
Article Written S NAGARAJAN
Date: 22 July 2016
Post No. 2993
Time uploaded in London :– 5-58 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சுகமான கல்யாணி ராகங்களின் ராணி!
ச.நாகராஜன்
மனம் எரிச்சலாக இருக்கிறது. அனைவரின் மீதும் இனம் தெரியாத ஒரு கோபம். இது ஒரு வகை.
மனம் மிகவும் அல்பமாக இருக்கிறது. ஒரு பெருந்தன்மையான கம்பீர மனோபாவம் இல்லை. இது இன்னொரு ரகம்.
உற்சாகமே இல்லை; ஏனோ தானோவென்று எதையும் செய்யும் ஒரு மனோபாவமான நிலை! இப்படி ஒரு ரகம்.

ஆன்ந்த நிலையையே அறிய முடியவில்லை. மனம் இனம் தெரியாத ஒரு சோகமான மனநிலையில் இருக்கிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலையில் இருக்கும் இயற்கை அனுபவத்தை அனுபவிக்க்க் கொடுத்து வைக்கவில்லை. இப்படி இன்னொரு ரகம்.
இந்த அனைத்து ரக மனிதர்களும் அதிகம் செலவில்லாமல் குணமடையக் கூடிய ஒரு வழி உண்டு.
கல்யாணி ராகத்தில் உள்ள பாடல்களைக் கேட்க வேண்டியது தான்!
யூ டியூபில் சென்றால் இசை ராணி எம்.எஸ். சுப்புலெட்சுமி, மஹாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா என்று எத்தனை அருமையான பாட்கர்களின் கல்யாணி ராகப் பாடல்களைக் கேட்க முடியும்!
கௌசிகி சக்ரவ்ர்த்தியின் கல்யாணி ராக பஜனைப் பாடல் வேறு இருக்கிறதே!!
இரவில் எதைக் கேட்டாலும் மறு நாள் காலை எழுந்திருக்கும் போது உலகமே ஒரே ஆனந்தம்.
பழைய மோசமான மனம் எங்கே போயிற்று. பெருந்தனமை, கம்பீரம், உற்சாகம், பக்தி, அன்பு அனைத்தையும் மனம் எப்படி ஒரே சமயத்தில் கொண்டது?
கல்யாணி ராகத்தின் மஹிமையே மஹிமை!
சுகமான கல்யாணி, ராகங்களின் ராணி!
65வது மேளகர்த்தா ராகம் இது.
ஏழு ஸ்வரங்களும் முறைப்படி கொண்ட ராகம். ஆகவே இது ஒரு சம்பூர்ண ராகம்!
காதல், பக்தி போன்ற நுட்பமான உணர்வுகளை முழு வீச்சில் காண்பிக்க வல்ல அற்புதமான ராகம் இது.
தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் கிருதிகள் இந்த ராகத்தில் பல அமைந்துள்ளன.
நிதி சால சுகமா? – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
அம்மா ராவம்மா! – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
ஹிமாத்ரி சுதே – ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள்
கமலாம்பா பஜரே – ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்
உன்னை அல்லால் – பாபநாசம் சிவன்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பட்டியல் நீளும்.
தமிழ் திரைப்படப் பாடல்களில் இதை எடுத்து இசையமைக்காத இசை அமைப்பாளர்களே இல்லை எனலாம்.

சில பாடல்கள் :
ஜனனீ ஜனனீ – தாய் மூகாம்பிகை – இளையராஜா
சிந்தனை செய் மனமே – அம்பிகாபதி
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
மன்னவன் வந்தானடி தோழி – திருவருட்செலவர்
வெள்ளைப்புறா ஒன்று – புதுக்கவிதை
இப்படி பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதன் இந்தி வடிவத்தில் அருமையான பாடல்கள் ஏராளம் உள்ளன.
இவற்றை நெட்டிலும் பிடிக்கலாம்; இசை வடிவங்களிலும் வாங்கலாம்.
செலவு சிறிது; பயனோ பெரிது!
ராகங்களின் ராணிக்கு இன்னும் ஏராளமான பெருமைகள் உண்டு.
பல புத்தகங்களே வந்து விட்டன!
கல்யாணி என்றால் அனைத்து நலன்களையும் அளிப்பவள் என்று பொருள்!
உண்மை தான்!!
***********
You must be logged in to post a comment.