
COMPILED by London Swaminathan
Date: 25 September 2017
Time uploaded in London- 6-05 AM
Post No. 4245
Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.
அக்டோபர் 2017 காலண்டர்
முகரம்-1, காந்தி ஜயந்தி- 2, வால்மீகி ஜயந்தி-5, தீபாவளி-18/19
கந்த சஷ்டி-25.
ஏகாதசி – 1, 15, அமாவாசை – 19, பௌர்ணமி – 5
சுபமுகூர்த்த தினங்கள்- 27, 30.

அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும் காலை
மிடல் உறு புலன்கள் வென்ற மெய்த்தவர் விசும்பின் உற்றார்
(அனுமன் புறப்பட்ட வேகத்தில் முனிவர்கள் வானில் பறந்தனர்)
அக்டோபர் 2 திங்கட் கிழமை
கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிபட மணிகள் மின்ன
(கடலடி நாகங்கள் நாகரத்தினத்தைக் கக்கின)
அக்டோபர் 3 செவ்வாய்க் கிழமை
துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அற சுறவு தூங்க
ஒள்ளிய பனை மீன் துஞ்சும் திவலைய ஊழிக்காலின்
(முதலைகள், சுறாமீன்கள், டால்பின்கள் தூக்கி எறியப்பட்டன)
அக்டோபர் 4 புதன் கிழமை
புட்பக விமானம்தான் AIR PLANE அவ் இலங்கை மேல் போவது ஒத்தான்
(இலங்கையை நோக்கி ஒரு புட்பக விமானம் பறப்பது போல அனுமன் பறந்தான்)
அக்டோபர் 5 வியாழக் கிழமை
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல்
(உலகத்துக்கு அடிப்படையாய் விளங்கும் அறத்தைத் தழைக்கச் செய்யும் அனுமன்)

அக்டோபர் 6 வெள்ளிக் கிழமை
ஊழிநாள் வடபால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான்
(உலகம் அழியும் நாளில் வடதிசையில் தோன்றும் பவுர்ணமி போல)
அக்டோபர் 7 சனிக் கிழமை
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலங்களோடும்
ஆசையை உற்ற வேலை கலங்க
(உலக மக்களும் புத்தகங்களும் சொல்லும் திமிங்கிலத்தைச் சாப்பிடும் திமிங்கிலங்கள் இறந்து கடலில் மிதந்தன)
அக்டோபர் 8 ஞாயிற்றுக் கிழமை
நூல் ஏந்து கேள்வி நுகரார் புலன் நோக்கல் உற்றார்
போல் ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க
(ஞான நூற்பொருளை கல்லாது புலன் இன்பத்தில் மனதைச் செலுத்தும் சிறியார் போல பூமாதேவியும் உடல்வலி தாங்காமல் விலகினாள்)
அக்டோபர் 9 திங்கட் கிழமை
பெருந்தேன் பிறிசாலும் நின் அன்பு பிணித்தபோதே
இருந்தேன் நுகர்ந்தேன் நுகர்ந்தேன் இதன்மேல் இனி ஈவது என்னோ?
(உன் அன்பைக் காட்டியதே விருந்து உண்டது போல ஆய்விட்டேன். இதற்கும் மேல் நீ தருவதற்கு என்ன இருக்கிறது– மைநாக பர்வதத்திடம் அனுமன் சொன்னது)
அக்டோபர் 10 செவ்வாய்க் கிழமை
நீண்டான் உடனே சுருங்கா நிமிர்வாள் எயிற்றின்
ஊர்ந்தான் என உற்று ஓர் உயிர்ப்பு உயிராத முன்னா
(திடீரெனச் சுருங்கிய உடலுடன் சுரசையின் வாய்க்குள் புகுந்த அனுமன், அவள் ஒரு முறை சுவாசிப்பதற்குள் வெளியே வந்தான்)

அக்டோபர் 11 புதன் கிழமை
சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்
ஏகா ரக்கிகுடர் கொண்டு உடன் எழுந்தான்
(இறவா வரம் பெற்றவர்களில் திலகம் போன்ற அனுமன் அங்காரதாரகை என்னும் அரக்கியின் வாயுள் புகுந்து குடல்களைச் சுற்றிக்கொண்டு மேலே எழுந்தான்)
அக்டோபர் 12 வியாழக் கிழமை
இராம! என எல்லாம்
மாறும் அதின்மாறு பிறிது இல் என வலித்தான்
(இது போன்ற கஷ்டங்கள் நீங்க ராம நாமத்தைச் சொன்னால் போதும்; அ தைத் தவிர வேறு வழி இல்லை- அனுமன்)
அக்டோபர் 13 வெள்ளிக் கிழமை
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்கக்
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்
(தேவலோகம் ஆகிய மங்கை தன் வடிவழகினைப் பார்க்க ஒரு கண்ணாடி வைத்தது போலத் திகழ்ந்த இலங்கையை அனுமன் உற்றுப் பார்த்தான்)
அக்டோபர் 14 சனிக் கிழமை
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும்
கண்புலம் வரம்பிற்று ஆமே? காட்சியும் கரையிற்று ஆமே?
(நுண்ணிய அறிவினால் நுட்பமான கேள்வி ஞானத்தை ஆராய்ந்து தெளிந்தவர்களுக்கும் காணும் கட்புலன் வரம்பெற்றதாய் நீண்டிருக்குமோ? இலங்கையில் உள்ள காட்சிகளும் அளவுக்கு உட்பட்டவையா? இரண்டும் இல்லை).

அக்டோபர் 15 ஞாயிற்றுக் கிழமை
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய
மழலை மென் மொழிகிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்
(மாளிகையில் உள்ள மங்கையர், தாம் வளர்க்கும் கிளிகளுக்கு, புல்லாங்குழலும் வீணையும் யாழும் தோற்கும் அளவுக்கு மழலைச் சொற்களைக் கற்றுக் கொடுத்தனர்)
அக்டோபர் 16 திங்கட் கிழமை
மூவர் தம்முளும் இருவர் என்றால் இனி முயலின்
தாஇல் மாதவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ?
மும்மூர்த்திகளையும் விட இராவணன் உயர்ந்திருக்க, அவனது மாபெரும் தவமே காரணம்)
அக்டோபர் 17 செவ்வாய்க் கிழமை
நரகம் ஒக்குமால் நல்நெடுந்துறக்கம் இந்நகர்க்கு
(இலங்கையின் வளத்தைப் பார்த்தால் சுவர்கமும் நரகம் போலக் காட்சிதரும்!)
அக்டோபர் 18 புதன் கிழமை
ஆரியம் தனி ஐங்கரக் களிறும் ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேருமே இந்நகர் தொகாத
(ராவணன் நகரில் இல்லாத ஒரு யானை மேன்மைபெற்ற விநாயகன்; அவன் ஊரில் இல்லாத ஒரே தேர் சூரியனின் தேர்)
அக்டோபர் 19 வியாழக் கிழமை
தெய்வத் தச்சனை புகழ்துமோ?செங்கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தை வியத்துமோ?
(இலங்கையின் இத்தகைய சிறப்புக்கு அதை உருவாக்கிய மயன் என்னும் தெய்வத் தச்சனைப் புகழ்வதா? அல்லது ராவணனின் மாதவத்தைப் புகழ்வதா. எனக்குத் தெரியவில்லையே- கம்பன் அங்கலாய்ப்பு)
அக்டோபர் 20 வெள்ளிக் கிழமை
ஏனை மணியாலும் இயற்றியவேனும் யாவும்
தேனும் மலரும் கனியும் தரச் செய்த செய்கை?
(இது என்ன உலக அதிசயம்? இலங்கையில் உள்ள எல்லா காடுகளும் சோலைகளும் நவரத்தினக் கற்களால் செய்யப்பட்டவை. ஆனால் இயற்கையான தேனும் , மலரும் ,கனியும் கிடைக்கிறதே)

அக்டோபர் 21 சனிக் கிழமை
திறம்பு காலத்துள் யாவையினும் சிதையா
அறம்புகாது இந்த அணி மதில் கிடக்கை நின்று அகத்தின்
(கம்பன் பயங்கரக் கிண்டல்:- தேவர்கள் இலன்கையில் புக முடியாது. உலகமே அழியும் போது, தான் மட்டும் அழியாமல் நிற்கிறதே அந்த தர்மம் கூட இந்நகருக்குள் புக முடியாது!!)
அக்டோபர் 22 ஞாயிற்றுக் கிழமை
செங்குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர்
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார்
(இலங்கை வாழ் அரக்கர்களுக்கு செம்பட்டை முடி; கோபத்தால்வேறு முகம் சிவக்கும்; இது பங்குனி மாதத்தில் செம்முருங்கை மரங்கள் உள்ள காடு பூத்துக் குலுங்கியது போலச் செக்கச் செவேல் என்று இருந்தது)
அக்டோபர் 23 திங்கட் கிழமை
எட்டுத் தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள்
( அனுமனை முறைத்துப் பார்த்த இலங்காதேவி என்னும் நகர காவல் தேவதைக்கு 8 தோள்கள், 4 முகங்கள், ஏழு உலகங்களுக்கும் சென்று திரும்பும் ஒளி படைத்தவள்; அவ்வளவு பிரகாசம்! சுழலும் கண்களை உடையவள்! சி சி டி வி C C TV காமெராக்கள் தோற்றுப் போகும்!)
அக்டோபர் 24 செவ்வாய்க் கிழமை
அளியால் இவ் ஊர் காணும் நலத்தால் அணிகின்றேன்
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு? என்றான்
ஊரைக் காணவேண்டும் என்ற ஆசையால் வந்தேன். எளியவனாகிய நான் இவ்வூருக்குச் செல்வதால் உனக்கு என்ன நஷ்டம்? இலங்காதேவியிடம் அனுமன் சொன்னது
அக்டோபர் 25 புதன் கிழமை
அறம் வெல்லும் பாவம் தோற்கும்
அறம் வெல்லும், பாவம் தோற்கும்- என்பதை இன்னும் சொல்ல வேண்டுமா?

அக்டோபர் 26 வியாழக் கிழமை
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன்மதில் தாவிப் புக்கான்
சீரிய பாலின் வேலைச்சிறு பிரை தெறித்தது அன்னான்
(இழிந்தவர் வாழும் இலங்கையின் பொன்மதிலைத் தாவி அனுமன் புகுந்தது பாலிலே சிறிதளவு மோர் சிந்தியது போல இருந்தது.)
அக்டோபர் 27 வெள்ளிக் கிழமை
சந்தப் பூம்பந்தர் வேய்த்த தமனிய அரக்கில் தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணிவிளக்கு ஒளிறும் சேக்கை
(அவரவர் நினைத்ததைக் கொடுக்கும் சிந்தாமணி என்னும் தெய்வ விளக்கு ஒளிர்ந்தது.)
அக்டோபர் 28 சனிக் கிழமை
தேன் உகு சரளச் சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை
(தேன் பருகும் இனிய சோலையில், தேவ மகளிர், ஆகாய கங்கையின் தெய்வ நீரினால் அரக்க மகளிரை நீராட்டினர்)
அக்டோபர் 29 ஞாயிற்றுக் கிழமை
சந்தப் பூம்ப்பந்தர் வேய்த்த தமனிய அரக்கில் தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணிவிளக்கு ஒளிறும் சேக்கை
(அவரவர் நினைத்ததைக் கொடுக்கும் சிந்தாமணி என்னும் தெய்வ விளக்கு ஒளிர்ந்தது.)

அக்டோபர் 30 திங்கட் கிழமை
சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ
பொங்கு பல்முரசம் ஆர்ப்ப இல்லுறை தெய்வம் பேணி
(அரக்க மகளிர் சிலம்பு, மேகலை, பாதரசம் ஆகிய அணிகலன்களை அணிந்து உண்டாக்கிய ஒலிகளை ஒடுக்கும் அளவுக்கு முரசுகள் முழங்கின. அப்போது அரக்க மகளிர், இல்லத்தில் உள்ள தெய்வங்களை மலரால் பூஜித்தனர்)
அக்டோபர் 31 செவ்வாய்க் கிழமை
தடைபுகு மந்திரம் தகைந்த நாகம்போல்
இடைபுகல் அரியது ஓர் உறக்கம் எய்தினான்
கடை யுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் புடை பெயரா நெடுங்கடலும் போலவே
(மந்திரத்தால் கட்டுண்ட நாகம் போலவும், ஊழிக்காலத்தில் சீறி எழ தயாராகக் காத்திருக்கும் கடல் போலவும் கும்பகர்ணன் தூங்கினான்)

–சுபம்–