எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி! (10,162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,162

Date uploaded in London – 2 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம். அண்ணலைப் போற்றுவோம்!

எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!

ச.நாகராஜன்

மஹாத்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கில் துணுக்குச் செய்திகள், குட்டிச் சம்பவங்கள் உண்டு. எதை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஒரு பொருள் புதைந்து இருக்கும்.மஹான்களை அவர்கள் அருகில் இருப்போர்கள், சிறு சம்பவங்களினாலும் அவர்கள் கூறும் சொற்கள் அவை ஒன்றிரண்டாக இருந்தாலும் சரி- அந்தச் சொற்கள் மூலமாகவும், அவர்களை மஹாத்மா என்று இனம் கண்டு கொள்ளலாம்.

ராம்நாராயண் சௌத்ரி என்ற காந்திஜியின் அணுக்கத் தொண்டர் தனது அனுபவங்களை BAPU, AS I SAW HIM என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.

அவற்றில் சில இதோ:

உழையுங்கள் – நீரையும், உணவையும் பெறுங்கள்!

காந்திஜியின் ஆசிரமத்திற்குச் சில பேர் வருகை புரிந்திருந்தனர். நேரம் நண்பகல். அவர்களுக்கு ஒரே தாகம். ராம்நாராயண் சௌத்ரி அங்கிருந்தார். அவரிடம் அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டனர். உடனே கிணற்றிலிருந்து ஒரு பக்கெட் நீரை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார் ராம்நாராயண். உடனே அங்கிருந்த அவரது ஆசிரம சகாக்கள் அப்படிக் கொடுக்கக் கூடாது என்றும அது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்றும் கூறினர். ராம் நாராயணனுக்கோ அப்படி தாகம் கொண்டவர்களுக்கு நீர் வழங்குவது ஒரு சேவையாகவே தோன்றியது. இதில் என்ன முரண்பாடு?!- என்று அவருக்குத் தோன்றியது. மதியம் காந்திஜை வழக்கம் போல நடைப் பயிற்சிக்காக வெளியே சென்ற சமயம் அவருடன் ராம்நாராயணனும் கூடவே சென்றார்.

அப்போது இப்படி நீர் வழங்கக் கூடாது என்ற சட்டம் ஏன் என்றும் கேட்டார். உடனே மஹாத்மா பதில் கூறினார்: “ நாம் நம்மால் முடிந்த அளவு நம் உடலினால் ஆன சேவையை நோயுற்றவர்களுக்கும் ஒரு வேலையைச் செய்ய முடியாதபடி இருக்கும் செயலிழந்தவர்களுக்கும் தான் செய்ய வேண்டும். ஆனால் நல்ல உடல் வலிமை கொண்டவர்களுக்கு அப்படி இலவ்சமாக உணவையும் நீரையும் கொடுப்பது என்பது அவர்களிடம் சோம்பேறித்தனத்தை வளர்க்கும், பிச்சை எடுப்பதைத் தோற்றுவிக்கும், மனித கௌரவத்தைக் குறைப்பதாகவும் ஆகும். ஒவ்வொரு மனிதனையும் சுய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியவராக ஆக்க வேண்டும். ஆகவே தான் கிணற்றின் அருகே ஒரு பக்கட்டையும் கயிறையும் வைத்துள்ளேன். தேவையானோர், அதிலிருந்து நீரை எடுத்துத் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். உணவும் இங்கு அப்படித்தான்.  ஏதேனும் வேலை செய்தவருக்கே இங்கு உணவு – அவர் செய்த வேலைக்காக!

இன்று தமிழக அரசு இலவசமாக அள்ளிக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவதையும் காந்திஜி மிகவும் வலியுறுத்திய மது விலக்கை அமல் படுத்தாமல் குடிகார நாடாக தமிழ்நாட்டை ஆக்கியதையும் நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறதல்லவா!

*

ராம்நாராயண் ஆன்மீக சம்பந்தமான ஒரு கேள்வியை காந்திஜியிடம் கேட்டார். அதற்கு விரிவாக அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு வரியை முடித்தவுடனும் ‘ஜி’, ஜி என்று ராம்நாராயண் தான் கேட்பதை உறுதிப்படுத்தி மரியாதையாக சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் ஆனது. காந்திஜி சொல்லிக் கொண்டிருந்ததை சிறிது கவனிக்கத் தவறி விட்டார் ராம்நாராயண் அல்லது காந்திஜி சொல்லியது அவருக்குப் புரியவில்லை. அவர் ஜி என்று சொல்லவில்லை. காந்திஜியும் பேச்சை நிறுத்தி விட்டார். “என்ன ஆச்சு?” என்று கேட்டார் அவர்.

“ஒரு சந்தேகம் உங்கள் மனதில் எழுந்தது என்றால் அல்லது நான் சொன்னதை  உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் பேசாமல் இருக்கக் கூடாது. என்னைக் கேட்க வேண்டும். அறிவை அடைய கீதை மூன்று படிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. எளிமை, பிரஸ்னம் அதாவது கேள்விகள் கேட்பது, சேவை.

கேள்விகளைக் கேட்க ஒருவர் தயங்கவே கூடாது. விடையில் திருப்தி கொள்ளாத வரை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மௌனமாக இருப்பது கூட ஒருவகையில் பொய் தான். கவனமாக ஒருவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அது இங்கிதம் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது.”

பாபுஜி மிக்க பொறுமையுடன் ஒருவருக்கு அறிவைப் புகட்டுவார். அதே சமயம் கேட்கும் ஒருவர் கவனத்துடன் இருபப்தையும் வலியுறுத்துவார்.

நைமிசாரண்யத்தில் முனிவர்கள் சுகரை அணுகி கேள்விகளைக் கேட்கும் போது நடக்கும் சம்வாதத்தை மேற்படி சம்பவம் நினைவு படுத்துகிறது. கீதையும் பரிப்ரஸ்னம் என்பதை வலியுறுத்துகிறது – அதாவது மீண்டும் மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுதல்!

அடடா! மஹாத்மாவின் வாழ்க்கை தான் எத்துணை எளிமையானது, அதில் தான் எத்தனை பேர் கேள்வி கேட்டுப் பதிலைப் பெற்று அறிவை அடைந்தனர். அவர் தான் எப்படிப்பட்ட சேவையை உலகினருக்கு அளித்தார்!

கீதை காட்டிய வழியை அவர் எப்படி அழகுற போதித்தார்.

அவரை வணங்குவோம்; போற்றுவோமாக!

***

tags –எளிமை, சேவை , கீதை,  காந்திஜி

எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை! (Post No.5241)

Written by S NAGARAJAN

 

Date: 21 JULY 2018

 

Time uploaded in London –   7-03  AM (British Summer Time)

 

Post No. 5241

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

 

எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!

 

ச.நாகராஜன்

 

‘உண்மையான ஞானஸ்தன் எளிமையான வாழ்க்கையைத் தான் விரும்புவான்; எளிமையாகத் தான் வாழ்வான் என்று நம்பினார் சாக்ரடீஸ்.

தனது வாழ்க்கையிலும் அவர் எளிமையையே கடைப்பிடித்தார். இதனால் அவர் காலில் செருப்பு கூட அணிந்ததில்லை.

இருந்தாலும் கூட அடிக்கடி கடை வீதிக்கு வருவார். அங்குள்ள கடைகள் அனைத்தையும் பார்வையிடுவார்.

 

 

ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர்,”எதையுமே நீங்கள் வாங்குவதில்லை; அப்படியிருக்க தினமும் ஏன் கடைவீதிக்கு வந்து அனைத்துக் கடைகளிலும் உள்ள பொருள்களைப் பார்வையிடுகிறீர்கள்” என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ், “ அங்கு அடிக்கடி போக நான் விரும்புவது உண்மைதான்! எத்தனை விதமான  பொருள்கள் இல்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அறிவதற்காகத் தான்” என்று பதிலளித்தார்.

**

ஜப்பானில் முதியவர் கூட்டம் ஒன்று அடிக்கடி கூடி செய்திகளைப் பரிமாறிக்கொண்டே டீ அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தது.

சுவையான புதிய வகை டீ ஏதேனும் எங்கேயும் கிடைக்கிறதா என்பதைப் பார்ப்பது அவர்களின் ஒரு வழக்கம். அந்த டீ எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி அவர்கள் விசாரித்து அறிந்துகொண்டு அது எப்படிப்பட்ட கலவையைக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வர்.

ஒரு நாள் அங்கிருந்த வயதானவர் ஒருவரின்  முறை வந்தது. அவர் தான் கொண்டு வந்திருந்த புது மாதிரியான டீயை அனைவருக்கும் தந்தார். அனைவரும் அதை சுவைத்துப் பார்த்தனர்.அருமையோ அருமை! இதுவரை அப்படிப்பட்ட சுவையுள்ள டீயை சாப்பிட்டதே இல்லை என்று ஒருமனதாக அனைவரும் கூறினர். இப்படிப்பட்ட டீயை எப்படிக் கலந்து தயாரிப்பது என்பதை அறிய அனைவரும் ஆர்வம் கொண்டு அவரைக் கேட்டனர்.

அதற்கு அவர்,”நண்பர்களே! இது எனது வயலில் உள்ள குடியானவன் காலம் காலமாகச் சாப்பிட்டு வரும் டீதான்! மிக அருமையான விஷயங்கள் உண்மையிலேயே அதிக விலை கொண்டவையும் அல்ல; எங்கேயோ தூரத்தில் இருப்பவையும் அல்ல; நமக்கு அருகில் உள்ள சிறந்த விஷயங்களை நாம் அறிவதே இல்லை” என்றார்.

 

 

அனைவரும் இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு ஆமோதித்தனர்.

**

“I have just three things to teach; Simplicity,Patience, Compassion. These three are your greatest treasures.: – Lao Tsu

எளிமை, பொறுமை, தயை இந்த மூன்றுமே உங்களுக்கு நான் போதிக்க வேண்டிய மூன்று விஷயங்கள். இவையே உங்களது பெரிய பொக்கிஷங்கள் என்றார் லாவோட்சு.

 

**

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெரிய பண்டிதர். எளிமையாக உடையை அணிபவர்.  படாடோபமான ஆடை அணிந்தவர்களையே பெரிய மனிதராக நினைத்து வந்த காவலாளி அவரை ஒருமுறை அழைக்கப்பட்ட இடத்தில் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான். படாடோபமான உடைகளைக் காட்டி வித்யாசாகர் இதற்கு அனுமதியை வழங்குங்கள் என்று சொன்ன போது தான் அனைவருக்கும் நடந்த விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

 

இந்த சமபவம் அனைவரும் அறிந்த ஒன்று.

 

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றார் வள்ளுவரும்! (குறள் எண் 667)

**

 

மகாத்மா காந்திஜி எளிமையின் உருவம். உடை, உணவு என்று எதை எடுத்தாலும் மிகக் குறைந்த தேவையையே அவர் கொண்டிருந்தார்.

அவர் இறந்த போது அவருக்கென்று இருந்த உடமைகள் பத்து கூடத் தேறவில்லை. அவரது கண்ணாடி, உண்ணுகின்ற பாத்திரம், செருப்பு, கடிகாரம் போன்றவை தான் அவருக்கென இருந்தன.

இந்தியாவைத் தட்டி எழுப்ப பிரிட்டிஷாரின் துணிகளை பகிஷ்காரம் செய்ய அவர் அறைகூவல் விடுத்தார். ஒவ்வொருவரும் அவரவருக்கான இடுப்புக் கச்சையை அவரவரே நூற்று உடுக்கலாம் என்று  கூறி முன்னுதாரணமாகத் தானே நூற்க ஆரம்பித்தார். இந்த எளிமை உணர்வு வெகு ஜன உணர்வைத் தட்டி எழுப்பியது.

 

எளிமை என்றும் மதிப்பைத் தரும் என்பது தான் உண்மை.

சாக்ரடீஸ் முதல் காந்திஜி வரை அனைவரும் உணர்த்தும் உண்மையும் இதுவே தான்!

***