லண்டன் புறாவும் கம்பன் புறாவும்

pigeon1

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1181; தேதி:– 19 July 2014.

கம்பராமாயணப் பாடலைப் படிதவுடன் லண்டன் காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. இங்கெல்லாம் ஒவ்வொரு சுரங்க ரயில் பாதை ஷ்டேஷனிலும் வீடுகளிலும் புறாக்கள் உட்காரக் கூடாது என்பதற்காக மேல் கூரையில் கூரான கம்பிகளைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் ஆட்களின் ‘கோட்டு- சூட்’டுகள் மீது புறாக்கள் எச்சம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக! லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள டிரபால்கர் சதுக்கத்தில் புறாக்களுக்கு பொறி வாங்கிப்போடுவதை யும் தடுத்துவிட்டனர்.

லண்டன் முதலிய மேலைநாடுகளில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, சேவல் எல்லாவற்றையும் வளர்ப்பார்கள்; “மானே, தேனே, முத்தே, மணியே, கரும்பே, கற்கண்டே” என்று கொஞ்சுவார்கள். விருந்தினர் வரும் அன்று எல்லாம் “டைனிங் டேபிளில்” சாப்பாடாக மாறிவிடும். குழந்தைகள் கொஞ்சம் வருத்தப்பட்டால், அடுத்த விருந்து நடக்கும் வரை மரணத்தை ஒத்திப் போடுவார்கள். வெளிநாடு போகும்போது நாய் பூனைகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கான அறநிறுவனங்கள் அவற்றை வேறு யாரும் ஏற்காவிடில், ஒருவாரத்தில் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து ‘’கருணையோடு’’ கொன்று விடுவார்கள்.

இதைத் தவிர ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆடு மாடுகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில்!! லண்டனில் மட்டும்!!

கம்பன் பாடலில் அயோத்தி நகர மாளிகையில் புறவுக்கு மாடம் வைத்திருப்பதை ஒரு அழகு, ஒரு சிறப்பு என்று வருணித்ததைப் படித்தவுடன் இத்தனையும் நினைவுக்கு வந்தது!!!

pigeon2

புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி வெண் கிரிமிசை விரிந்த போலுமே
-பால காண்டம், பாடல் 121, கம்ப ராமாயணம்.

பொருள்: மாளிகைகளில் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. அவைகளை எளிதில் அகற்ற முடியாது. புள்ளிகளை உடைய மாடப் புறாக்கள் தங்குவதற்கு உரிய இடங்கள் இருந்தன. வெள்ளியிலான மலையில் காலை இளம் கதிரவனின் கிரணங்கள் பரவினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த மாளிகைகள் பிரகாசித்தன.

இதில் மாடப்புறாக்கள் தங்குவதற்கு இடம் இருந்தது என்பதைப் பெருமையாகக் கூறுகிறான் கம்பன். அதாவது மாடப் புறாக்கள் தங்குவதும் ஒரு அழகு. மாடங்களில் தங்குவதால்தான் அவைகளுக்கு மாடப்புறாக்கள் என்று பெயர். பறவைகளின் மீதுள்ள அன்புக்கு இதுவும் ஒரு சான்று.

beware pigeon

இந்தியப் புலவர்கள் இயற்கையின் மீது பற்று உடையவர்கள். காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி சுயம்வரக் காட்சியில் ஒரு பாடல் வருகிறது. சூரசேன மஹாராஜாவை இளவரசி இந்துமதிக்கு தோழி சுநந்தை அறிமுகப்படுத்துகிறாள் —- ஒவ்வொரு அரசனையும் அறிமுகப்படுத்தும் போதும் ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் வருகிறது. சூரசேன மன்னனை நீ மணந்துகொண்டால் கோவர்த்தன மலையில் உள்ள பாறைகளில் அமர்ந்துகொண்டு மயில்கள் ஆடுவதைப் பார்த்து ரசிக்கலாம் என்று கூறுகிறான் காளிதாசன்.

மேலை நாட்டு, கீழை நாட்டு அணுகுமுறைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

trafalgar sq
Trafalgar Square in London. Now feeding pigeons is not allowed.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்-
நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம் — (பாரதி)

புறவுக்காக உயிர் கொடுக்க முன்வந்த சிபிச்சக்ரவர்த்தியின் புகழைப் பாடும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. சோழநாட்டுக் கண்ணகியும் இதைக் குறிப்பிட்டு பாண்டிய மன்னனை வசைபாடுகிறாள்.

வாழ்க பறவைகள்!! வளர்க அஹிம்சை!!

-சுபம்-

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில்

akaththi

கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1177; தேதி:- 17 ஜூலை 2014.

தமிழ் தலைவன் யார் என்று தமிழ் கூறு நல்லுலகில் ஒரு ‘சர்வே’ நடத்தினால், சிறை சென்ற தியாகிகள் பட்டியல், மறியல் போராட்ட தியாகிகள் பட்டியல், அரசியல் தலைவர்கள் பட்டியல், ஏ.கே. 47 துப்பாக்கி சுழற்றியோர் பட்டியல், ரயில் பாதையில் படுத்துப் போராட்டம் செய்தோர் பட்டியல் என்று ஆயிரம் ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் வந்து நம்மைத் திக்கு முக்காடச் செய்து விடும்!

கம்பனிடம் போய் ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார். அவர் நாலே வரிகளில் தெளிவான பதில் கொடுத்து நம் குழப்பத்தை எல்லாம் போக்கிவிட்டார்.

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயனம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

Agasthiar
அகத்தியர் என்ன செய்தார்?

அகத்தியர் கடலைக் குடித்தார்: அதாவது வங்கக் கடல் வழியாக பாண்டியனின் படைகளை வழி நடத்திச் சென்று வியட் நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோநேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இந்துப் பண்பாட்டைப் பரப்பினார். இதைக் “கடலைக் குடித்தார்” என்று அழகாகாகச் சொல்லுவர். அகத்தியர் கடலைக் குடித்தாரா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும், பிரம்மாஸ்திரா—ஒரு அணுசக்தி ஆயுதமா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.

அகத்தியர் பூமியை சமநிலைப்படுத்தினார்: இது திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதை. மக்கட் தொகைப் பெருக்கம் காரணமாக அகத்தியன் தலைமையில் 18 குடிகளை சிவ பெருமான் தெற்கே அனுப்பிவைத்தார். “உலகின் முதல் மக்கட் தொகைப் பெருக்கப் பிரச்னை”– என்ற ஆங்கிலக் கட்டுரையில் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.

விந்திய மலையை மட்டம் தட்டினார்:- அகத்தியர் தென்னாட்டிற்கு வருவதற்கு முன், மக்கள் அனைவரும் கடலோரமாக நடந்தோ, படகுகளிலோ தென்னாட்டு நகரங்களுக்கு வந்து சென்றனர். காரணம் இல்வலன், வாதாபி போன்ற, நர மாமிசம் சாப்பிடும் பயங்கரக் காட்டுவாசிகளும் காட்டு மிருகங்களும் மக்களை அச்சுறுத்தி வந்தன. அகத்தியர் தவ வலிமை பெற்றதால் தைரியமாக 18 குடி மக்களை, துவாரகை நகரில் இருந்து, விந்திய மலையின் நடுவிலுள்ள அடர்ந்த காடுகள் வழியே அழைத்து வந்தார். அன்றுமுதல் இன்று வரை நாம் அந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகிறோம். இதையே “மண் உற அழுத்தலால்” என்று குறிப்பிடுகிறார். புராணங்கள் கத்தியர் விந்திய மலையின் கர்வத்தைப் பங்கம் செய்தார் என்று அழகாகக் கூறுகின்றன. “பழங்கால இந்தியாவின் புகழ்மிகு எஞ்சினீயர்கள்”– என்ற கட்டுரையில் இது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி விட்டேன்.
Agathiyar_hemanth thiru

இத்தகைய அரிய பெரிய செயல்களைச் செய்து இந்திய பூகோள புத்தகத்தில் அழியா இடம் பெற்ற அகத்தியனை, தமிழ்த் தலைவன் என்று கம்பன் அழைத்ததை எல்லோரும் ஏற்பர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ?

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

இனி தமிழ்த் தலைவன் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அரசியல்வாதிகள் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியதுதான்!!
529_Kambar
contact swami_48@yahoo.com

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’ (கற்பனைப் படைப்பு- ச.சுவாமிநாதன்)

புலவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நக்கீரன். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவ பெருமானையே கண்டித்தவன் நான். ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று சிவனையே தட்டிக் கேட்டவன் நான். கவனமாக உண்மையை மட்டும் பேசுங்கள். இன்றைய தலைப்பு:

“ ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை ”:

 

1.சேக்கிழார்: என் பெயர் சேக்கிழார். நான் முதலில் பேசிவிடுகிறேன். நான் எழுதிய பெரிய புராணத்திலிருந்து ஒரு சில வரிகள்:

அளவு கூட உரைப்பரிதாயினும்

அளவிலாசை துரப்ப அறைகுவேன்

Though impossible to reach its limits

Insatiable love(desire) drives me to the task

 

2.கம்பன்: என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தில் சேக்கிழார் அய்யா சொன்னதையே சொல்லி இருக்கிறேன்:

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

 

3.அப்பர் பெருமான் எழுந்தார். கருவில் இருந்தபோதே எனக்கு ஒரு ஆசை:

“கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு

உருகிற்றென் உள்ளமும்…………………….”

 

4.என் பெயர் அருணகிரிநாதன். சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தறுதலைக் காலியாகத் திரிந்தேன். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்ய கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகன் அருள் பெற்று திருப்புகழ் பாடினேன். இதோ ஆசை பற்றி:

புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்

பொறை இலாத கோபீகனந்———- முழு மூடன்

புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி

பொறிகளோடி போய்வீழு————- மதி சூதன்

நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி

நெறியிலாத வேமாளி—————-  குலபாதன்

நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்

நினயுமாறு நீமேவி—- யருள்வாயே

4444444

 

சீத தொங்கலழ காவணிந்து மணம்

வீச மங்கையர்கள் ஆட வெண்கரி

சீற கொம்பு குழல் ஊத தண்டிகயில் ——– அந்தமாகச்

சேர்கனம் பெரிய வாழ்வு கொண்டுழலும்

ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ

சேவை கண்டுனது பாத தொண்டன் என—— அன்புதாராய்.

5555555

 

5.என் பெயர் திருமூலர், ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் மட்டுமா சொன்னார். நானும்தான் பாடி இருக்கிறேன்:

‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்

ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனதம் ஆமே’ (திருமந்திரம் 2615)

 

6.என் பெயர் திருவள்ளுவர். இதே கருத்தை நான் இவருக்கும் முன்னரே சொல்லிவிட்டேன். ஆசை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக பற்று என்ற தூய தமிழ் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்)

 

7.என் பெயர் சுப்பிரமணிய பாரதி.இதோ பாருங்கள், நான் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முன்னுரை: “ காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறர்க்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக”.

இது மட்டுமா: நான் பாடிய

“ஆசை முகம் மறந்து போச்சே—இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம்—எனில்

நினைவு முகம் மறக்கலாமோ?” என்ற பாடல் மிகவும் கீர்த்தி பெற்றுவிட்டது.

 

நன்று நன்று, வேறு யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

8.என் பெயர் கண்ணதாசன். நான் ஒரு கவிஞன். திரைப் படங்களுக்கும் பாடல் எழுதுபவன். என் கருத்தையும் சொல்லிவிடுகிறேன்:

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே ஆடிடுவொமே வாழ் நாளிலே
பருவம் என்னும் காற்றிலே, பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர் , சுகம் பெறுவர் – அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?

English 
With passions as waves
we dance like the boat
in our passage of life
With the wind of youth,
by flying in the chariot of love,
man and woman make merry, enjoy
and surprise themselves
but who can guess tomorrow’s path
today itself?

 

நன்று நன்று. இன்னும் ஒருவர் பேசலாம். அத்தோடு கூட்டம் முடிவடையும்.

 

9.என் பெயர் வைரமுத்து. என் பாட்டுகளும் தமிழ் கூறு நல்லுலகத்தில் பிரசித்தம். இதோ சாம்பிளுக்கு ஒன்று:

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை

என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை.

 

இன்றைய கூட்டம் இத்தோடு நிறைவடைந்தது. அடுத்த வார தலைப்பு: “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”.

எல்லா புலவர்களும் பலத்த கரகோஷம் செய்தனர். கூட்டம் இனிதே முடிந்தது.

(முந்தைய கட்டுரை மன்னிக்க வேண்டுகிறேன். அதனையும் படித்து மகிழ்க)