இலக்கிய தசாங்கமும் பூஜை தசாங்கமும் (Post No.3570)

Written by London swaminathan

 

Date: 23 January 2017

 

Time uploaded in London:- 10-37 am

 

Post No.3570

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

இலக்கியத்தில் தசாங்கம் என்பது பத்து அம்சங்களை வைத்துப் பாடுவதாகும். இந்து சமயத்தில் பூஜை முதையவற்றில் இறுதியில் காட்டும் தூப, தீபாரதனையில் தசாங்கம் என்னும் தூபம் பத்து வாசனைத் திரவியங்களினால் ஆன வாசனைப் பொடியை எரித்து நறுமனப் புகை உண்டாகுவதாகும்

 

முதலில் இலக்கியத்தில் தசாங்கம் என்னும் சிற்றிலக்கிய வகையைக் காண்போம்.

 

வரையாறு நாடு நகரூர் துரக மதகரியே

விரையாரு மாலை முரசம் பதாகை மெய்யாணையென்னு

முரையார் தசாங்கத்தினொவ்வொன்றை நாடியுற வகுத்தே

தரையாளு மன்னர் முதலா யெவருக்கும் சாற்றுகவே

 

–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்

பொருள்:-

தச+அங்கம்=தசாங்கம், அதவது பத்து பகுதிகள்/உறுப்புகள். அவையாவன

வரை = மலை

யாறு= நதி

நாடு = நாடு

நகர்= நகரம்

ஊர் துரகம்= ஊர்ந்து செல்லும் குதிரை

மதகரி= யானை

விரையாருமாலை = நறுமணம் வீசும் பூமாலை

முரசம் = முரசு

பதாகை = கொடி

மெய் ஆணை = அரச கட்டளை

என்னும் உரை ஆர்= என்று சொல்லப்பட்ட

 

 

தசாங்கத்தில் = பத்து உறுப்புகளில்

ஒவ்வொன்றை நாடி = ஒவ்வொன்றையும் ஆராய்ந்து

வகுத்தே = கூறியவற்றை

தரை ஆளும் மன்னர் முதலா= ஆட்சி செய்யும் மன்னர் முதலானோருக்கு

சாற்றுகவே= சொல்லுக

இந்த அமைப்பை பாரதியாரின் பாடல் ஒன்றிலும், மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடலொன்றிலும் காணலாம்;

 

பாரதியார் பாடிய பாரத தேவியின் திருத் தசாங்கம் என்னும் பாடலில் பாரததேவி மீது நாமம்/ பெயர், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி/வாஹனம், படை, முரசு, தார்/மாலை, கொடி என்ற வரிசையில் பாடியிருக்கிறார்.

 

திருவாசகத்தில் மாணிக்க வாசகர் திருத் தசாங்கம் என்ற பகுதியில் சிவபெருமான் மீது பாடிய பாடலில் தலைவனுடைய பெயர், நாடு, ஊர், ஆ,று, மலை, குதிரை, படை, பறை/முரசு, மலை, கொடி என்ற பத்துறுப்புக, ளையும் வைத்துப் பாடி இருக்கிறார். இது அவர் தில்லைச் சிதம்பரத்தில் பாடிய பாடல்.

 

 

பத்து உறுப்புகள் விஷயத்தில் சிறிது தளர்வு உண்டு. ஓரிரு அம்சங்களுக்குப் பதிலாக வேறு சில அம்சங்கள் இடம்பெறுவதும் உண்டு.

 

பூஜையில் தசாங்கம்

 

இந்துக்களின் வீடுகளிலும் கோவில்களிலும் நடைபெறும் பூஜைகளின் இறுதியில் தூப, தீபங்கள் காட்டப்படும் அதில் ஒரு மந்திரம், உனக்கு தசாங்கத்தைச் சமர்ப்பிக்கிறேன் என்று வரும்.

 

 

தசாங்கம் குக்குலோ பேதம் சுகந்தம் ச மநோஹரம்

தூபம் தாஸ்யாமி தேவேச க்ருஹான த்வம் கஜானன/ அல்லது அவரவர் இஷ்ட தேவதை வரும்.

 

அந்த தசாங்கம் என்பது நறுமணத் தூள் ஆகும். அதை எரியும் அனலில் போட்டு, நறுமணப் புகை எழுப்புவர். அதை முகர்ந்தால் நோய்கள் அகலும்; மேலும் எங்கும் நறுமணம் பரவி  நல்ல சூழ்நிலை ஏற்படும்.

 

அந்த தசாங்கப் பவுடரில், சந்தனம், வெள்ளை அகில், குங்கிலியம், கோரைக் கிழங்கு, சாம்பிரானி, கார் அகில், மட்டிப்பால், தேவதாரு மரத்தூள் முதலிய பொருட்களின் பொடிகள் இருக்கும்.

 

–சுபம்–

 

கம்பனில்,திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா’! (Post No.3350)

Written by London Swaminathan

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 14-15

 

Post No.3350

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

இயம் சீதா மம சுதா

“இவள் என் மகள் சீதை; இவளை உன் மனைவியாக ஏற்பாயாக; இவள் கையை உன் கைகளால் பற்றுவாயாக; இவள் உன்னை நிழல் போல தொடர்ந்து வரட்டும்” — என்று ஜனக மகாராஜன் சொன்ன சொற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது பிற்காலத்தில், மகளைக் கொடுக்கும் எல்லா தந்தையரும் சொல்லும்  சொற்களாக, வாக்கியமாக மாறிவிட்டது.

இயம் சீதா மம சுதா ஸஹதர்மசரீ தவ!, ப்ரதீச்ச சைநாம் பத்ரந்தே பாணீம், க்ருண் ஹீஷ்வ பாணிநா”– பால காண்டம், வால்மீகி ராமாயணம்.

 

Siva and Uma kalyan

திருவாசகத்தில்

 

மாணிக்க வாசகரும் கூட இந்தச் சொற்ளை அப்படியே பயன்படுத்தியுள்ளர். அவருக்குப் பின்னர் வந்த கம்பன், பயன்படுத்தியதில் வியப்பில்லை. ஏனெனில் அவரே தான் வால்மீகி யைப் பின்பற்றி ராமாயணத்தை இயற்றியதாகக் கூறுகிறார்.

 

திருவாசகத்தின் ஒரு பகுதியான திருவெம்பாவையில் வரும் பாடல் இதோ:-

உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்

றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப் போங்ககேள்

 

-திருவெம்பாவை, 19

மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி (POSTED ON 15TH JANUARY 2012) என்ற எனது பழைய கற்பனைப் பேட்டியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன்

 

 

Siva and Parvati wedding, Ellora

கம்ப ராமாயணத்தில்

 

கம்பனும் இதை ராமன் வாயிலாக வெளிப்படுத்துகிறான் (கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்)

 

நெய்யடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள்

கைய்யடை என்ற அச் சனகன் கட்டுரை

பொய்யடை ஆக்கிய பொறி இலேனொடு

மெய்யடையாது இனி விளிதல் நன்றரோ

 

பொருள்:-

இராமன், இலக்குவனை நோக்கிச் சொன்னது:– நெய்வார்த்து உண்டாக்கப்பட்ட ஹோமத்தீயின்   முன்னால், சீதையைக் கொண்டுவந்து நிறுத்தி, இவள் உனக்கு அடைக்கலம் என்று என்னிடம் ஜனகன் கூறினான். அந்த சொற்களை இன்று பொய்யாக்கிவிட்டேனே. இனிமேல் நான் இதை மெய்யாக்க முடியாது. ஆகையால் நான் இறப்பதே மேல்.

 

இன்றும் கூடப் பெண்களைத் திருமணம் செய்து கொடுபோர், “ இனி இது உங்கள் வீட்டுப் (பெண்) பிள்ளை; உங்களிடம் அடைக்கலம் புகுந்துவிட்டாள்; கண்மணி போலக் காப்பாற்றுஙள்” -என்று சொல்லி (ஆனந்தக்) கண்ணீர் விடுவதைக் காணலாம்.

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜனகன் சொன்ன அந்த சத்திய வாக்கியம் “இயம் சீதா மம சுதா” — காலத்தால் என்றும் அழியாத கல்லெழுத்து ஆகிவிட்டது. இவள் உன்னை நிழல் போலப் பிந்தொடர்வாள் — என்று ஜனகன் சொன்ன சொல்லும் உண்மையானது. கானகம் என்பது கொடிய விலங்குகள் வாழும் இடம் என்ற போதும் அவன் பின்னால் நிழல் போலப் போனாளே அந்தப் பெண்ணரசி! ஒவ்வொரு கட்டத்திலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு நல்ல செயல்களைத் துணிந்து செய்த கதா பாத்திரங்களினால் என்றும் அழியாத காவியம் ஆகிவிட்டது இராமாயணம்!

 

–subham–