அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி! – Part 2

ச.நாகராஜன்
ஜோதிடம் மட்டுமல்லாமல் வானவியல், பௌதிகம், இரசாயனம், உலோகவியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் ரிஷிகள் இயற்றிய நூல்களை அப்படியே ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி கூறியது அனைவரையும் வியக்க வைத்தது. அவர் சுட்டிக் காட்டிய நூல்கள் கணக்கில் அடங்கா. சில நூல்களின் தலைப்பையும் அவற்றில் என்ன அடங்கி உள்ளது என்பதையும் கீழே பார்ப்போம்.
1)அக்ஷர லக்ஷ கணித சாஸ்திரம் :- வால்மீகி முனிவர் அருளியது. இதில் 64 கணித சித்தாந்தங்கள் விளக்கப்படுகின்றன.
2) அனுகரன சப்த சாஸ்திரம் :- கண்டிக ரிஷி அருளியது.எதிரொலிகள் பற்றியும் ஒவ்வொரு சப்தமும் என்ன பிரதிபலிப்பை உருவாக்குகிறது என்பது  பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
3) ஸ்த்ரீ¢ லக்ஷண சாஸ்திரம் :- சகதாயன ரிஷி அருளியது.உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிலும் பெண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது?இதை அற்புதமாக விளக்கும் நூல் இது.
4) புருஷலக்ஷண சாஸ்திரம் :- பப்ரு ரிஷி அருளியது. மிருகங்களில் ஆண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது. இதை விளக்கும் நூல் இது.
5) கன்யா லக்ஷண சாஸ்திரம்:- பப்ரு ரிஷி அருளியது.ஒரு பெண் கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா என்பதை எப்படி அறிவது? இதை விளக்கும் நூல் இது.
6)சகுன சாஸ்திரம்:- கர்க மஹரிஷி அருளியது. பறவைகளின் வெவ்வேறு ஒலிகளாலும் அவை பேசுகின்ற பாஷைகளின் மூலமும் மனிதர்களுக்கு நன்மை உண்டாகுமா அல்லது தீமை உண்டாகுமா என்று விளக்கும் சகுன சாஸ்திரம் இது.
7)சில்ப சாஸ்திரம்:- மயன் அருளியது.32 விதங்களாகக் கூறப்படும் தேவ சில்பி,கந்தர்வ சில்பி, யக்ஷ சில்பி, பைசாசிக சில்பி,அசுர சில்பி, மானுஷ சில்பி, முதலிய சில்பிகளை விவரிப்பதோடு  முழு விவரங்களையும் தரும் நூல் இது.
8)சுப சாஸ்திரம்:- சுகேசர் அருளியது.128 விதமான சுவையான சமையல்களைப் பற்றி விவரிக்கும் ருசியான நூல் இது.சுவையான நூல் மட்டுமல்ல இது; செய்முறையைச் சொல்லித் தரும் நூலும் கூட!
9)மாலினி சாஸ்திரம்:- ரிஷ்ய சிருங்க முனி அருளியது.உருமாற்றம், மாயத் தோற்றம், கானல் நீர் மாயைகள் ஆகியவை பற்றி விளக்கும் நூல் இது.
10) ப்ரளய சாஸ்திரம்:- மஹரிஷி வியாஸர் அருளியது.மஹா பிரளயங்கள் நான்கைப் பற்றியும் சிறு பிரளயங்களில் உள்ள 64 வகைகளையும் விளக்கும் நூல் இது.
11) கால சாஸ்திரம்:-ஷண்முகர் அருளியது.ஜோதிடம், வானவியல், பௌதிகம் ஆகிய துறைகளுக்கு ஆதாரமான மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான நூல் இது.காலம் என்றால் என்ன என்பதை பிரமிக்கத் தக்க விதத்தில் விளக்கும் இது அறுபத்திநான்காயிரம் காலபுருஷர்களின் விவரத்தையும் தருகிறது!
12)மாயா வாத சாஸ்திரம்:-ஆஞ்சனேயர் அருளியது. பெயர் சுட்டிக்காட்டுகின்ற படியே மாயா வாதத்தை விளக்கும் நூல்.
13) தாது வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது.கனிமங்கள், கூட்டுப் பொருள்களைப் பற்றி விளக்கும் நூல்!அதிலிருந்து என்னென்ன பொருள்களை உருவாக்கலாம் என்பதையும் கூட இது விளக்குகிறது!
14)விஷ வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது. வெவ்வேறு விதமான விஷங்களைப் பற்றியும் அதில் அடங்கிய விஷத்திற்கான மூலப் பொருளையும் விளக்கும் நூல் இது.செயற்கை விஷம் எது, இயற்கை விஷம் எது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
15) காருடம்: வைல ரிஷி அருளியது.இந்திய மாயாஜால நிபுணர்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கும் 32 விதமான மாயாஜாலங்களை விளக்கும் நூல் இது. எந்த விஷத்தை எப்படி முறிப்பது என்பதையும் கற்றுத் தருகிறது!
16)சித்ர கர்மா:பீமர் அருளியது. வர்ணம் பூசுவது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது எப்படி என்பதைக் கற்றுத் தரும் நூல் இது.
17)மல்ல சாஸ்திரம்:-மல்லர் அருளியது. மல்யுத்தம் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி விளக்கும் நூல் இது.
18)பரதம்:-கணபதி அருளியது. நாட்டியம், அதற்கான இசை, தாளம்,அதற்கான கால நுட்பம் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
19)பரகாய ப்ரவேசம்:-வால்கீய ரிஷி அருளியது.இன்னொரு உடலில் எப்படிப் புகுவது என்பதை விளக்கும் நூல் இது!
20)அஸ்வ ஹ்ருதயம்:-சுக்ரீவர் அருளியது. குதிரைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது. (சரஸ்வதி மஹால் நூல்நிலையம் வெளியிட்டுள்ள அஸ்வ சாஸ்திரத்தைப் படிப்பவர்கள் பிரமித்துப் போவார்கள் என்பதை இங்கு நினைவு கூரலாம்.)
21)கஜ ஹ்ருதயம்:- குமாரசுவாமி அருளியது.யானைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது.
22)ரத்ன பரிக்ஷ¡:-வாத்ஸாயன மஹரிஷி அருளியது.நவரத்னங்களை இனம் பிரித்து அறிந்து அவற்றை சோதிக்கும் முறையைக் கூறும் அபூர்வ நூல் இது!
23)இந்த்ரஜாலம்:-வீரபாகு முனிவர் அருளியது.மாயாஜால வித்தைகள், மாஜிக், புதிய பொருள்களை உருவாக்கிக் காட்டல் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
24)மஹேந்திரஜாலம்:- வீரபாகு முனிவர் அருளியது ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் உள்ளிட்ட116 விதமான ஸ்தம்பங்கள் இதில் விளக்கப்படுகிறது.
25)அர்த்த சாஸ்திரம்:-மஹரிஷி வியாஸர் அருளியது. தர்ம வழியில் செல்வம் சேர்க்கும் முறையை விளக்கும் நூல் இது. இதே துறையில் இன்னும் 24 சாஸ்திரங்கள் தனியே உள்ளன. அவற்றை முற்றிலுமாக விளக்க இங்கு இடம் இல்லை.ஆகவே அதி நுட்பமான சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
அ) அகஸ்திய மஹரிஷி அருளிய சக்தி தந்திரம்:-மூல பிரகிருதியில் அடங்கியுள்ள 32 விதமான ஆற்றல்கள் அல்லது சக்திகளைப் பற்றி விளக்கும் நூல் இது.
ஆ)மஹரிஷி மதங்கர் அருளிய சௌதாமினி கலா:-அயல் கிரகவாசிகள், வானில் உள்ள வஸ்துக்கள் மற்றும் தேவதைகளை எப்படி போட்டோ எடுப்பது என்பதை விளக்கும் நூல் இது.இன்று நாம் கூறும் எலக்ட்ரானிக்ஸ் நூல் இது!
இ)மஹரிஷி ஆஸ்வாலயனர் அருளிய சுத்த வித்யா கலா:- பிரபஞ்சம் தோன்றியது எப்படி,நம்முடைய பிரபஞ்சம் தவிர வேறு எத்தனை பிரபஞ்சங்கள் உள்ளன, எங்கே உள்ளன, பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் என்பதை விளக்கும் ஆச்சரியமான நூல்.
உ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய மேகோற்பத்தி ப்ரகரணம்:- 12 விதமான மேகக் கூட்டங்கள், அவை ஒன்பது விதமாக உருவாகும் விதம் உள்ளிட்ட ஏராளமான மேக ரகசியங்களை விளக்கும் அபூர்வ நூல் இது!
ஊ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய காரக ப்ரகரணம்:- சூரிய கிரணங்கள் மேகங்களின் ஊடே செல்லும் போது அண்டஜம், ஸ்வேதஜம்,உத்பிஜம் ஆகிய வித்துக்கள் உருவாகின்றன.நவரத்தினங்கள், சங்கு,முத்து ஆகியவையும் உருவாகின்றன. இவை எப்படி உருவாகின்றன என்பதை விளக்கும் அபூர்வ நூல் இது.
எ)மஹரிஷி பாரத்வாஜர் அருளிய ஆகாச தந்த்ரம்:- ஆகாசத்தில் இல்லாத மர்மங்களே இல்லை.ஏழு விதமான ஆகாயங்கள் மனித குலத்தின் மீது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கும் நூல் இது.
1940ம் ஆண்டு தனது 74ம் வயதில் மறைந்த ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி அவர்களின் மேதைத் தன்மை ஆகாயம் போல விரிந்தது, கடலை விட ஆழமானது. சூரியனை விட பிரகாசமானது, சந்திர ஒளியை விட மனதிற்குக் குளுமை தருவது. பாரத அறிவை முற்றிலும் ஜொலிக்க வைப்பது. சில ஜோதிட நூல்களுக்கு அவர் விளக்கவுரைகளும் எழுதியுள்ளார். அவரைப் பற்றிய நூல்களும் வெளி வரத் தொடங்கி உள்ளன. இந்த மாமேதை அருளிய நூல்கள் அனைத்தையும் படிக்க முயன்று அதில் நமக்கு உகந்த துறையில் நாம் திறமை பெற்று உலக அரங்கில் அதை ஜொலிக்கச் செய்வது ஒன்றே அவருக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறாகும்.

This is written by my brother S Nagarajan.
*****************

நவீன கால விஞ்ஞான ரிஷி

அனைத்து விஞ்ஞானத் துறை நூல்களையும் காண்பித்த அதிசய மேதை ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! –  Part1

 
ச.நாகராஜன்
பண்டைய ரிஷிகளையும்  ஜோதிட மேதைகளையும் பற்றியே பேசுகிறோமே நவீன காலத்தில் இப்படிப்பட்ட மேதை யாரும் இல்லையா என்று கேட்பவர்க்கு பளிச்சென பதில் அளிக்க வந்த மாமணி ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! இவரது வரலாறு மிகவும் சுவாரசியமானது; அதிசயமானது; அற்புதமானது. அதே சமயம் நம்மை சோகத்திலும் ஆழ்த்தும். நமது கடமை தவறிய பாங்கையும் சுட்டிக் காட்டும்; எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வழி வகுக்கும்.
பிரபல விஞ்ஞானியான ஜகதீஸ் சந்திர போஸ¤க்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவே சுப்பராய சாஸ்திரி தனது வாழ்க்கை வரலாறை எழுதியுள்ளார். இல்லாவிடில் இப்படிப்பட்ட ஒரு பெரிய மகானைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வழியே இருந்திருக்காது. 1973ம் ஆண்டு தான் இவரது வரலாறு அச்சிடப்பட்டது. அபூர்வமான அந்த வரலாறின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

 
சாஸ்திரிகளின் இளமை வாழ்க்கை
சாஸ்திரிகள் 1866ம் ஆண்டு தமிழ்நாட்டில் தர்மபுரி ஜில்லாவில் உள்ள ஹோசூர் தாலுக்காவில் டோகரே அக்ரஹாரம் என்னும் சிற்றூரில் பிறந்தார்.பிராமண குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்த சாஸ்திரிகள் இளமைப் பருவத்தில் மிகவும் வறுமையில் வாடினார்.இளமையிலேயே பெற்றோரையும் இழந்ததால் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கு 12 வயது ஆகும் போது எட்டு வயது சிறுமியை மணம் வேறு செய்து முடித்தார்கள். அப்போது அங்கு பரவிய கொடுமையான காலரா தொத்து வியாதியால் சாஸ்திரிகளின் குடும்பத்தில் உள்ளவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பலி ஆனார்கள்.
காட்டிலுள்ள குகையில் குருஜி தரிசனமும் உபதேசமும்

 
இனி தாங்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சாஸ்திரிகள் இந்த உலகில் வாழ வேண்டாம் எனத் தீர்மானித்து மனம் போன படி நடந்து கோலார் ஜில்லாவில் அவனி என்ற இடத்தில் ஒரு காட்டிற்குள் புகுந்தார்.அங்கு கொடிய புலிகளும் விஷப் பாம்புகளும் நிறைந்த இடத்தில் வாழ ஆரம்பித்தார்.இலை தழை கிழங்குகளையும் நீரையும் மட்டும் ஆகாரமாகக் கொண்டு பல வருடம் அங்கு வாழ்ந்து வந்தார்.ஒரு நாள் ஒரு குகைக்குள் நுழைந்த அவர் பாதாளத்தில் தென்பட்ட ஒரு வழியில் சென்றார். அங்கே அதிசயமான ஒரு பெண்மணி தோற்றமளித்தார். சாஸ்திரிகள் அவர் தன் தாயார் தான் என்பதைத் தெரிந்து கொண்டார். திடீரென்று அந்தத் தோற்றமும் மறைந்தது. இந்த குகையில் தான் தனது குருஜியை அவர் கண்டார்.குருஜி தரிசனத்திற்குப் பின்னர் அவர் வாழ்வே மாறியது. குருஜி அவர் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.அவரிடமிருந்து ஏராளமான வித்தைகளையும் பௌதிக சாஸ்திரங்களையும் கற்றார்.இந்த சாஸ்திரங்களை அழிவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தன் அனுமதியின்றி யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்றும் அவர் சாஸ்திரிகளுக்கு அறிவுறுத்தினார்!சாஸ்திரிகளது சரஸ்வதி நாடியை அவர் தூண்டி விட ஒரு பெரும் ஒளிப்பிழம்பு சாஸ்திரிகளிடம் நுழைந்து ஐக்கியமானது.பிறகு குருஜி அவர் நாக்கில் ஒரு தர்ப்பையை வைத்து எழுதினார்.இதைத் தொடர்ந்து அனைத்து பௌதிக சாஸ்திரங்களிலும் அபார வல்லமையை சாஸ்திரிகள் அடைந்தார்.

 
உலகின் முதல் விமானத்தை அமைக்க விஞ்ஞானம் தந்தவர்
பின்னர் குருஜி அனுமதி தர சாஸ்திரிகள் 25 வருட காலம் தனது மனைவியுடன் அனெகல் என்னும் சிற்றூரில் தங்கி இருந்தார். அவரைப் பேரும் புகழும் வந்தடைந்தன.பாரதமெங்கும் அவரது புகழ் பரவவே பூஞ்ஜிலால் கிரிதர் என்ற பெரும் தொழிலதிபர் பம்பாய்க்கு சாஸ்திரிகளை அழைத்தார். டாக்டர் டால்படே என்பவர் அப்போது ஆகாயவிமானங்களை அமைக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் சாஸ்திர்களைச் சந்திக்கவே பாரத்வாஜர் இயற்றிய ஆகாய விமானம் கட்டும் முறையை விளக்கும் வைமானிக சாஸ்திரத்தை உபதேசித்து அவருக்கு விமானக் கட்டுமானக் கலையைக் கற்பித்தார்.

உலகின் முதல் விமானம் சௌபாத்தி கடற்கரையிலிருந்து 1900ம் வருட வாக்கில் ஒரு நாள் ஆகாயத்தில் பறந்து அனைவரையும் வியப்படைய வைத்தது. இதற்குப் பின்னரே 17-12-1903ல் ரைட் சகோதரர்கள் தங்களின் முதல் விமானத்தைப் பறக்க வைத்தது குறிப்பிடத் தகுந்தது.பம்பாயில் சாஸ்திரிகளைப் பார்க்க தினமும் கூட்டம் நிரம்பி வழிந்தது.சாஸ்திரிகளின் மேதாவிலாசத்தைக் கண்டு வியந்த இந்திய விஞ்ஞானிகள் அவர் கூறும் அனைத்து நூல்களையும் மக்களின் நன்மைக்காக வெளியிடுமாறு வேண்டினர்.தனது குருஜியிடம் அனுமதி வாங்க சாஸ்திரிகள் பெங்களூர் திரும்பினார். இந்த இடத்தோடு ஜகதீஸ் சந்திர போஸ¤க்காக எழுதிய சுய சரிதம் திடீரென்று முடிகிறது.பம்பாயில் ஜகதீஸ் சந்திர போஸை சாஸ்திரிகள் சந்தித்த விஷயம் இறுதி அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் நிறுவனரின் சந்திப்பு

 
அஸ்ட்ராலஜிகல் மாகஸைனை நிறுவிய சூர்யநாராயண ராவ் இவரை ஷிமோகாவுக்குச் செல்லும் போது 1885ம் ஆண்டு அதிர்ஷ்டவசமாக சந்தித்தார்;அவருடன் இடைவிடாது தொடர்பை வைத்திருந்தார்.அவரது பெருமுயற்சியால் பல புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டன. சாஸ்திரிகளின் இறுதிக் காலம் சோகமயமானது.சுதந்திரப் போர் உச்சகட்டத்தை அடைந்ததால் அவருக்கான ஆதரவைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவரது பணிகள் முற்றிலுமாக நிறைவு பெறவில்லை.வாழ்க்கையில் அவருக்கு விரக்தி ஏற்பட்டது. ஒரு பெரும் மேதையை அவர் வாழ்நாளில் நன்கு கௌரவிக்காது அவரது பணியை முற்றுப் பெற வைக்காது இருந்த சமுதாயத்தின் அவல நிலையை எண்ணி வருந்த வேண்டியது தான். மஹாகவி பாரதி உள்ளிட்டோர் வாழ்ந்த காலத்தில் ஆதரவும் பெறவில்லை;உரிய சிறப்புக்களையும் அடையவில்லை. அதே கதி தான் சாஸ்திரிகளுக்கும் ஏற்பட்டது. அற்புதமான அந்த மேதையின் பரம்பரையினர் இன்றும் பெங்களூரில் வாழ்ந்து வருகின்றனர்.
ஜோதிட புத்தகங்கள்

 
சாஸ்திரிகளின் ஜோதிட ஞானம் அபாரமானது.ஏராளமான புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.ஜோதிட நூல்களுக்கான அபாரமான விரிவுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அவரது நூல்களைப் பற்றி எழுதப் புகுந்தால் அது பெரும் நூலாக ஆகி விடும் என்பதைக் கருதி அவரது சில புத்தகங்களின் தலைப்பையும் அது கூறும் விவரங்களையும் சிறு குறிப்புகளாக இங்கு காணலாம்:

 
1) ப்ரஹ்மாண்ட சாரம்:- மஹரிஷி வியாஸர் அருளியது.இதில் பல ப்ரஹ்மாண்டங்களைப் பற்றியும் அதில் உள்ள உலகங்கள் மற்றும் சக்திகள் பற்றியும் அசையும் ஜந்துக்கள் மற்றும் அசையாப் பொருள்கள் பற்றியும் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2) அம்ச போதினி :-மஹரிஷி பரத்வாஜர் அருளியது. இதில் சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் பற்றியும் அதன் கிரணங்கள், வெப்ப சக்தி ஆகியவை பற்றியும் விவரங்கள் உள்ளன.வெவ்வேறு விதமான கண்ணாடிகளை உருவாக்குவது பற்றியும் ஒவ்வொரு கிரகத்திலிருந்து வரும் வெவ்வேறு ஆற்றல்களை அளவிடும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.சூரிய கிரணங்களைச் சேமிக்கும் இயந்திரங்கள் பற்றியும் அந்த கிரணங்களை ஆற்றலுக்குத் தக்கவாறு பிரிக்கும் முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

 
சாஸ்திரிகளின் நூல்களின் தலைப்புக்களையாவது நாம் தெரிந்து கொண்டால் பாரத ரிஷிகளின் எல்லையற்ற விஞ்ஞான அறிவை ஒரு சிறிதாவது புரிந்து கொள்ள முடியும் என்பதால் இன்னும் சில நூல்களின் தலைப்பைப் பார்ப்போம்.
-தொடரும்

 
இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை
இதை விரும்புவோர் இதர அபூர்வ ஜோதிட மேதைகள் பற்றியும் நாடி ஜோதிடம் பற்றியும் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க விரும்புவர்

My brother’s contact details : santhanam nagarajan snagarajans@gmail.com