
WRITTEN BY S NAGARAJAN
Post No.7833
Date uploaded in London – – 16 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்
ஒன்பதாவது உரை
(9-3-2020 அன்று ஒலிபரப்பானது)
உலகின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்!

உலகின் இன்றைய மாபெரும் அபாயமாக கருதபப்டுவது Climate change எனப்படும் தட்பவெப்பநிலை மாற்றமே. உலகின் வெப்பம் கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு தனி மனிதனும் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமாகிறது.
கடந்த நூற்றாண்டுகளில் 2016ஆம் ஆண்டு தான் மிக அதிகம் வெப்பம் உடைய ஆண்டாக இருப்பது தெரிய வருகிறது. மிக அதிகமான வெப்ப அலைகள் உலகெங்கும் வீச ஆரம்பித்து விட்டது. இது இன்னும் அதிகமாகிக் கொண்டே போகும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
கார்பன் டை ஆக்ஸைடு வளி மண்டலத்தில் அதிக அளவில் கலக்கும் போது அது போர்வை போல செயல்பட்டு வெப்பம் வெளியே தப்பிச் செல்ல வழியில்லாது செய்து விடுகிறது. இதனால் உலகில் உஷ்ணநிலை கூடுதலாகி பல்வேறு பயிர்களின் நாசத்தை ஏற்படுத்துகிறது; விலங்கினங்களையும் பறவையினங்களையும் அழிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் உஷ்ணநிலை மொத்தத்தில் 10 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகி விடும்.
அடுத்து Glacier எனப்படும் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும். இதன் விளைவாக கடல் மட்டம் உயர ஆரம்பிக்கும். கடலோரப் பகுதிகள் அழிந்துவிடும். வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் சுமார் 8 அடி வரை உயரக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.

வெப்பமயமாதலால் பருவம் பொய்க்கும்; அத்துடன் சீரற்ற நிலையில் ஆங்காங்கே அதிக மழை பெய்யச் செய்து ஏராளமான வெள்ள பாதிப்பை உருவாக்கும். பாதிப்பை ஏற்படுத்தும்.
சூறாவளிகள் அடிக்கடி உருவாகி பெருமளவில் மக்கள் வாழும் குடியிருப்புகளை அழிக்கும் அபாயமும் ஏற்படும். மிகப் பெரும் சூறாவளிகள் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்ற நிலை மாறி 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து பெருமளவில் அழிவை ஏற்படுத்தும்.
மிகப் பெரிய அளவில் பஞ்சத்தை ஏற்படுத்தி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 80 கோடிப் பேரைப் பெருமளவில் பாதிக்கும். அத்துடன் வாழ்விடங்களும் குடியிருப்புகளும் அழிக்கப்படுவதால் சுமார் 10 கோடிப் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளை இழப்பர்.உலகில் உள்ள பவழப்ப்பாறைகளில் 70 விழுக்காடு அழியும் அபாயமும் ஏற்படும்.
இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடைச் சேர விடாமல் செய்வ்தே. இதற்கு வாகனங்களே காரணம் என்பதால் படிம எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீஸல் பயன்பாடு கட்டுப் படுத்தப்பட வேண்டும். பெட்ரோல் வாகனங்களைத் தவிர்ப்பதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அனைவரும் மாறுவதும் ஒரு சிறந்த வழியாக அமையும்.
Script by S.Nagarajan (ச.நாகராஜன்)
tags- உலக, தட்ப வெப்ப நிலை, விளைவுகள்.
