அதிசய புத்த துறவி ஸு யுன்! – 23 (Post No.3468)

Written by S NAGARAJAN

 

Date: 21 December 2016

 

Time uploaded in London:- 5-41 am

 

Post No.3468

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 23

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 83.

 

ஹுவா டிங் ஆலயம் இந்த வருடம் புதுப்பிக்கப்பட்டது. குன் மிங் ஏரிக்கு மேற்கே பி-ஜி என்ற பெயருடைய மலை ஒன்று உண்டு. இந்திய சக்கரவர்த்தியான பேரரசர் அசோகரின் இரண்டாம் மகன் அங்கு வந்தார். அவர் அந்த இடத்தில் மரகத பீனிக்ஸ் பறவைகளின் கூட்டத்தைப் பார்த்தார்.

 

 

அங்கேயே தங்க விரும்பிய அவர் நிர்வாணத்திற்கான உயர் வழியைக் கண்டு உய்ந்தார். அவரை மரகத பீனிக்ஸின் ஆவி என்று அனைவரும் அழைத்தனர். அந்த மலையும் கூடவே அவரது பெயரைப் பெற்றது.

 

ஸூவான் ஃபெங் என்ற குரு அங்கு ஒரு ஆல்யத்தை நிர்மாணித்தார். பூக்களால் நிரம்பிய இடமாதலால் அது மலர்த் தண்டு என்று பெயரிடப்பட்டது.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஆலயத்தை யூனான் நிர்வாகம் வெளிநாட்டவருக்கு விற்க முனைந்தது.

இதனால் மனம் வருந்திய ஸு யுன் கவர்னராக இருந்த டாங்கை அணுகி அதை அவரையே வாங்கச் செய்தார் டாங் அந்த மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ஸு யுன்னை வேண்டினார்.

 

 

அதை மீண்டும் புனருத்தாரணம் செய்து கட்டும் போது ஒரு கல்லிலாலான மேஜை ஒன்று கிடைத்தது. அதில் மேகத்தின் ஆலயம் என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது. அது உடனடியாக இறந்தவர்களின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த ஹை ஹுய் ஸ்தூபத்தின் மீது வைக்கப்பட்டது.

 

ம்லையடிவாரத்தில் இன்னொரு ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு வேலைகள் துவங்கின.

 

ஒரு நாள் அந்த இடத்தில் இரண்டு லட்சம் டாலர் மதிப்புள்ள தங்க, வெள்ளி நாணயங்கள் அடங்கிய மூட்டை ஒன்று கிடைத்தது.

 

அதை அப்படியே அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் ஸு யுன். ஆனால் அங்கிருந்த மற்றவர்களோ அதை ஆலய புனருத்தாரணத்திற்கு ஆகும் செலவிற்காக வைத்துக் கொள்ளலாம் என்றனர்.

 

ஆனால் புத்த தர்மத்தில் இருக்கும் சாதுக்கள் எந்த ஒரு புதையலையும் தான் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி இருப்பதைச் சுட்டிக் காட்டிய ஸு யுன் அதை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்படியே அந்த புதையல் மூட்டை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த் வருடம் கடுமையான பஞ்சத்தால் யூனான் மாகாணம் தவித்தது. மக்கள் டிப்தீரியா வியாதியால் அவஸ்தைப்பட்டு மரித்தனர்.

 

 

அங்குள்ள ராணுவமும் மக்களும் கவர்னர் டாங்கை மீண்டும் கவர்னராக்க விரும்பினர். அவரும் அதை ஏற்று மீண்டும் கவர்னராக யூனானுக்கு வந்தார்.

 

 

கவர்னரான உடன் மடாலயத்திற்கு வந்த டாங், ஸு யுன்னிடம் மழைக்காக பிரார்த்தனை புரியுமாறு வேண்டினார்.

 

ஸு யுன்னும் அதை ஏற்று ம்ழைக்காக பிரர்ர்த்தனை புரிய மூன்றே நாட்களில் மழை பெய்ய ஆரம்பித்தது.

 

ஆனால் டிப்தீரியா பரவுவது நிற்கவில்லை. ஆகவே டாங் மீண்டும் ஸு யுன்னிடம் வந்து, “ பனிப்பொழிவு ஏற்பட்டால் டிப்தீரியா நிற்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பனிப் பொழிவிற்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

 

அதை ஏற்றுக் கொண்ட ஸு யுன், ‘நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் தூயமையாக இருந்து வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார்.
டாங் விதிகளை அனுசரிக்க ஸு யுன் பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார்.

 

மறு நாளே ஒரு அடி உயரம் வரை பனிப் பொழிவு பெய்தது.

அனைவரும் போதிதர்மரின் எல்லையற்ற கருணையை நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.

*******