கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்! (Post No.9831)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9831

Date uploaded in London – 9 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர், ஜூலை 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்!

ச.நாகராஜன்

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரானா பற்றி ஏராளமான தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாகப் பெறுகிறோம். பயப்படுகிறோம்.ஆகவே அதிகாரபூர்வமான அறிவியல் தகவல்களை மட்டுமே அதற்குரிய ஆதாரத்துடன்  அறிந்து கொள்ள வேண்டும்; இதர தகவல்களை ஒதுக்க வேண்டும்.

  1. தடுப்பூசி போடுவது நல்லது. கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

நமது ஊடகங்கள் தடுப்பூசி போடுவது பக்க விளைவை ஏற்படுத்தும் எனு தவறான செய்தியை ஆதாரமின்றிப் பரப்பியது வருந்தத் தக்க ஒரு விஷயம். தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற தகவல்களை, பழைய போட்டோக்களை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டவற்றை வெவ்வேறு காரணங்களினால் இறந்தவரைச் சித்தரித்து, கொரானா பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தன. போட்டோக்களில் உள்ளவர்கள் கொரானாவினால் இறந்தது போன்ற ஒரு மாயத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தடுப்பூசியை ஆதரிக்கின்றன; அறிவியல் அறிஞர்கள் அனைவரும் இதைக் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்கின்றனர்.

அமெரிக்காவிலேயே தப்பான தகவல்களை 25 சதவிகித அமெரிக்கர்கள் பரப்புகின்றனர் என்றால் நமது நாட்டில் 100 சதவிகிதம் உடனுக்குடன் வதந்திகளைப் பரப்புவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

ஒரு தகவலை எப்படி உண்மையா, தவறா என அறிவது? விஞ்ஞானிகள் கூறும் வழி இது.

  1. எந்த ஊடகம் இதைக் கூறியது (Check the Source) 2) யார் கூறியது (Check the author 3)  என்ன சொல்லப்பட்டிருக்கிறது (Check the content) இந்த மூன்றையும் நன்றாக ஆய்வு செய்யுங்கள். பின்னர் நம்புங்கள்.

பிரபல அறிவியல் இதழான ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்’ தரும் அறிவுரை இது : தவறான தகவல்களை நம்பாதீர்கள். இப்போது ஒரு தகவல் சரியா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உண்மை அறியும் தகவல் தளங்கள் உள்ளன. அவற்றை உடனடியாகப் பயன்படுத்துங்கள். மற்றவரையும் பயன்படுத்தத் தூண்டுங்கள். தவறான செய்திகளைத் தவறு என்று அனைவருக்கும் தெரிவிப்பதோடு அப்படிப்பட்ட ஊடகங்களைப் பார்க்காதீர்கள்; அவற்றைப் பற்றி அனைவருக்கும் அறிவித்து அப்படிப்பட்ட ஊடகங்களின் செல்வாக்கை (அதாவது டி.ஆர்.பி.ரேடிங்கை) குறையுங்கள். ஸயிண்டிபிக் அமெரிக்கன் தரும் உண்மை அறியும் தளங்கள் இவை:

       Fact-checking organizations such as PolitiFact and FactCheck.org 

  • தடுப்பூசியுடன் முக கவசம் அணிதல் வேண்டும்; சமூக இடைவெளியை இன்னும் சிறிது காலம் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஊசியைப் போட்டுக் கொண்ட லக்ஷக்கணக்கானோரில் பத்து சதவிகிதத்திற்கும் கீழானோருக்கு அபாயமில்லாத சாதாரண ஜுரம் வந்திருக்கிறது. இரண்டு டோஸ்கள் ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு 95%க்கும் மேலாக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவது ஊசியை முதல் ஊசி போட்டுக் கொண்ட 40 நாட்களுக்குப் பின்னர் போட்டுக் கொள்வது அதன் தடுப்புத் திறனை அதிகரிக்கிறது.
  • போலந்து நாட்டு விஞ்ஞானிகள் ஊசி போடுவதற்கு முன்னால் நன்கு உறங்கி, உரிய முறையில் உணவை உட்கொண்டு, சரியானபடி நீரை அருந்தி தக்க உடல்நிலையுடன் செல்வது சிறப்பாகும் என்று அறிவுறுத்துகின்றனர். இது நமது தடுப்புத் திறனை சாதாரணமாகவே அதிகரிக்க வைக்கிறது. பெயின் ரிலீவர் (Pain Reliever) மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது அவர்கள் தரும் இன்னொரு அறிவுரை. கோவிட்-19 தடுப்பூசி போடும் போது இன்னொரு தடுப்பூசி – ஃப்ளூ போன்றவற்றிற்கானவை- போடுதல் கூடாது.
  • பக்க விளைவு எதுவும் வராது. அப்படி அபூர்வமாக ஒருவருக்கு வருவது என்றால் அது ஊசி போட்ட முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் தெரிய வரும். ஆகவே இருபது நிமிடங்கள் ஊசி போட்ட மருத்துவ மனையில் இருந்து விட்டுப் பின்னர் அங்கிருந்து திரும்பலாம்.

இவ்வளவு சொல்லியும் நீங்கள் சாலையை எட்டிப் பாருங்கள். முக கவசம் அணிவதில்லை. கூட்டம் கூட்டமாகப் போகின்றனர். தடுப்பூசி பற்றி கவலைப்படுவதுமில்லை.

அரசையும் மருத்துவ மனைகளையும் குறை கூறிப் பயனே இல்லை; நாம் உரிய விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நமது வீட்டாரையும் அண்டை அயலாரையும் கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும்.

கோவிடை வெல்வோம்; ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!

***

tags –  கொரானா , உண்மைகள், முக கவசம், தடுப்பூசி

கொரானா- அடிப்படை உண்மைகள் சில (Post No.9261)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9261

Date uploaded in London – –14 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கெர் பிப்ரவரி 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் சில!

ச.நாகராஜன்

கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் சுவாசத்தைப் பற்றியதாகும். இது கொரானா காலத்திற்கு மட்டும் பொருந்தாது; எந்தக் காலத்திற்கும் பொருந்தும் உண்மைகளாகும்.

சுவாசிப்பது என்பது ஜீவனுடன் இருப்பதாகும்.

நாடோடிப் பாடல் ஒன்று உண்டு:

தூங்கையிலே வாங்குகிற மூச்சு;

அது சுழி மாறிப் போனாலும் போச்சு!

ஆம், கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விடத் திணறுவதைப் பார்க்கும் போது பகீர் என்கிறதில்லையா?

நன்கு சுவாசிப்பதானது என்னென்ன நன்மைகளைத் தருகிறது?

  1. இதய நோய்களைத் தடுக்கிறது; தவிர்க்கிறது. முக்கியமாக மாரடைப்பைத் தடுக்கிறது.
  2. மனச்சோர்வை வரவிடாமல் செய்கிறது. கவலையைப் போக்குகிறது.
  3. வயிற்றில் அமிலத்தன்மையைத் தடுப்பதோடு மலச்சிக்கலை இல்லாமல் செய்கிறது.
  4. நல்ல தூக்கத்தை உறுதி செய்கிறது. நல்ல தூக்கம் உடல் செயல்பாட்டை நன்கு பாதுகாப்பதோடு நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தருகிறது.
  5. ஆஸ்த்மாவை அதிகமாக்காமல் அத்துடன் போராடி கட்டுப்பாடாக வைக்க உதவுகிறது.
  6. நல்ல ஆக்கபூர்வமான சக்தியை உடலுக்கு நல்குகிறது.
  7. நுரையீரலை நன்கு பாதுகாப்பதனால் நீடித்த ஆயுளை உறுதி செய்கிறது.
  8. ஒவ்வாமை எனப்படும் அலர்ஜிகளை வேரோடு களைகிறது.
  9. சக்தி நிறைந்த வாழ்வைத் தருகிறது; அதனால் மன நிம்மதி ஏற்படுகிறது.

ஆகவே சரியாக சுவாசிக்க வேண்டும்; ஆரோக்கியத்தை உறுதிப் படுத்த வேண்டும்; அதை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நல்ல சுவாசத்தைக் கொள்ள பிராணாயாமம் உதவுகிறது; என்றாலும் இதை யோகா மாஸ்டரிடமிருந்தே கற்க வேண்டும்- பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்க!

ஒரு எளிய முறை மூச்சை நன்கு உள்ளே இழுப்பதாகும். பிறகு நீண்ட ‘ஓம்’ என்ற ஒலியை எழுப்பினால் வெளி விடும் மூச்சு தானாகவே நீண்டு விடும்.

நாசியில் உள்ள இடது மற்றும் வலது துவாரங்கள் வழியே சுவாசிக்கும் முறை சிறந்தது என்றாலும் இதை யோகா மாஸ்டரிடமே கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த வேக யுகத்தில் அனைவரும் வேக வேகமாக சுவாசிக்கிறோம். லயத்துடன் இல்லாமல் மனம் போன போக்கில் சுவாசிக்கிறோம். அத்துடன் வாகனப் புகையால் மாசுபடுத்தப்பட்ட சாலைகள் வழியே சென்று புகைக் காற்றை – சுவாசத்தை – உள்ளிழுக்கிறோம்.

அன்றாடம் காலை நேரத்தில் நல்ல தூய காற்று இருக்கும் பூங்காங்கள், சோலகள், கடற்கரை என முடிந்த மட்டில் நமது இயற்கை சூழ்நிலைகளை அனுசரித்து நல்ல சுவாசத்தை அனுபவிக்க வேண்டும்.

இந்த சுத்தமான காற்று உள்ள சூழ்நிலையில் 30 நிமிடம் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொண்டால் அது இன்னும் சிறப்பாக அமையும்.

நடைப்பயிற்சியின் பலன்களும் நமக்குச் சேரும்.

உடல் வெப்பத்தைத் தவிர்க்க உதவும் உணவு வகைகளைப் பற்றியும் சற்று தெரிந்து கொள்வது நல்லது.

கோடை காலம் ஆரம்பிக்க இருப்பதால் ஆயுர்வேதம் கூறுவது போல வெப்பத்தை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இது பித்தம் கூடுவதைத் தடுக்கும்.

உடலில் நீர்ச்சக்தியை அதிகரிப்பதே நமது நோக்கம் என்பதால் கீரை வகைகளை அதிகமாகச்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளரிக்காய், வாடர்மெலான், ஆரஞ்சுப் பழம், கரும்பு, திராக்ஷை ஆகியவற்றை உண்ணலாம்.

மாங்காய் உமிழ் நீர் சுரப்பதை அதிகமாக்கி தாகம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது.

நல்ல மாம்பழமும் உருளைக் கிழங்கும் சக்தி இழப்பை ஈடு செய்கிறது.

வெட்டிவேரை நீரில் போட்டு அந்த நீரைக் குடிப்பது குளுமையைத் தரும்.

ராகி, தேங்காய், வெங்காயம், மோர், இளநீர் ஆகியவை உடலுக்கு நல்லது.

தவிர்க்க வேண்டியவை :

பப்பாளிப் பழம், அதிக அளவிலான ஊறுகாய்கள், மிளகாய் சேர்ந்த கார உணவுகள், அமிலத்தை உருவாக்கும் உணவு வகைகள் ஆகியவை தவிர்க்கப் பட வேண்டும்.

விடமின்கள் பற்றிய அறிவும் நமது உடலைப் பாதுகாப்பதில் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது.

விடமின் ஏ : கண்பார்வைக்குத் தேவையானது விடமின் A. வண்ணங்களை அறியவும், இரவுப் பார்வைக்கும் இது தேவை.

விடமின் பி (B) : இது ஒரு பெரிய தொகுதி. இதில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒவ்வொரு அங்கத்திற்கும் ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் ரத்த செல்களுக்கு இது உதவுகிறது.

விடமின் சி (C) : நோய்வாய்ப்படுவதையும் காயம்பட்டால் ரத்த வெளிப்போக்கையும் தடுக்க உதவுவது விடமின் சி.

விடமின் டி (D) :வலுவான எலும்புகள், உறுதியான பற்கள் தேவை என்றால் விடமின் டியை உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான கால்சியம் உடலில் சேர்வதை இது உறுதிப் படுத்துகிறது.

விடமின் இ (E) கண் மற்றும் உடல் திசுக்கள் வலிமையுடன் இருக்க விடமின் இ உதவுகிறது. தோல் பளபளத்து மினுமினுக்க விடமின் இ தேவை.

விடமின் கே (K) இது ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. ரத்தக் கட்டிகள் ஏற்படுவது இதனால் தடுக்கப்படுகிறது. பால் சம்பந்தப்பட்ட பொருள்களும், கீரையும் விடமின் கே உடலில் சேர்வதற்குத் தேவை.

புத்தம் புதிய கறிகாய்கள், பால்  உள்ளிட்டவை அன்றாட உணவில் சேர்க்கப்பட்டால் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும்.

ஆக,

சரியாக மூச்சு விடல், காலத்திற்கு ஏற்ற உணவு, (இந்தக் கட்டுரையில் கோடை காலத்திற்கான உணவு வகைகளைப் பார்த்தோம்) விடமின்கள் சமச்சீர் அளவில் உள்ள உணவு ஆகிய இந்த மூன்றையும் எண்ணி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் கொரானா உள்ளிட்ட கொடும் நோய்களைப் போ போ என்று சொல்லலாம்!

***

tags- கொரானா,  உண்மைகள்,

மோடி ஜி ! தட்டிப் பார்த்தால் தங்கம்!! எதிர் நோக்கும் சவால்கள்!!! (Post No.7785)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7785

Date uploaded in London – – 5 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

பிரதமர் நரேந்திர மோடி ஜியை தரக்குறைவாக சாய் வாலா என்று ஒருவர் விமரிசனம் செய்தார்.

நாட்டில் உள்ள அனைவருமே ஏழை முதல் பணக்காரர் வரை அதை புகழாரமாக எடுத்துக்கொண்டு ‘உயர்ப்பால் உயர்ந்தவர்’, ‘பேதமற்ற பெருமனிதர்’ என்பன போன்ற பட்டங்களை அள்ளி வீசினர்.

சாய் வாலா என்று பேசியவர் ஙே என்று விழித்தார்; இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறார்.

மோடி அவர்களைத் தட்டிப் பார்த்தால் அவர் ஒரு தங்கம் – பத்தரை மாத்துத் தங்கம் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டனர்.

எந்த ஒரு பிரதம மந்திரிக்கும் இல்லாத, அல்லது எந்த ஒரு அரசருக்கும் இல்லாத வரலாறு காணாத ஒரு சவாலை – கொரானாவை அவர் எதிர் கொண்டிருக்கிறார்.

பேரரக்கன் கொரானாவைக் கண்டு உலகப் பெரும் தலைகள் அரண்டு மிரண்டு போயிருக்கும் இந்த நேரத்தில், ஒன்று கூடி வீட்டிலிருந்தே, நமக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் போலீஸ், நர்ஸ்கள், டாக்டர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், தன்னலம் கருதாத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் வகையில் கையைத் தட்டச் சொன்னார்; தட்டினோம்.

உலகம் வியந்தது; இந்திய ஒற்றுமையைப் பார்த்து பிரமித்தது.

இது என்ன புது டெக்னிக் என்று! மற்ற நாடுகளும் கைகளைத் தட்ட ஆரம்பித்தன.அடுத்து தமஸோ மா ஜோதிர் கமய என்ற உத்தியை – இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லும் தீப மங்கள ஜோதியை ஏற்றச் – சொல்லி வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய மக்கள் ஜோதி ஏற்ற என்றுமே தயங்கவே மாட்டார்கள்!

ஹி ஹி இது என்ன டார்ச் லைட் என்பவர்களுக்கு வரலாறு காண்பிக்கும் உண்மைகள் பல

உப்பால் நாடு ஒன்று படுமா, இது என்ன உப்பு சத்யாக்ரஹம் என காந்திஜிக்கு அருகில் இருந்த பல தலைவர்களே சந்தேகம் கொண்டார்கள்; சிலர் ‘குழந்தைத்தனமானது இது’ என்று கோபமும் கொண்டார்கள்.

ஆனால் நாடே உப்பால் ஒன்று திரண்டது; வெள்ளைக்காரனை அரள வைத்தது.

அந்த உப்பு போல இந்த ஜோதியும் ஒற்றுமையை வளர்க்கும். அனைவரையும் இணைக்கும்.

மோடி ஜி இன்று எதிர் நோக்கும் தலையாய சவால்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன; வரலாறு காட்டும் தலைவர்கள் எவரும் எதிர் கொள்ளாத சவால் என்று துணிந்து அடித்துக் கூறலாம்.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்:

  1. ‘பிரமிக்கத்தக்க விதத்தில் நாட்டை ஓரிழையில் கொரானா காலத்தில் இணைத்து விட்டாரே, இந்த நாட்டை எப்படிச் சிதைப்பது’ என்று அரண்டு போயுள்ள பாகிஸ்தான் போன்ற நாடுகள் பல வித கெட்ட உத்திகளைக் கையாளும். இவர்களுக்குத் தக்க பதில் தர வேண்டும்.
  2. அரண்டு போயுள்ள பிரிட்டிஷ் மற்றும் மேலை நாட்டுப் பத்திரிகைகள் கெட்ட செய்திகளை இட்டுக் கட்டி வெளியிடுகின்றன. இப்படிப் பட்ட உலக பத்திரிகைகளின் பொய்களை முறியடித்து  உண்மையை உலகின் முன் வைக்க வேண்டும்.
  3. பிற நாட்டுப் பத்திரிகைகள் ஒரு புறம் இருக்கட்டும், இந்தியத் திருநாட்டில் ஐந்தாம்படை வேலை பார்க்கும் சில ஊடகங்களும், பத்திரிகைகள், குட்டி டிவிக்கள் மணிக்கு ஒரு பொய்ச் செய்தி என்பதை வெளியிட்டு மதக்கலவரம், இனக்கலவரம் ஆகியவற்றிற்கு வித்திடுகின்றன. இதை நீக்க வேண்டும்.
  4. பொருளாதாரச் சரிவு என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு போகும். இதைச் சரி செய்து மீள வேண்டும். ‘மனித உயிர்கள் தான் முதலில், ‘அவர்களுக்கான பொருளாதாரம் அடுத்து’ என்று உறுதியாகக் கூறிய அவர் அன்றாடக் கூலி வேலை பார்த்துப் பிழைக்கும் தொழிலாளிகள், அவ்வப்பொழுது கிடைக்கும் சவாரி கொண்டு வாழ்க்கை நடத்தும் ஆட்டோ ஓட்டிகள் போன்ற பல நூறு துறைகளைச் சார்ந்தோருக்கு உதவ வேண்டும். 130 கோடி பேர் கொண்ட நாடு என்பதை நினைக்கும் போது இது ஒரு பெரிய சவால்.
  5. ஏற்கனவே தீய நோக்கத்திற்காக இந்தியாவிற்குள் பணம் அனுப்பி வந்த என் ஜி ஓக்களைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்காகக் கடுப்பில் இருப்போர் கொரானாவை எப்படித் தங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் திட்டமிடுவர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
  6.  தொழிற்சாலைகள் இயங்காதிருத்தல், போக்குவரத்து முடக்கம், இயல்பான வாழ்க்கை இன்மை, கல்விச்சாலைகள் மூடி இருத்தல் – இவை எல்லாம் தற்காலிக நிறுத்தம் என்றாலும் பழைய தடத்தில் இயல்பாக இயங்க வைக்க வேண்டும். இது ஒரு பெரிய சவால்.
  7.  ஒரே நாடு என்ற சிந்தனை இன்றி, தனி இனம், மொழி, கலாசாரம் என்று பிதற்றி வந்து கொண்டே இருக்கும் சில குரூப்புகள் அயல்நாட்டுப் பணத்திற்கு இரையாகாமல் இருக்க வேண்டும்.
  8. ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் தடை போடும் கட்சிகள், தவறான ஆட்களுக்கு பேச்சு சுதந்திரம், தனி நபர் உரிமை என்ற பெயரில்  துணை போகும் அமைப்புகள் தரப் போகும் குடைச்சலை எதிர் கொள்ள வேண்டும்.
  9. குடைச்சலைக் கொடுத்துக் கொண்டே இருக்கும் சீனாவை பல்துறைகளிலும் பாங்காக எதிர்கொண்டு வெல்ல வேண்டும்.

இன்னும் பல, பற்பல!

ஆனால்  மோடி ஜியின் உடலில் ஓடுவது இந்திய மக்களின் அன்பு என்னும் இரத்தம். அந்த உடலைத் தட்டிப் பார்த்தால் தங்கமாக இருக்கிறது. அது மற்ற உலோகங்களை எளிதாக வெல்லும்!

ஒவ்வொரு இந்தியனும் இந்த வரலாறு காணாத ஆபத்துக் காலத்தில் மோடி ஜிக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். இருப்போம்; வெல்வோம்

tags- நரேந்திர மோடி, தமஸோ மா ஜோதிர் கமய, கொரானா

***

கொரானா கற்றுத் தரும் பாடங்கள்! (Post No.7747)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7747

Date uploaded in London – – 27 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

கொள்ளை நோயான – கொடிய நோயான – நாம் இதுவரை அறிந்திராத விசித்திர நோயான – கொரானா (Corona  Virus) கற்றுத் தரும் பாடங்கள் பல.

ஒவ்வொரு மனிதனும் பல பாடங்களை கொரானாவிடமிருந்து கற்றுக் கொள்கிறான்.

சில பாடங்கள் இதோ:

நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான்; அவன் நடத்தும் நாடகத்தில் நமக்குக் கொடுக்கப்படும் பாத்திரங்களை நாம் ஏற்கும் போது பல சமயம் மகிழ்கிறோம்; பல சமயம் சொல்லவொண்ணா துக்கத்தையும் பயத்தையும் அடைகிறோம்.

மனிதகுலம் ஒன்றே. ஜாதி, மதம், இனம், மொழி, நாடு , ஆண் பெண் என்ற பால் வேறுபாடு, பணக்காரன், ஏழை என்ற அந்தஸ்து வேறுபாடு போன்றவை அர்த்தமில்லாதவை; அவை பெரிய இடருக்கு முன்னால் குன்றிக் குறுகிப் போகின்றன.

விஞ்ஞானம் வளர வளர வியப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்றாலும் கூட, விளக்கமுடியாத விஷயங்கள் ஏராளம் உள்ளன? ஏன், – இப்போது ஏன் – என்ற கேள்விக்கு விடையே இல்லை.

அரசு மட்டும் ஒரு தேசத்தில் உள்ளவர்க்கு நல்லதைச் செய்ய முடியாது; தனி மனிதனும் அரசுக்கு நூறு சதவிகிதம் ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் இடரை வெல்ல முடியாது.

படித்தவர்கள் பாமரரை விட ஒழுக்கமின்றி நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட முடிகிறது. ஏன் இப்படி என்ற கேள்விக்கு விடையே இல்லை.

தனிமனித ஒழுக்கம் அனைத்து அறிவையும் விடச் சிறந்தது. அதைக் கொண்டவர்களே நல்ல மனிதர்கள்.

இந்தப் பேரிடரிலும் கூட ஆதாயம் பார்க்க நினைப்பவர்களை என்ன சொல்வது? இதிஹாஸ புராணம் கூறும் ‘இரக்கமில் அரக்கர்கள்’ இவர்கள் தானோ?!

ஊடகங்கள் பெரும்பாலும் நல்லனவற்றையே செய்வதைப் பாராட்டும் போது பரபரப்பூட்டியே பழக்கப்பட்ட ஊடகங்கள் பொய்ச் செய்திகளைப் பரப்புவதைப் பார்க்கும் போது பெரும் வியப்பை அடைய வேண்டியதிருக்கிறது.

வதந்திகளைப் பரப்புவதில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பேரிடர் பாதிக்கும் என்று எண்ணுவதில்லை என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு கணத்தில் பீதியைக் கிளப்பி மரண பயத்தை ஏற்படுத்தி உலக நாட்டு மக்கள் அனைவரையும் கலக்கமுறச் செய்ய முடியும்; பல்வேறு துறைகளை முடக்க முடியும்; வீட்டுக்குள்ளேயே அனைவரையும் முடங்கிக் கிடக்கச் செய்ய முடியும்; நாளை யாருக்கு என்ன நடக்குமோ என்ற நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியும்; நாடுகளின் அடிப்படை பொருளாதாரத்தையே ஆட்டி விட முடியும் – முடிவற்ற ஒரு பட்டியலை ஒரு கணத்தில் கொரானா தர முடியும் என்பது என்ன ஒரு விசித்திரம்?!

தத்துவம் கூறுபவர்களை விட, சாஸ்திர வியாக்யானங்களைச் செய்பவர்களை விட, களத்தில் முன்னணியில் நின்று தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் சேவாதளத்தினரை மனிதர்  என்ற சொல்லால் மட்டும் விளக்க முடியுமா? இவர்களின் அருங்குணத்தை எப்படி விவரிப்பது? எப்படி இவர்களுக்கு ஈடு கட்டுவது?

மாட்டு வண்டி, குதிரை வண்டியிலிருந்து, சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், ரயில், விமானம் என பல்வேறு பயண சாதனங்களைக் கண்டாலும் கூட அவற்றைப் பயன்படுத்த முடியாமல் செய்ய ஒரு சின்ன ‘மரணம் வந்து விடுமோ’ என்ற பீதி போதும் என்பது என்ன ஒரு விசித்திரம்?!

அமைதி தரும் ஆலயங்களும் மூடப்படும் என்பது அதிசயமாக இல்லை?

சேர்ந்து வாழும் சமூகத்தை, தூர தள்ளி இருக்க வேண்டிய சமூகமாக, – சோஷியல் டிஸ்டன்ஸிங் என்ற புதிய நடத்தை கொண்ட சமூகமாக, ஒரு சின்ன வைரஸ் மாற்ற முடியும் என்பதை இதுவரை நம்பி இருப்போமா?

என்றாலும் கூட மனிதகுலத்திற்கு – நல்லோருக்கு – ஒரே ஒரு நல்ல , பெரிய நம்பிக்கை உள்ளது:-

அது இது தான்!

அறம் வெல்லும் பாவம் தோற்கும்.

தர்மம் வெல்லும்; அதர்மம் அழியும்;

கொரானா தோற்கும்; மனித குலம் வெல்லும்!

நாடகத்தை நடத்துபவனைச் சரண் அடைகிறோம்; நாடகத்தில் நீடு வாழும் ஆரோக்கியம் கொண்ட நல்ல பாத்திரத்தை அனைத்து மக்களுக்கும் கொடு என்று கேட்டுப் பிரார்த்திக்கிறோம்.

“கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் –

(கொரானா உள்ளிட்ட -)

கொடு நோய்கள் ஆன பலவும்

அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே”. (வேயுறு தோளி பங்கன் – திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்)

சர்வே ஜனா சுகினோ பவந்து: |

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

மனித குலம் வாழ்க! மனித குலம் வெல்க!!


tags — கொரானா , பாடங்கள்

***