில் பத்து வகை கர்மங்களைப் பற்றிய விளக்கத்தை பீஷ்மர் தருகிறார்.

தேகத்தினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் மூன்று.

1) உயிரைப் போக்குவது

2) திருடுவது

3) பிறர் மனைவியைத் தொடுவது

ஆக இந்த மூன்று தீய கர்மங்களையும் விட வேண்டும்.

வாக்கினால் செய்யப்படும் பாவங்கள் நான்கு.

1) கெட்ட பேச்சு

2) கடுஞ்சொல்

3) கோள் சொல்வது

4) பொய் சொல்வது

இவை நான்கும் வாக்கினால் செய்யப்படும் பாவங்கள். வாக்கினாலும் இவை செய்யத் தகாதவை.

இந்த நான்கையும் விட வேண்டும்.

மனத்தினால் செய்யப்படும் நற் கர்மங்கள் மூன்று.

1) பிறர் பொருளை விரும்பாமை

2) எல்லா பிராணிகளிடத்தும் அன்பு

3) புண்ய பாவங்களுக்குப் பலன் உண்டென்ற நம்பிக்கை

இந்த மூன்றையும் மனதினால் கொள்ள வேண்டும்.

இவற்றைச் செய்பவன் நாராயணனிடம் பக்தி கொண்டு செய்யும் போது அவர் அனுக்ரஹத்தால் அவன் மேலான பதத்தை அடைவான் என்பது பீஷ்மரின் வாக்கு.

தர்மபுத்திரர் பீஷ்மருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு பிரஹஸ்பதி வருகிறார்.

தர்மபுத்திரரிடம் ப்ருஹஸ்பதி, ‘மனிதன் ஒருவனாகவே பிறக்கிறான்; ஒருவனாகவே இறக்கிறான். ஒருவனாகவே நரகங்களைத் தாண்டுகிறான். ஒருவனாகவே நரகத்திற்குப் போகிறான். தந்தை, தாய், சகோதரன், புத்திரன், ஆசாரியன், தாயாதிகள், சுற்றத்தார், சினேகிதர்கள் யாரும் துணையாவதில்லை. மனிதர்கள் தேகத்தைச் சில காலம் பயன்படுத்தி உயிர் போன பின் கட்டை ஓட்டாஞ்சில்லிகளைப் போல எறிந்து விட்டு வேறு முகமாகப் போகின்றனர். தர்மம் ஒன்றே பின் தொடர்கிறது” என்கிறார்.

தர்மர் அவரிடம் மனிதன் உயிரை விடுகின்ற போது அதில் சூட்சுமமான ஆத்மா மறைந்து கண்பார்வைக்குத் தெரியாமல் போகின்றதே? தர்மம் அதைத் தொடர்வது எப்படி?’” என்று கேட்கிறார்.

உடனே பிரஹஸ்பதி கூறுகிறார்: “பூமி, வாயு, ஆகாயம், அக்னி, நீர் ஆகியவற்றின் தேவதைகள், புத்தி, ஆத்மா இவை அனைத்தும் சேர்ந்து எக்காலமும் தர்மத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேற்சொன்னவற்றுடன் தர்மம் பின் தொடர்கிறது. மேலே சொன்னவை தோல், எலும்பு, மாம்ஸ சுக்லசோணிதங்களையும் உயிர் விட்ட தேகத்தையும் விடுகின்றன. அதன் பிறகு ஜீவனானது தர்மத்துடன் சேர்ந்து இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் சுகமாக விளங்குகிறது.:

மனிதனுக்கு உள்ள மூன்று வகை தேகங்களைப் பற்றியும் பிரஹஸ்பதி விளக்குகிறார்.

மனிதனுக்கு மூன்று தேகங்கள் உண்டு.

1) போகவச்யம் (ஸ்வர்க்க சரீரம்)

2) கர்மவஸ்யம் (இது பூமியில் உள்ள சரீரம்)

3) யாதனாவச்யம் (இது நரகத்தில் உள்ள சரீரம்)

இந்த மூன்று வகை தேகங்களினால் மனிதன் தன் வினைப்பயனை அனுபவிக்கிறான்.

இதைத் தொடர்ந்து எந்தக் கர்மத்தை செய்தால் என்னென்ன பிறவிகளாகப் பிறப்பார்கள் என்ற உரை தொடர்கிறது.

தான் பிரமதேவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதை தற்போது உரைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

நல்ல கர்மங்களின் பயன்களை, குறிப்பாக தானம் செய்தல்,அஹிம்சை, வாக்கினால் செய்யப்படும் தவம், மௌனம்  உள்ளிட்ட அனைத்தின் நலனைப் பற்றியும் அநுசாஸன பர்வத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

கர்ம ரகசியத்தை முழுவதுமாக அறிவது முடியாதது என்றாலும் கூட, ஒருசிறிது அறிந்து கொள்ளலாம்.

                   ***                    தொடரும்

மல்லிகைப் பூ ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் ! (Post No.12,900)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,900

Date uploaded in London – –   9 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

மல்லிகைப் பூ மணத்தை விரும்பாதவர் எவருமிலர். மல்லிகை மலரை அணியாத இந்துப் பெண்களை பார்ப்பது அரிது. சில கடவுளருக்கு சில பூக்கள்தான் உகந்தது என்பர்; ஆனால்  மல்லிகை மலரை விரும்பாத தெய்வமில்லை. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை என்றாலோ முகூ ர்த்தம் என்றாலோ விலை ஏறி விடும்.

லண்டனில் அப்படி இல்லை. எப்போதும் ஒரு முழம் ஒரு பவுண்டுதான்; அதாவது ஒரு முழம் நூறு ரூபாய்..

பூஜை அல்லது வீட்டில் விசேஷம் என்றால் முன்கூட்டியே  ஆர்டர் கொடுத்துவிடுவோம் .  விமானத்தில் மல்லிகை வந்து இறங்கும் நாளைத் தவிர வேறு நாளில் விசேஷம் இருக்குமானால், ஸார் , பிச்சிப்பூ வாங்குங்கள். அது  நாள் பட்டாலும் வாடாது என்று கடைக்காரரே நமக்கு ரகசியங்களையும் சொல்லித் தருவார் .

தாவர இயல் கணக்குப்படி மல்லிகை, முல்லை, பிச்சி என்பது எல்லாம் ஓர் குடும்ப மலர்களே. ஜாஸ்மீனியம் JASMINIUM என்ற குடும்பத்தில் வந்துவிடும்.

மல்லிகை மலர் சாகுபடியில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடுதான்.அதிலும் மதுரை மல்லிகை என்றால் இன்னும் மகத்துவம் அதிகம் .

உலகில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்துக்கள் மட்டும் மல்லிகா என்று பெண் குழந்தைக்கு பெயர் வைத்து விட்டார்கள் என்று எண்ணிவிடக்கூடாது . முலலீம்களும் யாஸ்மின் YASMIN என்றும் கிறிஸ்தவர்களும் ஜாஸ்மின் JASMINE என்றும் பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள்.

அதிகம் வாங்குவது சவூதி அரேபியா !

வோல்சா Volza’s India Export data நிறுவன கணக்குப்படி மல்லிகை  ஏற்றுமதி பின்வருமாறு:

இந்தியா ஏற்றுமதி செய்யும் மல்லிகைப்பூவை  அதிகம் வாங்குவது சவூதி அரேபியா; அதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு நாடுகளும், சிங்கப்பூரும் நிற்கின்றன.

உலகில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்த மலரை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தோனேஷியா, சீனா ஆகும் .

ஆண்டுதோறும் இந்தியா 5,514 shipments 5514 தடவை கப்பல்களில் ஏற்றுகிறது

இந்தோனேஷியா 1,163 கப்பல்களில் ஏற்றுகிறது; சீனா 733 shipments.733 கப்பல்களில் ஏற்றுகிறது .

இந்திய மல்லிகை கனடா , அமெரிக்கா , பிரிட்டன் , பஹ்ரைன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அதிகம் செல்கிறது.

மல்லிகை சாகுபடி ஆண்டு முழுதும் வருமானம் தருகிறது. GREEN HOUSE கிரீன்ஹவுஸ் அமைத்து எல்லாக் காலங்களிலும் மல்லிகை மலரைப் பெறும் நவீன உத்திகளை விவசாய பத்திரிகைகளில் காணலாம்.

மல்லிகை எஸ்சென்ஸ்

இந்துக்களைப் பொறுத்தவரை மல்லிகை என்பது இறைவனுக்கு சமர்ப்பிக்கவும், நாள், கிழமைகளில் பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளவும் மட்டுமே பயன்படுகிறது. ஆனால் மற்ற மதத்தினர் இதை சென்ட் என்னும் பெர்ப்F யூமில் PERFUME அதிகம் உபயோ கிக்கின்றனர் .

மல்லிகை எஸ்சென்ஸ் மிகவும் விலை உயர்ந்தது . ஒரு மில்லி லிட்டர் எசன்ஸ் எடுக்க 8000 மல்லிகை மலர்கள் தேவை ; ஒரு லிட்டர் எடுக்க 8000 X 1000 மலர்கள் தேவை.!

மல்லிகை மலரிலேயே பல வகைகள் உண்டு. அது தவிர முல்லை , பிச்சி வகைகளும் உள்ளன. ஆகையால் இதை செடி என்றும் கொடி என்றும் சொல்லலாம். 15 முதல் 20 ஆண்டுகள் வரை பலன் தரும்

பயன்கள்

பெரும்பாலும் பெர்ப்பியூம் PERFUME என்னும் நறுமண திரவம் தயாரிக்க உபயோகிக்கிறார்கள் .

வெவ்வேறு அளவில் வெவ்வேறு எண்ணெய்களில் CARRIER OILS கலந்து மசாஜ் செய்ய, முடி வளர் தைலம் தயாரிக்க, ஆவி மூலம் நறுமணம் பரப்ப , மெழுகு வர்த்தியில் , ஊது வர்த்தியில் சேர்க்க என்று நூற்றுக் கணக்கில் மலரையும் எஸ்ஸன்ஸ் கலந்த எண்ணெயையும் பயன்படுத்துகின்றனர் .

மருத்துவ பயன்கள்

மல்லிகை மலர் வாசனை சிகிச்சை முறையில் ( Jasmine,  aromatherapy scent) பயன்படுகிறது . இதை நுகர்ந்தால் மனத்  தொய்வு  அகன்று மன நலம் பெருகுகிறது என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது

, (has been linked with reducing depression and improving mental health)

இன்னும் ஒரு ஆய்வில் மலரின் மணம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதையும், ரத்த அழுத்தத்தை உயர்த்துவதையும் மூச்சுவிடுவதை அதிகரிப்பதையும் கண்டனர் . In one study, jasmine oil was found to increase blood oxygen levels, blood pressure and even the breathing rate of participants.)

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பாசிட்டிவ் எனர்ஜி, ஆக்கபூர்வ எண்ணங்களை அதிகரிக்கிறது .

ஆரோக்கியம் தொடர்பான பத்திரிகை நடத்திய ஆய்வில்  (Journal of Health Research) மல்லிகை மலரை நுகர்ந்தால் (inhaling jasmine oil affected the central nervous system and stimulated brain activity, enhancing and boosting the participants’ moods. Overall, each participant reported feeling more energetic and positive.) மத்திய நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுவதையும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்வதையும் , தெம்பான உணர்ச்சி பெருகுவதையும் கண்டனர் .

திரைப்படப் பாடல்களில் மல்லிகை

மல்லிகையைப் பயன்படுத்தும் திரைப்படப் பாடல்களைக் கேட்டால் அல்லது படித்தால் அது நல்ல மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் மட்டும் இருப்பதைக் காணலாம் .

மல்லிகை எஸ்சென்ஸ் விலையை மட்டும் கேட்டுவிடாதீர்கள்! மயக்கம் போட்டு விழுந்துவிடுவீர்கள் ஒரு லிட்டர் 20,000 ரூபாய்க்கு மேல்.

–SUBHAM—

TAGS- மல்லிகை, மருத்துவ பயன்கள் , ஏற்றுமதி

நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்-52 (Post No.12,899)

Neendoor  Subrahmanya Swami on elephant.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,899

Date uploaded in London – –   9 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 52

கோவில் எண்கள் –93, 94, 95,96, 97

93.நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோட்டயம் மாவட்டத்தில் பசுமையான வயல்வெளி சூழ்ந்த இடம் நீண்டூர் ஆகும். ஏத்தமானூரிலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கிறது. இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் புகழ் பெற்றது; பழமையானது

தாரகாசுரனுடன் போரிட்ட தேவ சேனாபதியாக முருகன் இங்கு காட்சி தருகிறார். தாரகாசுரனை வதம்செய்யும் பாணியில் முருகனின் வேல் கீழ் நோக்கி இருக்கும். ஏனைய சுப்ரமண்ய சுவாமி கோவில்களில் வேல் நிமிர்ந்த நிலையில் இருக்கிறது .

மே மாதத்தில் வருடாந்திர விழா நடக்கும். இது தவிர தைப்பூச நாளும் கொண்டாடப்படும் .தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, நாகர் சந்நிதிகளும் கோவிலில் இருக்கின்றன.ஒட்டனரங்கமாலா சமர்ப்பணம் என்ற மிகப் பழமையான சிறப்பு வழிபாடு இந்தக் கோவிலின் தனித்துவத்தைக் காட்டும். வேறு எங்கும் இந்த சடங்கு இல்லை .

கேரள பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் நல்ல மர வேலைகளைக் காணலாம்.

XXXX

94. குட்டியணி குளங்கரை பகவதி கோவில்

Neendoor Kuttiyanikulangara Devi temple, also known as Neendoor Kavu,

நீண்டூர் காவு என்று அழைக்கப்படும் இந்த பகவதி கோவில் கைப்புழா என்னும் இடத்தில் அமைந்துள்ளது

வருடாந்திர விழாவை நீண்டூர் பூரம் என்று அழைப்பார்கள். ஏத்தமானூரிலிருந்து 7 கிமீ.

இங்கு பிப்ரவரி மாதத்தில் 3 நாள் உற்சவம் நடக்கும் . நவம்பர்- டிசம்பரில் 41 நாள் களமெழுத்துப்பாட்டு  விழா நடக்கும் .

3 நாள் உற்சவத்தில் கதகளி, கோல்களி நடக்கும். மூன்றாவது நாளில்தான் கும்பம் துள்ளல் என்ற கரகாட்டம் நடக்கும். மேளதாள இசைக்கு ஏற்ப தலையில் குடங்களை வைத்துக்கொண்டு ஆடுவார்கள். அத் தோடு கருடன் தூக்கம், பூரம் துள்ளல் ஆகியனவும் நட க்கிறது .

கோவில் விழாவில் நடக்கும் ஓட்டந்துள்ளல் நிகழ்ச்சியும் ஏனைய இடங்களிலிருந்து மாறுபட்டது. அதற்கு நீண்டூர் பாணி  ஓட்டந்துள்ளல் என்ற பெயரும் உண்டு.

கடைசி நாளில் யானை ஊர்வலத்துடன் வேல களி நடத்துவார்கள் ; சிப்பாய் வேஷத்தில் வருவோர் பழங்கால யுத்த முறைகளை செய்து காட்டுவார்கள் .

xxxx

95.ஆதித்யபுரம் சூரியன் கோவில் ரவிமங்கலம்

கோட்டயம் மாவட்டத்தில் காடுதுருத்தி அருகில் இரவிமங்கலம் என்ற ஊரில் இருக்கிறது. ரவி என்றால் சூரியன் .

கேரளத்தில் சூரியனுக்கு உள்ள ஒரே கோவில் இது.

ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன.

 ‘ஸ்ரீகோவில்’ எனப்படும் கருவறையானது வட்ட வடிவில் உள்ளது. சூரிய பகவானின் சிலை,  தியான நிலையில் மேற்கு நோக்கி இருக்கும் . பின் வலது கையில் சக்ராயுதத்தை ஏந்தியும், பின் இடது கையில் சங்கு ஏந்தியும், முன் இரு கைகளானது தவ முத்திரையோடு உள்ளன.சாஸ்தா, யக்ஷி ஆகிய துணை தெய்வங்கள் உள்ளனர்.

விழாக்களில் காவடியாட்டமும் உண்டு.  மே மாதம் , டிசம்பர் மாதங்களில் விழாக்கள் நடக்கின்றன.

xxxx

96.கடுதுருத்தி மஹாதேவர் கோவில்

கோட்டயம் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் கடு துருத்தி சிவன் கோவில் இருக்கிறது .வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், ஏற்றுமானூர் மகாதேவர் கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் .

கரன்  என்ற அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்தபோது அவனிடம் சிவபெருமான் 3 லிங்கங்களைக் கொடுத்தார் . அவன் ஒரு லிங்கத்தை ஏத்த மானூரிலும், இரண்டாவது லிங்கத்தை வைக்கத்திலும் வைத்தான். வாயில் கடித்த நிலையில் கவ்வி வந்த கரன் மூன்றாவது லிங்கத்தை வைத்த இடம் கடித்து உருத்தி என்று அழைக்கப்படுகிறது .

மலைக்குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலய கருவறையில், மூன்று அங்குலம் அளவு கொண்ட மிகச் சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய இருக்கிறது.

மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளில், அருகிலுள்ள பாலிச்சிறை ஆற்றில் இறைவனுக்கு ‘ஆறாட்டு’ நடத்தி ஆண்டு விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாள், மாசி மகம், புரட்டாசி மாதம் முதல் நாள் கோவில் நிறுவப்பட்ட நாள் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

xxxxx

97.பனச்சிக்காடு சரஸ்வதி கோவில்

கோட்டயத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் சிங்கவனம் என்ற இடம் உள்ளது. அதன் அருகில் புகழ்பெற்ற பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் இருக்கிறது.

கல்வியில் நல்ல சிறப்புகளைப் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் நாடும் கோவில் இது. நவராத்ரி காலத்தில் வரும் சரஸ்வதி பூஜையும் அதையடுத்து விஜய தசமியன்று வரும் வித்யாரம்பம் நிகழ்சசியும் சிறுவர்களை கவர்ந்துஇழுக்கும் கோவில் இது .

கர்நாடகத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில், பரவூரில் உள்ள தட்சிண மூகாம்பிகை கோவில் போல இதுவும் சிறப்பு பெற்றது  துர்காஷ்டமி நாளன்று தேவிக்கு முன்னால் புஸ்தகங்களை அடுக்கிவைப்பார்கள் ; விஜய தசமி நாளில் கல்வியைத் துவங்குவார்கள் உற்சவ காலத்தில் பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசைக் கச்சேரிகளும் நடக்கும்.

ஆண்டுதோறும் குழந்தை வரம் வேண்டி கர்நாடக கொல்லூருக்குச் சென்று வந்த தாமோதர நம்பூதிரிக்கு இறைவியே தோன்றி இங்கு கோவில் அமைக்க வேண்டினார். நம்பூதிரியும் காட்டில் கிடைத்த சரஸ்வதி விக்கிரகத்தை வைத்து  கோவிலை எழுப்பினார்  ஆயினும் இப்போது இறைவியைக் காண முடியாதபடி செடி கொடிகள் முளைத்துவிட்டன .

தற்போது கிணறு போன்ற பள்ளத்தில் மறைந்திருக்கும் தேவியைப் பார்த்து வணங்க முடியாததால், பக்தர்களின் பார்வைக்காக இங்கு மேற்கு திசையைப் பார்த்தபடி கல் ஒன்றை நிறுவி , சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இந்த ஊரையும் பரவூர் போலவே தட்சிண மூகாம்பிகா கோவில் என்று சொல்லுவார்கள் .குழந்தை இல்லாதோர் இங்கு வந்து பாயஸப் பிரசாதத்தைச் சாப்பிட்டால் மகப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தக் கோவிலில் இருக்கும் வித்யா மண்டபத்திற்குச் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் குருவின் மடியில் தங்கள் குழந்தையை அமர வைக்கின்றனர். அவர் தங்க நாணயத்தினால் ஹரியின் பெயரை நாக்கில் எழுதுவார். பின்னர் அங்குள்ள தாம்பளத்திலுள்ள அரிசியில் ஹரி என்று குழந்தையை விரலினால் எழுத வைப்பார்கள்.. இதை வித்யாரம்பம் என்று அழைக்கிறார்கள்.

—subham—

Tags- பனச்சிக்காடு ,மூகாம்பிகை, சரஸ்வதி, கோவில், வித்யாரம்பம், கடுதுருத்தி மஹாதேவர், ஆதித்யபுரம் சூரியன் ரவிமங்கலம், நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி, குட்டியணி குளங்கரை பகவதி .

 கர்ம ரகசியம்! – 1 (Post No.12,898)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,898

Date uploaded in London –  –  –  9 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கர்ம ரகசியம்! – 1

ச.நாகராஜன் 

நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றிற்கும் காரணம் மனிதனின் கர்மமே என்று ஹிந்து மதம் திடமாகத் தெரிவிக்கிறது.

நம் மனதில் தோன்றும் ஏராளமான சந்தேகங்களுக்கு ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், சாஸ்திரங்கள் விளக்கமாக விடையைத் தருகின்றன.

சந்தேகங்கள் ஆயிரம்; விடைகளும் அப்படியே.

கர்மங்களின் ஸ்வரூபம் புலன்களுக்கு எட்டாத நுட்பம்.

இதைப் பற்றி யமன், கௌதமி, காலபுருஷன், வேடன், ஒரு பாம்பு ஆகியவற்றிற்கு இடையே நடந்த ஒரு உரையாடலை மஹாபாரதம் அநுசாஸன பர்வம் முதல் அத்தியாயத்தில் தெரிவிக்கிறது.

கௌதமி என்னும் ஒரு கிழவி இருந்தாள். காம, க்ரோதம் அற்ற நல்லவள் அவள்.

அவளது மகனை ஒரு பாம்பு கடிக்கவே அவன் இறந்து விட்டான்.

அர்ஜுனகன் என்னும் ஒரு வேடன் அந்தப் பாம்பைச் சுருக்கிட்டு கௌதமியிடம் கொண்டு வந்தான்.

“ஓ! பாக்யவதியே! உன் மகனைக் கொன்ற நீசமான பாம்பு இது தான். இதைத் தீயில் போடலாமா? துண்டு துண்டாக வெட்டலாமா?சீக்கிரம் சொல். குழந்தையைக் கொன்ற இதை நீண்ட காலம் உயிரோடு விட்டு வைக்கக் கூடாது” என்றான் வேடன்.

உடனே, கௌதமி, “வேடனே! இதை விட்டு விடு. புண்ணியத்தால் லேசாக இருக்கும் மனிதர்கள் நீரில் ஓடங்கள் மிதப்பது போல உலகில் மிதக்கின்றனர். பாவத்தினால் மிகுந்த கனமாய் இருப்பவர்கள் நீரில் விழுந்த ஆயுதம் போல அமிழ்ந்து போகின்றனர்.” என்றாள்.

வேடனோ, சாந்தியை விரும்புபவர்கள் தனக்கு நேர்ந்த காலத்தை விட்டுவிடுவார்கள். காரியத்தைக் கவனிப்பவர்கள், சமயம் வந்த போது அதைச் செய்து விடுவார்கள். ஆகவே இந்தப் பாம்பை நான் கொல்லப் போகிறேன்” என்றான்.

“வேடனே! இதனால் தர்மம் கெடும். இந்த சர்ப்பத்திற்கு அதிகாரி நான் இல்லை.கோபத்தை விடு. இந்த அரவத்தை விட்டு விடு” என்றாள் கௌதமி.

உடனே வேடன், “இதைக் கொல்வதினால் உண்டாகும் புண்ணியம் எனக்கு அழிவில்லாத லாபம் ஆகும். இந்த அயோக்கிய பாம்பை கொல்வதனால் எனகு புண்ணியம் உடனே கிடைக்கும்” என்றான்.

உரையாடல் தொடர்ந்தது.

கௌதமி கூறியதற்கெல்லாம் வேடன் மறுமொழி உரைத்தான். பாம்போ சுருக்கில் மாட்டி உயிரை இழந்து கொண்டிருந்தது.

அது ஒருவாறாக மெல்லப் பேசத் தொடங்கியது: “ அர்ஜுனகா! இதில் என் குற்றம் ஏதும் இல்லை. யமன் கட்டளை இட்டான். நான் கடித்தேன். பாவம் ஏதேனும் உண்டெங்கில் அது யமனுடையது” என்றது. உரையாடல் நீண்டு கொண்டே போனது.

அப்போது யமன் அங்கே வந்தான்.

“பாம்பே! நான் காலத்தினால் ஏவப்பட்டு உன்னை ஏவினேன். இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நானும் காரணமில்லை. நீயும் காரணமில்லை. காற்றானது பல இடங்களிலிருந்து மேகங்களை இழுத்துக் கொண்டு வரும் போது அவை எப்படி காற்றுக்கு உட்பட்டிருக்கின்றனவோ அது போலவே நான் காலத்தை அநுசரித்தே பிராணிகளிடம் செல்கிறேன்” என்றான் யமன்.

காலத்தின் வலிமையை யமன் வெகுவாக எடுத்துரைத்தான்.

“சூரியன், சந்திரன், விஷ்ணு, நீர், காற்று, இந்திரன், அக்னி, ஆகாயம், பூமி, மித்ரன் என்னும் தேவதை, மேகம், வசுக்கள், அதிதி தேவதை, நதிகள், கடல்கள்,  சக்தி, அசக்தி ஆகிய இவை எல்லாம் அடிக்கடி காலத்தினால் ஆக்கவும் அழிக்கவும் படுகின்றன. பாம்பே! இதை நீ அறிந்திருந்தும் என்னைக் குற்றவாளியாக நீ நினைப்பது எப்படி?” என்றான் யமன்.

இதைத் தொடர்ந்து நீண்ட வாக்குவாதம் ஏற்பட்டது. வேடன் பாம்பைச் சொல்ல பாம்பு யமனைச் சொல்ல யமன் காலத்தைச் சொல்ல காலபுருஷனே அங்கு நேரில் வந்து தோன்றினான்.

“ஓ! வேடனே! இந்தக் குழந்தை இறந்ததற்கு நானும் இந்த யமனும் இந்தப் பாம்பும் முதல் காரணங்கள் அல்லோம். நாங்கள் குற்றவாளிகளே அல்ல. இந்தக் குழந்தை செய்த கர்மமே எங்களை அவ்விதம் செய்யத் தூண்டிற்று. இவன் இறந்ததற்குக் காரணம் இவனது கர்மமே தான். நாங்கள் அனைவரும் கர்மத்திற்கு உட்பட்டவர்கள். இவ்வுலகில் கர்மம் ஒரு பாகஸ்தன். ஒவ்வொருவருக்கும் தன் தன் வினை சம்பந்தமே இலக்கணம். கர்மங்கள் எங்களை ஏவுவதற்குத் தகுந்தபடி தான் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏவுகிறோம். செய்பவன் மண்ணுருண்டையின் விரும்பியவற்றைச் செய்து கொள்வது போல மனிதன் கர்மங்களைச் செய்து அவற்றின் பலனைப் பெறுகிறான்.  நிழலும் வெயிலும் எப்போதும் இடைவிடாமல் சேர்ந்திருப்பது போல காரியமும் அதைச் செய்யும் கர்த்தாவும் முன்வினைகளால் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஆதலால் நான், யமன், பாம்பு, நீ , இந்த கௌதமி இன்னும் யாரும் இந்தக் குழந்தையின் மரணத்திற்குக் காரணமல்லோம்.” என்று இப்படி விளக்கமாக உரைத்தான் கால புருஷன்.

உடனே கௌதமி உலகமே கர்மத்தைக் காரணமாக உடையது என்பதை அறிந்து கொண்டாள்.

“இந்தப் பிள்ளை மரணமடையத்தக்க கர்மத்தை நானும் செய்திருக்கிறேன். பாம்பை விட்டு விடு, அர்ஜுனகா” என்றாள் கௌதமி.

வேடன் அர்ஜுனகன் பாம்பை உயிரோடு விட்டான். யமனும், காலபுருஷனும் அங்கிருந்து அகன்றனர்.

“மூவுலகங்களும் கர்மங்களைச் சார்ந்தது என்று அறிவாயாக” என்று இந்தக் கதையைக் கூறி தர்மருக்கு பீஷ்மர் ஆறுதல் அளித்தார்.

கர்ம ரகசியம் பிரம்மாண்டமானது. மிகவும் நுட்பமானது. எளிதில் அறிய முடியாதது. ரகசியமானது. இதை நமது நூல்கள் ஆங்காங்கே விளக்கமாகக் கூறுகின்றன.

அதை அறிந்து கொள்வதே ஒரு பாக்கியம் தான்! அதற்கும் ஒரு நல்ல கர்மத்தைச் செய்திருக்க வேண்டுமல்லவா!***  தொடரும்